Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..?

— அழகு குணசீலன் —

spacer.png

அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை.  இதனால்  63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வில் பொதுச்சபையில், பின்னையது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மன்றத்தில்.

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான என்.பி.பி.  அண்மைய இரண்டு தேர்தல்களிலும் புதிய அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை தேர்தல் விஞ்ஞானத்தில் அறிவித்திருந்தது. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள என்.பி.பி.க்கு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் தமிழ்த்தேசிய பரப்பில்  புதிய அரசியல் அமைப்பு  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது சுமந்திரன் பாராளுமன்றத்தில் இல்லையே என்ற ஏக்கம் ஒரு தரப்பால் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக தமிழ்த்தேசிய மறு தரப்பு சுமந்திரன் பாராளுமன்றத்தில் இருந்தால் அவர் கொழும்பு அரசுக்கு ஆதரவாகவே செயற்படுவார் இதனால் சுமந்திரன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்று கேட்கிறது.

தேர்தல் காலத்தில் இருந்தே சுமந்திரனின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக யாழ்.பத்திரிகை ஒன்று சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இவற்றில் சுமந்திரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி குசேலம் விசாரிப்புக்களும், சந்திப்புக்களும்  கூட அரசியலாக்கப்பட்டன. மந்திரி பதவியும் இதில் ஒன்று. ஜனாதிபதியுடனான டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பை விமர்சித்த அந்த பத்திரிகை சுமந்திரனை  தோளில் தட்டிக்கொடுத்தது.  சுமந்திரனும், டக்ளஸும்  இதை தேர்தலுக்கு பயன்படுத்த முயன்ற போது ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் அதை மறுத்து ஊடகச்சந்திப்பு நடாத்தினர். 

ஜனாதிபதி தனிப்பட்ட வகையில் தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை தேற்றுவதற்கு கூறிய வார்த்தைகள் உத்தியோகபூர்வ அரசாங்கத்தின் வார்த்தைகள் அல்ல. என்.பி.பி.யின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் அல்ல. இவை எல்லாமே திட்டமிட்டு அரசியலாக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதே ஆறுதலை ஜனாதிபதி டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சொன்னதாகவும் பேசப்படுகிறது. இது அரசியல் நாகரிகம். இந்த நாகரிகத்தை அநாகரிகமாக்கி தமிழ்த்தரப்பு அநாகரிக அரசியல் செய்கிறது.

 தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி.கே. சிவஞானமும் சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவர் கட்சியில் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர். பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் வாயாகவும், மூளையாகவும் செயற்படுபவர். இந்த சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் கூறும் “சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம்” தமிழ்மக்களுக்கு பாதகமானதா?  அப்படி ஒரு விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க இந்த பரப்புரை செய்யப்படுகிறதா?

தமிழரசுகட்சியை/ தமிழ்த்தேசியக் கட்சிகளை பொறுத்த மட்டில் சுமந்திரனின் தோல்வி குறித்து இரு வேறு விமர்சனங்கள் உண்டு. ஒரு பிரிவினர் சுமந்திரனின் தோல்வியினால் “ஏமாற்றம்” அடைந்து இருப்பவர்கள். மறு பிரிவினர் சுமந்திரனின் தோல்வி  மக்கள் விரும்பிய.  “மாற்றம்” ஒன்றின் வெளிப்பாடு என்று கூறுகிறார்கள். சுமந்திரனோ இவை பற்றி  வெளிப்படையாக அலட்டிக்கொள்ளாமல் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன், தேசியப்பட்டியலில் எம்.பி.யாக மாட்டேன், பாராளுமன்றத்திற்குள் இருந்துதான் அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதல்ல, வெளியில் இருந்தும் செய்யலாம், அப்படி ஏற்கனவே வெளியில் இருந்து பணிசெய்து கிடந்ததால் தான் சம்பந்தர் காலத்தில் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டேன் ….. என்றெல்லாம் பட்டியல் போட்டு தமிழ்த்தேசிய அரசியலில் -தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த ஜனநாயக வாதியாக தன்னைக்காட்டி கொள்கிறார்.

ஆனால் கடந்த காலத்தில் சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகளையும், நகர்வுகளையும் பட்டியல் போடும் மறு தரப்பு சுமந்திரன் தமிழ்தேசிய ஒற்றுமையை குலைத்தவர், கொழும்பு அரசுக்கு ஆதரவானவர், தமிழ்த்தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர், கடந்த நல்லாட்சியில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாது  ஒத்தோடியவர், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுகள் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளுக்கு கட்சிசாயம் பூசப்பட்டவை என்று கூறுகின்றனர். 

முன்னுக்கு பின் முரணாக செயல்படுபவர், கட்சிக்குள் மாற்று கருத்துக்கள் கொண்டவர்களை ஓரம் கட்டி உட்கட்சி ஜனநாயகத்தில் -கருத்துச்சுதந்திரத்தில் தன் ஆதரவாளர்களை கொண்டு ஆதிக்கம் செலுத்துபவர் என்றெல்லாம்…. பட்டியல் போடுகின்றனர்.

இதற்கு சுமந்திரன் பாராளுமன்றத்தில் இல்லாத இந்த குறுகிய காலத்தில் தமிழ்தேசிய சூழலில் இடம்பெறும் சாதகமான மாற்றங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒரு பொது நிலைப்பாட்டிற்காக  பேசுவதற்காக தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விட்டிருக்கிறார். செல்வம் அடைக்கலநாதன் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கோரியிருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் தமிழ் தரப்பு பிரிந்து நின்றதினால்தான் என்.பி.பி.வடக்கில் வெற்றி பெற்றது என்று பேசுகின்றனர். ஆக, சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் மாற்றத்திற்கான ஒரு திசையை காட்டுகிறது என்பது இவர்கள் வாதம்.

மதியாபரணம் சுமந்திரன் தலைசிறந்த இலங்கை சிவில் சட்டத்தரணிகளுள் ஒருவர். ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட. சட்ட நுணுக்கங்கள் அவருக்கு தண்ணி பட்டபாடு என்று கூறப்படுகிறது. சர்வதேச இராஜதந்திரிகளுடனும்  தனிப்பட்ட  உறவுகளை கொண்டவர். ஆனால் இவை எல்லாம் தெரியாமல் யாழ்ப்பாண மக்கள் அவரை நிராகரிக்கவில்லை. சுமந்திரனின் இந்த தகுதிகளுக்கும் திறமைகளுக்கும் அப்பால் அந்த மக்கள் வேறு ஒன்றை, கடந்த 15 ஆண்டுகளாக  முதுமை அடைந்திருந்த இரா.சம்பந்தரை விடவும் சுமந்திரனிடம் இருந்து எதிர்பார்த்தார்கள். தங்களின் எதிர்பார்ப்பிற்கும் சுமந்திரனின் செயற்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியை வெளிப்படுத்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கு ஒரு “சிவப்பு சிக்னல்” காட்டினார்கள். 

அதுதான் சுமந்திரன் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகள் பெறுவேன் என்று கூறியபோது அதை அவர்கள் அரைவாசியாக குறைத்த முன் எச்சரிக்கை. அந்த  முன்எச்சரிக்கையை சுமந்திரன் கடந்த நான்கு ஆண்டுகளில் கவனத்தில் கொள்ளவில்லை. அவரின் அரசியலில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. அதனால் மக்கள் “ஆளைமாற்ற” தீர்மானித்தனர் என்றே கொள்ளவேண்டி உள்ளது. இன்னும் ஒரு விடயம் முக்கியமானது. பொது வேட்பாளருக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மக்கள் அளித்த வாக்குகள் சுமந்திரனின் சஜீத் ஆதரவு அரசியல் நிலைப்பாட்டிற்கான எதிர்ப்புக் காட்டலாக அமைந்த மிகப்பிந்திய வெளிப்பாடு எனக் கூறமுடியும்.

இன்றைய பாராளுமன்ற சூழலில் அரசியல் அமைப்பு திருத்தம், அல்லது புதிய அரசியலமைப்பு விடயத்தில் சுமந்திரன் பாரிய பாத்திரம் எதையும் வகிக்கும் நிலை அசாத்தியமானது. சுமந்திரன் தனித்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கட்சிகளும் இதில் தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை. எப்படி கதிரை எண்ணிக்கையை கொண்டு சுமந்திரன் கணக்கு பார்த்து மகிழ்ச்சி அடைந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனம் வெளிச்சமானது. அரசியல் அமைப்பு தொடர்பான முடிவுகள் என்.பி.பி., தென்னிலங்கை கட்சிகள், பௌத்த மத பீடங்கள் என்பனவற்றால் எடுக்கப்பட வேண்டியவையாகவே இருக்கப் போகின்றன. பின்னர்  பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பால் வடிகட்டப்படவுள்ளன. 

வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் என்.பி.பி.க்கு தமிழ், முஸ்லீம் மக்கள் அளித்துள்ள வாக்குகள் சிறுபான்மை தரப்புக்களை விடவும் பெரும்பான்மைக்கே அதிகம் பயன்படப்போகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும்  அதற்கு கை உயர்த்துவதைத்தவிர வடக்கு கிழக்கு, மலையக தமிழ், முஸ்லீம் என்.பி.பி எம்.பி.களுக்கு வேறு வாய்ப்பில்லை. இது சுமந்திரன் பாராளுமன்றத்தில் இருப்பதனால் மாறப்போவதில்லை.

என்.பி.பி. 159 எம்.பி.க்களை தனியாக கொண்டிருப்பினும்  சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சாதகமான உரிமைகளை வழங்குவதில் அது தனித்து செயற்படப்போவதில்லை. தமிழ்த்தேசியம் எதைக் கேட்பார்கள் என்பதும் என்.பி.பி.க்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கும் தெரியாததல்ல. இலங்கை பாராளுமன்றம் 75 ஆண்டுகளாக இந்தக்கோரிக்கைகள் அரைத்த மாவாக திருப்பி திருப்பி அரைக்கப்பட்டு வந்துள்ளன. புதிய அரசியல் அமைப்பு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டிற்கு முரணாக சிங்கள பௌத்த இன, மத தேசியத்தின் பாதுகாவலராகவே அமையப் போகிறது. அதற்கு முன்னர் உள்ளூராட்சி, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்.பி.பி.தனது ஆட்சியை நிலைநிறுத்த முயற்சிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகளை மக்கள் ஆணையாகக் காட்டி அதற்கேற்ப சில திருத்தங்கள், சீர்திருத்தங்கள்  புதிய அரசியல் அமைப்பூடாக செய்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. இதனால் சிலர் பேசுவது போன்று சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் தமிழ்த்தேசியத்திற்கு இழப்பும் இல்லை, என்.பி.பி.க்கு இலாபமும்  இல்லை. 

வேண்டுமானால் சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் தமிழ்த்தேசிய தனிநபர் தரப்பில் யாருக்கு பலம், பலவீனம் என்று பார்த்தால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழியில் குறுக்கே கிடந்த பறாங் கல் ஒன்றை யாழ்ப்பாண மக்கள் நெம்புகோல் கொண்டு அகற்றி வழியை துப்புரவு செய்திருக்கிறார்கள். இது பாராளுமன்றத்தை சுத்திகரியுங்கள் என்ற என்.பி.பி .யின் அறைகூவலாக ஏன் இருக்க முடியாது. மக்களின் சுத்திகரிப்பில் சுமந்திரன் தோற்க என்.பி.பி.யில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர். சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரனின் கை பாராளுமன்ற குழுவில் ஓங்கியிருக்கிறது.  இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு சுமந்திரன் இல்லாதது சில சந்தர்ப்பங்களில் ஒரு கை இழப்பாகவும், சில சந்தர்ப்பங்களில் ஒரு  தொல்லை குறைந்ததாகவும், சுயமாக சிந்தித்து செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். 

ஆனால்…..!   ஆனால்……. ! பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் விருப்த்தேர்வில் இரண்டாவது இடத்தில் உள்ள சுமந்திரன், தனது கையாள் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியில் பாராளுமன்றம் அனுப்பியுள்ள சுமந்திரன், அவரது வார்த்தைகளில் கூறிய “மக்கள் தீர்ப்பை” ஏற்று சும்மா இருப்பாரா…….?

யாழ்ப்பாண மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தை  தொடர்ந்தும் ஏற்பாரா….?

 அல்லது அவர்களை ஏமாற்றுவாரா…..?

சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போகிறார், சத்தியலிங்கம் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் என்ற கதைகள் சுமந்திரனின் ஆதரவாளர்களாலேயே கட்டி விடப்படுகின்றன என்று சிறீதரன் ஆதரவு அணியினர் கூறுகின்றனர். 

மாடில்லாமல் இந்த மணியோசை கேட்கவில்லை ……!

 
 



 

https://arangamnews.com/?p=11487

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.