Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கஜனின் அழைப்பு ? - நிலாந்தன்

spacer.png

 

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள்.

முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யாப்பை அவர்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடும். அந்தத் தீர்வானது ஏற்கனவே 2015இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில் ஒரு புதிய யாப்பை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் முன்வைக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம் என்ற சந்தேகங்களின் பின்னணியில், கஜேந்திரக்குமாரின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கின்றது.

அந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சிகளும் பங்களிப்பைச் செய்தன. அது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வு என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியது. அனுர அரசாங்கம் அந்த தீர்வு முயற்சியைத் தொடரலாம் என்ற சந்தேகம் இப்பொழுது உண்டு. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் அவ்வாறு யாப்புருவாக்க முயற்சியை முன்னெடுக்கும் பொழுது தமிழ்த் தரப்பானது தன் எதிர்ப்பை வலிமையாக ஒற்றுமையாகக் காட்டவேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கிறது. அந்த தேவையின் அடிப்படையில்தான் கஜனின் மேற்படி நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய முயற்சிகளில் பெருமளவுக்கு ஒத்துழைக்காத ஒரு கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். எனினும் முன்னணியும் ஈடுபாடு காட்டிய ஐக்கிய முயற்சிகளின்போது உருவாக்கப்படும் ஆவணங்களில், விட்டுக்கொடுப்பற்ற தமிழ் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும், அந்த ஆவணங்களின் கொள்கைரீதியான தெளிவான சரியான நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் முன்னணிதான் அதிகம் பங்களிப்பை செய்வதுண்டு.

தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவு விடயத்திலும் முன்னணியின் உழைப்பு அதிகம் உண்டு. சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு பேரவையாகும். அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக அப்பொழுது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் இருந்தார். எனவே பேரவையின் முன்மொழிவுக்கு கனதி அதிகமுண்டு. அந்த முன்மொழிவை உருவாக்கும் பொழுது பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் பின்னர் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டன. பேரவையும் செயலிழந்தது. பேரவையின் முடிவுக்கு முன்னணியும் ஒரு முக்கிய காரணம். எனினும் இப்பொழுது அந்த முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ஒரு ஐக்கியத் தளத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னணி முன்வந்திருக்கிறது.

கஜன் அழைப்பு விடுத்திருப்பது பிரதானமாக இரண்டு தரப்புகளுக்கு. ஒன்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி. மற்றது தமிழரசுக் கட்சி. இதில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் குறிப்பிட்ட சில கட்சிகள் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகித்தன. தீர்வு முன்மொழிவை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் பங்களிப்பை நல்கின. அதேசமயம் அக்கட்சிகள் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருந்தன. கூட்டமைப்பு ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற வரைவுக்கும் அவை பங்களிப்பை வழங்கின.

அந்தத் தீர்வு முயற்சியில் தமிழ்த் தரப்பில் சுமந்திரன் தீர்மானிக்கும் சக்தியாகச் செயற்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது அவர் அந்த தீர்வு முயற்சியை ஆதரித்துப் பேசியும் இருக்கிறார். அந்த யாப்புருவாக்க முயற்சியில் ஜேவிபியும் பங்காளியாக இருந்ததை அவர் ஒரு சாதகமான அம்சமாகச் சுட்டிக்காட்டியும் இருக்கிறார்.

எனவே இப்பொழுது கேள்வி என்னவென்றால், அனுர அரசாங்கமானது எக்கிய ராஜ்யவை மீண்டும் தூசுதட்டி எடுத்தால் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன? சுமந்திரனின் நிலைப்பாடு என்ன?

spacer.png

ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இந்தியாவின் கைக்கூலிகள், இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் என்று திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அக்கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகித்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொது வேட்பாளரை இந்தியாவின் சூழ்ச்சி என்று வர்ணித்தது. அதில் ஈடுபட்ட சிவில் சமூகத்தவர்களையும் முதுகெலும்பில்லாதவர்கள் ,இந்தியாவுக்கு ஊழியம் செய்பவர்கள் என்று வசைபாடியது. ஆனால் பொது வேட்பாளர் பெற்ற வாக்குகள் தேசியவாத வாக்குகளை என்று பின்னர் கஜேந்திரகுமார் ஒரு விளக்கமும் கொடுத்தார்.

இப்பொழுது மேற்படி கட்சிகளை பேரவையின் முன்மொழிவின் கீழ் ஒன்றிணையுமாறு அவர் கேட்டிருக்கிறார். ஆயின் அக்கட்சிகள் இப்பொழுது இந்தியாவின் பிடிக்குள் இல்லை என்று அவர் நம்புகிறாரா? ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் கஜேந்திரகுமாரின் அழைப்புக்கு உத்தியோகபூர்வமாக பதில் எதையும் கூறியிருக்கவில்லை

கடந்த 15 ஆண்டுகளில் ஐக்கிய முயற்சிகளுக்கு பெரும்பாலும் ஆதரவை வழங்காத ஒரு கட்சி இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது சாதகமான ஒரு மாற்றம்தான். கடந்த 15ஆண்டுகளிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை பெரும்பாலும் சிவில் சமூகங்கள்தான் முன்னெடுத்திருக்கின்றன. மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரின் முன்முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பில் இருந்து தொடங்கி, தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான பெரும்பாலான ஐக்கிய முயற்சிகளின் அனுசரணையாளர்களாக சிவில் சமூகங்களே செயற்பட்டிருக்கின்றன. தமிழ்மக்கள் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி,பல்கலைக்கழக மாணவர்கள் தலையிட்டு உருவாக்கிய 13 அம்ச ஆவணம், 2021இல் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதம், அதன்பின் இந்தியச் சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு கேட்டு தமிழக முதல்வருக்கு எழுதப்பட்ட கூட்டுக் கடிதம், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தியமை ஆகிய பெரும்பாலான ஐக்கிய முயற்சிகள் அனைத்தின் பின்னணியிலும் சிவில் சமூகங்கள்தான் அனுசரணை புரிந்தன.

அவ்வாறு மக்கள் அமைப்புகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தைத்தான் இப்பொழுது கஜேந்திரகுமார் ஒன்றிணைவுக்கான அடிப்படையாக எடுத்திருக்கிறார். இந்த முயற்சிகளின் நோக்கம் அனுர அரசு கொண்டுவரக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை தமிழ்த் தரப்பு ஐக்கியமாக எதிர்கொள்வதே.

அது நல்ல விடயம். அதைப் பாராட்ட வேண்டும்.ஆனால் அந்த ஆவணத்தை உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இப்பொழுது இல்லை. அது செயல்படாத ஐந்தாண்டு கால இடைவெளிக்கு பின் தமிழ் மக்கள் பொதுச் சபை என்ற கட்டமைப்பு உருவாகியது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் முன்னெடுப்பினால் தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இப்பொழுது அது செயல்படுவதில்லை.

கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய மக்கள் அமைப்புகள் ஒரு கட்டத்துக்குப் பின் தொடர்ச்சியாக செயல்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம், தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின் தேங்கியிருக்கும் ஒரு நிலைமையை காண்கிறோம். ஏன் ?

ஏனென்றால்,சிவில் சமூகங்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. சிவில் சமூகங்கள் கட்சிகளைப்போல செயல்பட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிலிருந்து சிவில் சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது. முழு நேர அரசியற் செயற்பாட்டாளர்களைக் கொண்ட, அர்ப்பணிப்புமிக்க ஒரு அரசியல் இயக்கம்தான் இப்பொழுது தமிழ்மக்களுக்கு தேவை. அந்த அரசியல் இயக்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு தேர்தல் அரசியலே தமிழ் மக்களை சரியான வழியில் செலுத்தும்.

சிவில் சமூகங்கள் பேராசிரியர் ஜெயதேவ உயங்கோட கூறுவதுபோல அரசியல் சமூகத்தின் மீது “தார்மீகத் தலையீட்டைச்”செய்யலாம். ஆனால் தேர்தல் நடவடிக்கைகளில் கட்சிகளைப்போல ஈடுபடுவது என்றால் அதற்கு அரசியல் இயக்கங்கள்தான் பொருத்தமானவை. சிவில் சமூகங்கள் எப்பொழுதும் தளர்வான கட்டமைப்பைக் கொண்டவை. சிவில் சமூகங்களில் பல்வேறு வகையினர் இருப்பார்கள். அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியில் இயங்குபவை, தூதரகங்களோடு உறவை வைத்திருப்பவை, கட்சிகளோடு நேரடியாகச் சம்பந்தப்பட விரும்பாதவை, கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தமது யாப்பில் எழுதி வைத்திருப்பவை… போன்ற பல வகைப்பட்ட சிவில் சமூகங்கள் உண்டு.

இவ்வாறான சிவில் சமூகங்களின் கூட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பொதுச் சபையானது ஒரு தேர்தல்மைய அமைப்பு அல்ல என்பதனை அந்த அமைப்பின் பிரதான நிகழ்வுகளின் போதும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுதும் மிகத் தெளிவாகத் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் எல்லாவற்றிலும் அதைக் காணலாம். இந்த வரையறைதான் ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை கையாள முடியாது என்று தமிழ்மக்கள் பொதுச்சபை அறிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்று.

சிவில் சமூகங்களின் கூட்டிணைவு ஒரு தளர்வான அமைப்பாகவே இருக்கும். அது கட்சிபோல செயல்பட முடியாது. கட்சிபோல செயல்படுவதென்றால், அல்லது தேர்தலில் நேரடியாக ஈடுபடுவது என்றால், அதற்குப் பலமான அரசியல் இயக்கம் தேவை.

சிவில் சமூகங்களுக்கு ஊடாக தம்மை பலப்படுத்திக் கொண்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சிவில் சமூகங்களில் இருந்து விலகி கட்சிகளில் இணைந்துதான் தேர்தல் கேட்டார்கள் .சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளாக தேர்தல் கேட்கவில்லை. எனவே இந்த இடத்தில் தெளிவான பிரிகோடு இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை ஏற்கனவே திரும்பத்திரும்பத் தெரிவித்திருந்தது.

இப்படிப்பட்டதோர் கட்சி மற்றும் சிவில் சமூகப் பின்னணிக்குள்,தேர்தல் முடிந்த கையோடு,கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்த சிவில் சமூகங்கள் எவையும் முயற்சிக்காத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதாவது ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய முயற்சிகளுக்கு எதிராக காணப்பட்ட கட்சி,ஒரு புதிய ஐக்கிய முயற்சிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்த அழைப்பு வந்திருக்கலாம். அவர்களுக்கு நெருக்கமான சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆலோசனையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

எதுவாயினும் முன்னணியின் ஐக்கியத்துக்கு எதிரான முன்னைய நிலைப்பாடுகளை தூக்கிப்பிடிக்க இது நேரமல்ல. கஜேந்திரகுமாரின் அழைப்பு காலத்தின் தேவை. கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் கட்சிகளின் மீது செல்வாக்கை பிரயோகிக்கக்கூடிய மக்கள் அமைப்புகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில், ஒரு கட்சியே முன்வந்து அந்த அழைப்பை விடுப்பது தவிர்க்கமுடியாதது. இறந்த காலத்தில் இருந்து அக்கட்சி பாடங்கற்றிருப்பதை வரவேற்கலாம். ஒரு ரஷ்ய பழமொழி உண்டு “கடவுளுக்கு உள்ள பிரதான பிரச்சனை என்னவென்றால்,மனிதர்களை வைத்துத்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருப்பது” என்று. தமிழ் அரசியலுக்கும் அது பொருந்தும். இருக்கிற கட்சிகளை வைத்துச் சாத்தியமான ஐக்கியத்தைத்தான் கட்டியெழுப்பலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தோடு இருக்கும் என்பிபி அரசாங்கம் ஒரு தீர்வை நோக்கி முயற்சித்தால், அதை எதிர்கொள்ள அப்படியொரு சாத்தியமான ஒருங்கிணைவு  அவசியம்.

https://www.nillanthan.com/7011/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.