Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாத சக்திகளினால் விரும்பப்படாத லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத சக்திகளினால் விரும்பப்படாத லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகை

[13 - October - 2007]

காலகண்டன்

* மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனை நியாயப்படுத்தியே ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பேரினவாதப் புத்தி ஜீவிகளும் பரப்புரை செய்து வருகின்றனர். அரசாங்க சார்பு பேரினவாத ஊடகங்களும் அதனைப் பிரசாரப்படுத்தியும் வருகின்றன. அரசாங்கப்படையினரால் அல்லது அவர்களது முகவர்களால் அடையாளம் காட்டப்படாத விதத்தில் கொலைகள் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றை எல்லாம் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அவர்களது நியாயமாக உள்ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் அம்மையார் இப்பொழுது இலங்கையில் இருக்கிறார். அவரது நான்கு நாள் பயணமும் சந்திப்புகளும் அவதானிப்புகளும் அரசாங்கத் தரப்பாலும் பேரினவாத சக்திகளாலும் விரும்பப்படாத ஒன்றாகும். இருந்தும் தடுத்து நிறுத்த முடியாத நிர்ப்பந்த சூழலில் அரசாங்கம் தயக்கத்துடன் அனுமதித்திருக்கிறது. இவர்களது வேண்டாவெறுப்பை அளவிடுவதற்கு ஐ.நா.வில் இருக்கும் இலங்கைப் பிரதிநிதி தயான் ஜெயதிலக ஆர்பரின் பயணம் பற்றி வெளியிட்ட கருத்து புலப்படுத்துகிறது. "இலங்கைக்குச் செல்லும் லூயிஸ் ஆர்பர் அம்மையார் கிழக்கிந்தியக் கம்பனியார் போன்று நடந்து கொள்ளக் கூடாது" என ஆலோசனை முன்மொழிந்து கொண்டார். இதே கருத்தைத்தான் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய கட்சிகளும் ஏனைய பேரினவாதிகளும் கொண்டுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே மேற்குலக மனித உரிமை ஆர்வலர்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் "வெள்ளைப் புலிகள்" எனப்பட்டமளித்தே வந்துள்ளனர். நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அலன்றொக், ஜோன் ஹோம்ஸ் ஆகியோருக்கு இவ் வெள்ளைப் புலிகள் பட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இங்கு வந்திருக்கும் லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இடம்பெறுவாரோ என்பதை அவரது பயண முடிவில் வெளிப்படுத்தும் கருத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படும்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனை நியாயப்படுத்தியே ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பேரினவாதப் புத்தி ஜீவிகளும் பரப்புரை செய்து வருகின்றனர். அரசாங்க சார்பு பேரினவாத ஊடகங்களும் அதனைப் பிரசாரப்படுத்தியும் வருகின்றன. அரசாங்கப்படையினரால் அல்லது அவர்களது முகவர்களால் அடையாளம் காட்டப்படாத விதத்தில் கொலைகள் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் இடம்பெறுகின்றன. இவற்றை எல்லாம் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அவர்களது நியாயமாக உள்ளது. அவ்வாறு இடம்பெறுவது பயங்கரவாதத்தை ஒழிக்கும் புனிதப் போரில் தவிர்க்க முடியாத கடமை என்றே கொள்ளப்படுகின்றது.

அதாவது அமெரிக்கா உலகப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுமாறு அறைகூவல் விடுத்துப் போராடி வருகின்றது. அதன் வழியில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் நேரடியாகவும் தனது கூட்டாளிகளுடன் இணைந்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வருவதாகக் கூறிக் கொள்கிறது. நாளாந்தம் அந்நாடுகளின் மக்களையும் எதிர்த்து வரும் போராட்ட சக்திகளையும் அழித்து வருகிறது. இக்கொலைகள் கடத்தல்கள் காணாமல் போதல்கள் என்பனவற்றை பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் கணக்கில் சேர்க்கப்பட்டே வருகிறது. ஈராக்கில் அபுகிறாய்ப் வதைக்கூட சித்திரவதைகளும் கியூபாவிற்கு அருகில் உள்ள குவண்டனா மோச் சிறையில் இடம்பெறும் மிக மோசமான சித்திரவதைகளும் பயங்கரவாத எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே அமெரிக்காவால் பரப்புரை செய்யப்படுகின்றது.

இதேவாய்ப்பாட்டையே இப்போது இலங்கையிலும் கேட்க முடிகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் அதன் சார்பான போராட்டங்களும் அரசியல் பிரச்சினை அல்ல. அவை பயங்கரவாதம் என்பதாகவே காட்டப்படுகிறது. அதன் காரணமாக இங்கு இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களை எவரும் மனித உரிமை மீறல்களாகக் கொள்ளக் கூடாது என்பதே பேரினவாத ஆளும் வர்க்கத்தினரின் வாதமாகும். எனவே இங்கு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசிவரும் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் போன்றனவற்றையும் ஏனைய அரசு சார்பற்ற மனிதாபிமான தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கமும் ஜே.வி.பி., ஹெல உறுமயவும் திட்டித் தீர்த்து வருகின்றன. இதற்காக இவர்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்பு என்னவெனில் மேற்குலகத்தின் தலையீடு புலிகளுக்கு உதவும் செயற்பாடு, இலங்கையின் இறைமைக்கு கொள்ளிவைக்கும் ஏற்பாடு என்பதாகும்.

இவர்கள் கூறுவதில் அரை உண்மை இருக்கிறது என்பதை தேசிய சர்வதேசிய அரசியல் பொருளாதார இராணுவ நிகழ்வுப் போக்குகளை ஆழமாக அவதானிப்போர் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். மூன்றாம் உலக நாடுகளை தமது தாராளமய தனியார் மய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் மறு கொலனியாக்கம் செய்து கொள்ள அமெரிக்காவும் மேற்குலகமும் ஜப்பானும் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன என்பது இரகசியமான ஒன்றல்ல. அதன் அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகளில் இன, மத, மொழி, பிரதேச முரண்பாடுகளைத் தூண்டி ஒடுக்கு முறைகளாகவும் போராட்டங்களாகவும் முன் தள்ளுகின்றன. யுத்தம் வரை வளர்த்தெடுக்கின்றன. அவற்றின் மறைவில் மறுகொலனியாக்கப் பாதையில் தாராள மயம் தனியார் மயத்தை திணித்தும் கொள்கின்றன. தமது தேவைகள் பூர்த்தியானதும் சமாதானம், அமைதி, அபிவிருத்தி பற்றி உபதேசம் செய்து தங்களது இருப்பிற்கான அமைதிச் சூழலை ஏற்படுத்த முனைகின்றனர். அத்தகைய அமைதிச் சூழலுக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் சூழலில் மனித உரிமைகள் மனிதாபிமானப் பணிகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்றன. இது அமெரிக்காவினதும் மேற்குலகினதும் தொடரும் தந்திரோபாயங்களாகும்.

இதனை விளங்கிக் கொண்ட சில மூன்றாம் உலக நாடுகள் தத்தமது நாடுகளின் உள் முரண்பாடுகளை உரியவாறு தீர்த்து அந்நியத் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காது நடந்து வந்துள்ளன. ஆனால் இலங்கை தனது சிறிய நாட்டில் நிலவி வந்த இன, மத, மொழி, பிரதேச முரண்பாட்டை கடந்த அரை நூற்றாண்டிற்கு மேல் தீர்த்துக் கொள்ளாது அந்நியரின் ஆலோசனைப் படி வளர்த்தே வந்திருக்கிறது. இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றியிருக்கிறது. இக் கொடிய யுத்தத்தால் ஒரு இலட்சம் வரையான மனித உயிர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கின் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். வெளியார் தலையிடும் அளவுக்கு தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்குமுறை யுத்தமாக மாற்றியவர்கள் இலங்கையின் சகல ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளேயாகும். இன்றும் தீர்வுக்கு வரத் தயாராக இல்லை. தமிழ் மக்களையும் அவர்களது போராட்டத்தையும் பயங்கரவாதப் பெயரில் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டமும் நோக்கமுமாகும்.

நாட்டின் இறைமை மீதும் சுதந்திரத்தின் மீதும் அந்நியத் தலையீடு எனக் கூறி நிற்கும் ஜே.வி.பி.க்கு ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரத்தின் மீது இடம்பெற்றுள்ள அந்நியத் தலையீடு பற்றிக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? சகல துறைகளிலும் அமெரிக்க, மேற்குலக, ஜப்பானிய, இந்திய முதலீடுகள் தலையீடுகளாக நாளாந்தம் இடம்பெற்று வருவதையிட்டு கண்களை இறுக மூடி நிற்கும் ஜே.வி.பி.க்கு இனப்பிரச்சினையும் அதன் காரணமான கொலைகளுக்கு எதிரான மனித உரிமைப் பிரச்சினை பற்றிப் பேசப்படும் போது மட்டும் கண்களைத் திறந்து கொள்கிறது.

முதலில் உன்னைத் திருத்து, பின்பு ஏனையோரிடம் குறை காண முற்படு என்பதற்கு இணங்க நடந்து கொள்ள அரசாங்கமோ, ஜே.வி.பி.யோ தயாராக இல்லை.

இந்நிலையில் , ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பரின் நான்கு நாள் இலங்கைக்கான பயணத்தின் சந்திப்புகள் இனப்பிரச்சினையின் விடயத்தில் மனித உரிமைகள் பற்றிய புதிய நிலைமையைத் தோற்றுவிக்கவே போகிறது.

அது பெரும்பாலும் இலங்கை அரசினதும் பேரினவாதிகளினதும் யுத்தவெறி அணுகுமுறையை அம்பலமாக்கவே செய்யும். கருணை, அமைதி, சமாதானம், அன்பு , மார்க்கம் எனப்போதித்துச் சென்ற புத்தபிரானின் வழிநடப்பதாகக் கூறும் இலங்கையில் நாளாந்தப் படுகொலைகள், விபரிக்க முடியாத மனித வதைகள், சமூகச் சீரழிவுகள் கொழும்பிலே உள்ள ஐ.நா. ஸ்தானிகர் பணிமனையின் முன்னால் நூற்றுக் கணக்கில் பெண்கள் தமது கைக்குழந்தைகளுடனும் மற்றும் பிள்ளைகளுடன், மனைவிமாரும் தமது கணவர்களுக்காகக் கதறி அழுது நின்றனர். வயதான பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக ஏங்கித் தவித்து நின்றனர். இவர்களை லூயிஸ் ஆர்பர் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். பௌத்தத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் நாட்டிலே தமது சொந்த நாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே ஆர்பர் உணரக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்ததையிட்டு வெட்கப்படவேண்டியவர்கள் இந்த அரசாங்கமும் ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகளும்தான். நீங்களே உங்களது பேரினவாத யுத்தவெறி பிடித்த மனித உரிமை மீறல்களால் சொந்த மக்களையே மேற்குலக வெள்ளையர்களிடம் காலில் வீழ்ந்து கதறி அழ வைத்திருக்கும்போது அந்நியத் தலையீடு பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு. அந்நியத் தலையீடு கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக்கு எதிர்ப்பு என்பன போன்ற வாய் சவடால் எல்லாம் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பதவிகளுக்குமேயாகும். நீங்கள் சொல்வதில் சிறு அளவு நேர்மை இருக்குமானால் அந்நியர் தலையீடாவண்ணம் நியாயமான அரசியல் தீர்வை முன்வைத்து தமிழ் மக்களது நீதியான அபிலாஷைகளைத் தீர்த்திருக்க வேண்டும். இன்றும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கவே செய்கிறது. ஆனால், அது உங்களால் முடியாது. ஏனெனில் ஆளும் வர்க்க பேரினவாத அதிகாரம் உங்களை ஆட்டிப் படைக்கிறது.

சம்பள உயர்வில் மீண்டும் நாடகம்

மலையகத் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வுப் பிரச்சினையில் மீண்டும் ஒருநாடகம் அரங்கேறியிருக்கிறது. ஏமாற்றத் தெரிந்தவர்களுக்கு அதற்குரிய காலம், நேரம், சூழல் பார்த்திருப்பார்கள். எத்தகைய பாத்திரமும், வேடமும் கொண்டால் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதையும் அத்தகையோர் புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ரூபா 30 உயர்த்தப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாளாந்த அடிப்படைச் சம்பளம் இருநூறு ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவு தொண்ணூறாகவும் மொத்தம் 290 ரூபா கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே அதற்குரிய 70 ரூபா கிடைக்கும்.

தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டத்துறையில் சுமார் ஆறு லட்சம் பேர் வரை நாட்கூலிகளாகவே உழைத்து வருகின்றனர். இவர்களில் 70 வீதமானோர் தேயிலை உற்பத்தியிலும் 30 வீதமானோர் இறப்பர் உற்பத்தியிலும் ஈடுபடுகிறார்கள். இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரமே இத்தேயிலை, இறப்பர் உற்பத்தியிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் வாழ்வு கண்ணீரிலும் கஷ்டங்களின் மத்தியிலும் தான். தோட்டக் கம்பனிகளுக்கும் முதலாளிமார்களுக்கும் சம்பள உயர்வு என்பது வேப்பங்காயாகவே இருந்து வருகிறது. இன்றைய பொருட்களின் விலை அதிகரிப்புகளுக்கு இந்த 30 ரூபா சம்பள உயர்வு எந்த ஒரு மூலைக்கும் போதாது. ஒரு கிலோ கோதுமை மா தோட்டப் புறங்களில் ரூபா 68, 70 என விற்கப்படுகிறது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 71 ரூபா முதல் 75 ரூபா வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி ஐம்பது ரூபாவிற்கு மேல் சென்றுள்ளது.

ஆனால், ஏதோ முந்நூறு ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்துள்ளது போன்று இ.தொ.கா.வும் அரசாங்க ஆதரவுத் தொழிற்சங்கங்களும் துள்ளிக் குதிக்கின்றன. அத்துடன், ஜனாதிபதிக்கும் சம்பள உயர்வுப் பட்டயம் கட்டிப் போற்றிப் புகழப்படுகிறார். தொழில் அமைச்சரும் இ.தொ.கா. தலைவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த அடிப்படைச் சம்பளம் 5000 ரூபா கிடைக்கிறது என்றும் மாதாந்தம் 7500 ரூபா வரை பெறப் போகிறார்கள் என்றும் கணக்குக் காட்டி தொழிலாளர்களுக்கு கணக்கு விட்டுள்ளனர். ஆனால், இதே இ.தொ.கா. அமைச்சர்கள் மாதாந்தம் பெறும் இரண்டரை லட்சம் ரூபா வரையிலான மொத்தத் தொகையுடன் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான 7 ஆயிரத்தைக் கணக்குப் பார்க்கவே செய்வார்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது சம்பள உயர்வில் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு இ.தொ.கா.வின் ஐந்து அமைச்சர்கள் கூட்டோடு ராஜினாமா செய்துகொண்டனர். ஆனால், அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை. ஜனாதிபதி, இ.தொ.கா. தலைவர்கள் ஒரு நாடகத்திற்குத் தயாராகி இப்போது அரங்கேற்றி இருக்கிறார்கள். மீண்டும் ஐந்து அமைச்சர் பதவிகள் பழைய சம்பளப் பாக்கித் தொகையுடன் கிடைத்துள்ளன. தொழிலாளர்களுக்கு வெறும் 30 ரூபா மட்டுமே. இ.தொ.கா. தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் படை பட்டாள&#

http://www.thinakkural.com/news/2007/10/13...s_page38237.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.