Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதயங்களின் மொழி

--------------------------------

large.HeartWithBlocks.jpg

அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. 

அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. என்னை விட பத்து வயதுகள் குறைந்த என்னுடன் வேலை செய்த நண்பன் ஒருவனுக்கு சில வருடங்களின் முன் திடீரென்று இப்படி ஆகியது. அவனுக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் என்றே சொன்னார்கள், ஆனால் அவனுக்கும் நான்கு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. நண்பனை அடுத்த அடுத்த நாட்களிலேயே மருத்துவமனையில் போய் பார்த்தேன். 'இனி என்ன.......... எல்லாமே முடிந்து விட்டது............ எவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..............' என்ற கவலையுடன் சொல்லிக் கொண்டே தயிர் போல ஏதோ ஒன்றை சாப்பிட முயன்று கொண்டிருந்தான்.

அவனிடம் திட்டங்களுக்கு என்றும் குறைவே இருந்ததில்லை. ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு இருக்கும் திட்டங்கள் அளவுக்கு அவனிடம் திட்டங்கள் எப்போதும் இருக்கும். குடும்பம், குழந்தைகள், வேலை, நண்பர்கள்,சமூகம் இவற்றை விட இன்னும் சிலவும் இருக்கும். உதாரணமாக, ஒரு தடவை ஒரு குறும்படம் எடுப்பதாகச் சொல்லியிருந்தான். வேலை செய்யும் இடத்தில் பலரும் அது ஒரு நல்ல திட்டம் என்றனர். நானும், இன்னொரு நண்பனும் சிரித்துவிட்டோம். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு............' என்பது போல ஒரு தலைப்பைச் சொன்னான். சிரித்திருக்க கூடாது தான், ஆனால் தலைப்பை அவன் சொன்னவுடன் அதுவாக களுக்கென்று வெளியே வந்துவிட்டது. அவன் இந்த சினிமாத் துறையில் ஒரு நாற்பது வருடங்கள் பின்னுக்கு நின்று கொண்டிருந்தான். பின்னர் கதையும் முடிவாகியது. சிரித்த எங்கள் இருவருக்கும் எந்தப் பாத்திரங்களும் கொடுக்கப்படவில்லை.

அவனுக்கு இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது என்றால், தமிழ்ச்சினிமாவின் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராலேயே அவனுக்கு இந்த ஆர்வம் வந்திருந்தது. அந்த இயக்குனரும் நண்பனும் தமிழ்நாட்டில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இயக்குனர் நண்பனை விட  ஓரிரு வயதுகளே அதிகமானவர், ஒன்றாகவே பாடசாலை போய் வந்தவர்கள். 'அவனே இயக்குனராகி கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றான். நான் ஆகக் கூடாதா...........................' என்ற உந்துதலே ஒரு குறும்படம் எடுக்கும் நிலைக்கு நண்பனைத் தள்ளியது. இந்த எண்ணத்திற்கும், கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட நண்பனின் நாலாவது அடைப்புக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஒரு நாட்டின் பல திட்டங்கள் போலவே அவனது குறும்படம் எடுக்கு திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் அவன் வேறு சில புதிய திட்டங்களுடன் இருக்கும் போதே இப்படி ஆகியது.

அண்ணன் இப்படியானவர் இல்லை. அண்ணனும் நானும் இருபது, இருபத்தைந்து வருடங்களாக உருண்டு பிரண்டு கொண்டிருக்கின்றோம். அந்த நாட்களில் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் சிலர் அருகிலிருக்கும் இடமொன்றில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு எவரையும் சேர்ப்பதில்லை. ஆனால் அண்ணனையும், என்னையும் சேர்த்தார்கள். எப்படி எங்களைச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. அங்கு விளையாடும் போது இருவருக்கும் ஒரே பெயர் தான். அண்ணனின் பெயரில் ஒரு ஆங்கிலத்தன்மை இருப்பதால், அந்தப் பெயரே இருவருக்கும் என்றாகியது. பின்னர் இந்தியர்கள் மட்டும் விளையாடும் ஒரு இடத்திற்கும் போனோம். அவர்களும் எங்களைச் சேர்த்தார்கள். எங்கள் இருவரையும் அண்ணன் - தம்பி என்றே அவர்கள் இன்றும் சொல்கின்றனர். 

அந்த வியட்நாமியர்கள் எங்களை இந்தியர்களுடன் விளையாடக்கூடாது என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன காரணம் அந்த இந்தியர்களுக்கு சுத்தமாக விளையாடவே தெரியாது, அவர்களுடன் விளையாடினால் நாங்கள் உருப்படவே மாட்டோம் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும் இலங்கையர்கள் என்று அந்த வியட்நாமியர்களுக்கு தெரியும். அவர்கள் இலங்கையில் இருக்கும் மதங்கள் பற்றியும், மொழிகள் பற்றியும், குறிப்பாக பாளி மொழி பற்றியும் என்னிடம் தகவல்களை கேட்டறிந்து இருக்கின்றார்கள். பா-ளி என்ற இரண்டு எழுத்துகளை தவிர வேறு எதுவும் தெரியாத நான் சமஸ்கிருதத்தில் இருப்பவை எல்லாவற்றையும் பாளியில் இருப்பவை என்று மாற்றி ஒரு விளையாட்டுக்காக சொன்னேன். பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவர் சொன்னது அப்படியே இதயத்தில் தங்கி நிற்கின்றது.

பின்னர் நாங்களே ஒன்றை ஆரம்பித்து, எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் சேர்த்து விளையாட ஆரம்பித்தோம். பல நாட்டவர்கள், பல இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடினோம். ஒரு தடவை இரு பெண் பிள்ளைகள் வந்தார்கள். ஏதோ கல்லூரி விடுமுறைக் காலம் போல. நாங்கள் நாலைந்து பேர்கள் நின்றோம். அவர்கள் இருவரும் ஒரு பக்கமும், நாங்கள் மற்ற பக்கமும் என்றார்கள். அவர்களை இலகுவாக அடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு ஐந்து நிமிடங்களிலேயே நிலைமையின் தீவிரம் விளங்கியது. அந்த இரு பெண் பிள்ளைகளும் மனிதர்கள் இல்லை. எங்களை அடித்து துவைத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். முடிந்த பின், 'நீங்கள் நல்லாவே விளையாடுகின்றீர்கள்.............' என்று அவர்கள் சொன்ன போது வலி அதிகமாக இருந்தது. அன்று கூட முதலாவது அடைப்பு வந்திருக்கலாம்.

எல்லாம் சரி, இப்படி வருடம் முழுவதும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் இதயத்தில் அடைப்புகள் வருமா என்ற கேள்வி இங்கே வரக்கூடும். இன்னும் சில காரணிகளும் இருக்கின்றன என்பார்கள் மருத்துவர்கள். அயலவர் ஒருவர், மருத்துவர்கள் சொல்லும் எக் காரணிகளும் இல்லாதவர். மிகவும் அமைதியானவர், பக்தியாவனர், ஒழுக்கமானவர். சில மாதங்களின் முன் அவருக்கும் திடீரென்று நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு, மூன்று அடைப்புகள் இருப்பதாக அறிந்து, உடனேயே சத்திர சிகிச்சை செய்தனர். அவருக்கும் உள்ளே நான்கு அடைப்புகள் இருந்தன. அவருடைய தீராத கவலை அவருக்கு இது எப்படி வந்தது என்பதே. அந்த அதிர்ச்சியில் இருந்து, அவருக்கு இது எப்படி வந்தது என்னும் அந்த அதிர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாகவே மீண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

மிகவும் நெருக்கமான இன்னொருவர். அவரை ஒரு பூரணமான மனிதன் என்றே சொல்லவேண்டும். பூரணத்திற்கும் ஒரு நாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. பூரணம் நம்பவே இல்லை. அவர் தமிழ்ச்சினிமா அதிகமாக பார்க்கின்றவரும் கூட. அதனால் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கை வேறு யாருடையதோ, தன்னுடைய பெயரை தவறுதலாகப் போட்டு விட்டார்கள் என்று அடம்பிடித்தார். அதையே எனக்கும் சொன்னார். மருத்துவர்கள் ஆங்கிலேயர்கள், இந்தச் சினிமாக் கதையை பொருட்படுத்தாமல், ஆளைப் படுக்க வைத்து வெட்டி ஒட்டினார்கள்.

'எனக்கும் இது வந்து விட்டதோ..............' என்ற அதிர்ச்சி பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது போல. பூச்சியத்துக்கும் வரும், பூரணத்துக்கும் வரும் என்று இருந்தால், அடைப்புகள் வந்த பின் வரப் போகின்ற அதிர்ச்சியை குறைக்கலாம். 'எல்லாமே முடிந்து விட்டது........' என்று ஒரேயடியாக ஒதுங்கி வாழவும் தேவையில்லை என்று நினைக்கின்றேன். மீண்டு வந்துவிடலாம்.

ஒரு தடவை இந்தியா போயிருந்த போது என்னுடன் ஊரில் வகுப்பில் படித்த ஒருவர் வந்து கதைத்துக் கொண்டிருந்தார். திரும்பி எப்போது போகின்றீர்கள் என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்லும் முன்பு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை எதேச்சையாகப் பார்த்தேன். நீங்கள் வெளிநாடுகளில் நேரத்துடன் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார் அவர். அவர் சொன்னதும் சரியே என்று தோன்றியது. அல்லாவிட்டால் நான் ஏன் அந்தக் கடிகாரத்தைப் பார்த்திருக்கவேண்டும். ஆனால் சில மாதங்களில் அவர் மாரடைப்பால் இறந்து போனார் என்ற செய்தி கிடைத்தது. மிகவும் கவலையாகப் போனது. இவை என்னவென்று இன்றும் புரியவில்லை. 

அண்ணனுக்கு இந்த ஆறுதல் வார்த்தைகள் தேவையில்லை. அவர் தான் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லுகின்றார். சிகிச்சையின் முன் தலைமை சத்திர சிகிச்சை நிபுணர் சிலவற்றை சாதாரணமாக, கதையோடு கதையாக சொல்வது போல சொல்லியிருக்கின்றார். சத்திரசிகிச்சையின் முன் சுவாசப்பைகளை செயலிழக்க செய்வோம், அவை சிகிச்சையின் பின் மீண்டும் செயல்படும் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கின்றார். இதையே தான் இதயத்துக்கும் சொல்லியிருக்கின்றார். ஆனால் அந்த நிபுணர் இவற்றை சொன்ன விதம் அரவமற்றது, தீணடாதது. இவற்றை தெளிவாக தனித்தனியாக நிற்பாட்டி நிற்பாட்டிச் சொன்னால், உங்களின் சிகிச்சையும் நீங்களும் என்று விட்டுவிட்டு ஓடுபவர்களும் இருப்பார்கள்.

'அலையும் நீரே........' என்பார்கள். அதாவது வாழ்க்கையில் எல்லாமே அதே வாழ்க்கை தான், அலை கூட அதே நீர் தான் என்பது போல. இப்படி சில தத்துவத்துங்களுடன் தத்துப்பித்தென்று இருந்தாலும், அந்த தலைமை சத்திர சிகிச்சை நிபுணரின் கடைசி நேர வார்த்தைகள் இடையிடயே நினைவில் வந்து துணுக்குற வைக்கின்றன. என்றோ ஒரு நாள் எனக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாக அவர்கள் சொல்லக்கூடும். 'நான்காகக் கூட இருக்கும்..................' என்று நானும் ஒன்றை கதையோடு கதையாக அந்த நிபுணர்களுக்கு சொல்லுவதாக இருக்கின்றேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2025 at 11:30, ரசோதரன் said:

மிகவும் அமைதியானவர், பக்தியாவனர், ஒழுக்கமானவர். சில மாதங்களின் முன் அவருக்கும் திடீரென்று நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு, மூன்று அடைப்புகள் இருப்பதாக அறிந்து, உடனேயே சத்திர சிகிச்சை செய்தனர்

நாலைந்து வருடங்களுக்கு முதல் எமது வீதியால் ஒர் பெண் காலை மாலை என வோக்கிங் போவார் ..அவர்

ஒரு நாள் மாரடைப்பு காரணமாக் இறந்துவிட்டார் 50 வயசு தான் இருக்கும்...சிலர் சும்மா இருப்பினம் 80 வயசுக்கு மேல் வாழ்வினம் எல்லாம் அவன்.....செயல் என சொல்லி நிம்மதியடைய வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

penetration test மாதிரி முதல் மூன்றைத் திறந்தால் தான் மற்றது தெரிய வரும் போல. எங்கடை batch இலையே 5,6 பேருக்கு மாரடைப்பு வந்திட்டுது. சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து புரிந்தது நிலையாமை...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.