Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,X/NARENDRA MODI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிக்கலான இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

மோதிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதி, அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஏப்ரல் 4 இரவு சென்றார்.

3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோதி, அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இது அவர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள நான்காவது பயணமாகும்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோதிதான். ஆகவே, அவரது இந்தப் பயணம் இருதரப்பாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது சில திட்டங்களைத் துவக்கி வைக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்.

இருந்தபோதும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து பேசப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1247 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

6 ஆண்டுகளில் 1,200 தமிழக மீனவர்கள் கைது

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கொடுத்த தகவல்களின்படி, 2020 முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் 1247 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையுடன் கடலில் நடந்த மோதல்களில் 7 பேர் வரை இறந்துபோயுள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மார்ச் ஐந்தாம் தேதி கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. மார்ச் 26ஆம் தேதி 11 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் புகார்

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கும் விவகாரம் நீண்ட காலமாகவே நீடிக்கும் ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வட இலங்கையின் கடற்கரைக்கு அருகில் சென்று, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாக வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை போன்றவற்றைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலங்கை மீனவர் பிரதிநிதிகள், தமிழக மீனவர் பிரதிநிதிகள், இந்திய அரசு அதிகாரிகள் இடையே 2014 - 2015 வாக்கில் முத்தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருந்தபோதும் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழக மீன்வர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலையைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இந்நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரச் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஜஸ்டின், சகாயம், ஆல்வின், ஜெர்மனியஸ் ஆகிய 5 பேர் மார்ச் 25ஆம் தேதி இலங்கை சென்றனர்.

மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பிரதமர் மோதி இலங்கைக்கு வரும்போது, அவரிடம் இது குறித்துப் பேச தங்களுடைய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக நடத்தப்படாத இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமென தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பிறகு இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் மீனவர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் தமிழகம் திரும்பினர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது

தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு என்ன?

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மீனவர் பிரதிநிதி ஜேசுராஜா, கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை மோதி வலியுறுத்த வேண்டும்.

அதேபோல, இலங்கை கடற்படை 2018ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்து வைத்துள்ள 200க்கும் மேற்பட்ட நல்ல நிலையில் உள்ள மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் இலங்கை அரசிடம் பேச வேண்டும்.

மேலும், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்தின்படி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர இலங்கை ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் கூறியது என்ன?

ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதை நிறுத்துவது தான் ஒரே தீர்வு என்கிறார் இலங்கையில் கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக பிபிசியிடம் பேசியிருந்த அவர், "இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது.

கச்சத்தீவுக்குக் கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. அவர்கள் எங்களுடைய கரையையும் கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்," என்கிறார் அவர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆழ்கடல் மீன்பிடிப்பு தீர்வாகுமா?

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்வதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்கிறார் சென்னையைச் சேர்ந்த, சர்வதேச விவகாரங்களில் நிபுணரான என். சத்தியமூர்த்தி.

"கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்ததாகவும் திசை மாறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் சொல்வதெல்லாம் சரியானவையல்ல.

நம்முடைய மீனவர்கள் இலங்கை கடற்கரைக்கு 2-3 கி.மீ. அருகில் வரை செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் மீன் வகைகள், நம்முடைய கடற்பரப்பில் இல்லை. அவற்றைப் பிடிப்பதற்காகவே அவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குச் செல்கிறார்கள். அதனால், இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, ஆழ்கடல் மீன் பிடிப்புத்தான்" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெரிய படகுகளை வாங்கியளிக்கும் திட்டத்தை 2017-இல் இந்திய அரசு துவங்கியது. இதில் பத்து சதவீத நிதியை மீனவர்கள் கொடுத்தால் போதும். 20 சதவீதம் கடனாகவும் மீதமுள்ள தொகை மானியமாகவும் வழங்கப்படும்.

"ஆனால், இந்தத் திட்டம் மெதுவாக செயல்படுத்தப்படுகிறது. அதனை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய பயணத்தின் போது பிரதமர் மோதி இது குறித்தும் இலங்கைத் தரப்பிடம் பேசுவார். கச்சத்தீவு தொடர்பாக அறிவிப்பு ஏதும் வருவது கடினம்" என்கிறார் என். சத்தியமூர்த்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg9mn7dy3vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.