Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

கந்தையா அருந்தவபாலன்
 
ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு மேலதிகாரி ஒருவர் பெறுவது. ஊழலும் இலஞ்சத்தினுள் அடங்கும் நிலைமைகளும் உண்டு.ஊழல் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்களுடன் தொடர்புபட்டிருக்க இலஞ்சம் ஆட்சியாளர் தொடக்கம் அடிமட்ட அரச ஊழியர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஊழல்கள் பல கோடிகளுடன் தொடர்புபட இலஞ்சம் நூறு ரூபா தொடங்கி கோடிகள் வரை செல்லும். சிலவேளை இதனுள் மதுவிருந்து, மாது விருந்தும்கூட அடங்கும்.

இலங்கையில் இவை தீர்க்க முடியாத ஒரு நோயாக இன்று எல்லாவிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. ஏதாவது கொடுத்தால்தான் கருமம் நடக்கும் அல்லது விரைவாக நடக்கும் என்பதால் இலஞ்சம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு நியதியாக மக்கள் இன்று ஏற்கப் பழகிவிட்ட நிலைமையே நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக நாடு கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்குரிய பிரதான காரணிகளில் ஊழலும் இலஞ்சமும் பிரதான காரணிகளென தேச, சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலஞ்சம், ஊழல் என்பன உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், உற்பத்திச் செலவு, விலை என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதால் தேசிய, சர்வதேசிய சந்தைப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதால் வறுமை நிலை அதிகரிக்கிறது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் நலன்புரிச் சேவைகளின் அளவும் தரமும் வீழ்ச்சியடைகிறது. அரச படுகடன் உயர்கிறது. ‘ரான்ஸ்பரன்சி இன்டநாஷனல்’ நிறுவனத் தரவுகளின்படி இலங்கையின் இலஞ்ச உணர் சுட்டியின் அளவு ( corruption perception index )  2023 இல் 34 ஆக இருந்தது. இச்சுட்டி 0 தொடக்கம்100 வரையான புள்ளிகளைக் கொண்டது. 0 மிக மோசமான இலஞ்ச நிலையையும் 100 இலஞ்சமற்ற நிலையையும் காட்டும். இது 2020 இல் 38 ஆக இருந்தது என்பதிலிருந்து வருடாந்தம் இலங்கையின் இலஞ்ச நிலைமை கூடிக்கொண்டு செல்வதை அறிய முடியும். 180 நாடுகளைக் கொண்ட இக்கணிப்பீட்டில் இலங்கை 115 ஆம் இடத்தில் இருப்பது இலங்கை உயர்மட்ட  இலஞ்ச நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது என்பதற்கப்பால் அதுவே அவர்களை ஆட்சிப் பீடம் ஏறவும் வழிவகுத்தது. அதுவே அவர்களுக்குப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகிறது. நோயாளி ஒருவரின் உடலெங்கும் பரவி விட்ட புற்றுநோயைக் குணப்படுத்துவது எவ்வளவு கடினமானதோ அதுபோன்ற ஒரு நிலையே புதிய ஆட்சியாளருக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள இலஞ்சமும் ஊழலும். இதனை ஜனாதிபதி நன்குணர்ந்தவராகவே உள்ளார் என்பதை அண்மையில் நடைபெற்ற சர்வதேச  ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவராற்றிய உரை வெளிப்படுத்துகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனைக் கையாள்பவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் கையாளாவிட்டால் அச்சட்டங்களினால் எவ்வித பயனும் கிடைக்காது. இலங்கையில் சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றுள்ளது. அதில் சிறிய விலங்குகள் சிக்கி விடுகின்றன: பெரிய விலங்குகள் அதைக் கிழித்துக் கொண்டு சென்று விடுகின்றன. அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதுடன், 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 உம் 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 உம்  மீளப்பெறப்பட்டதற்கான காரணத்தை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிடவேண்டும் என்றும் கேட்டுள்ளமை நாட்டில் புரையோடிப் போயுள்ள இலஞ்ச, ஊழலை அகற்றுவது அவ்வளவு இலகுவானதொன்றல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் நாட்டின் நீதித்துறை என்பன எவ்வளவுதூரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடந்தகாலம், நிகழ்காலம்,  வருங்காலம் என முக்காலத்துக்குமுரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தின்போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்பது மட்டுமல்ல கடந்தகாலத்தில் ஊழல் செய்தோரை நீதிக்கு முன் நிறுத்துவோம் என்பதுவும் அடக்கம். நிகழ்கால, எதிர்கால ஊழல்களை அகற்றுவதற்கு கடந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதும் அவசியமானது. கடந்த காலத்தைப் பொறுத்தவரை 2010 ஆண்டுக்குப்பின் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்திலும் கோதாபயவின் குறுகிய ஆட்சிக்காலத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ முறைகேடு தொடக்கம் ‘போட் சிற்றி’ ஊழல் மற்றும் உகண்டாவுக்கு தனி விமானத்தில் பணம் அனுப்பிய வரை பல முறைகேடுகளின் சூத்திரதாரிகளான ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் மத்திய வங்கியின் பாரியளவிலான பிணைமுறி மோசடிக்காக மைத்திரி, ரணிலையும் பாரியளவிலான சீனி வரி மோசடிக்காக கோதாபயவையும் நீதிக்கு முன் நிறுத்தவேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்குண்டு. இவை இலகுவான விடயங்களன்று. திட்டமிட்டு திருடுபவர்கள் இயன்றவரை இயன்றவரை தடயங்களை விட்டு வைக்கமாட்டார்கள். அவ்வாறே ஏதாவது இருந்தாலும் அக்கோப்புகள் காணாமல் போய்விடும். ஏனெனில் செய்யப்பட்ட களவுகள் தனியே அவர்களால் செய்யப்பட்டவையல்ல. அவை யாவும் மேல்மட்ட கூட்டுக்களவுகள். அந்தக் கூட்டுக்களவாணிகள் இப்போதும் அரச பணியில் ஆங்காங்கே இருக்கின்றனர் எனபதுடன்அவற்றை மூடிமறைக்கக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர்.

அவற்றையும் மீறி தடயங்கள் கண்டெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் நாட்டிலிருக்கமாட்டார்கள். அர்ஜுனா மகேந்திரா சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிவார். ஆனால் அவரின் முகவரி கிடைக்காததால் நீதிமன்றக் கட்டளையை வழங்க முடியவில்லை என சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அறிவிப்பர். ஏலவே பஷில், கோதாபய பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். தேவையேற்படின் இங்குள்ள சம்பந்தப்பட்டவர்களும் பறப்பது கடினமானதல்ல. போதாக்குறைக்கு அவர்களிடம் வெளிநாட்டுக் குடியுரிமையுமுண்டு. இந்த இலட்சணத்தில் இந்தப் பெருச்சாளிகளை அனுரவினால் இலகுவாக நீதிக்கு முன் நிறுத்த முடியுமா?
சரி, கடந்த காலத்தை விடுவோம். நிகழ்காலத்தில் நிலைமை சாதகமாக உள்ளதா? ஊழல், இலஞ்சத்தில் புரையோடிப்போன இலங்கையின் நிர்வாக, நீதிக் கட்டமைப்புகள் இன்னும் அவ்வாறே உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களும் அவர்களின் செயலாளர்களும் மட்டுமே மாறியுள்ளனர். செயலாளர்கள் கூட ஏற்கனவே அரச துறைகளில் இருந்த அதிகாரிகள்தான். வானத்திலிருந்து கொண்டவரப்பட்டவர்களல்லர். கோதாபயவுடனும் பின்னர் ரணிலுடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் சிலர் இன்னும் அனுரவுடனும் இருக்கிறார்கள். ஜனாசாக்களை கட்டாயம் எரிக்கவேண்டும் என்று கோதாபயவுக்கு குழல் ஊதிய ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தமைக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கண்டனங்கள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. போலிப்பட்டம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக பொதுஜன பெரமுன கச்சையைக் கட்டுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் தனியறையில் மோசடியான முறையில் சட்டப் பரீட்சையெழுதிப் பட்டம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிற நாமல்தான் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர். அதுமட்டுமன்றி பல இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் பதவியுயர்வுடன் இன்னும் உயர்பதவிகளை அலங்கரித்து வருவதையும் காணமுடிகிறது. அனுரவினதும் அவர் தோழர்களதும் கைகள் மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அனைவரதும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? அது மிகக்கடினம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு போக்குவரவு கண்காணிப்புக் காவல் துறையினரின் நாளாந்த வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியுமேற்படவில்லை என்பது.
நிகழ்காலத்தில் இவ்வளவு சவால்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் தொடர்பிலும் புதிய அரசாங்கம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவர் சுட்டிக்காட்டியது போல அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தெரிகிறது. இங்கு எழக்கூடிய நியாயமான ஐயங்களில் ஒன்று தற்போதிருக்கும் அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது உடனடிச் சாத்தியமாகுமா? மற்றது அவ்வாறு கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட்டால்கூட இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் முற்றாக மறைந்துவிடுமா என்பது.  புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முழுவதும் முயன்றால்கூட அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது கடினம். ஜனநாயக நாடுகளில் இது நீண்டதொரு செயன்முறை. இதில் உள்நாட்டுக் காரணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுக் காரணிகளும் தாக்கத்தைச் செலுத்தும். அதேபோல ஐனாதிபதி கூறியது போல இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. அவை தவறானவை என்ற மனப்பாங்கு நாட்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளிலொன்றாகவும் உருவாக்கப்படவேண்டும். அது குடும்பம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் போன்ற சமூக நிறுவனங்களால் சிறுபராயத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது  என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் இதற்கும் பொருந்தும்.

முன்னைய அரசாங்கங்களின் தவறான அணுகுமுறைகளால் படுத்துவிட்ட இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே அதிக முயற்சிகளை எடுக்கவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை களையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதை அதன் முன்னெடுப்புகள் காட்டுகின்றன. அதில் முழுமையாக வெற்றிபெறாவிடினும் மக்கள் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றம் ஒன்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில்தான் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையும் நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் தங்கியுள்ளன.

 

https://thinakkural.lk/article/313893

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.