Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன்.

Puthukkudiyiruppu+hospital2.jpg


ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 

06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்திய சாலையின் நோயாளர் விடுதிகளில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் ஏற்கனவே காயமடைந்திருந்த பொதுமக்கள் 9 பேர் வைத்திய சாலைக்குள்ளேயே கொல்லப்பட்டதுடன், பலர் மீண்டும் பாரிய காயங்களுக்கு உள்ளாகினர். 

இந்தக் காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்று மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு தரைவழிப்பாதை நோயாளர் காவுவண்டிகளுக்காகத் திறந்து விட்டிருந்தது. பின்னர் அது ஓரிரு நாட்களில் மூடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் எனது ஊடகப்பணி தொடர்கிறது. 6 ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களையும் காயமடைந்தவர்களையும், சேதமடைந்த வைத்தியசாலையையும் 7ஆம் திகதி காலை ஒளிப்பதிவு செய்து, அங்கே காயமடைந்த மக்களிடம் சில செவ்விகளையும் எடுத்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு வெளியில் வைத்தியசாலை நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தேன். 

புதுக்குடியிருப்பு - முல்லை வீதி வெறிச்சோடி காணப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகிருந்த வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருக்கிறது. தொடர் எறிகணைத் தாக்குதல்களால் வேறு இடங்களில் காயமடையும் பொது மக்களை மீட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் ICRC தொண்டு நிறுவனப் பணியாளர்களும் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். 

இரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலால் வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட ICRC தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வைத்தியசாலைக்குள் நின்றுகொண்டிருக்கின்றனர். அந்த வேளை எனது நண்பன் அலைமகன் என்னிடம் ஒரு ஆவணத்தை தருவதற்காக வைத்தியசாலை நோக்கி என்னைத்தேடி வந்து என்னைச் சந்தித்து இருவரும் வைத்தியசாலை நுழைவாயிலில் கதைத்துக்கொண்டிருக்கிறோம். 

நீண்ட நாடகள் நாம் இருவரும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அன்று இருவரும் சந்தித்தவுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டு, அவர் நின்ற இடங்கள் பற்றி அவரிடம் விசாரிக்கிறேன். அவரும் அதற்கான விளக்கத்தைச் சொல்லிக்கொண்டு என்னுடைய பக்கம் எப்படி என விசாரித்தவர்களாக இருவரும் கதைத்துக் கொண்டிருக்கிறோம். 

அப்போது வைத்தியசாலைக்கு எதிராக இருந்த தீபன் மருந்தகத்திலிருந்து என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும் எனது நண்பனை இன்னொருவர் அழைக்கிறார். அப்போது அலைமகன் என்னிடத்தில், "அண்ண இவன் தீபன், என்னைக் கூப்பிடுறான். நாங்கள் இரண்டு பேரும் வித்தியானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தோம், கண்டு கனகாலம். கூப்பிடுறான் நான் ஒருக்கால் கதைச்சுப்போட்டு வாறன்," என்ற படி வைத்தியசலை நுழைவாயிலில் இருந்து வீதியைக் கடக்கிறான். 

நானும் சரி நீங்கள் கதைச்சுப்போட்டு வாங்கோ நான் உள்ளுக்குத்தான் நிற்பேன் என்றவாறு என்னுடைய ஒளிப்பதிவு கருவியை எடுத்து வெறிச்சோடிக்கிடக்கும் முல்லை - புதுக்குடியிருப்பு வீதியை Zoom செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறேன். வைத்தியசலை நுழைவயிலில் இருக்கின்ற மதவு மேலே ஏறி நின்று ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பளீர் என்ற சத்தம் வீதியின் மதவில் நின்ற என்னை தூக்கி எறிந்ததைப்போன்ற உணர்வு. என்ன நடந்தது என ஊகிக்க முன்னர் அடுத்த எறிகணையும் அதே இடத்தில் வீழ்ந்து வெடிக்கிறது. எங்கும் புகை மூட்டம். நான் வீதியின் அருகிருந்த கழிவு வாய்க்காலுக்குள் குந்திக்கொண்டிருக்கிறேன். வீழ்ந்து வெடித்த எறிகணை சிதறல்கள் அருகிலிருந்த மதில் சுவர்களிலும் மரங்களிலும் பட்டு என்மீது விழுகின்றன. 

ஒரு கணப்பொழுது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இரண்டு செல்களும் வீழ்ந்து வெடித்து மூன்று நிமிடங்கள் கழித்து எழுந்து பார்க்கிறேன். நான் நின்ற வீதியின் மறுபக்கத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பல வர்த்தகநிலையங்கள் புகை மூட்டத்துக்குள் எரிந்து கொண்டிருக்கின்றன. எறிகணை வீழ்ந்து வெடித்த இடத்திற்கும் நான் நின்றதற்குமான தூரம் 10 மீற்றருக்கும் குறைவு. எந்தச் சத்தமும் இல்லை எனது ஒளிப்பதிவுக்கருவி ஒளிப்பதிவு செய்தபடியே இருக்கிறது. கழிவுவாய்க்காலிற்குள் இருந்து எழுந்து வைத்தியசாலைக்குள் ஓடுகிறேன். வைத்தியசலைக்குள் நின்றவர்கள் எல்லோரும் தரையில் படுத்துக்கிடக்கின்றனர். அதையும் ஒளிப்படம் எடுக்கிறேன். 

அப்போது வைத்தியசாலைக்குள் தரைகளில் படுத்து பாதுகாப்புத் தேடிக்கொண்ட தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எழுந்து எறிகணை வீழ்ந்த திசை நோக்கி ஓடுகின்றனர். வைத்தியசாலை பரபரப்பாகிறது. சம்பவங்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்துகொண்டே இருக்கிறேன். 

ஒளிப்பதிவு செய்தபடி எறிகணை வீழ்ந்த இடத்துக்கு ஓடுகிறேன். தீபன் மருந்தகத்தில் இருந்த தீபனின் தாயார் படுகாயத்துடன் பாய் ஒன்றில் வைத்து தூக்கிவரப்படுகிறார். தீபனின் தந்தை கால் முறிந்தபடி கிடக்க அவரையும் தூக்கிவருகின்றனர். மருந்தகத்திற்கு அருகிலிருந்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் சிகை அலங்கரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் சிகை அலங்கரிக்க வந்த ஒருவரும் இறந்து கிடக்கின்றனர். 

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்து வைத்தியசாலையின் வாயிலில் வைத்து மருத்துவம் நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களையும் அடையாளம் காட்டி சிலர் கதைக்கின்றனர். இறந்த உடல்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்ததன் பின்னர் ஒருவர் எறிகணை வீழ்ந்து வெடித்த இடதிலிருந்து, "அண்ணை, இன்னொன்றும் கிடக்கு," என்றவாறு கட்டிட இடிபாடுகளை நீக்குகிறார். 

யாருடைய உடல் உன்று ஊகிக்க முடியாத அளவுக்கு அந்த உடல் சிதைந்து போயிருக்கிறது. அப்போது எல்லோரும் இது யார் என வினவுகின்றனர். நானும் எனது ஒளிப்பதிவு கருவியை நிறுத்திவிட்டு உடலின் அருகில் சென்று பார்க்கிறேன். அது நீண்ட நாட்களின் பின்னர் என்னை சந்திக்க வந்த எனது நண்பன் அலைமகன்.

அவன் இறுதியாக அணிந்திருந்த பச்சை நிற சேட் அவனை அடையாளப்படுத்தியது. அதன் பின்னர் அவனது உடலை வீட்டாருக்கு அனுப்பிவிட்டு நண்பனை பிரிந்த சோகத்தோடும் எனது வாழ் நாளில் மறக்கமுடியாத அனுபவத்தோடும் அலுவலகம் திரும்பினேன்.

நாங்கள் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டபோது எந்த வெளிநாட்டு ஊடகங்களும் முள்ளிவாய்க்காலை எட்டிப்பார்க்கக் கூட இல்லை.

***

குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மூலப்பதிவு:- திரு.சிவகரன். 

https://www.samaraivu.com/2018/05/blog-post_41.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.