Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

May 25, 2025

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள்  தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக  நடத்தப்படாமல் இருக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது  என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எதிர்க்கட்சிகளும் கூட மாகாணசபை தேர்தல்களை விரைவில் சந்திப்பதற்கு விரும்பப் போவதில்லை. அதனால், அந்தத் தேர்தல்களை  நடத்துமாறு தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு நெருக்குதல் வரப்போவதில்லை. 

அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தி மாகாணங்களின் நிருவாகத்தை  மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இந்திய தலைவர்கள் கொழும்பு வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுடனான சந்திப்புகளில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு  நெருக்குதலை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதை வழக்கமாகக்  கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  அரசாங்கத்துடன் நேரடியாக அதைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வருட இறுதியில் புதுடில்லிக்கு  மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன்  மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அதே வேண்டுகோளை கடந்த ஏப்ரலில் கொழும்புக்கு விஜயம் செய்த வேளையிலும்  முன்வைத்தார். அவருக்கு  எந்த பதிலையும் வெளிப்படையாக கூறாத ஜனாதிபதி திசாநாயக்க மாகாணசபை தேர்தல்கள் குறித்து தற்போது எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இப்போது பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள்  தொடர்பில் தனது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை தங்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடக் கூடாது என்பதில் மாத்திரமே அவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது. 

இத்தகைய ஒரு பின்புலத்தில், தென்னிலங்கையை சேர்ந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு  முன்னாள் இராஜதந்திரியும் மாகாணசபைகள் குறித்து அண்மையில் வெளியிட்ட  கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. 

மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று இடையறாது வலியுறுத்திவரும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா மக்களினால் தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளை வலுப்படுத்துவதன் மூலமாக அதிகாரப் பகிர்வுக்கு புத்துயிரளிக்க வேண்டும் என்றும் மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றும்  எழுதியிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதை போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான இன்னொரு குழுவை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்க வேண்டும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. உண்மையில் இந்தக் கோரிக்கை தமிழ்க் கட்சிகளிடம் இருந்தே வந்திருக்க வேண்டியதாகும். 

தற்போது இந்திய வெளியுறவுச் செயலாளராக இருக்கும் விக்ரம் மிஸ்றி பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த நாட்களில் அவருடனான சந்திப்பு ஒன்றின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் ஆளுநர்களுக்கு இருக்கும் அளவுகடந்த  அதிகாரங்கள் காரணமாக மாகாண முதலமைச்சர்களினால் பயனுறுதியுடைய முறையில் செயற்பட முடியவில்லை என்றும் மாகாணசபைள் மூலமாக  தமிழ் மக்களால்  எந்த பயனையும் அடைய முடியாமல் இருக்கிறது என்றும் கூறினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ஆளுநர்களின் அதிகாரங்களில் கணிசமானவற்றை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல்வாதிகள்  முன்வைத்து அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனறும் அவர் கேட்டார். 

ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டியதன் அவசியத்தை கலாநிதி ஜெகான் பெரேரா வலியுறுத்தியிருக்கும் நிலையில், விக்ரம் மிஸ்றி கொழும்பில்  அன்று தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது.

 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டு விட்ட தமிழ்க் கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை பாராளுமன்றத்தின் மூலமாக அகற்றி விரைவாக அந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கோருவதே தற்போதைய தருணத்தில் விவேகமான செயலாக இருக்கும் என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கூறியிருக்கிறார். 

அந்த கோரிக்கைக்கு தென்னிலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் புதிதாக தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளுக்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்துக்கும்  இடையிலானதாகவே இருக்க முடியும் என்றும் அவர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை சர்வகட்சி வட்டமேசை மகாநாடு ஒன்றில் சமர்ப்பித்து நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது தயானின் கருத்தாக இருக்கிறது. 

அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு தொடர்பாக முடிவற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது சிங்கள அரசியல் அதிகார வர்க்கம் கவனத்தை திசைதிருப்புவதற்கு காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் தயான் அத்தகைய ஒரு பொறியில் தமிழ்க் கட்சிகள் விழப்போகின்றனவா என்று  கேள்வியெழுப்புகிறார். 

தேசிய இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வைக் கண்டு அதில் இருந்து நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்பது குறித்து பேசிவரும் தமிழ்க்கட்சிகள் அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் குறித்து சிந்திப்பதில்லை.  சாத்தியமாகக்கூடியதும் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் ஆதரவைப் பெறக்கூடியதுமான  இடைக்கால ஏற்பாடுகள் குறித்து தமிழ்க்கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்களின் கருத்துக்கள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட  பிறகு நிறைவடையாமல் இருக்கும் எல்லை நிர்ணயச் செயன்முறைகள் மாகாணசபை தேர்தல்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவுசெய்யப்பட்டால் அல்லது முழுமையாக விகிதார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தை திருத்தினால் மாத்திரமே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். 

அதை ஆட்சேபித்து  அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேரா தற்போதைய சட்டக்கட்டமைப்பை ஆணைக்குழுவின் தலைவர் தவறாக வியாக்கியானம் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவு செய்யப்படாவிட்டாலும் கூட மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் கிடையாது என்று பெரேரா வாதாடுகிறார். 

சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது எல்லை நிர்ணயச் செயன்முறையை நிறைவுசெய்வதற்கு பாராளுமன்றம் தவறுவதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் செல்லுபடியற்றதாகப் போய்விடுவதில்லை என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் பெரேரா, புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் கைச்சாத்திடும் வரை, நடைமுறையில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகக் கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் ஆணைக்குழு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசின் எந்த நிறுவனத்திடமிருந்தும் அனுமதியைப் பெறவேண்டிய தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது   இத்தகைய கோரிக்கைகளும் கருத்துக்களும்  வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும். 

மாகாணசபைகளின் மூலமாகவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவோ தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் என்று இந்த கட்டுரையாளர் நம்புவதாக எவரும் கருதவேண்டியதில்லை. ஆனால், போரின் முடிவுக்கு பிறகு 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்கள் பெருமளவக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருப்பதால் அவர்களின் பிரச்சினைகளை கையாளுவதற்கான அணுகுமுறையை எங்கிருந்து தொடங்குவது என்ற தெளிவு தமிழ் அரசியல் சமுதாயத்திடம் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. 

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க்கட்சிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவிட்டதால் நிலைவரத்தில் எந்த மாற்றமும்  வந்துவிடவில்லை. தங்களுக்கு கிடைத்த வாக்குகள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியத்தை கைவிடவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாக தமிழ் அரசியல்வாதிகள் திருப்தியடைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அவர்களால் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னமும் வரமுடியவில்லை. தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மாத்திரம்தான் அவர்களால் ஒன்றுபட்டு நிற்கமுடிந்தது.

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபை தேர்தலில் தனது கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அது தொடர்பாக ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் செய்தியார்கள் கேட்டபோது மாகாணசபை தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாமல் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது அவசியமற்றது என்று அவர் பதிலளித்தார். மாகாணசபை தேர்தலைப் பற்றிக்கூட பேச வேண்டாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொணடார். 

யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த வாரம் நேர்காணல் ஒன்றை வழங்கிய சிறீதரனிடமும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து  சுமந்திரன் வெளியிட்ட விருப்பம் தொடர்பாக  கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்  சுமந்திரன் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்ததுடன் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். எல்லை நிர்ணயம் தொடர்பிலான  சட்ட இழுபறியை அதற்கு சிறீதரன் ஒரு காரணமாகவும் சொன்னார்.

முதலமைச்சராக யார் போட்டியிடுவது என்பது தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். ஒரு அரசியல்வாதி என்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சுமந்திரன் விரும்புவதிலும் தவறில்லை. தமிழரசு கட்சி தற்போது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவருக்கு எதிராக அனேகமாக சகல தமிழ்க்கட்சிகளும் செய்த படுமோசமான  பிரசாரங்களுக்கு மத்தியிலும்  வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் மக்கள் தமிழரசு கட்சிக்கே கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால், அவர் மீதான வெறுப்புப் பிரசாரங்களை தமிழ் மக்கள் தற்போது எவ்வாறு நோக்குகிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற நம்பிக்கையை சுமந்திரனுக்கு கொடுத்திருக்கலாம். அது வேறு விடயம்.

ஆனால், சிவஞானமும் சிறீதரனும் செய்தியாளர்கள்  சுமந்திரன் தொடர்பாக  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறுவதை விடுத்து முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினைக்கு அப்பால் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்போம் என்றுதான் கூறியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் பக்குவத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட ஆளுமை மோதல்களுக்கு அப்பால் மக்களின் நலன்களில் அக்கறை காட்டும் மனோபாவம் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது. 

தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்கள் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள்  இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தல்களே வேண்டாம் என்றுகூட  எமது அரசியல்வாதிகள் கூறிவிடுவார்கள் என்று அல்லவா எண்ண வேண்டியிருக்கிறது.

https://arangamnews.com/?p=12044

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.