Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் கடும் தாக்குதலுடன் முடக்கம்; போசணை குறைபாடு 80% உச்சம்

- போரை நிறுத்த நெதன்யாகு அரசுக்கு இராணுவத்தில் இருந்து அழுத்தம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேல் ரிசர்வ் படையினரும் அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

காசாவில் இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வருகிறது. இந்த முற்றுகை 60 நாட்களை கடந்திருக்கும் சூழலில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் போசணை குறைபாடு தொடர்பாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 80 வீதம் அதிகரித்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வயது வரையான குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களில் 92 வீதமானவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச போசணை கிடைப்பதில்லை என்றும் காசா மக்கள் தொகையில் 65 வீதமானவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவுக்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகள் செல்வது அனுமதிக்கப்படாத சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு அங்கு எஞ்சியுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் தொண்டு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் செல்வதை தடுத்து வருகின்றபோதும் அவைகளை வழங்குவதற்கு தயாரான நிலையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா எல்லையில் உதவிகளுடன் 3,000 டிரக் வண்டிகள் காத்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

முற்றுகைக்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது நடத்தும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (01) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக கான் யூனிஸின் கிழக்கு பகுதியில் தமது பயிர் நிலத்திற்கு செல்லும் மூவர் இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் இவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் இளம் பெண் ஒருவர் தனது காயத்தினால் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸின் தெற்காக அல் மனாரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய செல் தாக்குதல் ஒன்றில் மற்றொருவர் கொல்லப்பட்டிருப்பதோடு டெயிர் அல் பலாஹ் நகரின் கிழக்காக வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு இவ்வாறாக கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் குறைந்தது 2,308 பேர் கொல்லப்பட்டு மேலும் 5,973 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 595 சிறுவர்கள் மற்றும் 308 பெண்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான பலஸ்தீன நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,400ஐ தாண்டியுள்ளது.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த முயற்சிகளும் முன்னேற்றம் காணாத நிலையில், இஸ்ரேல் போரை தொடர்வதில் உறுதியாக உள்ளது. எவ்வாறாயினும் அண்மைய வாரங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் கையொப்பம் இட்ட கடிதங்களில் போரை நிறுத்தி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பிரதமர் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் மோசமான நிலைக்கு சென்றுவருவதாகவே எம்மால் முடிவுக்கு வர முடிகிறது’ என்று இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் முன்னாள் தலைவர் டன்னி யடோம் குறிப்பிட்டுள்ளார்.

‘நெதன்யாகுவுக்கு அதிக தொந்தரவு தருவது அவரது சொந்த நலன்கள் என்பது எமக்கு தெரியும். முன்னுரிமை அடிப்படையில் பார்த்தால் பணயக்கைதிகள் அன்றி அவரது நலன்கள் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மையை தக்கவைப்பதே முதலிடத்தில் உள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டியதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட முதல் கட்ட போர் நிறுத்தத்தில் 30க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்து 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு இவர்களில் 24 பேர் தொடருந்தும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் இராணுவத்தின் அனைத்து தரப்புகளிடம் இருந்தும் கடிதங்கள் வருவதோடு இவ்வாறு 12,000க்கும் அதிகமான கடிதங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போர் ஆரம்பித்த தொடக்கத்தில் அதில் பங்கேற்க இஸ்ரேல் இராணுவ ரிசர்வ் படைகள் ஆர்வம் காட்டியபோதும் அவர்களில் பங்கேற்பு தற்போது 50–60 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ ஜெரூசலத்தின் அருகாமை பகுதி உட்பட பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. தீயை கட்டுப்பாடுத்த 155 தீயணைப்பு படைப் பிரிவுகள் செயற்பட்டு வருவதாக ‘தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ ஜெரூசலம் நகரை நெருங்கி இருக்கும் நிலையில் ‘நாடு அவசர நிலை’ ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தத் தீ கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவு மோசமடைந்திருப்பதாக தீயணைப்புப் படை தலைவர் எயால் கஸ்பி தெரிவித்துள்ளார். தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக இஸ்ரேலிய தீ மற்றும் மீட்பு சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2025/05/02/breaking-news/127256/காசாவில்-கடும்-தாக்குதலு/#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.