Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும்

நாடு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல், இராணுவ, சமூக விவகாரங்களில் மிகச் சிக்கலானதொரு நேரத்தைத் தமிழினம் கடக்கும் வேளை இது.

இந்தச் சமயத்தில் தேசிய ரீதியில் தமிழரினத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களின் செயற்பாடும் போக்கும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம் இது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் 24 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றைய இருவரான அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரை ஒத்த தி. மகேஸ்வரன் எம். பியும் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்று கூறமுடியாது. அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த 24 பேரையும் விட, முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் பேசும் எம்.பிக்களில் மனோ கணேசன் நீங்கலாக இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் முதல் கொண்டு மலையக மக்கள் முன்னணித் தலைவர் அமைச்சர் பெ. சந்திரசேகரன் வரை அனைவருமே, பேரினவாதத்தில் ஊறித் திளைத்துக் கிடக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்குக் கூசா தூக்கும் இந்தச் சமயத்தில்

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையும் பொறுப்பும் இரட்டிப்பாகின்றன.

தமிழினத்தின் இராணுவ, அரசியல் போராட்ட சக்திகளான புலிகள் தங்கள் பொறுப்பை உயிரைத் துச்சமென மதித்து ஆற்றி வரும் வேளையில்

மறுபுறத்தில் புலிகளுக்கு பக்கத் துணையாக ஜனநாயக அரசியலில் பெரும் சக்தியாய் எழுச்சிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும்.

மட்டக்களப்பில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் தேவாலயத்துக்குள் கிறிஸ்மஸ் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோஸப் பரராஜசிங்கம் எம். பி. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூரமும்

கொழும்பில் பல இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கு மத்தியில், பட்டப்பகலில், நட்ட நடு வீதியில் வைத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரமும் தமிழர் மனதை ஆழமாகக் குடையும் வேதனைகள்.

இத்தகைய ஆபத்துகளுக்கு மத்தியில்தான் பணிபுரிய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள்.

ஒருபுறம் மட்டக்களப்பிலோ, அம்பாறையிலோ, திருகோணமலையிலோ, வவுனியா மன்னாரிலோ, யாழ்ப்பாணத்திலோ தமது சொந்தத் தொகுதிகளுக்குக் கூடச் செல்லமுடியாத பாதுகாப்பு இக்கட்டில் அவர்கள் சிக்கிக் கிடக்கின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னியைத் தவிர பிற எந்த இடங்களுக்கும் அரச கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பிரதேசத்துக்கும் சுமுகமாகச் சென்றுவர முடியாத பெரும் சிக்கலிலேயே அவர்கள் உள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை.

கொழும்பில் இருப்பதும் அவர்களுக்குச் சிக்கல்தான். அதனால் கொழும்பில் ஒரு காலும் வெளிநாடுகளில் வாழ்வுமாக அவர்களில் பலர் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தச் செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் தமிழரின் விடுதலைப் போராட்ட எழுச்சி குறித்து பிரசாரம் செய்கிறோம் என்ற சாக்குப்போக்கு வேறு முன்வைக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்துக்கு முன் அனுமதியின்றி மூன்று மாதங்கள் தொடர்ந்து சமுகம் தராவிட்டால் எம். பி. பதவி காலியாகிவிடும் என்ற ஒழுங்குவிதி இருப்பதனால் என்னவோ மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்றப் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவதற்காகவேனும், கொழும்பைத் தமது சர்வதேசப் போக்குவரத்துக்கான மைய இடைநிலைத்தளம் (tணூச்ணண்டிt ணீடூச்ஞிஞு) ஆகப் பயன்படுத்தும் விதத்திலேனும் சில கூட்டமைப்பு எம். பிக்கள் அவ்வப்போது கொழும்பைத் தரிசித்துச் செல்லத் தவறவில்லை.

இப்படி பிறநாட்டில் தமிழர் போராட்டப் பிரசாரம் என்று பெட்டியைத் தூக்கிக்கொண்டு சதா பயணத்தில் இருக்கும் பல எம். பிமாருக்கு, தமிழர் தாயகத்தில் மக்களின் அவலநிலை தொடர்பான அடிப்படைப் புள்ளி விவரங்கள் கூடத் தெரிவதில்லை. இந்தச் சீத்துவத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக இவர்கள் ஆக்கபூர்வமான என்ன பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

போதாக்குறைக்கு நாடாளுமன்றத்தில் அரசுக் கவிழ்ப்பு முயற்சியிலிருந்து, அரசுக்கு சார்பான நிதிச் சட்டங்களை நிறைவேற்றுகின்ற விவகாரம் வரை 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த 22 பேர் அணியை எந்தத் தரப்புமே ஒரு பொருட்டாக மதிக்காத நிலையும் காணப்படுகின்றது.

கைதுசெய்யப்படுவோரை பொலிஸார் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டும் என்ற குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை அண்மையில் திருத்தப்பட்டது. கைது செய்யப்படுவோரை 48 மணிநேரம் தடுத்து வைக்கும் அதிகாரத்தைப் பொலிஸாருக்கு வழங்கும் விதத்தில் அச்சட்டம் திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகின்றவர்கள் இன்றைய கட்டத்தில் தமிழரே என்பது தெளிவு. ஆனால் இச்சட்டத்திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அதை ஜே. வி. பி. முதற்கொண்டு ஐ. தே. கட்சிவரை எதிர்த்து வாக்களித்தபோதும் அதை அடையாளத்துக்குத்தன்னும் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 எம். பிக்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.

அரசுக்கு எதிரான விடயங்கள் வாக்கெடுப்புக்கு வரும் சமயங்களில், அதை எதிர்த்து வாக்களிக்கத் தமிழ்க் கூட்டமைப்பு எம். பிக்கள் நாடாளுமன்றில் இருக்கமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறிக் கணக்குப் போடுகின்றார் அரசுத் தரப்பின் பிரதம கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே.

அதேசமயம் அரசைக் கவிழ்க்கும் முயற்சியா, கூட்டமைப்பினரை எங்களுக்கு ஆதரவாக ரிரான் அலஸ் கூட்டிவருவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கணக்குக் காட்டுகின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு தரப்பினதும் போடுதடி போல கூட்டமைப்பினர் இருக்கின்றனரே தவிர, தமிழரின் அரசியல் போராட்டத்தில் ஓர் ஜனநாயக அதிர்வை (திடிஞணூச்ணt) ஏற்படுத்துகின்ற உந்து சக்தியாக அவர்கள் இல்லை. என்ற பலவீனம் தோற்றுகின்றது.

விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த இனத்தின் பிரதிநிதிகள் என்ற ஆவேசம் இவர்களிடம் அடங்கிப்போய்விட்டதா என்று எண்ணும் நிலையைத் தோற்றுவிக்காமல் ஊக்கத்துடன் செயலாற்றும் பொறுப்பு இன்று அவர்களுக்கு உண்டு. வரலாற்றுக் கடமையை ஏற்றவர்கள் பலவீனத்தில் தூங்கிவிட முடியாது. தூங்கிவிடக் கூடாது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.