Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு பூங்காவில் அனுர கூறியதன் பொருள்? - நிலாந்தன்

490534801_1907825549623681_8382038333488

“திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவானது. வடக்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும்.தெற்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும். திஸ்ஸ விகாரையை மையமாக கொண்ட அரசியலை விலக்கி விட்டு, விகாராதிபதியும் மக்களும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.”

இது கடந்த வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் அனுர பேசிய பேச்சின் ஒரு பகுதி. தையிட்டி விகாரையில் இருக்கும் தமிழ் அரசியலையும் சிங்கள அரசியலையும் நீக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மிகத் தவறான ஒப்பீடு. தையிட்டி விகாரை என்பதே ஓர் அரசியல் விவகாரம்தான். அது ஓர் ஆக்கிரமிப்பு; நிலப் பறிப்பு; சிங்கள பௌத்த மயமாக்கலின் ஆகப்பிந்திய நடவடிக்கைகளில் ஒன்று. அதில் உள்ள சிங்கள பௌத்த அரசியல்தான் இங்கு பிரச்சினையே. அதற்கு எதிராகத்தான் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். தமிழ் மக்களுடையது ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு போராட்டம். இங்கு ஒடுக்கும் அரசியலையும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் அரசியலையும் சமப்படுத்த முடியாது. ஒடுக்குமுறை இல்லையென்றால் போராட்டத்திற்கு தேவையும் இருக்காது. எனவே முதலில் நீக்க வேண்டியது அந்த விகாரையைக் கட்டிய சிங்கள பௌத்த அரசியலைத்தான்.

அதைவிடக் குறிப்பாக பிக்குகள் அந்த அரசியலின் ஒரு பகுதி. இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறையில் மகாசங்கம் அரச கட்டமைப்பின் ஒரு பகுதி. எனவே ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகக் காணப்படும் மத குருக்களிடம் போய் பேசித் தீருங்கள் என்று கூறுவதே ஒடுக்கு முறைதான்.எனவே தையிட்டி விகாரை விடயத்தில் அதன் அரசியலை நீக்க வேண்டும் என்று அனுர கேட்பதே அரசியல்தான். ஒடுக்கும் அரசியல்தான்.

அப்படித்தான் அவருடைய யாழ்.மாநகர சபைக்கான பிரதான வேட்பாளர் கூறுகிறார், தான் அரசியல் கதைப்பதை விடவும் அபிவிருத்தியைத்தான் கவனிக்கப் போவதாக. ஆனால் அரசியல் இல்லாமல் அபிவிருத்தி இல்லை.எதை அபிவிருத்தி செய்வது? எங்கே செய்வது? எப்படிச் செய்வது? எப்பொழுது செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாமே அரசியல் தீர்மானங்கள்தான். அபிவிருத்தி என்பது அரசியலின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. இந்த அடிப்படை விளக்கம் வேட்பாளரிடம் இல்லையா? அல்லது அபிவிருத்திக்குள் இருந்து அரசியலை நீக்கும் அரசியலை அவர் வேண்டுமென்று செய்கிறாரா?

அதே போலதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் தொடர்பாக ஒரு கோட்பாட்டு விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. உள்ளூராட்சி சபைகள் உள்ளூருக்கானவை; உள்ளூர் உணர்வுகளைப் பிரதிபலிப்பை; உள்ளூர் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயில் களங்கள். எனவே அந்த சபைகளுக்கான தேர்தல் களங்களிலும் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசக்கூடாது என்று ஒரு விளக்கம்.

அப்படிச் சொல்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை. தேசியவாத அரசியல் என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதை எங்கிருந்து தொடங்க வேண்டும்? கீழிருந்து மேல் நோக்கித்தான் அதைத் தொடங்க வேண்டும்.மேலிருந்து கீழ்நோக்கி அல்ல.அதாவது ஊர்களில் இருந்து தொடங்க வேண்டும். எனவே கீழிருந்து மேல் நோக்கி அதாவது ஊர்களில் இருந்துதான் தேசியவாதக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும் அசமத்துவங்கள் அதிகமாக கிராமங்களில்தான் நிலவும். பால்,சாதி,சமய,பிரதேச அசமத்துவங்கள், முரண்பாடுகள் கிராமங்களில் ஆழமாக இருக்கும்.எனவே அங்கேயே அவற்றைத் தீர்க்க வேண்டும். அதற்கு தேசியவாத தரிசனமும் அணுகுமுறையும் வேண்டும்.ஒரு மக்கள் கூட்டத்தை பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவது என்றால் எந்த அடிப்படையில் கூட்டிக்கட்டுவது? ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில்தான் அதைச் செய்யவேண்டும். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் தேசியவாத அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும்.எனவே தேசிய உணர்வைக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தை ஊர்களில் இருந்தே, ஊராட்சி அரசியல் களத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.

ஊரில் சாதிமானாக இருப்பவர், சமய வெறியராக இருப்பவர்,பால் அசமத்துவத்தை ஆதரிப்பவர் போன்றவர்களை தேர்தலில் நிறுத்தி உள்ளூராட்சி சபைகளை உருவாக்க முடியாது. ஊருக்கு நல்லவர்; அல்லது சாதிக்கு நல்லவர்; அல்லது சமயத்துக்கு நல்லவர்; தேசியவாதியாக இருப்பார் என்று இல்லை. உள்ளூராட்சி சபைகள் உள்ளூர்த் தன்மை மிக்கவை என்றாலும் உள்ளூரில் இருக்கக்கூடிய அசமத்துவங்களை தேசியவாத நோக்கு நிலையில் கடக்கின்ற, நீக்குகின்ற ஒருவர்தான் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினராக இருக்க வேண்டும்.எனவே வேட்பாளர்களைத் தெரியும்போது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்தே அதைச் செய்ய வேண்டும். இப்படிப் பார்த்தால் தேசியவாத அரசியலை கிராமங்களில் இருந்துதான் கட்டியெழுப்ப வேண்டும்.எனவே உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அதற்குரியவைதான்.உள்ளூர் உணர்வுகளை பிரதிபலிப்பது என்பது தமிழ்த்தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது.அது தமிழ்த் தேசிய கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்

உள்ளூர் அபிவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களை கொண்டவர்களும், அதேசமயம் உள்ளூர் அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை,தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களுந்தான் தேர்தலில் நிற்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தாயகம் அளவிலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்புகளை அல்லது வலைப்பின்னலையோ கொண்டிராத கட்சி மாகாண மட்டத்திலோ அல்லது தாயக அளவிலோ வெற்றி பெற முடியாது. தமிழரசுக் கட்சியின் பலமே அதற்கு கிராம மட்டங்களில் இருந்த அடிமட்ட வலைபின்னல்தான். அக்கட்சி வடக்கு கிழக்கு தழுவியதாக எழுச்சி பெறவும் அதுதான் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராகிய சிறீதரனுக்கு கிளிநொச்சியில் உள்ள பலமும் அதுதான்.

எனவே கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்பு இல்லையென்றால் மாவட்ட, மாகாண, தாயக மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்த முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஒவ்வொரு அரசியல் அசைவும் தம்மைத் தேசமாகத் திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். அதை குடும்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு குடும்பத்திலேயே வாக்குகள் சிதறி விழுந்தன. தமிழ் மக்கள் ஒரு சமூகமாகச் சிதறுகிறார்கள். எனவே ஊர்களில் இருந்தே தேசத்தைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் மட்டுமல்ல மாகாண சபைகளிலும் இனப்பிரச்சினையை அதிகம் விவாதிக்கக்கூடாது என்ற ஒரு விவாதம் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபொழுது எழுந்தது.வட மாகாண சபையில் அபிவிருத்தித் திட்டங்களை விடவும் இனப் பிரச்சினை அரசியல்தான் அதிகமாக பேசப்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரனிடமும் வடமாகாண சபையிடமும் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலான பொருத்தமான பொருளாதார தரிசனங்கள் இருக்கவில்லை என்பது உண்மை.ஆனால் அதற்காக மாகாண சபை மட்டத்தில் இனப்பிரச்சினையைப் பேசக்கூடாது என்று கூறுவது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டது.

மாகாண சபை எனப்படுவது மக்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு சட்டமன்றம். ஒற்றையாட்சிக்கு கட்டமைப்புக்குள் அதற்குள்ள அதிகாரங்கள் போதாது. எனினும் இருக்கின்ற அதிகாரங்களை உச்சபட்சமாக பயன்படுத்தி எப்படி மாகாணத்தைக் கட்டியெழுப்பலாம் என்பது தொடர்பில் பொருத்தமான பொருளாதார தரிசனங்கள் தமிழ்க் கட்சிகளிடம் குறைவு. அதேசமயம் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு மாகாண சபையில் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மகத்தானது.அத்தீர்மானத்துக்கு மக்கள் ஆணை உண்டு. தேச நிர்மாணம் என்பது அதாவது தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது அதன் பொருளாதார அர்த்தத்தில் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுதான்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் உள்ளூராட்சி சபை மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். உள்ளூராட்சி சபைகளில் இனப் பிரச்சினையை பேசக்கூடாது என்பது தையிட்டி விகாரையில் இருந்து இன அரசியலை அகற்றுவோம் என்று கூறும் அனுரவின் கோரிக்கைக்கு நிகரானது. அது ஒடுக்குமுறையின் ஒரு பகுதி.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான கோஷம் “வெற்றி நமதே ஊரும் எமதே”என்பதாகும்.உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதுதான் அவர்களுடைய நோக்கம். நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றியானது தமிழ்த்தேசிய கட்சிகளைத் தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.இப்பொழுது தமிழ்த் தரப்பு எனப்படுவது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்பதனை அவர்கள் அழுத்தமாக டில்லியிலும் ஐநாவிலும் கூறத்தொடங்கி விட்டார்கள். உள்ளூராட்சி சபைகளிலும் அந்த வெற்றியை அவர்கள் ஸ்தாபிப்பார்களாக இருந்தால் அதாவது ஊரும் அவர்களிடம் போய்விட்டால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக; தேசிய இனமாகக் கருதவில்லை என்று கூறத்தொடங்கி விடுவார்கள்.எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் மிகத்தெளிவான முடிவை எடுக்க வேண்டும். தாங்கள் ஒரு தேசமா?இல்லையா? என்று. அது உள்ளூர்த் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு தேர்தல்தான்.உள்ளூர் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு தேர்தல்தான்.அதைவிட ஆழமான பொருளில் அது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலின் ஒரு பகுதி.

https://www.nillanthan.com/7336/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.