Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!

June 8, 2025 9:08 am

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!

அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளும் உண்டு.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களும் அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு அவசியமில்லை என ஜனாதிபதி அநுர கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடுதல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல் மாத்திரமே தற்போதைய திட்டமாகவுள்ளது.

இப்பின்புலத்தில் புதிய யாப்பு தயாரிப்பு விஷயத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புக்கு அவர் ஒத்தழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும், நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார சக உறுப்பினர் ஒருவரிடம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எந்த அடிப்படையில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று நீதியமைச்சா் எதுவும் கூறவில்லை. ஆனால், சத்தியலிங்கம் மிக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்பின்னணியில்தான் உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் கஜேந்திரகுமார் அணியுடன் கூட்டு சேராமல், ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்வதற்கான காய் நகர்த்தல் நடத்திருக்கிறது போல் தெரிகிறது.

அதேநேரம், மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரமே ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஈபிடிபியை ஆட்சி அமைக்குமாறு வலியுறுத்துமாறு, மகிந்த ராஜபக்ச மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும், அத் தகவலை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்த பத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் எடுத்துச் சொன்னதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் ஏற்கனவே நல்ல உறவில் இருக்கும் ஒருவர். அதன் காரண – காரியமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதை மகிந்த ராஜபக்ச, கொழும்பு மைய அரசியல் நோக்கில் விரும்பியிருக்கலாம்.

சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களைக் கையாளும் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவான உண்மை.

அந்த அடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க – சுமந்திரன் ஆகியோர் ஊடான தொடர்புகள் – காய்நகர்த்தல்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக தமக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லாமலில்லை.

கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்களுக்குரிய சட்ட உதவிகளை சுமந்திரன் கடந்த காலங்களிலும் மேற்கொண்டிருந்தார் என்ற பின்னணியில் இந்த நகர்வையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் மேற்கொண்ட முயற்சி, எந்தளவு தூரம் நிலையாக இருக்கும் என்ற கேள்விகள் உண்டு.

ஆனாலும், 13 பற்றிய பேச்சுக்கள் தற்போதைக்கு எழக் கூடிய நிலைமை இல்லாத ஒரு பின்னணியில், முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை, புதிதாக அமைத்த கூட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. குறிப்பாக இன அழிப்பு பற்றிய சர்வதேச நீதிக்குரிய ஏற்பாடுகளையும் துரிதமாகக் கையாள வேண்டிய காலம் இது.

ஆகவே, கஜேந்திரகுமாரின் அடுத்த கட்ட செயல்பாடு இந்த அடிப்படையில் அமையுமா அல்லது வெறுமனே உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஒரு கூட்டா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஏனெனில், சங்கு அணி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால செயற்பாடுகள் கொழும்பு மைய அரசியலுக்குள் பழக்கப்பட்டவை. 13 இல்லாவிட்டாலும், ஒற்றையாட்சியை ஏற்கும் பண்பு சங்கு அணியில் சிலரிடம் தொடர்ச்சியாக நிலவுகின்றது.

இப் பின்புலத்தில் மிக இறுக்கமான ஏற்க முடியாத மனக் கசப்புகளோடுதான் கஜேந்திரகுமார், சங்கு அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் கசப்புகள் – சகிப்புத் தன்மைகள் – நெருக்கடிகள் – கடும் விமர்சனங்கள் போன்றவற்றை கஜேந்திரகுமார் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமை ஒன்றிடம் இருக்க வேண்டிய பண்பு இதுதான். அதேநேரம், யாழ்ப்பாணத்தைக் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற இயங்கு நிலைக்கு கஜேந்திரகுமார் புத்துயிர் கொடுக்கவும் வேண்டும்.

சங்கு அணியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலத்துக்குப் பொருத்தம் என்று கூறினாலும், ”சுயநிர்ணய உரிமை” – ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” என்ற பிரதான இரு உள்ளடக்கங்கள், வெறுமனே பேச்சுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றதா என்ற கேள்விகள் இல்லாமலில்லை.

ஆகவே, இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அல்லது மேலும் செய்து காண்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உரியது. அது இலகுவான காரியம் அல்ல.

ஆனாலும், 2009 இற்குப் பின்னர், அதாவது கடந்த பதினைந்து வருடங்களின் பின்னரான சூழலில், தேர்தல் அரசியலை இடது கையாளும் விடுதலைச் செயற்பாட்டு அரசியலை வலது கையாளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உண்டு.

ஏனெனில், புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அடுத்த ஆண்டு முற்றாக நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு புள்ளியில் நின்று சர்வதேச அரங்கில் கையாண்ட பயன்கள் தான் இவை.

கட்சி அரசியலைக் கடந்து தமிழர் விவகாரத்தைக் கையாள ”வெளியுறவுக் கொள்கை” – ”சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களையும் சிங்கள தலைவர்கள் வகுத்திருக்கின்றனர். அவர்களின் பிரதான வகிபாகம் அதுதான்.

ஆகவே அரசு அற்ற சமூகம் என்ற நிலையில், ”வலுவான கட்டமைப்புடன் கூடிய வெளியுறவுக் கொள்கை” – சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களைத் தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும்.

இப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள அணிக்கும் உண்டு.

கடந்த கால கொழும்பு மைய அரசியலை கைவிட்டு, அதாவது இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட அரசியல் வழி முறைகளில் கவனம் செலுத்தாமல், 1985 ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டமைப்புக்கு வழி சமைக்க வேண்டும்.

பூட்டான் (Bhutan) தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சில் விடுதலைப் புலிகள், ஈபிஆர்எல்எப். புளொட் ரெலோ உள்ளிட்ட இயக்கங்கள் பங்குபற்றியிருந்தன. அங்கு ஏற்பட்ட இணக்கத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது.

ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகத் தங்கள் நிலைப்பபாட்டை அறிவிக்க வேண்டும்.

அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்துள்ள பின்னணியில், இச் செயற்பாட்டை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு.

அ.நிக்ஸன்-

https://oruvan.com/sumanthiran-will-cooperate-with-the-new-constitution/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.