Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சொல்லாதே யாரும் கேட்டால்.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சொல்லாதே யாரும் கேட்டால்.....!

மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கப் போவதாக அண்மைக்காலமாகச் சொல்லி வருகின்றது. அதிபர் ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழு, கிட்டத்தட்ட நாற்பது தடவைகள் கூடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரையை மேற்குலகமும் 'சும்மா' கேட்டுக்கொண்டு வருகின்றது.

இவ்வேளையில் ஒற்றையாட்சி முறையின் அடிப்படையில்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சமஷ்டி முறைக்கு இடமேயில்லை என்றும், சிங்கள மக்களின் விருப்பத்துடன் அதிகாரப் பகிர்தலை மட்டுமே அளிக்க முடியும் என்றும், அதிபர் ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா அரசு, தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க மாட்டாது என்பது ஒரு புறம் இருக்க, அது சொல்லி வருகின்ற தீர்வுத்திட்டம் தழிழர்களின் பிரச்சனையை ஒரு போதும் தீர்க்கப் போவதுமில்லை என்பது தான் எமது கருத்தாக உள்ளது. இந்தக் கருத்தின் அடிப்படையில் சில சிந்தனைகளை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்று சொல்லிக்கொண்டு, இந்தச் சர்வகட்சிக்குழு அமைக்கப்பட்டபோது, இந்தக் குழுவிற்குத் தலைவராக இடதுசாரிச் சிந்தனையாளர் பேராசியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டார். அப்போது இந்தியா மற்றும் மேற்குலகத்தின் கருத்துக்களுக்கு அமைய, சமஷ்டி முறையிலான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கிணங்கப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களும் இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் உள்ள சமஷ்டி அமைப்புக்களை ஒட்டி, இந்தத் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது என்று பகிரங்கமாக அறிவித்துமிருந்தார். இதன் காரணமாகச் சமஷ்டி அடிப்படையில், 'அதிகாரப் பரவலாக்கல்' முறையில் இந்தத் தீர்வுத்திட்டம் அமைக்கப்பட உள்ளது என்றுதான் பலரும் எண்ணியிருந்தார்கள். 'ஒற்றையாட்சி' என்ற சொற்பதம் அவ்வேளையில் வலியுறுத்தப்படவுமில்லை.

ஆனால் திடீரென்று மகிந்த ராஜபக்ச ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற 'நியூஸ் போஸ்ட் -இந்தியா' என்ற செய்தி நிறுவனத்திற்கு அதிபர் ராஜபக்ச கொடுத்துள்ள செவ்வியில் "இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சி முறை மூலமாகத்தான் தீர்வு காணப்பட வேண்டும். சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களுக்குப் பிடிக்காது.

ஆகவே ஒற்றையாட்சி என்ற முறையில்தான் தீர்வு காணப்படல் வேண்டும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியாது. அதிகாரப்பகிர்வு என்ற பதத்தைத்தான் நான் விரும்புகின்றேன். நான் சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதால் எந்தத் தீர்வுத்திட்டத்திலும் சிங்கள மக்களின் கருத்தைத்தான் நான் அமலாக்க முனைவேன்" - என்ற கருத்துப்படப் பேசியுள்ளார்.

இங்கே ஒரு முக்கிய விடயத்தை நாமும் சுட்டிக்காட்ட விழைகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கப் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டு, சர்வ கட்சிக்குழு ஒன்றை நியமித்தது மகிந்த ராஜபக்சதான்! ஆனால் இன்று அந்த சர்வ கட்சிக்குழு ஆராய்கின்ற விடயங்களுக்கு எதிராகப் பேசுகின்றவரும் இதே மகிந்த ராஜபக்சதான்! இங்கே எத்தனை கட்சிகள் சேர்ந்து எந்த நிலைப்பாட்டையும் எடுத்தாலும், கடைசியில் தான் எடுக்கின்ற முடிவுக்குத்தான் சரவகட்சிக்குழு கட்டுப்பட வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் முடிவாகும்!

அதாவது மகிந்த ராஜபக்சவின் முடிவின்படி, 'தமிழ் மக்களின் பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அது ஒற்றயாட்சி முறையில்தான் 'தீர்க்கப்பட (?)' வேண்டும். அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது. அதிகாரங்களைப் 'பகிர்ந்து' கொள்வது என்றால் மட்டும் பேசலாம்' என்பதேயாகும்.

அது என்ன அதிகாரங்களைப் 'பகிர்ந்து' கொள்வதும், அதிகாரங்களைப் 'பரவலாக்குவதும்?' ஏன் மகிந்த ராஜபக்ச அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது என்கின்றார்.?

அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்றால், அங்கே முழு அதிகாரங்களும் மத்திய அரசின் வசமே இருக்கும். மாகாணங்களில் செயற்படுத்தப் படுவதற்காக, சில உரிமைகளை அல்லது சில அதிகாரங்களை மத்திய அரசு தரும். ஆனால் அந்த அதிகாரங்களை அல்லது அந்த உரிமைகளை மத்திய அரசு விரும்பினால் திருப்பித் தன்னிடமே எடுத்துக் கொள்ளலாம். அந்த அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மேலாண்மையும் மத்திய அரசிற்கே இருக்கும்.

அதிகாரப் பரவலாக்கல் என்பது, அந்த அதிகாரங்களைத் தமிழர்களே முழுவதும் நிர்வகித்துச் செயற்படுத்துகின்ற உரிமையாகும். அதாவது இந்த அதிகாரங்களைக் குறிப்பிட்ட அந்தப் பகுதிகளுக்கு வழங்குவதன் மூலம், அப்பகுதி மக்கள் தங்களுடைய அதிகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதாகும். பரவலாக்கம் என்றால் கொடுக்கப்பட்ட அந்த உரிமைகளை, அதிகாரங்களை மத்திய அரசால் மீளவும் திருப்பி எடுக்க முடியாது.

இதன் காரணமாகத்தான் அதிபர் ராஜபக்ச அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறிவருகின்றார். தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது. ஒற்iறாயாட்சியின் கீழ், சிங்கள பௌத்தப் பேரினவாத மேலாதிக்கத்தின் கீழ், தமிழர்கள் மூன்றாம் தரக் குடிமக்களுக்கும் கீழாக, சிங்கள அரசின் தயவில் வாழ வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்புகிறார். அதனால்தான் ஒற்iறாயாட்சியின் கீழ் அதிகாரப் பங்கீட்டை தருகின்றேன் என்கின்றார். அதனையும் தரமாட்டார் என்பது வேறு விடயம்!

அதாவது நடைமுறைப் பேச்சு வழக்கின்படி சொல்வதாக இருந்தால், 'பாதத்தின் அளவுக்குரிய காலணியைத் தரமுடியாது. நாங்கள் தருகின்ற காலணிக்குரிய அளவில் பாதத்தின் அளவை மாற்று' - என்பதேயாகும்!

இது மகிந்தவிற்கு மட்டும் சொந்தமான தனிக்கருத்து அல்ல! எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தைத்தான் வேறு வார்த்தைகளில் கூறி வருகின்றார். இந்தச் சர்வ கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள கட்சிகளிடம் ரணில் பேசுகின்றபோது "'ஒற்றையாட்சி' என்ற சொல்லை உபயோகிப்பதனால் பிரச்சனையில்லை. அது வெறும் சொல் தானே! நீங்கள் ஒற்றையாட்சி என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்" - என்று ரணில் விக்கிரமசிங்க தனது பங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதாவது 'ஒற்றையாட்சி' என்பதை ஒரு வெறும் சொல்லாக மட்டும் பயன்படுத்துங்கள். அதனால் பிரச்சனை வராது என்று ரணில் விக்கிரமசிங்க சொல்கின்றார்.

அப்படியென்றால் 'தமிழீழம்' என்ற சொல்லையும் உபயோகிக்கலாம்தானே? அவரைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு வெறும் சொல்தான் என்று ஏற்றுக் கொள்வாரா?

பயம்! சொல்லைச் சொல்வதற்கே பயம்.!

ஒற்றையாட்சி என்றால், அது மத்திய அரசின் அதிகாரத்திற்குள் முழுமையாக உட்பட்டது என்றுதான் பொருள். இது ரணிலுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த விடயம். ரணில் நேர்மையான ஓர் அரசியல்வாதியாக இருந்தால், ஒற்றையாட்சி என்ற சொல்லை உபயோகிக்கக் கூடாது என்றுதான் வாதிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், 'ஒற்றையாட்சியோடு ஒத்துப் போங்கள்' என்று சொல்கின்ற அளவில்தான் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு உள்ளது.

அதாவது மகிந்த ராஜபக்சவின் கருத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு, அதனை ஒத்துத்தான் பேசி வருகின்றார். ஏனென்றால் மகிந்தவின் அடிப்படைக் கோட்பாட்டுச் சிந்தனைக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் அடிப்படைக் கோட்பாட்டுச் சிந்தனைக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அந்தச் சிந்தனைகளை செயலாற்றுகின்ற முறையில்தான் வித்தியாசம் இருக்கின்றதே தவிர, அடிப்படையில் இருவருமே சிங்களப் பௌத்தப் பேரினவாதிகள்தான்!

ரணில் விக்கிரமசிங்க குறித்துப் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே எப்போதும் ஒரு மயக்கம் இருந்து வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய சிங்களப் பௌத்தப் பேரினவாத முகத்தை, பொருளாதார முகமூடியணிந்து மறைத்து வருகின்றார் என்ற எமது கருத்தை நாம் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தியே வந்துள்ளோம். ரணில் விக்கிரமசிங்க ஊடாகவும் எந்தவிதச் சமாதானத் தீர்வும் கிட்டாது என்கின்ற தர்க்கத்தை நாம் எப்போதும் சொல்லியே வந்துள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரச்சனையைத் தீர்ப்பார் என்று, எமது புலம் பெயர்ந்த மக்கள் கொண்டிருந்த நப்பாசையின் முன்னால், எந்தவிதத் தர்க்கமும் அன்று எடுபடவில்லை என்பதும் உண்மைதான்! இன்று ரணில் விக்கிரமசிங்கவும், அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், அரசின் கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பை வரவேற்றுப் பேசியதும், 'தாங்கள் போரை எதிர்க்கவில்லை. ஆனால் நேர்மையான வழியில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து போரை நடத்துங்கள்' என்று மகிந்த ராஜபக்சவிற்கு வேண்டுகோளை விடுப்பதும் இவர்களது உள்நோக்கை வெளிப்படுத்தி வருகின்றன.

இன்று வரைக்கும் ஓர் உருப்படியான தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவில்லை. தவிரவும், முன்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட G.L.பீரிஸ் போன்றவர்கள் இன்று கட்சி மாறி, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்களா அன்று தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, சமாதானத் தீர்வை அன்றைய பேச்சுவார்த்தையூடாகத் தந்திருப்பார்கள்? நாம் அன்று சொன்னதையும் புலம் பெயர்ந்த தமிழர்கள் செவிமடுக்கவில்லை.

அதாவது இரண்டு பிரதான சிங்கள கட்சிகளும் தீர்வு ஒன்றைத் தருவதாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேதான் ஒரு தீர்வைத் தர முடியும் என்று முடிவெடுத்துள்ளன.

ஆனால் இதன் மூலம் நீதியான தீர்வைக் காண முடியாது என்பதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவு!

இது தமிழீழ விடுதலைப் புலிகளின்; முடிவு மட்டுமல்ல, கொள்கையளவில் மேற்குலகத்தின் முடிவும் கூட!

மேற்குலகமும் பொதுவாக இதே கருத்து நிலையைத்தான் சொல்லி வருகின்றது. தமிழர்களின் பிரச்சனைக்குரிய தீர்வுக்கான புறவரையறையைச் சொல்கின்றபோது, அது ஓர் ஒற்றையாட்சி முறைக்கு அப்பால் ஒரு கூட்டாட்சி முறையாக இருக்க வேண்டும் என்று மேற்குலகம் சொல்லி வருகின்றது.

இங்கே கருத்து நிலை என்னவென்றால், மேற்குலகம் கூட்டாட்சி முறை அல்லது சமஷ்டி முறை மூலம் தங்களுடைய பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்து வாழப் பழகுகின்ற இயல்பைப் பெற்றிருக்கிறது. கூட்டாட்சி முறையைப் பேணுகின்ற விழுமியங்களை மேற்குலகம் கடைப்பிடித்து வருகின்றது. இவற்றிற்கு உதாரணமாக கனடா போன்ற பல நாடுகளைச் சுட்டிக் காட்டலாம்.

இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தாங்கள் விழுமியங்களைப் போற்றுவது போல் சிறிலங்கா அரசும் விழுமியங்களைப் போற்றி, தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று மேற்குலகம் நம்புகின்றது என்பதாகும்! ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்னவென்றால், சிங்கள அரசுகளுக்கு இந்த விழுமியங்களை போற்றிப் பேணிப் பாதுகாக்கின்ற அடிப்படைப் பக்குவம் கிடையாது என்பதுதான்! இதனைக் கடந்தகால வரலாறு மட்டுமல்ல, சம கால நிகழ்வுகளும் நிரூபித்தே வருகின்றன.

இன்று ஒற்றையாட்சி, அதிகாரப் பகிர்வு, தீர்வுத் திட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்ற மகிந்தவின் சிங்கள அரசு, மறுபுறமாக மனித உரிமைகளை மீறிக்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களைச் சொந்த இடங்களில் இருந்து கலைத்து வருகின்றது.

தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தைத் துண்டாடி, தனி மாவட்டங்களை உருவாக்கப் போவதாகக் கூறி வருகின்றது. அத்தோடு தமிழ் மக்களை எவ்வளவு தூரம் பொருளியல் ரீதியாகச் சிதைத்து, அழிவையும் அவலத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அண்மைக்கால உதாரணமாகச் சிலாவத்துறை ஆக்கிரமிப்பைச் சொல்லாம். யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாத அந்தப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்து, தமிழ் மக்களைக் கலைத்து, அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. சண்டை எதுவுமே நடக்காமல், அங்கே புகுந்து, அங்கு வசிக்க்pன்ற மக்களுக்கு இவ்வளவு அவலங்களையும்; சிங்கள அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பேச்சு வார்த்தையால் தீரக்;கின்றோம், சமாதானத் தீர்;வைக் கொண்டு வந்து தீர்க்கின்றோம் என்று சிறிலங்கா அரசு பேசிக்கொண்டு, செயல் ரீதியாகத் தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றுவதும், அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும், அந்த இடங்களில் சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதும் போன்ற விடயங்களைத்தான் சிங்கள அரசு செய்து வருகின்றது.

பேச்சுவார்த்தை, தீர்வுத் திட்டம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதற்கு அப்பாற்பட்டு, நடைமுறை சார்ந்த விடயங்கள் யாவும் முன்னுக்குப் பின் முரணாகவே அமைகின்றன. அதாவது சிறிலங்கா அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை.

மகிந்தவின் அரசு உள்நாட்டில் மட்டும், முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்ளவில்லை. வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட விடயத்திலும் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றது. இந்தியாவிற்குச் சென்று உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, சிறிலங்கா ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கூட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக இரண்டு தரப்புப் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா இந்தச் செய்தியை மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டது. இதனையடுத்து சிறிலங்கா அரசு இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது.

அதாவது, ஒரு சர்வதேச நாடோடு பேசுகின்ற விடயத்திலேயே அப்பட்டமாகப் பொய் பேசுகின்ற 'தரத்தில்தான்' சிறிலங்கா அரசு உள்ளது.

உள்நாட்டு விடயங்களாக இருந்தாலும், வெளிநாட்டு விடயங்களாக இருந்தாலும், சிறிலங்கா அரசுகளின் நடத்தைகள் நம்பகத் தன்மையாக இல்லை. இதனைக் கடந்த கால வரலாறும், சமகால நிகழ்வுகளும் நிரூபித்துள்ளன. ஆனால் இப்படிப்பட்ட அரசு, தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கப் போகிறது என்று மேற்குலகம் இன்னும் சொல்லிக்கொண்டே வருகின்றது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை பரவலாக உடைந்து வருகின்றது. இது உலக நாடுகளுக்கும் உள்ளுரப் புரிய ஆரம்பித்துள்ளது. என்றாலும் உலகநாடுகள் சிங்கள அரசு, சமஷ்டி முறையின் ஊடாகப் பிரச்சனையைத் தீர்க்கும் என்றுதான் இன்னமும் சொல்லி வருகின்றன.

அதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படையாகவே தெளிவாகச் சொல்கிறார்கள். "சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீரக்காது" - என்று! அது மகிந்த ராசபக்சவின் அரசாக இருந்தாலும் சரி, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த சிங்கள அரசாக இருந்தாலும்; சரி, தமிழ் மக்களின் பிரச்சனையை இவைகள் தீர்க்கப் போவதில்லை என்பதை விடுதலைப்புலிகள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

சிங்கள அரசுகள் மட்டுமல்ல, மேற்குலகமும் இவ்வாறு இருக்கும் வரையில், மேற்குலகத்தால்கூட தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றுதான் நாம் கருதுகின்றோம். ஏனென்றால் மேற்குலகத்திற்கு உண்மை தெரியும். ஆனால் அது பொய்மையை நம்பவே விரும்புகின்றது!

ஆகையால் பிரச்சனைக்குச் சரியான தீர்வு என்பது தமிழீழத் தனியரசு அமைவதில்தான் உள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்கான தமது இலட்சியத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார்கள். சிங்கள அரசுகள் தம்முடைய சிங்களப் பௌத்தப் பேரினவாதக் கொள்கையிலும், செயல்களிலும், தெளிவாகவும், திடமாகவும் உள்ளார்கள். மேற்குலகமும் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, உள்ளுரத் தெளிவாகத்தான் உள்ளது.

ஆனால்,

புலம் பெயர்ந்த தமிழ் மக்களாகிய நாம், எமது நாட்டின் விடுதலைக்கான இலட்சியத்தில் ஒட்டுமொத்தமாகத் தெளிவாகவும், விழிப்பாகவும் சஞ்சலம் எதுவும் இல்லாமலும் இருக்கின்றோமா என்கின்ற மிக முக்கியமான கேள்விக்கு நாம் இதய சுத்தியுடன் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது!

இந்தச் சுய விமர்சனத்தின் ஊடாக, எமது குறைகளைக் களைந்து, தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துகின்ற பணியில் மேலும் முனைப்பாக செயல்படுவோமாக!

சபேசன் (அவுஸ்திரேலியா)

தமிழ் கனேடியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.