Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது.

வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம்.

அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள்.

மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அருகில் பல குழந்தைகளின் அழுகுரல்கள். மாமா பசிக்குது என்று மருமகள் என்னிடம் கெஞ்சுகிறாள். அவளுக்கு அம்மா அப்பாவை காணவில்லை என்ற ஏக்கம் வேறு.

வாய் திறந்து பசிக்குது என்று கூற முடியாத மருமகன் என்னை கட்டிப்பிடித்தபடி தாயின் அரவணைப்புக்காக ஏங்கியபடி அழுது கொண்டிருக்கிறான். என்னிடமோ என் அம்மா அப்பாவிடமோ எதுவும் இல்லை.

பச்சைத்தண்ணீர் கூட தீர்ந்துவிட்ட நிலை. தலைநிமிர்த்த முடியவில்லை. முல்லைத்தீவுப்பகுதியில் இருந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் வரும் கந்தகக் குண்டுகளும் எறிகணைகளும் ரவைகளும் எந்த நிமிடமும் எங்களை உணவாக்க காத்திருக்கின்றன.

இருந்தும் சின்னப்பிள்ளைகள் பசியில் துடிப்பதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மருமக்களை அம்மாவிடமும் சித்தப்பாவின் தங்கையிடமும் கொடுத்துவிட்டு மைத்துனனும் நானும் குனிந்தபடி திசைதெரியாது நகர்கிறோம். கையில் இரண்டு போத்தல்கள். எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்பது மட்டுமே எமது ஏக்கம். மெதுவாக குனிந்தநிலையில் நகர்கிறோம்.

நிரையாக நாலைந்து பனைமரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. எதிரில் இருந்து வரும் குண்டுகளை தம்மில் தாங்கியபடி அரைகுறை உயிரில் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அருகில் ஒரு “ஐ பங்கர்” என்று சொல்லப்படும் சிறிய ஒரு பதுங்ககழி. அதற்குப் பக்கத்தில் பனைமரத்துக்கு கீழே இறுதியாக நான் பார்த்த அண்ணா ஒருவனினதோ அல்லது அக்காவினதோ ஒரு வோக்கி. அதை பற்றியபடி ஒரு கரம். அக்கரத்துக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நம்பக்கூடியதாக வரி உடையில் சிதறிய ஒரு உடல்.

அழுகை கண்ணை அடைக்கிறது. எப்படி வாழ்ந்தம்? எதற்கும் அஞ்சாமல் அண்ணனின் நிழலில் வாழ்ந்த நாம் இப்போது எல்லாத்துக்குமே அஞ்சும் பாவிகளாக ஊர்ந்து கொண்டிருக்கிறோமே என்ற சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைத்தது.

இரண்டு மூன்று மீட்டர்கள் நடந்த போது கால்கள் இடறின. கால்களுக்கிடையில் தட்டுப்பட்டது உயிரற்ற உடல்கள் என்பதை பார்க்காமலே உணரக்கூடியதாக நாற்றம் வந்தது.

அவற்றின் அருகே ஒரு உடுப்புப்பை கிழிந்த நிலையில் கிடக்கிறது. அதற்குள்ளிருந்த ஒரு நெஸ்டமோல்ட் டின் தெரிந்தது. ஓடிச்சென்று அதை எடுத்தேன். பைக்குள் இருந்த ஒரு அல்பம் வெளியே வீழ்ந்தது. பள்ளிச்சீருடையில் அழகாக வாரியழுத்த இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியும் அவளின் சகோதரனும் சிரித்தபடி ஒரு நிழல்படத்தில் நின்றார்கள். ஒருவேளை கால்கள் இடறிய போது தட்டுப்பட்ட உடல்களுக்குள் அவர்களும் உயிரற்று இருந்திருக்கலாம்.

நான் அதைப்பற்றி எல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் நெஸ்டமோல்ட் டின்னை எடுத்து குலுக்கிப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட முக்கால் டின் அளவுக்கு மா இருந்தது. பெரும் சந்தோசம். உதடுகள் புன்னகைத்தன.

டின்னைப் பிடித்திருந்த கை கொஞ்சம் பிசுபிசுத்தது. என்னவென்று பார்த்தேன் கையில் இரத்தம். டின்னைத் திருப்பிப் பார்க்கிறேன் டின்னிலும் குருதிபட்டிருந்தது. அப்பையினை பார்த்தேன் குருதி அதிலும் இருந்தது. அப்போது தான் அல்பத்திலும் குருதி பட்டிருப்பது புரிந்தது.

ஒருவேளை அந்த நிழல்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளின் குருதியாகக் கூட இருக்கலாம். மனம் ஓவென்று கத்தி அழவேண்டும் போல எண்ணியது. இருந்தும் அடக்கிக்கொண்டு “ என்ட மருமக்களுக்கு கொஞ்சம் பசி தீர்க்க உதவும் இது” சொல்லியபடி நகர்கிறேன்.

மைத்துனனோ “ அண்ண இரத்தம் எல்லாம் பட்டுக்கிடக்கு அதை எடுக்காத அண்ண” என்கிறான். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க இப்போது அது மட்டுமே மனதில் நிலைத்த எண்ணம். “பரவாயில்ல வா”

நெஸ்டமோல்ட் டின் மடித்துக் கட்டிய என் சாறத்துக்குள் பத்திரப்படுத்தப்படுகிறது. எப்படியாயினும் பசிக்குது மாமா என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தைகளின் பசியில் கொஞ்சத்தையாவது இப்போது என்னால் நிவர்த்தி செய்ய முடியும்.

திரும்பி அவர்களிடம் நடக்கிறேன். சிதறிக்கிடந்த கரத்தில் அமைதியாக கிடந்த அந்த வோக்கி திடீர் என்று உயிர் பெற்று யாரையோ அழைத்தபடி இருக்கிறது. அது எதுவும் அப்போது எனக்கு செவியில் விழவில்லை. பள்ளிச்சீருடையில் புன்னகைத்தபடி இருந்த குழந்தைகளின் குருதியில் தோய்ந்து போய்க்கிடந்த அந்த நெஸ்டமோல்ட் மாவினால் என் மருகர்களின் பசியாற்ற கொஞ்சமாவது முடியுமே என்பதை மட்டுமே என் மனம் சொல்லிக்கொண்டது…

நான் நடந்து கொண்டே இருந்தேன்….

நினைவுகளுடன்: இ.இ.கவிமகன்

17.05.2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.