Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம்

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா?

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக அமெரிக்காவின் ஹாலிவுட் போர்க் கொடி தூக்கி வரும் நிலையில் இந்திய திரை உலகம் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமைகளைப் படைத்திருப்பது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

 

'ஊர்வசி ஊர்வசி' என்று பாடிய குரல் மீண்டும் ஒலிக்கிறது

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

லால் சலாம் திரைப்படத்தின் ‘திமிறி எழுடா’ என்ற பாடலில் மறைந்த பாடகர்கள் ஷாஹுல் ஹமீது, பம்பா பாக்யாவின் குரல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இருவருமே தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடனும், பிற இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஷாஹுல் ஹமீது 1980கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 1993ஆம் ஆண்டில் "திருடா திருடா" திரைப்படத்தில் அவரது தனித்துவமான குரலை வெளிப்படுத்திய "ராசாத்தி என் உசுரு" பாடல் ஹமீதுக்கு திருப்புமுனையாக இருந்தது.

"வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே", "காதலன்" படத்தில் "ஊர்வசி ஊர்வசி" மற்றும் "ஜீன்ஸ்" படத்தில் "வாரயோ தோழி" உள்ளிட்ட 1990களின் மிகவும் பிரபலமான தமிழ்ப் பாடல்களை அவர் பாடினார். அவர் 1998ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/FACEBOOK

பம்பா பாக்யா தமிழ் திரை உலகில் பின்னணிப் பாடகராக வலம் வந்தவர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பொன்னி நதி” பாடல், நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் “சிம்டான்காரன் பாடல், நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் “புல்லினங்காள்” பாடல் ஆகியவை அவர் பாடியதில் பிரபலமான பாடல்கள். அவர் 2022ம் ஆண்டு உயிரிழந்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசியிடம் பேசும்போது, "எந்தவொரு தொழில்நுட்பமும் மனித சமுதாயத்திற்கு நன்மை தரவேண்டும். வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்கும்போது நிறைய யோசித்தேன். பாடகர்களின் குடும்பத்தாரையும் சந்தித்தோம். வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எதையும் செய்வதற்கு நான் விரும்புவதில்லை.

இப்போது நாங்கள் இந்தப் பாடலுக்குத் தேவையானதைச் செய்திருக்கிறோம். நாளை இதேபோன்ற முயற்சியை வேறு யாராவது செய்தாலும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாடகரின் குடும்பத்திற்கு, அவர்களின் வாரிசுகளுக்கு உரிய தொகையைச் செலுத்திவிட்டு அந்த முயற்சியை மேற்கொள்வார்கள்," என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,SCREENGRAB

'கடவுளுக்கு பிறகு, ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி' - ஷாஹூல் ஹமீதின் மகள்

ஷாஹூல் ஹமீதின் மகள், ஃபாத்திமா ஷாஹுல் ஹமீது இது முற்றிலும் எதிர்பாராதது என்று தெரிவித்தார். அவர் நம்மிடம் பேசும்போது, “ரஹ்மான் அங்கிள், தனக்கே உரிய பாணியில் மேஜிக் செய்கிறார். அப்பாவின் குரலை மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு யாருக்கும் புரியும் என்று நான் நினைக்கவில்லை. என் அம்மாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தாத்தாவின் காலத்தில் அவருடன் இருக்க முடியாமல் தவித்த என் மகள், இப்போது இந்தப் பாடலைக் கேட்டு குதூகலிக்கிறாள்,” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனது தந்தைக்குமான உறவு நட்பையும் தாண்டியது என்கிறார் ஃபாத்திமா.

“அவர்கள் சகோதரர்களைப் போலவே இருந்தார்கள். இருவரும் அவரவர் துறைகளில் வளர்ந்து வரும் காலத்திலேயே தொடங்கிய நட்பு அது. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக ஜிங்கிள்ஸ் இசைக்கும்போது இருவரும் அறிமுகமானார்கள்.

ரஹ்மான் அங்கிளின் சொந்த ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆல்பமான – 'தீன் இசை மாலை'- இஸ்லாமிய பக்திப் பாடல்கள் கொண்டது. அதில் ரஹ்மான் அங்கிளின் டேக் லைனாக மாறிய 'எல்லாப் புகழும் இறைவனுகே' என்ற பாடலை என் தந்தை பாடியிருந்தார்.

சுற்றி பல திறமைசாலிகள் இருந்தாலும் ரஹ்மான் அங்கிள்தான் திறமையை அடையாளம் கண்டு சரியான தளத்தில் பயன்படுத்தினார். கடவுளுக்கு அடுத்தபடியாக ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி செலுத்துகிறோம்,” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

மறைந்தவர்களின் குரலை மீண்டும் பயன்படுத்துவது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, “தொழில்நுட்பத்துடன் நாம் வளர வேண்டும். இதில் எதிர்மறையாக எதுவும் இல்லை. அப்பாவின் குரலைப் பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது," என்றார் ஃபாத்திமா.

"நான் எப்படி உணர்கிறேன் என்பதை விட, மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவரது ரசிகர்கள் அன்புடனும் மரியாதையுடனும் அதை வரவேற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்."

உண்மையில், பாடல் முதன்முதலில் ஆன்லைனில் வெளியிடப்பட்டபோது, அவரது ரசிகர் ஒருவர்தான் பாடலின் இணைப்பையும் பாடலில் தன் அப்பாவின் குரல் எந்த நிமிடத்தில் ஒலிக்கிறது என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் மறப்பது மிகவும் எளிதானது. ஆனால், அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சினிமாவில் இருந்த ஒருவரை மக்கள் எவ்வாறு அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்,” என்றார்.

 

இனி பாடகர்களின் குரலே பாடலைப் பாடும்

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலேயே முதல் முறையாக மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் ஒலிக்க செய்வது இதுவே முதல் முறை.

இது எப்படி சாத்தியமானது என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதை உருவாக்கிய டைம்லெஸ் வாய்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண சேத்தன் பிபிசியிடம் பேசினார்.

“நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. ரஹ்மான் சார் ஏதாவது புதிய இசைக் கருவி வாங்கி வந்தால், அது எப்படிச் செயல்படுகிறது என்று முழுமையாகக் கற்றுக் கொள்வேன்.

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், இசையமைப்பாளர்களுக்கான இசை உருவாக்கத் தேவைப்படும் மென்பொருட்களைத் தயாரிக்க நானும் என் குழுவும் தொடங்கினோம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, டைம்லெஸ் வாய்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்," என்றார் கிருஷ்ண சேத்தன்.

யாருடைய குரலை உருவாக்க நினைக்கிறோமோ, அவரது குரலின் பதிவு தேவை. அது ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

"பதிவு செய்யப்பட்ட குரலைக் கொண்டு ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை பயிற்றுவிக்க வேண்டும். அந்த ஏஐ மாடல் பாடகரின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் கிரகித்துக் கொள்ளும்.

பின்பு, நாம் பதிவு செய்ய நினைக்கும் பாடலை வேறு ஒரு நபரைப் பாடச் சொல்லி பதிவு செய்துகொள்ள வேண்டும். இது பைலட் வாய்ஸ் எனப்படும். பின்பு, நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மாடல் பைலட் வாய்ஸை பாடகரின் குரலாக மாற்றும். இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை,” என்று இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கினார்.

ஏன் ஷாஹூல் ஹமீது மற்றும் பம்பா பாக்யாவின் குரல்கள் தேர்ந்தெடுக்கபட்டன என்று கேட்டதற்கு, “ஷாஹுல் ஹமீத், பம்பா பாக்யாவின் குரல்கள் மிகவும் தனித்துவமானவை. செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குக் கொண்டு வர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை," என்றார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,KRISHNA CHETAN

மேலும், "பம்பா பக்கியாவின் குரல் ரஹ்மான் சாருக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு மாதிரி குரலை உருவாக்கியபோது, அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஷாஹூல் ஹமீது அவருடன் நெடு நாட்களாகப் பயணம் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,” என்று கூறினார்.

டைம்லெஸ் வாய்ஸஸ் என்பது பாடர்களின் குரல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன் சேத்தன்.

“இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு பாடகரின் குரலை காலத்துக்கும் பாதுகாக்க முடியும். மறைந்த பாடகரின் குரலைப் பயன்படுத்தும்போது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு உரிய வெகுமதியை முன்கூட்டியே குடும்பத்தினருக்கு அளித்துவிடுகிறோம்,” என்றார்.

இந்தத் தொழில்நுட்பம் இசைத் துறையில் பல மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிருஷ்ண சேத்தன்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தங்கள் குரல்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விரும்பும் முன்னணி பாடகர்களுடன் நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். அவர்களின் குரல்களைப் பதிவு செய்து சோதனை செய்து வருகிறோம்.

ஸ்டூடியோவுக்கு நேரில் செல்ல முடியாத ஒரு பாடகரின் ஏஐ குரலைக் கொண்டு, பாடலைப் பதிவு செய்துகொள்ள முடியும். பல்வேறு கால கட்டங்களில் ஒரு பாடகரின் குரல் எப்படி இருந்ததோ அதைப் பதிவு செய்து ஒரே பாடலில் சேர்க்க முடியும்.

மேலும், ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்களின் நடிகர்களுக்குத் தங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், ஏஐ மூலம் அவரது குரலிலேயே அனைத்து மொழி ரசிகர்களிடமும் பேச முடியும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cnknq92w234o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.