Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விண்வெளி நிலையம் 29000 கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ISS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜொனாதன் ஓ கேலகன்
  • பதவி,பிபிசி
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

1998 இல் தொடங்கிய பயணம்

அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe),, ஜப்பானின் JAXA மற்றும் கனடிய விண்வெளி நிலையம் (CSA- Canada) ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, 1998 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிர்மாணம் தொடங்கப்பட்டது. ஒற்றை தொகுதியாக (Single Module) ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம், பின்னர் சோலார் பேனல்கள், வெப்பத்தை வெளியேற்றும் ரேடார்கள் என 16 தொகுதிகளுடன் பிரம்மாண்டமாக உருவெடுத்தது.

109 மீட்டர் நீளத்தில் (356 அடி) ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியதாகவும், 200 யானைகளுக்கும் மேலான எடை கொண்டதாகவும் (400 டன்) விளங்கும் சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைகோள்களிலேயே மிகவும் பெரியது என்ற பெருமையை பெற்றுள்ளது.

250 விண்வெளி வீரர்கள்

பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது.

“2000 நவம்பர் மாதத்தில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வருகை தந்ததில் இருந்து இதுநாள்வரை மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த 250 -க்கும் மேற்பட்ட வீரர்கள், இங்கு வருகை தந்துள்ளனர்.

இயற்பியல், உயிரியல், வானிலை, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி முகமையின் தலைவர் ஜோசப் ஆஷ்பேச்சர்.

சோவித் யூனியன் பிரிந்த பின்னர், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு இந்த விண்வெளி நிலையம் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்கிறது எனக் கூறும் நாசாவின் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவரான தாமஸ் சுர்புசென், இது உண்மையில் சர்வதேச அளவிலான மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும்” என்று பூரிக்கிறார்.

ISS

பட மூலாதாரம்,GETTY IMAGES

விண்வெளி நிலையத்துக்கு வந்த சோதனை

அமெரிக்காவின் ஸ்கைலேப், ரஷ்யாவின் சல்யுட் 7 ஆகிய விண்வெளி நிலையங்களை ஒப்பிடும்போது, சர்வதேச விண்வெளி நிலையம் மிகவும் பிரம்மாண்டமானதாக திகழ்ந்து வருகிறது.

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படும் ISS க்கு தற்போது சோதனை காலம் தொடங்கி உள்ளது. ஆம்… இது தமது நீண்ட பயணத்தின் இறுதி கட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

என்ன காரணம்?

சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கிய கூறுகளாக உள்ள பவ்வேறு வன்பொருட்கள் ( Hardwares) பல ஆண்டுகள் பழமையானவை உள்ளன. இதன் காரணமாக ISS தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அது தமது கட்டுப்பாட்டை இழந்து, புவிவட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலகி செல்லும் அபாயம் இருக்கிறது.

இதன் விளைவாக ஒட்டுமொத்த விண்வெளிக்கே ஆபத்து நேரிடலாம் என்பதால், 2030 க்கு பிறகும் ISS இன் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து யோசிப்பது நல்லதல்ல என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தங்களது இந்த எச்சரிக்கையை மீறி விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டால், அது ஸ்கைலேப், சல்யுட் 7 ஆகிய விண்வெளி நிலையங்கள் கட்டுப்பாடற்று சிதைந்ததால் ஏற்பட்ட எதிர்விளைவுகளை சந்தித்தை போன்று மற்றொருமுறை பூமி சந்திக்க நேரிடும் என்கின்றனர் அவர்கள்.

விண்வெளி அறிஞர்களின் இந்த அச்சத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையம் குறித்த அதிரச்சி தகவல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2024 வரை நீட்டிக்கப்படுவதாக, அமெரிக்க அரசு 2021 டிசம்பரில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக,‘ 2024 பின் இதனை செயலிழக்க ( de-orbit) செய்யும் பணிகள் தொடக்கும் என்றும், இந்தப் பணி தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு 2031 ஜனவரியில், நியூசிலாந்துக்கும் ,தென்அமெரிக்காவுககும் இடையே, தெற்கு பசிபிக் பெருங்கடலில் மனிதர்களே இல்லாத ‘பாயிண்ட நெமோ’ பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விழச் செய்து அதனை செயலிழக்க செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது’ என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்திருக்கிறது.

ISS

பட மூலாதாரம்,GETTY IMAGES

விஞ்ஞானிகளின் திட்டம் என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்கச் செய்யும் பணிகள் 2026 இல் தொடங்கும் என்று கூறும் நாசா விஞ்ஞானிகள், இதன் முதல்கட்டமாக, ISS இன் சுற்றுப்பாதையானது வளிமண்டல இழுவையின்கீழ் தானாக சிதைவதற்கு அனுமதிக்கப்படும் என்கின்றனர்.

இதன் அடுத்தக்கட்டமாக, 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரம் என்ற விண்வெளி நிலையத்தின் தூரத்தை 320 கிலோமீட்டராக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

மேலும் இந்த காலக்கட்டத்தில் விண்வெளி வீரர்களை கொண்ட ஒரு குழுவை நிலையத்துக்குள் அனுமதிக்கவும், அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகற்றப்படாத பொருட்கள் குறித்து அந்த குழுவைக் கொண்டு உறுதிச் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

விண்வெளி நிலையத்தின் எடையை குறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் குழு நிலையத்தை விட்டு வெளியேறிவிடும்.

அதன் பிறகு நிலையத்தின் உயரம் 280 கிலோமீட்டராக குறைக்கப்படும். அதன் பின்னர் பிரத்யேக விண்கலத்தின் உதவியுடன் நிலையத்தின் தூரத்தை 120 கிலோமீட்டராக குறைக்கும் வகையில் இறுதி உந்துதல் அளிக்கப்படும்.

இந்த முயற்சிகள் திட்டமிட்டப்படி வெற்றியடையும்பட்சத்தில், பூமியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவை சர்வதேச விண்வெளி நிலையம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால், அப்போது புவி வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும். இதன் விளைவாக சோலார் பேனல்கள், ரேடார்கள் உள்ளிட்ட நிலையத்தின் முக்கிய கட்டமைப்புகள் தனியே பெயர்ந்து விழும் என்றும், அவற்றின் பெரும்பகுதி பூமியின் வெப்பத்தில் உருகிவிடவும் செய்யும் எனவும் விண்வெளி ஆராய்ச்சியாளரான மெக் டோவல் கூறுகிறார்.

ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தை விட (140 டன் எடை), சர்வதேச விண்வெளி நிலையத்தின் எடை கிட்டத்தட்ட மூன்று மடங்கு (400 டன்) அதிகம் என்பதால், இது செயலிழக்க செய்யப்படும்போது 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் அந்த சம்பவம், விண்வெளியின் அற்புத நிகழ்வாக இருக்கும் என்கிறார் அவர்.

விஞ்ஞானிகள் விருப்பம்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலத்தை மீண்டும், மீண்டும் நீட்டிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை நாசா கருத்தில் கொண்டிருந்தாலும், ISSயை செயலிழக்க (டிஆர்பிட்) செய்வது குறித்த வருத்தமும் சில ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கதான் செய்கிறது.

சோலார் பேனல்கள், வெப்பத்தை வெளியேற்றும் ரேடார் என பல மதிப்புமிக்க உபகரணங்களை சர்வதேச விண்வெளி நிலையம் தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கூறும் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை நிபுணரான ஜான் க்ளீன், இவையாவும் அதிக பொருட்செலவில் விண்வெளிக்கு கொண்ட செல்லப்பட்டவை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே, விண்வெளி நிலையத்தை கடலில் முழ்கடிக்க செய்வதற்கு முன், அதிலுள்ள உபகரணங்களில் நம்மால் முடிந்ததை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

சர்வதேச விண்வெளி நிலையம் குறித்த ஜான் க்ளீன் போன்றோரின் விருப்பத்தில் உள்ள நியாயத்தை புரிந்து, அமெரிக்காவில் உள்ள CisLunar Industries மற்றும் Astroscale உள்ளிட்ட நிறுவனங்களின் குழு, அமெரிக்க அரசுக்கு இதுதொடர்பான யோசனைகளை சில மாதங்களுக்கு முன் வழங்கி உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களை தனியாக பிரித்தோ அல்லது அவற்றை உருக்கியோ, புதிய விண்வெளி நிலையத்தின் உருவாக்குதலுக்கு பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த குழு முன்வைத்துள்ள யோசனைகளில் முக்கியமானது.

இதுபோன்ற புதிய யோசனைகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த நாசா செய்தித் தொடர்பாளர், ஆனால் விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு பகுதிகளை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

ISS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்கைலேப், சல்யூட் 7 இல் நிகழ்ந்தது என்ன?

அமெரிக்க விண்வெளி நிலையமான ‘ஸ்கைலேப்’ பூமியை 34,981 முறை வெற்றிகரமாக சுற்றி முடித்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் விளைவாக 1979 ஜுலை 11 தேதி அன்று தமது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, பூமியின் வளிமண்டலத்துக்குள் இழுக்கப்பட்டு சிதைந்து உருகுலைந்தது.

பிரம்மாண்டமான ஸ்கைலேப் நிலையத்தின் உள்கட்டமைப்பு பாகங்கள் ஆப்பிரிக்காவின் தென்பகுதியிலும், இந்திய பெருங்கடலிலும் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிதைந்த விண்வெளி நிலையத்தின் பல்வேறு பாகங்களின் குறிப்பிட்ட பகுதிகள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள தென்மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் , விண்வெளி கழிவுகளாக விழுந்தன. 1000 கிலோமீட்டர் அளவிலான பரந்த நிலப்பரப்பில் 200 கிலோமீட்டர் அகலத்துக்கு இந்த விண்வெளி கழிவுகள் பரவிக் கிடந்தன.

இதேபோன்று, 1994 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் சல்யுட் 7 விண்வெளி நிலையம், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சில தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக, 1991 பிப்ரவரி 7 ஆம் தேதியே தமது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக சிதைந்த நிலையத்தின் கட்டமைப்புகள், அர்ஜென்டினாவின் மலைப்பகுதிகளில் குப்பை குவியலாக விழுந்து கிடந்தன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஸ்கைலேப், சல்யுட் 7 ஆகியவற்றைவிட கட்டமைப்பில் மிகப்பெரியதான சர்வதேச விண்வெளி நிலையம், தனது கட்டுப்பாட்டை இழந்து, தானாக செயலிழக்க நேரிட்டால், அதனால் உண்டாகும் விண்வெளி கழிவுகள் 6,000 கிலோமீட்டர்கள் நீளம் வரை பரவி கிடக்கும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதனை கவனமாக, பசிபிக் பெருங்கடலில் விழும்படி செயலிழக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

https://www.bbc.com/tamil/articles/cd1rz462q00o

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுக்குநூறாக சிதறி விழப்போகும் விண்வெளி நிலையம் - அடுத்த ஏற்பாடு என்ன?

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

மனிதகுல வரலாற்றில் பெரும் செலவு செய்து கட்டப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை கடலுக்குள் விழச் செய்ய சிலர் விரும்புகின்றனர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜொனாதன் ஒ' கேலகன்
  • பதவி,பிபிசி ஃப்யூச்சர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியிலிருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் வளிமண்டலத்துக்கு வெளியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் ஆயுட்காலம் வரும் 2031ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. அதன் பின் விண்வெளித் திட்டங்களில் இருள் சூழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில், இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றாக வேறு என்ன ஏற்பாடு செய்வது?

விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டம் கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜர்யா (Zarya) என்ற விண்கலத்தை விண்வெளிக்கு ஏவியதில் இருந்து தொடங்கியது.

இந்த ஜர்யா என்ற விண்கலம்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக முதன்முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. பனிப்போர் காலத்தில் மிகப்பெரும் எதிரிகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள், பிற நாடுகளுடன் இணைந்து விண்வெளியில் உருவாக்கிய இந்த ஆராய்ச்சி மையம், பூமிக்கு வெளியில் மனிதன் மேற்கொண்ட மிகப்பெரும் கட்டுமானமாக இதுவரை இருந்து வருகிறது.

 

"சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உண்மையாகவே பிரமிப்பூட்டும் வகையில் மிகப்பெரிய கட்டுமானமாக அமைந்தது," என்கிறார் அமெரிக்க விமானப் படையின் ஒரு கல்வி நிலையத்தைச் சேர்ந்த வெண்டி வைட்மேன் காப்.

 

"பனிப்போருக்குப் பின் ரஷ்யா உண்மையிலுமே ஒரு முழு ஒத்துழைப்பை அளித்திருந்தது. ரஷ்ய விண்வெளித்துறை ஒரு கடினமான நிலையில் இருந்தபோது, அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தந்தது," என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதன் விளைவாக 400 டன் எடையுடன், இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களின் அளவில் 150 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம், பூமியை சுமார் 29,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது.

நவம்பர் 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்ட பின் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் அங்கு தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் 2031ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உள்ல இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிந்துவிடும். அதன் பின்னர் இந்த ஆராய்ச்சி நிலையத்தை வளிமண்டலத்துக்கு இழுத்து, அதைச் சுக்குநூறாக உடைத்து கடலில் விழும்படி செய்யப்படும்.

ஐஎஸ்எஸ்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

ரஷ்யாவின் ஜர்யா என்ற உபகரணம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 1998இல் தொடங்கின

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சார்பிலும் உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா தரப்பில் இதுவரை ஆயிரக்கணக்கான அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், விண்வெளியில் விவசாயம் செய்வதில் தொடங்கி, பார்க்கின்சன், அல்சைமர் நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகள் வரை இடம்பெற்றுள்ளன.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டது "ஓர் அற்புதமான அனுபவம்," என்கிறார் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சென்று ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஃப்ரான்க் டி வின் என்ற விஞ்ஞானி.

அவர் 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

"மனித குலத்தை மேலும் ஒருபடி முன்னோக்கி அழைத்துச் செல்லும் விதமாக, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் பணியாற்றியது, வாழ்க்கையில் எளிதில் கிடைத்திடாத ஓர் அரிய அனுபவமாக இருந்தது," என்கிறார் அவர்.

ஆனால், அந்த விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டார்கள் என நாம் கருத முடியாது.

"அந்த விண்வெளி நிலையத்திற்கு மனிதர்கள் சென்று வருவது மிகுந்த செலவு பிடிக்கும் பயணமாக இருந்தது. வெறும் அறிவியலுக்காக மட்டும் அந்த அளவுக்கு செலவு செய்வது பொருத்தமற்றது," என்கிறார் பிரிட்டனின் மூத்த விண்வெளி விஞ்ஞானியான மார்ட்டின் ரீஸ்.

மேலும், இதற்கு மாற்றாக, தற்போதைய செவ்வாய் கோள் ஆராய்ச்சி மற்றும் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கித் திட்டங்களைப் போல், உலக நாடுகள் ரோபோக்களின் செயல் திறன்களை அதிகரித்து, அவற்றின் மூலம் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார்.

ஐஎஸ்எஸ்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் நாசா செலவிடும் தொகையை ஆர்டெமிஸ் போன்ற திட்டங்களுக்குச் செலவு செய்யலாம்.

"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது பெரும் செலவு பிடிக்கும் செயலாக இருக்கிறது," என்கிறார். மேலும், "எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சாகச விரும்பிகளும் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே மேற்கொள்ளும் பணியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

இருப்பினும், ஆராய்ச்சிகள் என்பதைக் கடந்து, மனிதன் விண்ணையும் ஆள முடியும் என்பதை நிரூபிக்கும் திட்டமாக இது இருப்பதாகவும் சிலர் வாதிடுகின்றனர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் ஏவப்பட்டதற்கு முன்பு, ரஷ்யாவின் மிர் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க பெரும் பொருட்செலவில் நீண்ட காலம் உழைக்க வேண்டியிருந்தது.

ஆனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. "மனிதன் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது குறித்த நமது மனநிலையையே அது மாற்றியது," என்கிறார் அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லாரா ஃபோர்க்ஜிக்.

"ஆனால் இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நாம் கைவிட்டுவிடக்கூடாது. அது அழிக்கப்படும் நாள் ஒரு சோகம் நிறைந்த நாளாகவே இருக்கும்," என்கிறார் ஃப்ரான்க் டி வின்.

எது எப்படி இருந்தாலும், இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனைவருக்குள்ளும் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தியதை நாம் மறுக்கமுடியாது. அண்மையில் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு கடினமான சவாலை அளித்தது.

இருப்பினும், தற்போதைய நிலைவரை இந்த ஒற்றுமை நீடித்து வந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு கொடுக்காது எனக் கருதப்படுகிறது.

"இதற்குப் பின் இதுபோன்ற திட்டங்களில் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்காது," என்கிறார் அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த கேத்தி லெவிஸ். "யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை ஏற்க முடியாது என்ற நிலையில், அவர்கள் தனியாக இதுபோன்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்," என்கிறார் அவர்.

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச விண்வெளி மையத்திற்கு மாற்றான ஒரு திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும்?

இத போன்ற திட்டங்களில் எதிர்காலத்தில் வணிகரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாம் நம்பலாம். ஏற்கெனவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுபோன்ற பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் வழங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிலான ஒப்பந்தங்களை இந்தத் திட்டங்களுக்காக நாசா நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் விண்வெளி சுற்றுலாக்கள், சிறிய அளவிலான சோதனைக் கூடங்களை விண்வெளியில் அமைத்தல் என பூமிக்கு வெளியில் மனிதனின் இருப்பு உறுதி செய்யப்படும்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏக்ஸியாம் ஸ்பேஸ், கட்டண முறையில் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேலும் பல உபகரணங்களை 2025ஆம் ஆண்டு பொருத்த அந்த நிறுவனம் முயன்று வருகிறது. இந்த உபகரணங்கள் பின்னர் அந்த விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கட்டண முறையில் மனிதர்கள் செல்லும்போது அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த முயற்சியும் சரியானது என எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் எனக் கருத முடியாது. "இத போன்ற தொழில்ரீதியான நடவடிக்கைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை," என்கிறார் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹார்வர்டை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஜொனாதன் மெக்டோவெல். "லாபகரமான ஒரு விண்வெளி நிலையத்தை நடத்த முடியும் என்பதை நான் ஏற்கவில்லை," என்கிறார் அவர்.

இருப்பினும், நாசாவும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மற்ற பங்குதாரர்களும், மேலும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். "இந்தத் திட்டத்தில் பங்குபெறும் அனைவரிடமும் நாங்கள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்," என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் ஜோசப் அஸ்க்பாச்சர் கூறுகிறார்.

"சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் காலாவதியான பின்பு புதிய பணிகளைத் தொடங்குவது குறித்துப் பல்வேறு வழிகளைச் சிந்தித்து வருகிறோம்," என்கிறார் அவர்.

ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு 300 கோடி டாலர் செலவு செய்து வரும் நாசாவை பொறுத்தளவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயலிழந்த பின்னர், இந்தத் தொகையைக் கொண்டு நிலவுக்கு விஞ்ஞானிகளை மீண்டும் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.

நிலவுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து ஏற்கெனவே ஆர்டெமிஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி நாசா செயல்படுத்தி வருகிறது. 1972ஆம் ஆண்டு அப்போலோ 17 மூலம் மனிதன் நிலவுக்குச் சென்று வந்த பிறகு முதன்முதலாக, 2024இல் நான்கு பேரை அங்கு அனுப்பி, 2025ஆம் ஆண்டு அவர்கள் திரும்பி வரும் வகையிலான ஒரு திட்டம் தான் அது.

ஆனால், "இத்திட்டம் செலவு மிகுந்தது," என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் ஜான் க்லெய்ன். மேலும், "ஆர்டெமிஸ் திட்டத்தைக் கைவிட தற்போது யோசிக்கப்பட்டு வருகிறது," என்றும் தெரிவிக்கிறார் அவர்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன், லூனார் கேட்வே என்ற பெயரில் நிலவுக்கு அருகே ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கவும் நாசா திட்டமிட்டு வருகிறது.

இந்தத் தசாப்தத்தின் இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும். தற்போதைய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் போல் அவ்வளவு பெரிதாக அது இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளுக்கு இந்த நிலையம் மிகுந்த பயன்களை அளிக்கும்.

இறுதியாக, தற்போதைய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் முழுமையாக அழிக்கப்படாது என்றே தோன்றுகிறது. இந்த நிலையத்தை முழுமையாக அழிப்பது வீண் என்றும், இதிலுள்ள பல உபகரணங்களை மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சில நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆனால் இதுபோன்ற யோசனைகளை ஏற்பதாக நாசா இதுவரை எதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், வரும் ஆண்டுகளில் நாசாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

"என்னிடம் பேசிய விண்வெளி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் யாரும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை முழுமையாக அழித்துவிடுவதை ஏற்கவில்லை," என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த சிஸ்லூனார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேரி கால்னன்.

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருக்கி, அதிலிருந்து கிடைக்கும் உலோகங்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்றும், இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அமெரிக்க அரசிடம் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வேண்டுகோளை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டதாகவும் கேரி கால்னன் கூறுகிறார்.

"இந்த யோசனையை வெள்ளை மாளிகை விரும்பியது," என்கிறார் அவர். "அமெரிக்காவின் தற்போதைய ஆட்சியாளர்களின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளுக்கு ஏற்ற வகையிலேயே இந்த வேண்டுகோள்கள் இருக்கின்றன."

இந்த ஆராய்ச்சி நிலையத்தை நொறுக்கி கடலில் விழ வைக்கலாமா அல்லது மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்யலாமா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் இந்த சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் வரும் 2031இல் முடிவுக்கு வரும் என்பதே உண்மை.

அது இருக்கும் இடத்தில் வேறு பல சிறிய ஆராய்ச்சி நிலையங்கள் இருந்து அண்டவெளியில் மனிதனின் இருப்பை உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை முடித்துக்கொள்ளும் என்பது மற்றுமோர் அற்புதமான திட்டத்தின் தொடக்கமாகவே அமையும்.

"அரசியல்ரீதியாக மனிதர்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், இது போன்ற முயற்சிகளில் மனிதர்கள் ஒற்றுமையாகச் செயல்படமுடியும்," என்ற செய்தியை இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விட்டுச் செல்லும்," என்கிறார் லெவிஸ்.

https://www.bbc.com/tamil/articles/crg39k3d0eno

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.