Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை – தமிழகம் சுற்றுலாத்துறையில் கூட்டு பொறிமுறை அமைத்து செயற்படின் முன்னேற்றம் - தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 APR, 2024 | 06:36 PM
image

நேர்கண்டவர் -  ரொபட் அன்டனி 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற  ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு   வழங்கிய விசேட செவியிலேயே இதனை  சுட்டிக்காட்டினார். 

மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும்   தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி,  பெண்களின் பொருளாதார பங்களிப்பு  குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’  என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். 

மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே  என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர்  தியாகராஜன் கருத்து வெளியிட்டார். 

‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது.  எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’  என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி  நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா 

பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ  கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும்.  2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன்.  இதில்   பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது.  குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்   எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.  இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது.  அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது.  இந்த ஐந்து வருட காலப்பகுதியில்     நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன்.    எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன?  அவற்றை எவ்வாறு திருத்துவது?  என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன்.  அந்த அனுபவம்,  அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது,  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது.    மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும்.  அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will)    முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும்.  முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது.  அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.  இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர்  ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது.  அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன.  இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. 

ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது.  முறையை   மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால்  மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம்.  

கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள்.   இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? 

 பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர்.  அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும்   சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது.  நீங்கள் இந்த நூற்றாண்டை  எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ  அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். 

ஸ்கடேினேவிய நாடுகள்,  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும்,  மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது.   பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்,  அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது  என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது.  எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து   நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது.  பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும்.  பிரசவ மரணம் குறைவடையும்.  அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான  சுமை குறைவடைகிறது.  அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள்     பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும்.  ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.  பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும்.  இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய  வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.  அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை.  இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம்.  இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர்  தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.    இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது.   

கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள்.    தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன.   தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? 

 பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும்.  இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி   1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர்     தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார்.  ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின.  தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. 

ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.  பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.   தகவல் தொழில்நுட்பம் என்ற  விடயம்  வெளிக்காட்டவில்லை.  அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை.    பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே   முதலீடு செய்து இருக்கின்றன  என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும்.  ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை.  காரணம்   நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது.    அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன்.  எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை.  மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது.  இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும்.  மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.    இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன்.  ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல.  இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது.  ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது.  நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை.  எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும்.   அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும்.  அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம்.  

கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா?

பதில் இது முதலமைச்சர்  ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி  நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது.  உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 

பதில்   நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும்.  காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும்.  அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன.  தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.  தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன.  சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம்.  ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும்.  அதில் இணைந்து செயற்பட  ஆற்றல் காணப்படுகிறது.  மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி   தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம்.  

கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது.  இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.  எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது.  50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்  12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம்   கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.  அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு)  இடம் பெற்றுள்ளது.  அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது.  50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து   கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த    எதனையும் செய்யவில்லை.  ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள்.  கவனச்சிதறல்  முயற்சியாகவே இது  தெரிகிறது. 

இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். 

கேள்வி  தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது.  நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.  முன்னாள் நிதி அமைச்சர்.  பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.  இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது.  உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நானே பயணம் செய்திருக்கிறேன்.   ஆனால் இதில் பொருளாதார  விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும்.  தொடர்புகள்,  பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும்.   என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை.  சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை  சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது.  உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். 

கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? 

பதில்  இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும்.   அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார்.  நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.  வலது கையில் இருப்பது  மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும்.  உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம்.    எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக   இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/182174

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்   போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். -இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:- திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம்  கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக! கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள். உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்
    • ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்! 17 MAY, 2024 | 10:08 AM   கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183749
    • அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301842
    • ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன. இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183751
    • இன்றுவரை இந்தியா தான் செய்த தவறினை திருத்த கூட தயார் இல்லை. அந்தளவுக்கு எங்களது தேசியத்தலைவரின் ஆத்மாவிலும் கூட பயம் கொண்டுள்ளது. தான் எவ்வள்வு முயன்றும் தன்னால் அவரின் கால் ..... கூட தொடமுடியவில்லை என்ற தோல்விதான் இந்த தடையின் தொடர்ச்சி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.