Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை]

 
இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன்.  
அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வைத்த அன்புக்கு அடையாளமாக நான் பலவற்றை சொல்லலாம் என்றாலும், நான் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

 
நான் உடுப்புகளை, அதிகமாக வார இறுதியில் தோய்த்து [கழுவி] நூல் கொடியில் காய்வதற்காக போடுவது வழமை. என்றாலும் இது வார இறுதி என்பதால், சிலவேளை வெளியே நடக்கப் போய்விடுவேன். அப்படியான ஒரு நாள் திடீரென மழை தூர தொடங்கிவிட்டது. கலைமதி, என் உடுப்புகளுடன், அவர்களின் உடுப்புகளும் ஈரமாவதை கண்டார். அவருக்கு ஒரே பதற்றம். என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும். தாயிடம் ஓடினார். மழையில் என் உடுப்புக்கள் நனைவதை சுட்டிக்காட்டி, அதை முதலில் எடுக்கும் படி அடம் பிடித்தார். இன்றும், அவரை பற்றி எண்ணும்  பொழுது,  நிழலாக ஆடும் நினைவுகளாக அண்ணி என்னிடம் அதைச் சொல்லுவார். 


எனக்கும் மறுமொழி வந்து, வேலைகளுக்கு விண்ணப்பித்து, முதல் நிரந்தர வேலையும் இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியலாளர் விரிவுரையாளராக கொழும்பிலேயே கிடைத்தது. ஆகவே அண்ணாவின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினேன். 
இப்ப வேலை முடிந்து, வீடுவந்தால் அவருடனும், மற்றும் அண்ணாவின் மூத்த பிள்ளைகளுடனுமே பொழுது போக்கு. நேரம் போவதே தெரியாது. அவருக்கு மூன்று வயது தாண்ட, எனக்கும் அரசாங்க கல்வி உதவி தொகை [Scholarship] கிடைத்து ஒரு ஆண்டு மேல் படிப்பிற்கு ஜப்பான் செல்ல வேண்டி வந்தது. அவரை விட்டு பிரிய மனமே இல்லை. அப்படியே அவருக்கும். என்றாலும், நான் விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி வர விமானத்தில் போவதாக கூறி, ஒருவாறு, அவரும் கட்டி பிடித்து முத்தம் தந்து விடை தந்தார். 


அப்பொழுது நான் யோசிக்கவில்லை, இது தான் அவரின் கடைசி முத்தம் என்று. இன்றும் என் மனதில், நிழலாக ஆடும் நினைவுகளாக அது இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. 


நானும் எல்லோரிடமும் விடைபெற்று, முதல் முறையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தின் ஊடாக பயணம் செய்தேன். என்றாலும் விமானத்தில் அயர்ந்து தூங்கும் பொழுது எல்லாம் அவரின் விடை தந்த முத்தம் தான் நிழலாக ஆடும்!!


கலித்தொகை 80 இந்த சில அடிகள் என் ஞாபகத்துக்கு வந்தன. 


"கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்  
தளர் நடை காண்டல் இனிது!"
"ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது!"
"ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது!"


ஆமாம் நீ அணிந்திருக்கும் ஒளி திகழும் மணியொலி கேட்கும்படிச் சாய்ந்து சாய்ந்து தளர் நடை போட்டு நீ செல்வதைக் காணும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது. என் ஐயனே! அன்பு ததும்ப நீ பார்க்கிறாய். "அத்தா அத்தா" என்று அழைக்கிறாய். இந்தத் தேன் மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது. என் ஐயனே வருக! பிறை  நிலாவே என் ஐயனிடம் வருக! என்று நான் அழைத்து உனக்கு அம்புலி காட்டுவது இனிமையாக இருக்கிறது. 


என் செல்லக் குழந்தை கலைமதியை வர்ணிக்க கலித்தொகை போதாது! என்றாலும் அவளின் குறு குறு நடை நடந்து மழலை மொழி பேசி இதயம் கவரும் அழகும் அம்புலிகாட்டி நிலா சோறு  ஊட்டிய நினைவுகளும் என் மனதில் இன்னும் புதைந்து இருப்பதை காண்கிறேன்!  


"காற்று வீசுது காகம் பறக்குது 
காலைப் பொழுது இருளாய் மாறுது 
காடைக் கோழி எட்டிப் பார்க்குது
காவி வருகிறேன் அன்னம் உனக்கு!"


என நிலாவைக் காட்டி கதை சொல்லி, சோறு தீத்தியது 


"சின்ன பூவே சிங்கார பூவே  
சிஞ்சிதம் காதில் தேனாய் விழ 
சித்திரம் பேசும் கண்ணும் ஓய  
சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ ?"


என துயிலவைத்தது எல்லாம் எப்படி மறக்கமுடியும்? 


எதோ ஜப்பானில் படிப்புடன் காலம் உருள, ஒரு ஆண்டு நிறைவுற்றதே தெரியாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக அவளுக்கு சில மின்னணு பொருட்களும் பொம்மைகளும், உடுப்புகளும் மற்றவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு டோக்கியோவில் இருந்து இலங்கை திரும்பினேன். கட்டாயம் இன்னும் ஒரு பெரிய முத்தம் கிடைக்கும் என்ற பெருமிதத்தில்!


ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை அக்கா குடும்பமே வரவேற்றது. அவர்கள் கண்கள் ஈரமாக இருந்தது. அக்கா மெல்ல என் காதில், அண்ணா குடும்பம், ஒரு திருமண கொண்டாட்டத்திற்காக இடைக்காட்டுக்கு போனதாகவும், நேற்று அங்கு எல்லோரும் கல்யாண விழாவுக்கு தேவையான முன் ஏற்பாட்டு அமளியில் இருக்கும் பொழுது, அது மாரி காலம் என்பதால் கிணறு முட்டி இருந்ததாகவும், கலைமதி அவர்களிடம் இருந்து நழுவி, தனிய வீட்டிற்கு பின் பக்கம் போய், தவறுதலாக யாரும் காணாமல்  கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என கூறினார்.  


எனக்கு, என் மனதில் இடி முழங்கிய மாதிரி இருந்தது. அந்த கடைசி முத்தம், அவளின் குறும்புகள், அவளின் மழலை பேச்சு, என் நெஞ்சில் படுக்கும் அழகு, சித்தப்பா என்று பின்னால் ஓடிவரும் காட்சி .... எல்லாமே நிழலாக ஒன்றின் பின் ஒன்றாக வந்தவண்ணம் இருந்தன. அந்த நாலுவயது குழந்தை என்னை மீண்டும் காணாமலே கண் மூடிவிட்டது!! 


"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே  
மடியில் தவழ்ந்து நெஞ்சை கவர்ந்தவளே 
மவுனமாய் இன்று உறங்குவது ஏன் ?
மகிழ்வு தரும் முத்தங்கள் எங்கே ?"


"மயக்கம் தரும் அழகு அழிந்ததோ ?
மனதை கவரும் குறும்பு மறைந்ததோ ?  
மரண தேவதைக்கு இரக்கம் இல்லையோ?
மதியென்று இனி யாரை கூப்பிடுவேன்!" 


முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே,  எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ?? 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, kandiah Thillaivinayagalingam said:

முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே,  எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ?? 

மிகவும் சோகமான வலி நிறைந்த தருணங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.