Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சித் தேர்தல்  வாக்களிப்பும் வாக்குகள் எண்ணப்படும் முறையும்!

ந.ஜெயகாந்தன்

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.  இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர்.  அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு கிடைத்த வாக்கு விகித அடிப்படையில் ஆசனங்கள் பகிரப்பட்டு விருப்பு வாக்கினை அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஆனால்,  உள்ளூராட்சித் தேர்தல் அவ்வாறானது அல்ல.  உள்ளூராட்சி பிரிவு பல வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு கலப்பு விகிதாசார முறையிலேயே நடத்தப்படுகின்றது.  அதேபோன்று வாக்குச் சீட்டும் மற்றைய தேர்தல் வாக்குச் சீட்டுகளை போலல்லாது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் சுயேச்சைக் குழுவின் இலக்கம் மற்றும் சின்னம் ஆகியவற்றை கொண்டதாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்குச் சீட்டுகள் வித்தியாசப்படும்.

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் விகிதாசார முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்தப்பட்ட போதும், 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கமைய அதன் பின்னர் அந்தத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடத்தப்படுகிறது.

கலப்பு விகிதாசார முறை என்றால் என்ன?

ஏதேனும் ஒரு உள்ளூர் அதிகார சபையில் வட்டார மட்டத்திலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை கலப்பு விகிதாசார முறையாகும். குறிப்பாக வட்டார மட்டத்தில் 60 வீதமும் விகிதாசார அடிப்படையில் 40 வீதமும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

வட்டாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை எவ்வாறு கணிக்கப்படும்?

சனத்தொகை மற்றும் நிலத்தின் அளவு என்பன தொடர்பாகவும்,  இன ரீதியான அடிப்படையிலும் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வட்டாரங்களும் உறுப்பினர் எண்ணிக்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கமைய நாடு முழுவதும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் அடங்கலாக 341 உள்ளூராட்சி சபைகளுக்காக 4919 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வட்டாரங்களில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4750 வட்டாரங்களும், இரண்டு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 165 வட்டாரங்களும், மூன்று உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4 வட்டாரங்களும் உள்ளன. இந்த வட்டாரங்களில் இருந்து மொத்தமாக 5092 உறுப்பினர்கள் (60 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

இதேவேளை குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைக்கு சகல வட்டாரங்களிலும் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகுதி 3264 உறுப்பினர்கள் (40 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

எனினும் இம்முறை கல்முனை மாநகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்காகவே மே 6 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

வாக்குச் சீட்டின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்?

தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பெயர்களும் சிங்கள மொழி அகராதியின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு வாக்குச் சீட்டில் மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  அதற்கு கீழே தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட இலக்கங்களின் பிரகாரம் சுயேச்சைக் குழுக்களது இலக்கங்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு முன்பாகவும், சுயேச்சைக் குழுக்களுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் அச்சிடப்படுவதுடன், அச்சின்னங்களுக்கு முன்பாக புள்ளடி இடுவதற்கான வெற்றுக்கூடும் காணப்படும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வட்டார மட்டத்திலும் விகிதாசார மட்டத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையின் கீழ் கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர்களினதும் பெயர்ப்பட்டியல் வாக்காளர்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது தவிர குறித்த அட்டவணையில் உள்ளபடி கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர் பெயர்ப்பட்டியல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு குறித்த வாக்களிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும். இதன் பிரகாரம் வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்படாவிட்டாலும், தமது வாக்கினை அளிக்கவிருக்கும் கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர் தொடர்பாகவும், மேற்குறிப்பிட்ட அட்டவணையின் மூலம் தாம் விரும்பிய வேட்பாளர் யாரென்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.

இதன்படி தமக்குரிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு தேவையான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்த பின்னர், வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் கட்சிகளின் பெயர் அல்லது, சுயேச்சைக் குழுவுக்கு முன்பாக குறிப்பிடப்பட்டுள்ள சின்னத்திற்கு முன்பாக காணப்படும் வெற்றுக்கூண்டில் புள்ளடி இட்டு வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

வாக்கெண்ணும் நிலையங்கள் எவ்வாறு அமைக்கப்படும்?

ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமிடத்து, அதே வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணல் நடத்தப்படும். ஒரு வட்டாரத்தினுள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருக்குமிடத்து, தெரிவத்தாட்சி அலுவலரால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு வாக்களிப்பு நிலையத்திலோ, அல்லது வாக்களிப்பு நிலையங்களிலோ வாக்குகள் எண்ணப்படும்.

உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு?

இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படும் போது முக்கியமாக நான்கு விடயங்கள் கவனம் செலுத்தப்படும்.

இதன்படி ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் மற்றும் பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் என்பனவாகும்.

ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர்  குறித்த வட்டாரத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோன்று பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.

இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.

ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும்.

பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

இதற்கு ஏற்றால் போன்று ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பாளர் பட்டியல்கள் வட்டார அடிப்படையிலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அமைக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கும்.

 இந்நிலையில் வட்டார முறையில் இந்தத் தேர்தல் நடைபெற்றமையினால் தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது கேட்டு விலகினால் அல்லது வேறேதேனும் காரணத்தினால் வெற்றிடம் ஏற்படுமிடத்து இடைத்தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்பதுடன், வெற்றிடத்திற்காக ஒருவரைப் பெயர் குறித்து நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் செயலாளர் கொண்டுள்ளார். இதன்படி அந்த இடைவெளி நிரப்பப்படும்.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317505

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.