Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

kittu.jpg

இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால்  நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது.  அதன் பிரதிபலிப்புக்களை, தமிழ்த் தேசிய அரசியல் களமும் ஓரளவு உள்வாங்கியிருக்கின்றது. 

பெண்களுக்கான அரசியல் – தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில், தமிழ்த் தேசியக் கட்சிகளோ அமைப்புக்களோ போதிய அக்கறையை வெளிப்படுத்துவதில்லை. அண்மையில் கூடிக் கலைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் கூட, பெண்களுக்கான பிரதிநித்துவம் என்பது பூச்சியமாக காணப்பட்டது. கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பதின்நான்கு பேரும் ஆண்கள். அதிலும், மூத்தவர்கள். ஒரு பெண்ணைக் கூட இணைக்கவில்லையே என்கிற எந்தவித ஆதங்கமோ அங்கலாய்ப்போ கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஒருவித ஆணாதிக்க மனநிலையோடு நின்று விடயங்களை அணுகி, கீழே போட்டுடைத்து ஓய்ந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போதும், ஒப்புக்காகவே பெண்களை இணைத்துக் கொள்ளும் நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் காணப்பட்டது. வெற்றிபெறக் கூடிய, பாராளுமன்ற அரசியலில் பங்களிக்கக் கூடிய பெண்களை உள்வாங்கி, அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பது சார்ந்து தமிழ்க் கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பெண்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கவில்லை என்றால், விமர்சனங்கள் எழும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிக்கு அண்மையில் வரமுடியாத பெண்களை உள்வாங்குவதில் குறியாக நின்றிருக்கின்றன. இது, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும். 

இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் பெண்களில் அரசியல் வருகை என்பது, பெரும்பாலும் அனுதாப அலையை வாக்குகளாக மாற்றுவதற்காகவே நிகழ்ந்திருக்கின்றன. உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்க தொடங்கி, அவரின் மகள் சந்திரிக்கா குமாரதுங்க உட்பட, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கடந்த காலங்களில் அழைத்து வரப்பட்ட சசிகலா ரவிராஜ், அனந்தி சசிதரன் வரையில் அதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. இந்தப் பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அரசியல் ரீதியாக படுகொலை செய்யப்பட்டிருப்பார்; காணாமல் ஆக்கப்பட்டிருப்பார் அல்லது பதவியில் இருக்கும் போது உயிரிழந்திருப்பார். அப்படியான சூழலில், இந்தப் பெண்களைக் காட்டி அனுதாப வாக்குகளைத் திரட்டுவதுதான் இந்தக் கட்சிகளின் பிரதான வேலையாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இரும்பு மனுசியாக பார்க்கப்படும் இந்திரா காந்தியே, அப்படியான அரசியல் வாரிசுதான். இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மட்டுமே, அவரின் அரசியல் குருவான எம்.ஜி.ஆரையே கட்சிக்குள் எதிர்த்து நின்று தனித்துவமாக எழுந்து ஆட்சி  அதிகாரம் பெற்றவர். அவர் மீது அனுதாப அலைக்கான அடையாளத்தை ஒட்ட வேண்டியதில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 பொதுத் தேர்தல் காலத்தில் சசிகலாவை தேர்தல் அரசியலுக்கு அழைத்துவர முயன்றது. குறிப்பாக, மறைந்த இரா.சம்பந்தனின் யோசனையில் அதற்கான வேலைகளில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டார். அது, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக கொண்ட அழைப்பல்ல, மாறாக படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மீதான அனுதாபத்தினை வாக்குகளாக மாற்றும் உத்தி சார்ந்தது. அடிப்படையில், அப்படியான நிலை என்பது அபத்தமானது. அதனால், ஒருபோதும் பெண்களுக்கான பிரதிநிதித்துவப் பங்களிப்பு காக்கப்படுவதில்லை. அதில், பெரும்பாலானவை, வெற்றுக்கனவுகளாவே முடிந்து போயிருக்கின்றன. அனுதாப அலைக்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஒருசில பெண்கள், தேர்தல் அரசியலுக்குள் வென்று, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆட்டுவிக்கும் கருவிகளாக அந்தப் பெண்கள் இருந்தார்களா என்றால், அதன் பதில் எதிர்மறையானது. பெண்களின் அரசியல் பங்களிப்பு, அதனூடான பிரதிநித்துவம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை தடுக்காது, அனுமதிப்பதுதான் கட்சிகள் செய்ய வேண்டிய முதல் வேலை.

இம்முறை தேர்தல் களத்தில், தேசிய மக்கள் சக்தியில்தான் கிட்டத்தட்ட 20 வீதமான வேட்பாளர்கள் பெண்கள். அவர்களினால்கூட குறைந்தது 35 வீதத்தைத் தாண்டிய வேட்பாளர் நியமனத்தை பெண்களுக்கு வழங்க முடியவில்லை. ஏனைய கட்சிகளை நோக்கினால், 10 வீதமளவில்தான், ஒப்புக்காக பெண்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுவின் சார்பில் பேசிய சுமந்திரன், தகுதியுள்ள பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தமை ஒரு மோசமான முன்னுதாரணம். ஏனெனில், அடுத்த நாளே, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போது, அதில் உள்ளடக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்பட்டது. அது, தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பட்டியல் வெளியானதும் அதிகமாகவே பிரதிபலித்தது. குறிப்பாக, வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட கிருஷ்ணவேணி ஶ்ரீதரன் (கிட்டு) மற்றும் சுரேக்கா சசீந்திரன் தொடர்பில் எதிர்மறைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

கிட்டு என்கிற கிருஷ்ணவேணியின் கள அரசியல் பங்களிப்பு என்பது திடீரென ஒருநாளில், சுமந்திரன் வேட்பாளர் பட்டியலை வாசித்ததும் உருவானதல்ல. அவருக்கான கடந்த கால அரசியல் வரலாறு கனதியானது. தமிழ்த் தேசிய அரசியலில், 2004 பொதுத் தேர்தலிலேயே, பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்தார். அதனை, அன்றைக்கு கூட்டமைப்பின் பிதாமகர்களாக இருந்து, அரசியலை இயக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளே செய்யத் தலைப்பாட்டார்கள் என்பதுதான் உண்மை. கிட்டு தமிழ்த் தேசிய கள அரசியலுக்குள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக வந்தவர். கெடுபிடியான 2000களின் ஆரம்பத்தில், சிதம்பரநாதனின் அரங்கச் செயற்பாட்டுக்குழுவில், முக்கிய இளைஞியாக நின்று கவனம் பெற்றவர். அவர்களின் அரங்கச் செயற்பாடுகளும் சேர்ந்துதான் ‘பொங்கு தமிழ்’ என்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டது. அதிலும், களச் செயற்பாட்டாளராக கிட்டுவின் பங்களிப்பு அதிகம். அன்றிலிருந்து, புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் கூறுகளில் பங்களித்து, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கியவர். அவர், 2004 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக உள்வாங்கப்பட்ட போது, தன்னுடைய இளைய வயதினைக் காட்டி ஒதுங்கினார். அந்த இடத்தில்தான், பத்மினி சிதம்பரநாதன் வேட்பாளராக பிரதியிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்திலும் அவரை, தேர்தல் அரசியலுக்குள் அழைத்து வருவது சார்ந்து கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி அக்கறை காட்டியது. 2015 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்குள் கிட்டுவை உள்வாங்குவதற்கான பேச்சுக்களில் சுமந்திரன் ஈடுபட்டார். 2020 பொதுத் தேர்தல் காலத்திலும் அது தொடர்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் மறுத்துரைத்த கிட்டு, தற்போது தேர்தல் களம் வந்திருக்கிறார். அப்படியான நிலையில், ‘தகுதியான பெண் வேட்பாளர்கள் இல்லை என்று ஊடகங்களில் நேற்று அறிவித்தோம், இன்று கிடைத்திருக்கிறார்கள்..’ என்று சுமந்திரன் கூறியமை அவசியமில்லாத ஒன்று. அவர், வேட்பாளர் பட்டியலில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களுக்காக கிட்டுவை, உள்வாங்கப் பேச்சுக்களை நடத்திய ஒருவர். அதனை, வெளிப்படையாக அறிவித்திருந்தால், எதிர்மறை விமர்சனங்கள் குறைந்திருக்கும். 

சசிகலாவின் தொலைக்காட்சிப் பேட்டியொன்று கடந்த வாரம் ஒளிபரப்பானது. அதில், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலான சசிகலாவின் பார்வை எவ்வளவு குறுகியது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்தப் பேட்டி முழுவதும், தமிழரசுக் கட்சிக்காரர்கள், அனுதாப வாக்குகளுக்காக அன்றி, வேறெந்த தேவைக்காகவும் சசிகலாவை அரசியலுக்கு அழைக்கவில்லை என்பது புரிந்தது. அவரிடம் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பில் எந்தவித புரிதலும் இல்லை. அரசியலை, பதவிகளுக்கான கட்டமாகவே பார்க்கும் தன்மை வெளிப்பட்டது. தான் பிரதிநிதித்துவம் செய்யப்போவதாக கூறும், தென்மராட்சியின் தேவைகள், அத்தியாவசியங்கள் தொடர்பிலேயே விளக்கமற்று இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பின்னரான அரசியல் செயற்பாட்டுக் களத்தில் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ரணிலுடனான சந்திப்பு, பெண்களுக்காக வேட்பாளர் நியமனம் உறுதிப்படுத்தலுக்கான சந்திப்பு என்று ஒருசில நிகழ்வுகளில் பங்களித்தமையைத் தாண்டி, அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் அற்றே இருந்திருக்கிறார். அப்படியான நிலையில், கிட்டு போன்றவர்களின் கடந்த கால கள அரசியல் பங்களிப்பை, வெளிப்படையாக அறிவித்து, இந்தத் தேர்தல் அரசியலுக்கு அழைத்துவரப் பட்டமைக்கான காரணங்களை தமிழரசுக் கட்சி விளக்கியிருக்க வேண்டும். ஏனெனில், கிட்டு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும் போதே, அவர் சுமந்திரனின் வெற்றிக்காக களமிறக்கப்பட்டவர் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டமையானது அவசியமற்றது. தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், கிட்டுவின் உரை அதனைப் பிரதிபலித்தது. 

இன்னொரு பக்கத்தில், சுரேக்காவின்  வேட்பாளர் நியமனம் பற்றி சமூக ஊடகங்கள் மிகமோசமான கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகின. இரண்டாந்தர சிந்தனைகள் தொடங்கி, சாதிய அடையாளம் பூசி அவதூறுகளைப் பரப்பியமை வரையில் நடந்தன. அதுவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் தரப்பினர், அவற்றைச் செய்தார்கள் என்பதுதான், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சுரேக்காவின் அரசியல் அணுகுமுறை - கல்வித் தகைமைகள் தொடர்பில் ஆராயப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், அவரின் சாதியப் பின்னணி, ஆராயப்பட்டு அதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுவதனை ஒருபோதும் அரசியல் விமர்சனமாக கருத முடியாது. விடுதலைக்காக போராடும் சமூகம், தன்னுள் காணப்படும் சாதிய, பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராட வேண்டும். மாறாக, தடித்த சாதிய, ஆணாதிக்கத் தனத்தில் நின்று அரசியலை அணுகுதல், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலை அணுகுதல் என்பது, எமக்காக போராடி மாண்ட ஆயிரமாயிரம் உறவுகளை கேலிப்படுத்துவது போன்றது. 

தமிழரசுக் கட்சி ஜனநாயகப் பாராம்பரியத்துக்குள்ளால் வந்து நிற்கும் கட்சி. ஏனைய முன்னாள் ஆயுத இயக்கங்கள் போன்றதல்ல. அந்த இயக்கங்களில் இருந்த பெண்கள், அந்த இயக்கங்கள் அரச ஆதரவுக் குழுக்களாக இயங்க ஆரம்பித்த தருணத்திலேயே, விலகிக் கொண்டு விட்டார்கள். அந்த இயக்கங்கள் முழுவதுமாக ஆண்களினால் ஆட்சி செலுத்தப்படுவது. ஆனால், தமிழரசுக் கட்சி ஓர் ஆயுத இயக்கமல்ல. அதனை, 2004களில் மீட்டெடுத்துக் கொடுத்த புலிகள், பெண்களுக்கான பிரதிநித்துவம் தொடர்பில் அக்கறையோடு இயங்கிய போராட்ட இயக்கம். அப்படியான நிலையில், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான முயற்சிகளில் ஆக்கபூர்வமாக இயங்க வேண்டியது, தமிழரசுக் கட்சியின் கடமை. அதனை, அந்தக் கட்சி இதுவரையும் செய்யவே இல்லை. தேர்தல்கள் வந்தால் மாத்திரம், ஒப்புக்காக பெண் வேட்பாளர்களைத் தேடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சிக் கட்டமைப்புக்குள் முதலில் குறைந்தது 30 வீதமான அளவு, பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அப்படியான அங்கீகாரம், பெண்களை கட்சி – கள அரசியலுக்குள் அழைத்து வருவதற்கான உந்துதலை வழங்கும். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் வழியாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களில் பிரதிநிதித்துவம் ஓரளவு காக்கப்பட்டது. அதனால், சில பெண்களுக்கான களம் திறந்தது. குறிப்பாக, ஒரு உள்ளூராட்சி மன்றதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் முப்பது வீதமளவில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால், வட்டாரங்களில் நேரடியாக பெண்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், விகிதாரச முறையில் ஆசனங்களை வென்ற கட்சிகள் பெண்களுக்கு அவற்றை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், நேரடியாக வட்டாரங்களை வெல்ல முடியாத கட்சிகள், பெண்களை நியமிக்க வேண்டி வந்தது. அதுவும், விரும்பி நிகழ்ந்தது அல்ல. மாறாக, சட்டம் போட்டுச் செய்யப்பட்டது. அந்தச் சூழல், சில பெண்களை அரசியலுக்குள் அழைத்து வந்தது. ஆனாலும், அவர்களில் எத்தனை பேரை, கள அரசியல் எடுத்துக் கொண்டது அல்லது உள்வாங்கியது என்ற கேள்வி முக்கியமானது. 

அர்த்தமுள்ள அரசியல் என்பது, அனைத்துக் கட்டங்களிலும் திறக்க வேண்டும். அதனை, தொடர்ச்சியாக போராடும் சமூகக் கூட்டமான தமிழர்கள், அர்ப்பணிப்போடு ஏற்றுச் சுமக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றுக் கட்டங்கள் உருவாகும். அதனை, கானல் வெளி நிரப்பும். அப்போது, மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கையிழப்பார்கள். பெண்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவோ, அனுதாப அலைக்கான கருவிகளாகவோ மாத்திரம் பார்க்காமல், அரசியலின் பெருங்கூறாக உள்வாங்க வேண்டும். அதுதான், பெண்களுக்கான அரசியல் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உண்மையாக உறுதி செய்யும்.

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 20, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_20.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.