Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04 APR, 2025 | 05:29 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும்.

இலங்கை பிளவுபடாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும். குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/211170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமுலாக்க இடமளிக்க மாட்டோம் - சோசலிச முன்னணி

04 APR, 2025 | 04:38 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவுடன் அரசாங்கம் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் தெரியாது, மக்களுக்கு அறிவுறுத்தாமல் திருட்டுத்தனமாக  கைச்சாத்திடப்பட்டால் அதனொரு உறுப்புரையையேனும் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதற்கு எதிராக பாரிய மக்கள் அணியை திறட்டுவோமென முன்னிலை சோசலிய கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

இந்தியாவுடன அரசாங்கம் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சி ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர் ஒன்றை கையளித்தது. அதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

1971ஆம் ஆண்டு ஏப்ரல் போராட்டத்தின் 54 ஆவது ஆண்டை கொண்டாடும் 2025 ஏப்ரல் 5ஆம் திகதி அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அரசாங்கம் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் என்ன என இதுவரை நாட்டிற்கு வெளிப்படுத்தவில்லை.

மக்களுக்கு மாத்திரமல்ல பாராளுமன்றத்துக்கும் அறிவிக்கவில்லை. நாங்கள் அறிந்த மட்டத்தில் அமைச்சரவைக்கும் ஒப்பந்தத்தின் நகல் பத்திரம் காட்டப்படவில்லை. அமைச்சரவை அமைச்சர்கள் எங்களுக்கு பொய் சொல்கிறார்கள் அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பில் யாருக்கும் தெரியாது.

மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, குறிப்பாக பல தலைமுறையினரை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது  மக்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறான ஒப்பந்தங்கள் சமூகமயப்படுத்தி கருத்தாடல் மேற்கொண்டு மக்கள் அபிப்பிராயத்துடன் அனுமதித்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தின் பிரதியை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்த ஒப்பந்தத்தை பார்க்கக்கூட கேட்பதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு. ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. பாராளுமன்றத்துக்குள் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இணைந்தே  மக்கள் விரோத செயலை மேற்கொள்கின்றன.

அரசாங்கம் அரசியல் கலாசாரத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதனை முற்றாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அரசியல் கலாசாரம் என்பது இரண்டு வேளை பசியுடன் இருப்பதும் பஸ் மற்றும் புகையிரத வண்டியில் செல்வது மாத்திரமல்ல.

பாரதூரமான அரசியல் தீர்வுகளை மக்களுடன் கலந்துரையாடி மேற்கொள்வதும் சிறந்த அரசியல் கலாசாரத்துக்கு உரியதாகும். இன்றாகும்போது மக்கள் விடுதலை முன்னணி அரசியல் கலாசாரத்தை மாத்திரமல்ல அரசியலையும் குழப்பிக்கொண்டுள்ளது.

அரசாங்கம் இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் விளையாட்டுவிடயமல்ல . இந்தியா யுத்த ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு. ஆசியாவின் நேட்டோ என்று   அறிமுகப்படுத்தப்படும் ‘இக்வட்’ அமைப்பு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலதிகமாக இந்தியா அமெரிக்காவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தீர்மானித்திருக்கிறது.

ஏகாதிபத்தியவாதிகள், உலக வல்லரசு, பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு  முன்னால் மண்டியிட்டு அழிவுகரமான ஏகாதிபத்திய யுத்தம் ஒன்றில் மரணிக்கும் தலையெழுத்தை இலங்கையர்களின் நெற்றியில் குத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் காட்டிக்கொடுப்பாகும்.

இந்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம். இந்தியாவுடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் ஒப்பந்தங்களின் பிரதிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம். அதனை மக்களுக்கு காட்டாமல் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டால், அதன் ஒரு உறுப்புரையைக்கூட செயற்படுத்த முடியாத சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/211148

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தால் இறையாண்மைக்கு பாதிப்பில்லை; பாதுகாப்பு செயலாளர்

05 APR, 2025 | 02:17 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை - இந்தியவுக்கு இடையிலான  புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும்  பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன்,  பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார்ந்த ஒத்துழைப்புகள் இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள், செயலமர்வுகள் போன்ற திட்டங்கள் ஊடாக வலுப்பெற்றுள்ளன.

இதனை தவிர வருடத்திற்கு இலங்கை பாதுகாப்பு படைகளின் 750பேருக்கு சிறப்பு பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கின்றன.

இருநாடுகளுக்குமிடையில் 2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாதுகாப்பு கலந்துரையாடலில், இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்கதாக்குவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போதே புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இதன்பிரகாரம் ஏனைய நாடுகளுடன் இலங்கையின் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆழமாக மீளாய்வு செய்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியும் எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இருநாடுகளின் தேசிய கொள்கைகளுக்கோ அல்லது சட்ட கட்டமைப்பிற்கோ எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது.

இலங்கை - இந்திய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளின்போது, இருதரப்பு தேசிய மற்றும் இராணுவ சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடணம் என்பவற்றை பாதுகாப்பதில் இருநாடுகளும் உறுதியுடன் உள்ளன.

எனவே இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது, உள்ளக விடயங்களில் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படாதவாறு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை பாதுகாப்பதற்கு இருநாடுகளும் ஒப்பந்தத்தின் ஊடாக ஒப்புதல் அளித்துள்ளன.

எனவே இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும்  பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன்,  பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்குமென முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று மாத முன் அறிவிப்பு மூலம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/211221

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.