Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 24 மே 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?
படக்குறிப்பு, இரான் படகில் தப்பி வந்த நித்திய தயாளன் மற்றும் பிற தமிழக மீனவர்கள்

இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், சமீபத்தில் தங்கள் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்களது பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. பல ஆபத்துகளைத் தாண்டி அவர்கள் எப்படி நாடு திரும்பினர் என்பதை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

கடந்த மே 6 ஆம் தேதி இந்திய கடலோர காவல் படை, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தது. இரானைச் சேர்ந்த படகுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நபர்கள் கேரள கடற்கரை எல்லையையொட்டி சுற்றி வளைக்கப்பட்டனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, இரான் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மீன்பிடி படகை இயக்கியது இந்தியர்கள் என்றும், மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி இந்தியாவுக்கு தப்பி வந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

வேலை செய்த இடத்திலிருந்து சொந்த ஊருக்கு இந்த மீனவர்கள் தப்பி வர துணிந்தது ஏன்? சர்வதேச கடல் எல்லையில் எப்படி மீன்பிடி படகை வைத்து இந்தியாவுக்கு தப்பி வர முடிந்தது? கடலில் மீனவர்களை சூழ்ந்த அமெரிக்க கடல்படை செய்தது என்ன? தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அமெரிக்க கடற்படையிடம் மீனவர்கள் என்ன சொன்னார்கள்?

இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?
படக்குறிப்பு,நித்திய தயாளன்

இரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தது ஏன்?

இரானிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த மீனவர்கள் ஆறு பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த நித்திய தயாளன், அருண் தயாளன், கலைதாஸ், வாலாந்தரவையை சேர்ந்த ராஜேந்திரன், பாசிப்பட்டினத்தை சேர்ந்த முனீஸ்வரன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சேர்ந்த மரிய டெனில் ஆகிய 6 பேரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்று இருந்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ந்தேதி இரான் நாட்டைச் சேர்ந்த செய்யது சவூத் ஜாஃப்ரி என்பவரால் மீன்பிடி வேலைக்காக தாங்கள் பணி அமர்த்தப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

“கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதனால் என் தம்பியும், நானும் மீன்பிடி தொழிலுக்காக இரானுக்கு சென்றோம்,” என்று பிபிசியிடம் கூறினார் மீனவரான நித்திய தயாளன்.

இரானில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ஒப்புக்கொண்ட மீன்பிடி பங்கு தொகையை கொடுக்கவில்லை என்பதால் 6 பேரும் இரான் நாட்டில் இருந்து தப்பி கடந்த ஏப்ரல் 22ஆம் ஜாஃப்ரியின் விசைப்படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்கு பயணத்தை தொடங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 5ஆம் தேதி மீனவர்கள் இரான் நாட்டு படகுடன் டீசல் இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்து நின்று கொண்டிருப்பதை கண்ட இந்திய கடலோர காவல்படை மீனவர்களை படகுடன் மீட்டு கொச்சிக்கு அழைத்துவந்து விசாரித்திருக்கின்றனர்.

இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் பாதுகாப்பாக தங்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க அரசு அதிகாரிகள் வழியாக உதவி கோருமாறு மீனவர்களின் உறவினர்கள் கூறியதையடுத்து குமரியில் உள்ள தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் இடம் தகவல் கொடுத்தனர்.

அருட்பணியாளர் சர்ச்சில் கொச்சின் கடலோர காவல் படை அலுவலகம் சென்று மீனவர்களை அங்கிருந்து மீட்டு மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7ஆம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.

 

3500 கி.மீ. நீண்ட கடல் பயணம்

இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?

இரான் நாட்டின் பந்தர் சிரோயா என்ற கடற்கரை கிராமத்தில் இருந்து சுமார் 3500 கிலோ மீட்டர் கடல் வழி பயணத்தில் சந்தித்த பிரச்னைகள் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் திருப்பாலைக்குடியை சேர்ந்த படகு ஓட்டுநர் நித்திய தயாளன்.

"நான் எனது தம்பி அருண் தயாளன், கலைதாஸ், ராஜேந்திரன், முனீஸ்வரன் மற்றும் குளச்சலை சேர்ந்த மரிய டெனில் ஆகிய ஆறு பேரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரை அணுகி அவரிடம் தலா ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீன்பிடி தொழிலுக்காக இரான் நாட்டிற்கு சென்றோம். மீன்களை பிடித்து அதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு பங்குத் தொகை கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வேலைக்கு சேர்ந்தோம்."

தொடக்கத்தில் பங்குத் தொகையை முறையாக கொடுத்துவந்த முதலாளி, கடந்த ஆறு மாதங்களாக பங்குத் தொகையை கொடுக்கவில்லை என்கிறார் நித்திய தயாளன்.

"அவரிடம் பணம் கேட்கும் போதெல்லாம் ‘மீனுக்கு விலை கிடைக்கவில்லை, நஷ்டம் ஏற்பட்டு விட்டது, அதனால் பணம் கொடுக்க முடியாது, அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்’ என கூறி உணவு சமைப்பதற்கான பொருட்களை மட்டுமே வழங்கி மீன்பிடி தொழிலுக்கு அனுப்பி வந்தார்."

இரான் நாட்டின் பண மதிப்பு குறித்தும், மீன் விற்பனை செய்யும் சந்தை குறித்து தங்களுக்கு போதிய தகவல் தெரியாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த முதலாளி, பங்குத் தொகை கொடுக்காமல் ஏமாற்றியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

"எங்கள் பக்கத்து படகில் பணி செய்யும் மீனவர்களுக்கு அந்த படகின் முதலாளி நல்ல தொகையை பங்கு தொகையாக கொடுத்து வந்தது தெரிய வந்ததையடுத்து எங்க முதலாளியிடம் பணம் கேட்டோம். அதற்கு அவர் பங்கு தொகையை கொடுக்க முடியாது, நீங்க எல்லாரும் எனக்கு அடிமை. என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று தங்களை மிரட்டியதாக நித்திய தயாளன் பிபிசியிடம் கூறினார்.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என கூறியதையடுத்து அவர்களுக்கு உணவு சமைக்க வழங்கப்பட்ட பொருட்களும் நிறுத்தப்பட்டதாக இரானில் நடைபெற்ற சம்பவங்களை மீனவர் நித்திய தயாளன் விவரித்தார்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

உணவின்றி தவித்த மீனவர்கள்

தமிழக மீனவர்களுக்கும், இரானில் அவர்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு மோதல் போக்கு வலுக்கவே அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்புமாறு மீனவர்கள் கேட்டிருக்கின்றனர்.

"பல நாட்கள் உணவின்றி தவித்த நிலையில் வேறு வழியில்லாமல் பக்கத்து படகில் இருந்த நண்பர்களிடம் வாங்கி சாப்பிட்டு வந்தோம். ஒரு வாரம் ஆன பின்னரும் எங்கள் முதலாளி தொடர்பு கொள்ளாததால், அவருக்கு போன் செய்து கணக்கு பார்த்து எங்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு கேட்டேன். ஆனால் ‘உன்னுடைய பாஸ்போர்ட் என்னிடம் இருக்கிறது. உன்னால் ஊருக்கு போகமுடியாது’ என்று மிரட்டினார்."

இரானில் இருந்து தப்பிவரத் திட்டமிட்டது எப்படி?

வெளிநாட்டில் கஷ்டப்படுவது குறித்து குடும்பத்தினருக்கு தெரிந்தால் கவலை அடைவார்கள் என்று கருதி இதை வெளியே சொல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு இருந்தாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

"திடீரென ஒரு நாள் வீட்டுக்கு போன் செய்ய முடியாத வகையில் வைஃபை (WIFI) இணைப்பை முதலாளி துண்டித்தார். இது இருந்தால்தானே வேலை செய்யாமல் வீட்டுக்கு போன் பேசுவீங்க என்று கூறி அதை எடுத்துச் சென்றார். இதனால் நாங்கள் எங்கள் குடும்பதினருடன் பேச முடியாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம்," என்றார் நித்திய தயாளன்.

"எங்களுக்கு இருந்த ஒரே சந்தோஷம் வீட்டில் உள்ளவர்களிடம் போன் பேசுவது தான். அதுவும் இல்லாத நிலையில் உணவின்றி படகில் இருந்த ஆறு பேருக்கும் மன இறுக்கம் அதிகமாகியது. சாப்பாடு கொடுக்காமல் முதலாளி சித்ரவதை செய்வார் என பயந்து இந்தியாவுக்கு எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என்று அனைவரும் முடிவெடுத்தோம்," என பிபிசியிடம் பேசிய போது நித்திய தயாளன் கூறினார்.

ஏற்கெனவே பங்குத் தொகை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல தூதரகத்தை அணுக பயமாக இருந்ததால், யாருக்கும் தெரியாமல் படகுடன் இந்தியா வர அனைவரும் சேர்ந்து திட்டமிட்டதாக பிபிசியிடம் கூறினார் மீனவரான ராஜேந்திரன்.

திட்டமிட்டபடி, மீன் பிடிக்க கடலுக்கு செல்வதாக முதலாளியிடம் கூறி, டீசல், ஐஸ், உணவு பொருட்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.

இரான் அரசு மீன்பிடி படகுகளுக்கு, மாதம் பத்தாயிரம் லிட்டர் டீசலை மானியமாக கொடுக்கும். அந்த டீசலை கிஷ் தீவுக்கு சென்று பெற்று வந்த பிறகு மீன்பிடிக்க செல்வதாகக் கூறிவிட்டு, இந்தியா நோக்கி பயணத்தைத் தொடங்கியதாக நித்திய தயாளன் கூறினார்.

சுமார் 10 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் நான்கு நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் ஜிபிஎஸ், ரேடார் கருவி உதவியுடன் சர்வதேச கடல் வழியாக இரான் நாட்டில் இருந்து இந்தியா நோக்கி ஏப்ரல் மாதம் 22ஆம் படகில் புறப்பட்டதாக அந்த நாளை விவரித்தார் அவர்.

 
தமிழ்நாட்டு மீனவர்கள்
படக்குறிப்பு,இரான் படகில் தப்பி வந்த நித்திய தயாளன் மற்றும் பிற தமிழக மீனவர்கள்

மீன்பிடி படகின் அம்சங்கள்

மீன்பிடி படகை நம்பி எப்படி 3500 கி.மீ பயணத்தை மேற்கொள்ள துணிந்தீர்கள் என பிபிசி மீனவர்களிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த நித்திய தயாளன், அந்த மீன்பிடி படகின் வசதிகள் குறித்து நம்மிடம் விவரித்தார்.

“நாங்கள் பயணித்த மீன்பிடி படகு 33 மீட்டர் நீளம் கொண்ட பெரிய படகு. ஓட்டுநர் அறை, ஓய்வெடுக்கும் அறை என படகு முழுவதும் ஏசி வசதி உள்ளது. ஜெனரேட்டர், கழிப்பறை என அனைத்து வசதியும் கொண்டது.”

தொடர்ந்து பேசிய அவர், தங்களிடம் இருந்த படகு ஓராண்டுக்கு முன்பு வாங்கிய நவீன மீன்பிடி படகு. அந்த படகில் ஜிபிஎஸ் கருவி, ரேடார் வசதி, சேட்டிலைட் போன் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அந்த கருவிகளின் உதவியுடன் இந்தியாவுக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இரானிலிருந்து பயணத்தை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

நடுக்கடலில் மீனவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

இரானிலிருந்து இந்தியா நோக்கி கடலில் வந்து கொண்டிருந்த போது, நான்காவது நாள் அன்று கத்தார் கடற்படையினாரால் இந்த ஆறு மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். கத்தார் கடல் எல்லையில் அந்த படகு இருப்பதாக கூறி இரான் நோக்கி திரும்பிச் செல்லுமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

"கத்தார் கடற்படை நாங்கள் தப்பிச் செல்வது குறித்து முதலாளியிடம் சொல்லி விடுவார்கள் என அஞ்சி அரேபிய முதலாளியால் ஏமாற்றப்பட்டதை எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு படகில் தப்பி செல்கிறோம். வேண்டுமானால் கைது செய்து இந்திய தூதரகத்திடம் ஒப்படையுங்கள் என்று கெஞ்சினோம்," என்றனர் மீனவர்கள்.

கத்தார் கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் நபர்கள் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதால், சர்வதேச கடல் எல்லை வழியாக இந்தியாவுக்கு செல்லுமாறு கத்தார் கடற்படை மீனவர்களிடம் தெரிவித்ததாக நித்திய தயாளன் கூறுகிறார்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

பட மூலாதாரம்,X/INDIACOASTGUARD

கடல் நீரை காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்ததாகக் கூறும் மீனவர்கள்

சர்வதேச கடல் எல்லையில் தொடர்ந்து பயணித்த போது உணவு மற்றும் குடிநீர் இருப்பு காலியாகி கொண்டே வந்தது.

"ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனைவரும் சாப்பிட்டு கடல் நீரை காய்ச்சி குடித்து கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து பயணித்தோம்."

5 நாள்கள் கடந்த நிலையில், இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த மீனவர்களை, கடந்த 27ஆம் தேதி அமெரிக்க கடற்படை கப்பல் சுற்றி வளைத்திருக்கிறது.

"எங்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை, கைது செய்யப் போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். கப்பலில் இருந்த அமெரிக்க கடற்படையினருடன் எங்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி இந்தியாவுக்கு தப்பித்து செல்லும் கதையை கண்ணீருடன் விவரித்தோம்," என்கிறார் நித்திய தயாளன்.

இரானிலிருந்து புறப்பட்டு துபாய், ஓமன் போன்ற நாடுகளின் கடல் எல்லையையொட்டி படகில் பயணித்து வந்தோம். அமெரிக்க கடற்படை எங்களை ஓமன் நாட்டை ஒட்டிய கடல் பரப்பின் அருகே தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக நித்திய தயாளன் நினைவு கூர்ந்தார்.

அப்போது அதில் இருந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தங்கள் மீது இரக்கம் கொண்டு மருத்துவ உதவிகள் செய்ததுடன் உணவும் வழங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பரிந்துரை கடிதம் ஒன்றையும் மீனவர்களிடம் அமெரிக்க கடற்படை வழங்கியதுடன் சுமார் 30 நாட்டிக்கல் மைல் தூரம் மீனவர்களின் படகுக்கு பாதுகாப்பாக வந்ததாக பிபிசியிடம் பேசிய போது மீனவர்கள் விவரித்தனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

பட மூலாதாரம்,X/INDIACOASTGUARD

படக்குறிப்பு,கடலோரக் காவற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகு

"நடுவழியில் வேறு ஏதாவது கடற்படை தடுத்து நிறுத்தினால் அமெரிக்க கடற்படை வழங்கிய கடிதத்தைக் காட்டி விட்டு செல்லுமாறு அவர்கள் கூறினர்," என நித்திய தயாளன் கூறினார்.

அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்திய பிறகு இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியை மீனவர்களிடம் கேட்ட போது அதற்கு பதிலளித்த ராஜேந்திரன், ”போதைப் பொருள் ஏதும் நாங்கள் கடத்துகிறோமா என்று தான் அவர்கள் சோதனை செய்தனர். ஆனால் சோர்வாக அரை மயக்கத்தில் இருந்த எங்களை பார்த்த பிறகு அமெரிக்க கடற்படை சார்பாக வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து உணவை மட்டும் அவர்கள் வழங்கினார்கள்,” என்றார்.

இரானில் இருந்து புறப்பட்ட போது இருந்த உணவு கையிருப்பு தீர்ந்து போன சமயத்தில் அமெரிக்க கடற்படை வழங்கிய உணவு மீனவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது.

“அவர்கள் எங்களுக்கு தண்ணீர், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, சிகரெட், கூலிங் கிளாஸ், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கினர். அமெரிக்க கடற்படை கொடுத்த உணவு எங்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு போதுமானதாக இருந்தது.”

தொடர்ந்து பேசிய நித்திய தயாளன், “அவ்வப்போது கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதை சுட்டு சாப்பிட்டோம். படகில் இருந்த அனைவருக்கும் எப்படியாவது இந்தியாவுக்கு தப்பி சென்று விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருந்தது. அடுத்த என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாமல் அச்சத்துடன் பயணித்ததால் எங்களுக்கு பல நேரங்களில் பசிக்கவில்லை,” என்றார்.

படகில் இருந்த மீனவர்களில், நித்திய தயாளன் படகை இயக்கி வந்த நிலையில், மீதமிருந்த மீனவர்கள் படகுக்குள் கடல் நீர் உள்ளே வராமல் தடுப்பது, சமையல் உள்ளிட்ட வேலைகளை கவனித்து வந்தனர்.

“குடும்பத்தை நினைத்துக் கொண்டே சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பு மட்டும் தான் உடன் இருந்தது. அதனால் அனைவரும் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தோம்,” என்கிறார் ராஜேந்திரன்.

பயணத்தை தொடர்ந்த மீனவர்கள், படகில் டீசல் கையிருப்பு குறைவாக இருந்ததால், மணிக்கு 5 கி.மீ வேகத்தில் படகை இயக்கியதாக தெரிவித்தனர்.

“அமெரிக்க கடற்படையை சந்தித்ததில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 140 கடல் மைல் தூரம் பயணித்து 840 கடல் மைல் கடந்து ஆறு நாட்கள் கழித்து இந்தியா வந்து சேர்ந்தோம்,” என்றார் ஓட்டுநரான நித்திய தயாளன்.

பழுதான படகால் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்

"எப்படியாவது இந்திய எல்லைக்குள் சென்று விட வேண்டும் என தொடர்ந்து பயணித்தோம். ஆனால் கடலில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுடன் கடல் சீற்றமாக இருந்ததால் படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு கடல் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் பதறிப்போன நாங்கள் உடனடியாக படகில் இருந்த தண்ணீரை அவசர அவசரமாக நீண்ட நேரம் போராடி வெளியேற்றினோம். தண்ணீர் புகுந்ததால் என்ஜின் வேலை செய்யாமல் போனது. எங்கள் ஆறு பேருக்கும் இதில் இருந்து மீண்டு எப்படி இந்தியா போக போகிறோம் என தெரியாமல் நிலை குலைந்து போனோம்," என தப்பி வந்த தருணங்களை நிகழ்வை நித்திய தயாளன் விவரித்தார்.

பல மணி நேரம் போராடி, படகின் என்ஜின் பழுதை சொந்த முயற்சியில் சரி செய்து மீனவர்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்து இருக்கின்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த போது படகில் டீசல் இன்றி படகு நின்றது. அருகில் சென்ற படகு ஒன்றில் டீசல் கேட்டோம். ஆனால் தர மறுத்தனர்.

 
தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் மீனவர்கள்

சில மணி நேரம் கழித்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய கடலோர காவல் படையினர் வெளிநாட்டு மீன்பிடி படகு அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக எங்களை படகுடன் மீட்டு கொச்சி கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர், என்றார் படகு ஓட்டுநரான நித்திய தயாளன்.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படையினர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

பின்னர் கன்னியாகுமரியைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் மேற்பார்வையில் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் சொந்த ஊருக்கு மீனவர்கள் வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அருட்பணியாளர் சர்ச்சில், கடலில் டீசலின்றி மீனவர்கள் தவித்த தகவலை அருகில் வந்த மற்ற படகிலிருந்த மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் என்னை தொடர்பு கொண்ட பிறகு, மும்பையில் உள்ள ‘MARINE RESCUE RESEARCH CENTER’ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அதன் பேரில் கடலோர காவல்படை மீன்பிடி படகை மீட்டு கொச்சி மரைன் போலிசிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவித்தார்.

மீனவர்களிடம் இந்தியர்கள் என்பதை உறுதி செய்யும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில், உளவுத்துறை மூலமாக அவர்களின் உறவினர்கள் உதவியுடன் மீனவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களா என்பதும் விசாரணை செய்யப்பட்டு, எந்த முகாந்திரமும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது என்றார் அவர்.

இது மீனவர்களுக்கும், அவர்களை வேலைக்கு அமர்த்திய உரிமையாளருக்கு இடையிலான பிரச்னை என்பதால், இதில் இந்திய அரசும், இரான் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மாறாக அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிகழ்வு தனி வழக்காக கருதப்படும். ஆனால் மீனவர்களின் பாஸ்போர்ட் இரானிய முதலாளியிடம் உள்ளதால், வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லையென கூறி, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று அருட்பணியாளர் சர்ச்சில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து கத்தார், குவைத், இரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீன்பிடி தொழிலாளர்களாக பல மீனவர்கள் செல்லும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோல மூன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

‘பாடம் கற்றுக் கொண்டோம்’

14 நாட்களாக 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சவாலானபயணத்தை கடந்து, உயிருடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தை சந்திக்க முடிந்தது, நெகிழ்சியாக இருப்பதாக மீனவர் நித்திய தயாளன் கூறினார்.

“சராசரியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றால் 10 நாட்கள் வரை கடலில் தங்கி சுமார் 300 நாட்டிக்கல் தொலைவு வரை மட்டுமே மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பியுள்ளோம். ஆனால் அதே மீன்பிடி படகை பயன்படுத்தி 3,500 கடல் மைல் தூரம் பயணித்து வந்து சேர்ந்ததது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது,” என்றார் இறுதியாக.

அறிமுகம் இல்லாத முதலாளியை நம்பி சென்று இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டதை நினைக்கும் போது இனி மீன் பிடிக்க கடலில் இறங்க அச்சமாக இருப்பதாக கூறுகிறார் தப்பி வந்த மீனவர் ராஜேந்திரன்.

வெளிநாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு வேலைக்கு அமர்த்தும் நபர் குறித்து, முழுமையாக தெரிந்து பின்னர் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வெளிநாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அங்குள்ள நிலை குறித்து, முழுமையாக தெரிந்து பின்னர் செல்ல வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டதாக கூறுகிறார், தப்பி வந்த மீனவர் நித்திய தயாளனின் மனைவி கிருஷ்ண ப்ரேமி.

"என் கணவர் கடந்த 15 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் இருந்தது மிகுந்த மன வேதனை அளித்து வந்த நிலையில் திடீரென தான் படகுடன் அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் தொலைபேசியில் அழைத்து கூறியதால் அதிர்ச்சி அடைந்தேன். இனி என்னால் என் கணவரை, யாரையும் நம்பி வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது."

தனது கணவர் உட்பட ஆறு மீனவர்களும் படகில் இந்தியாவுக்கு வந்தபோது, எந்த தகவலும் தெரியாமல் வருந்தியதாக கூறுகிறார் கிருஷ்ண ப்ரேமி.

”மீன்பிடி தொழிலுக்காக எனது கணவர் செல்லும் நாட்களில் இதுபோல தொடர்பு கொள்ளாமல் ஒரு வாரம் வரை இருந்துள்ளதால், அவரிடமிருந்து தொலைபேசி வரும் என்ற நம்பிக்கையுடன் 15 நாட்களாக காத்திருந்தேன்.”

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்
படக்குறிப்பு,நித்திய தயாளன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ண ப்ரேமி

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு சிக்கல் ஏற்படுவது ஏன்?

குறைவாகப் பணம் வாங்குகிறார்கள் என்பதற்காக போலி முகவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறுகிறார் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.

இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “தமிழகத்தில் 171 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவர்கள் மூலமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வது பாதுகாப்பானது” என்கிறார் அவர்.

“தமிழகத்தில் தற்போது ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையின் கீழ் வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனம் குறித்து முழு தகவல் பெற்று அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செல்ல வேண்டும்.” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால், அவசர காலங்களில் nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 1800 309 3793, 8069009900, 8069009901 என்ற இலவச எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

அதேபோல வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டெல்லியிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடு அறை எண்ணான 011 - 23011954 / 23012292 / 23017160 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

https://www.bbc.com/tamil/articles/cw998pzq4ezo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.