Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு நகல் சித்தாந்தங்களுக்கு மத்தியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் சொல்வதைப் போல இதை ஒரு எழுத்தாளனின் உள்ளுணர்வு எனலாம். என்னுடைய உள்ளுணர்வு இதுதான்: பொதுவாக சிந்திப்பதன் நோக்கம் அறிவைப் பெறுவது, அறிவைப் பெறுவதன் நோக்கம் தெளிவு, மகிழ்ச்சி, வெற்றி, சமூக அங்கீகாரம் ஆகியவை. துரதிஷ்டவசமாக பின்நவீன காலத்தில் அறிவு என்பதே வெறும் தகவல், தகவல் என்றாலே அதிகாரத்திற்கான கருவி, அறிவென்றாலே நாம் வாங்கித் துய்க்கிற ஒரு பண்டம் என்றாகி விட்ட பின்னர், மக்கள் சிந்திப்பதை கூட ஒரு பயன்மதிப்பு உள்ள செயலா என வினவத் துவங்குகிறார்கள்.
 
அதாவது இதைக் குறித்து சிந்தித்தால், கற்றுக்கொண்டால், இதைப் பொருட்படுத்தினால் எனக்கு என்ன பயன் என்பது முக்கியமான கேள்வி இன்று. ஒரு புத்தகம் படித்தால் என்ன பயன்? ஒரு கவிதை படித்தால் என்ன பயன்? அரசியல்படுவதால் என்ன பயன்? நாட்டுக்காக உழைத்தால் எனக்கு என்ன பயன்? அன்பு பாராட்டினால் என்ன பயன்? யோசித்தால் என்ன பயன்? பேசினால் என்ன பயன்? நான் தூங்கினால் எனக்கு என்ன பயன்? ஒழுங்காக சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா? அதனால் எனக்கு என்ன பயன்? உன்னுடன் வாழ்ந்தால் என்ன பயன்? உன் குழந்தையைப் பெற்றால் என்ன பயன்? உன்னைப் பிரிந்தால் என்ன பயன்? இப்படி மனிதர்கள் சிந்திப்பது இயல்பாகி விட்டது. இது இயல்பானது, அதனால் இப்படி இருப்போம் என்பது இன்று ‘இயல்பற்றது’. எதுவும் அதன் பயன்மதிப்பின் படியே ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இலக்கியம் படித்தால், புத்தகம் வாசித்தால் அது வாழ்க்கையில் முன்னேற உதவும் என்று வாசிப்பை இன்று சந்தைப்படுத்த வேண்டி இருக்கிறது. ஜெயமோகன், செல்வேந்திரன் ஆகியோர் புதிய வாசகர்களை நோக்கி அடிக்கடி இவ்வாறே பேசுகிறார்கள். ஆனால் இது உண்மையில்லை என நமக்குத் தெரியும் - புத்தக வாசிப்பு அதிகமாகும் போது மக்கள் உலகியல் வெற்றியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஆனால் இந்த உண்மையை சொன்னால் இன்று யாருமே வாசிக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் பயன்மதிப்பில்லாத பொருளும் வேண்டும் என நினைத்தார்கள், இன்று கண்ணை மூடிவிட்டு அதை தூக்கி கடாசி விடுவார்கள்.
 
அரசியல்வயப்படுவது ஒரு பொதுநல நோக்கிறாகவே. அதற்கு தர்க்க சிந்தனையும் சமூக அக்கறையும் அவசியம். இவை இரண்டுமே ஒரு தனிமனிதனுக்கு நேரடி பயன்மதிப்பற்றவை. அதனாலே இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் இந்த இரண்டையும் ‘விற்க’ முடிவதில்லை. தனக்கு பொருளீட்டித் தராத, உலகியல் பயனளிக்காத தர்க்க சிந்தனையை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இதை நான் வணிகவியல், நிர்வாகவியல் படிக்கும் மாணவர்களிடம் அதிகமாக பார்க்கிறேன். அவர்களிடம் நீங்கள் சமூக முன்னேற்றம், அறம், தர்க்கம், அரசியல், இலக்கியம் என எதைப் பற்றி பேசினால் அலுப்பாகி அந்நியமாகி விடுகிறார்கள். அறிவியல் கற்கும் மாணவர்களோ இதனால் எனக்கு என்ன பயன் என யோசிக்கிறார்கள். மானுடவியல் மாணவர்களோ இந்த கருத்துக்களுடன் உறவாடினாலும் ஆழமான நம்பிக்கையற்றிருக்கிறார்கள். மாணவர்களே இப்படி என்றால் பொதுமக்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்த போக்குடன் பாசிச சிந்தனை கைகோர்க்கும் போது ஒரு ஆபத்தான மனப்பான்மை தோன்றுகிறது - இந்துத்துவ கருத்தியல் குறித்த எந்த புரிதலும் இன்றி, மேலோட்டமான கருத்துக்களை கேள்விப்பட்டதை வைத்து அக்கருத்தியலுடன் இணங்கிப் போகிறவர்கள், எதிர்க்கருத்தியல், எதிர்முகாமை சேர்ந்தோரை கடுமையாக வெறுக்கும், தாக்கும் மக்களை இன்று அதிகமாக பார்க்கிறேன். நான் இவர்களை போலி இந்துத்துவர்கள், போலி வலதுசாரிகள் என்பேன். நகல் இந்துத்துவர்கள் என்றும் கூறலாம். அசல் இந்துத்துவர்களை விட இன்று நகல் இந்துத்துவர்களே பெருகி வருகிறார்கள். வலதுசாரி சிந்தனை இவர்களுக்கு வசீகரமாக இருப்பதற்கு இரு காரணங்கள்:
வலதுசாரி சிந்தனை இன்று அதிகாரம் பெற்றிருக்கிறது. தன்னை நோக்கி வருவோருக்கு மட்டுமீறின அதிகாரத்தை அது அள்ளி வழங்குகிறது. தன் கதவுகளை இச்சிந்தனை ‘திறந்து’ வைத்திருக்கிறது. ஆனால் இதற்கு எதிர்முகாமை சேர்ந்த இடதுசாரி, மையவாத சிந்தனையோ சற்று ‘மூடி’ இருக்கிறது, நீ உழைத்து என்னைப் புரிந்து கொள், நீ பயன்மதிப்பு கோராமல் என்னை ஏற்றுக்கொள் என்கிறது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை.
 
இன்று மனிதர்கள் - வெற்றி பெற்றவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என எல்லாருமே - தம்மை பாதிக்கப்பட்டவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஒரு மிகை கற்பனை. இவர்கள் இந்த மிகை கற்பனைக்கு சான்றாக எதையும் வைத்திருப்பதில்லை. மாறாக ஒரு மிகை வெறுப்பே இந்த மிகை கற்பனையை செலுத்துகிறது. இந்த மிகை வெறுப்பு ஒரு கற்பனையான மற்றமை மீது செலுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. தனது துயரத்துக்கு யார் காரணம் என இவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் அதை ஏற்கவோ அதைக் குறித்து சிந்திக்கவோ தயாரில்லை. ஏனென்றால் அச்சிந்தனை அவர்களுக்கு அதிகாரத்தை தராது. அதனால் அவர்கள் கற்பனையே ஆனாலும் தமக்கு ஒருவித சமூக அதிகாரத்தை அளிக்கும் மிகை வெறுப்பின் மீது நின்று சிந்திக்கவும், கொந்தளிக்கவும், போலி அரசியல் செய்யவுமே விரும்புகிறார்கள்.
 
இந்த நகல் வலதுசாரிகளிடம் நீங்கள் எதையும் சொல்லி புரிய வைக்கவோ திருத்தவோ முடியாது. என்ன பிரச்சினை என்றால் இன்று இன்னொரு பக்கம் இடதுசாரிகள், மையவாதிகளும் ஒருவித நகல்களாக மாறி வருகிறார்களோ என்பதே. தேவைப்படும் போது தேவையான அளவுக்கு அரசியல் பண்ணிக்கொள்ளலாம், தமது எதிர்ப்பரசியலையும் பயன்மதிப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் போதம் அவர்களுக்கு அதிகமாகி விட்டது. ஒருவர் ஆவேசமாக சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசினால் உணர்ச்சிவசப்படாமல் மற்றமை மீதான கோபமாக மட்டும் அதை மாற்றி ஒரு சுய பொழுதுபோக்காக அதை மாற்றிக்கொள்கிறோம். முற்போக்காளர்களின் அரசியலும் இப்படி சமூக பிடிப்பற்றதாக மாறி வருகிறது. அவர்களுக்கும் தாம் நடப்பு உலகில் இருந்து, சமூகத்தில் இருந்து அந்நியப்படுகிறோமோ எனும் ஐயப்பாடு வலுவாகி வருகிறது.
 
ஒரு உதாரணம்: புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து நான் ஒரு புத்தகம் எழுதினேன் (“நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?”). ஆனால் இன்று ஒரு கல்வியாளனாக அதே கல்விக்கொள்கையை ஏற்று அதன்படி கல்வித்திட்டத்தை நான் வரையும் போது எனக்கு அந்த ‘கோபம்’ இருப்பதில்லை. அதில் உள்ள சௌகரியமாக பகுதிகளை மட்டும் கருதி, மிச்சத்தை மறந்து நான் என் பணியை ஆற்றுகிறேன். இது புதிய கல்விக்கொள்கைக்குள் ஒரு புத்தம் புது கல்விக்கொள்கையாக என் மனதுக்குள் உருக்கொள்கிறது. நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை தான். ஆனால் இப்படித்தான் நாம் ஒவ்வொரு வரும் அதிகாரவயப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட சிந்தனையை நம் வயப்படுத்தி அதற்கேற்ப ஒழுகுகிறோம். எனக்கு இதை நினைக்கவே மிகுந்த அவநம்பிக்கையாக இருக்கிறது.
இப்படி இடதும், வலதும் நகலாகிப் போன ஒரு உலகில் நாம் என்னதான் செய்ய முடியும் என்று நான் என் நண்பரைக் கேட்டேன். எனக்கு ஆனால் ஒன்று தோன்றுகிறது - பாசிசம் குறித்து கூடுதலாக ஆய்வு செய்து ஒரு சிறிய நூலை எதிர்காலத்தில் எழுத வேண்டும். இந்த ஆரண்ய காண்டத்தில் மரவுரி தரித்த பஞ்ச பாண்டவர்களான நமக்கு வாய்த்ததெல்லாம் அந்த 'சிறிய சலுகை' மட்டுமே!
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாணவர்களை, மக்களை நுகர்வோர் ஆக்கி விட்டார்கள். அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்.......!

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.