Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லூயிஸ் ஆர்பர் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லூயிஸ் ஆர்பர் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றார்?

-சங்கரன் சிவலிங்கம்-

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கவுன்சிலின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கான தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெனீவா திரும்பியிருக்கின்றார்.

லூயிஸ் ஆர்பர் அம்மையார் ஆணையாளர் என்ற பெரிய பதவியில் இருப்பதால் நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதில்லை. அவரது பிரதிநிதிகளே பயணம் செய்வதுண்டு. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக நிலவும் நாடுகளுக்கு மட்டுமே அவர் பயணம் செய்வது வழக்கமாகும். அந்த வகையில் முன்பு சூடான், ருவாண்டா, கொங்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றார். தற்போது இலங்கைக்கு பயணம் செய்திருக்கின்றார்.

தான் பயணம் செய்வதற்கு முன்னர் தனது பிரதிநிதிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்து விட்டே தனது பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றார். எனவே முன் கூட்டியே அவர் பெற்றுக் கொண்ட தகவல்களை நேரடியாக சரிபார்ப்பதற்கும் தாம் மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகளுக்கு நியாயப்பாடுகளை தேடுவதற்காகவுமே அவர் பயணம் செய்திருக்கின்றார் எனக்கூறலாம்.

முன்னர் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக் கண்காணிப்பு அலுவலகத்தினை உருவாக்குதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றதனால் அதனை அமைப்பதற்கான நியாயப்பாடுகளை முன்வைப்பதற்காகவே பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றார் எனக் கூறவேண்டும்.

இந்த பயணத்திற்காக தான் சென்ற தடவை நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்களை சற்றுத் தள்ளிப்போட வேண்டும் என்பதற்காகவே ஷ்ரீலங்கா அரசாங்கமும் அம்மையாரின் பயணத்தினை வரவேற்றிருந்தது.

இந்தத் தடவை முன்னைய பிரதிநிதிகளின் பயணம் போல அல்லாது நிகழ்ச்சி நிரல்கள் நன்கு திட்டமிடப்பட்டிருந்தன. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைச் செயலகம் உள்ளூர் முக்கியஸ்தர்களுடன் இணைந்து அத்திட்டமிடலை ஒழுங்காக மேற்கொண்டிருந்தது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகமும் இவ் விடயத்தில் வலிமையான பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இதனால், லூயிஸ் ஆர்பர் அம்மையார் அதிக தகவல்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டதோடு, மக்கள் படும் துயரங்களையும் நேரடியாக அவதானிக்கக் கூடியதாயிருந்தது. படையினர் பல கெடுபிடிகளை உருவாக்கினாலும் அதற்கு மத்தியிலும் இராஜதந்திர நுட்பங்களைப் பயன்படுத்தி உண்மைகளை தரிசிக்கக் கூடியதாக இருந்தது.

லூயிஸ் அம்மையாரின் சந்திப்புகளில் கொழும்பில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுடனான சந்திப்பு, வெலிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகளுடனான சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டவர்களுடனான சந்திப்பு என்பன முக்கியமானவையாக இருந்தன.

கொழும்பு, வெலிக்கடை சந்திப்புகளை மக்கள் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்கொண்டிருந்தார். அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தி இருந்த போதும் மனோ கணேசன் மிகச் சிரமமெடுத்து நுணுக்கமான வகையில் இவ் ஒழுங்குகளைச் செய்திருந்தார். இந்த வகையில் மனோ கணேசன் மிகவும் பாராட்டப்படக் கூடியவரே. மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கின்ற போது மிகவும் சிரமமெடுத்து அதற்கு முகம் கொடுப்பவர்கள் தான் தலைவர்களாக எழுச்சியடைவர். செல்வநாயகம், அஷ்ரப்,பிரபாகரன் போன்றவர்கள் இவ்வாறு தான் தலைவர்களாக எழுச்சியடைந்தனர். மனோ கணேசனும் இவ்வாறு எழுச்சியடைந்து வருகின்றார் என்றே கூறவேண்டும்.

யார் எதைத்தான் கூறினாலும் இன்று வடகிழக்கிற்கு வெளியே தமிழ் மக்களின் தலைவராக எழுச்சியடைந்து வருபவர் மனோ கணேசன் தான். அவர் இந்த இலக்கில் தொடர்ச்சியாக வளர்ந்து வர வேண்டும் என்பதே உலகின் எல்லா இடங்களிலும் வாழும் தமிழ் மக்களின் அவாவாகும். இந்தத் தடவை அவர் ரணில் விக்கிரமசிங்கவை முக்கியத்துவப்படுத்தாமல் தன்னை முக்கியப்படுத்தி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் இரட்சகனாக ரணிலைக் காட்ட முற்பட்டது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியிருந்தது. தற்போது ரணில் சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டு உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் அம்பலமாகியிருப்பது ரணிலை கழற்றி விடுவதில் இலகுவான ஒரு நிலையினை மனோ கணேசனுக்கு கொடுத்திருக்கலாம். ரணில் சாதாரண சிங்களத் தலைவர்களுள் ஒருவராக தன்னை வெளிக்காட்டிய பின் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மத்தியிலோ அல்லது சர்வதேச அவதானிகள் மத்தியிலோ முக்கியத்துவமற்ற மனிதராக மாறிவிட்டார்.

லூயிஸ் அம்மையாரின் யாழ்ப்பாணப் பயணத்தைப் பொறுத்தவரை கொழும்பு போன்ற வெற்றியைத் தராவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைத் தந்துள்ளது. இதற்கு உரித்தானவர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகமேயாவார். படையினரின் கெடுபிடிகளினால் சிவில் நிறுவனங்கள் எல்லாம் படிப்படியாக செயலிழந்துவிட்ட நிலையில், கத்தோலிக்க மத நிறுவனம் மட்டுமே அதன் உலகளாவிய தன்மை காரணமாக செயற்படக் கூடியதாக இருக்கின்றது. கத்தோலிக்கர்கள் யாழ்.குடாநாட்டில் குறைந்தளவில் உள்ளபோதும் ஆயராக இருப்பவர்களுக்கு குடாநாட்டின் அனைத்து மக்கள் மத்தியிலும் செல்வாக்கான நிலையுண்டு. இதனால் குடா நாட்டினைப் பொறுத்தவரை ஆயர் கத்தோலிக்க மக்களின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல் முழு யாழ்.மக்களினதும் பொதுக் குறியீடாக விளங்குகின்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆயரின் தலைமையில் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் லூயிஸ் அம்மையாரைச் சந்தித்தனர். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் லூயிஸ் அம்மையாரைச் சந்திப்பதில் பல தடைகளை படையினர் உருவாக்கினர். நல்லூரிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டது. ஆயர் இல்லத்திலும் பல தடைகள் போடப்பட்டன. ஆயர் இல்ல வளவின் கேற் படையினரால் பூட்டப்பட்டது. எனினும், பின்னர் ஆயரின் வேண்டுகோளின் பேரில் லூயிஸ் அம்மையார் வெளியே வந்து கேற்றுக்கு வெளியே கதறியழுதுகொண்டிருந்த மக்களுக்கு கைகொடுத்து ஆறுதல் கூறினார். அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டார்.

இம்மூன்று முக்கிய சந்திப்புகளும் லூயிஸ் அம்மையாருக்கு பல நேரடி அனுபவங்களைக் கொடுத்திருந்தாலும் அவர் கிழக்கிற்குச் செல்லாததும் வன்னிக்குச் செல்லாததும் மிகப் பெரிய குறைபாடென்றே கூறவேண்டும்.

கிழக்கிற்கு அவர் சென்றிருந்தால் அரசாங்கம் பெருமெடுப்பில் பிரசாரம் செய்யும் `கிழக்கின் உதயம்' திட்டத்தின் உண்மை நிலையினை அவர் நேரடியாக அறிந்திருப்பார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் இராணுவ முற்றுகைக்குள் அடைக்கப்பட்டிருப்பதையும் திருகோணமலை மாவட்ட மக்கள் இன்னமும் அகதிகள் முகாம்களில் கவனிப்பாரற்று வாடுவதையும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்களின் பூர்வீகக் காணிகள் பறிக்கப்படுவதையும் அவர் நேரடியாகத் தரிசித்திருப்பார். அத்துடன் கருணா பிரிவு என்ற பெயரில் இராணுவ உளவுப் பிரிவு மேற்கொள்ளும் அடாவடித்தனங்களையும் அறிந்திருப்பார். இதேபோல வன்னிக்குச் சென்றிருந்தால் விமானக் குண்டு வீச்சினால் பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் படுகின்ற அவலங்களையும் பொருளாதார தடை, மருந்துப் பொருட்கள் தடை போன்றவற்றினால் மக்கள் படும் அவலங்களையும் அறிந்திருப்பார். இதைவிட லூயிஸ் அம்மையார் மன்னாரில் அண்மைக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்திருக்க வேண்டும். அப்போது தான் அகதி வாழ்வின் கொடுமைகளையும் அவரால் நேரடியாக தரிசித்திருக்க முடியும்.

இவையெல்லாம் நடைபெற்றிருந்தால் தான் அம்மையாரின் பயணத்தினை பூரணத்துவம் வாய்ந்த பயணம் என தமிழ் மக்களினால் கூறமுடியும்.

இந்த வகையில் அம்மையாரின் பயணம் முழுமை பெறாத ஒன்றே. எனினும் முன்னைய பிரதிநிதிகளின் வருகையை விட சற்று அதிகமான திருப்தியைத் தந்ததென்றே கூறவேண்டும்.

பயணத்தின் முடிவில் அம்மையார் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினையும் நடாத்தியிருந்தார். அதில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக உள்ளது என்றும் கடத்தல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துதல், நீதித்துறைச் செயற்பாடுகளை சுமுகமான முறையில் மேற்கொள்ளுதல் என்பவற்றில் போதாமைகள் இருக்கின்றன என்றும் எனவே இதனைக் கண்காணிக்க ஒரு திறமையான கண்காணிப்பு பொறிமுறை ஒன்று தேவையென்றும் குறிப்பிட்டார்.

அவர் ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்பதையே மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இக்கருத்தினை அவருக்கு முன்னாலேயே அமைச்சர் மகிந்த சமரசிங்க அரசாங்கத்தின் சார்பில் மறுத்ததோடு, ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகத்தினை இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் சம்மதிக்கமாட்டாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னைய பிரதிநிதி ஹோம்சின் அனுபவம் காரணமாக இந்தத் தடவை லூயிஸ் அம்மையார் தனது கருத்தினை நேரடியாகவே முன் வைத்திருந்தார்.

இப்போதுள்ள கேள்வி, லூயிஸ் அம்மையார் நிலைமைகளை நேரடியாக அறிந்து விட்டார். இனி அம்மையார் தொடர்ந்து என்ன செய்யப்போகின்றார்? சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகின்றது?

லூயிஸ் அம்மையார் ஜெனீவா திரும்பிய பின்னர் தனது பயணம் பற்றிய விரிவான அறிக்கையினைத் தயாரிப்பார். அதன் பின்னர் அவ்வறிக்கையினை மனித உரிமை கவுன்சில் முன்னிலையில் வைப்பார். மனித உரிமைக் கவுன்சில்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் கவுன்சில் ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற முற்படலாம். இதன் போது அரசியல் நுழைவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இந்தியா உட்பட இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்ற நாடுகள் கண்டனத் தீர்மானத்தை தடுக்க முற்படலாம். எனினும், ஆணையாளரே நேரடியாக அறிக்கை சமர்ப்பித்த பின் தடுப்பதற்கான நியாயமான காரணங்களைக் கூறுவது இலங்கைக்கு ஆதரவான நாடுகளுக்கு கடினமாகவே இருக்கும். அதேவேளை, இவ்வறிக்கை உதவி வழங்கும் நாடுகளுக்கும் வழங்கப்படலாம்.

மனித உரிமைக் கவுன்சிலில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை மட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும், பாதுகாப்புச் சபை காத்திரமான தீர்மானம் எடுப்பதில் பல தடைகள் ஏற்படலாம்.

பாதுகாப்புச் சபையில் ஆதிக்கம் சர்வதேச ஆதிக்கச் சக்திகளாக இருக்கின்ற அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கே உண்டு. இந்தியாவின் செல்வாக்கினையும் இங்கு குறைத்து மதித்துவிட முடியாது. இந்தியா உட்பட இந்நாடுகள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக்கு வலிமையான அழுத்தங்களைக் கொடுக்க விரும்பாது. முதலாவது தாம் அழுத்தம் கொடுத்தால் இலங்கை சீனா பக்கம் முழுமையாக சார்ந்துவிடும் என்ற அச்சமாகும். மியன்மாரில் சீனாவின் செல்வாக்கு முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில், இலங்கையிலும் வளரப் போவதை அவை விரும்பப் போவதில்லை.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தால் அதன் காரணமாக புலிகள் மேல்நிலைக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சமாகும். இந்தியா இதனை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.

இவ்விரண்டின் காரணமாகத் தான் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் தொடர்பாக பல்வேறு அதிருப்திகள் நிலவுகின்ற போதும், அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அமெரிக்காவுடன் நேரடியான பாதுகாப்பு ஒப்பந்தமும் இந்தியாவுடன் மறைமுகமான பாதுகாப்பு ஒப்பந்தமும் இலங்கைக்கு உண்டு.

எனினும், மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதையோ அதன் வழி சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய ஜனநாயக விழுமியங்கள் தொடர்ந்து சீரழிந்து செல்வதையோ இந்நாடுகள் அனுமதிக்குமென கூறிவிடவும் முடியாது. சர்வதேச ஒழுங்கு விதிகள் ஒரு எல்லைக்கு மேல் மீறப்படுவதை இவை அனுமதிக்கப் போவதில்லை.

எனவே குறைந்த பட்சம் மனித உரிமை விவகாரங்களிலாவது முன்னேற்றங்களைக் காணும் படி குறிப்பாக ஐ.நா. கண்காணிப்பு அலுவலகத்தை இலங்கையில் திறப்பதற்கு அனுமதிக்கும்படி இவை தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அவ்வழுத்தங்கள் அதிக கடுமையானதாக இருக்குமெனக் கூறிவிடமுடியாது. அதேவேளை, மென்மையானதாக இருக்குமெனவும் கூற முடியாது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கின்ற இனப்பிரச்சினையைத் தொடர்ந்து இழுபட்டுச் செல்லவிடாமல் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இவ்வழுத்தங்களெல்லாம் அளவு ரீதியாக அதிகரிக்குமேயொழிய பண்பு ரீதியாக மாறுமென்று இப்போதைக்கு கூறிவிட முடியாது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.