Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அநீதிக்குப் பிரபலமான நாடு

DJI_0353-780x470.jpg

படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் படத்தோடு நடராசா தவமணி (69)

கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட  26 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

தற்போது குமாரபுரத்தில் வசிக்கும் நடராசா தவமணி (69) படுகொலையின் நேரடி சாட்சியாவார். அவரின் கணவர் நடராசா இப்படுகொலை சம்வத்தின்போது கொல்லப்பட்டதிலிருந்து தவமணி தன் மகனோடு தனியே வசித்துவருகிறார்.

”நாங்க தொண்ணூத்தைஞ்சில கலியாணம் முடிச்சம். எட்டு மாச வாழ்க்கதான். வயித்திள இருந்த புள்ள பொற்ற முதலே வாழ்க்கையே பேயிற்று” தவமணி தன்னை இப்படித்தான் அறிமுகம் செய்கிறார்.

1996 ஆம் ஆண்டு ரெண்டாம் மாசம் 11 ஆம் திகதி. நாங்க வீட்டுக்குள்ளதான் இருந்தனாங்க. றோட்டில நிறைய வெடி சத்தங்கள் கேட்டது. நாங்க பயத்தில வீட்டுக்க வந்து இருந்தனாங்க. நிறைய ராணுவம் ஊருக்க வந்திற்று. அங்கால ஏதோ சம்பவம் நடந்ததாம் எண்டு, தெகிவத்த, அம்பத்தெட்டு, கிளிவெட்டி இடங்களில இருந்த எல்லா இராணுவமும் எங்கட ஊருக்குள்ள புகுந்து சுட்டது.

நாங்க எங்கட வீட்டில இருக்கல்ல. பயந்து பக்கத்து வீட்டில தான் இருந்தனாங்க. அங்க வந்த ஆமிக்காரர் ஜன்னல், கதவுகள உடைச்சு சுட்டதில எங்கட அவருக்கு (கணவர்) வெடிபட்டிற்று.  அந்த வீட்டுக்கார அக்காவுக்கும் வெடி பட்டிற்று. அங்க பதுங்கியிருந்த இன்னொரு பிள்ளைக்கும் வெடி பட்டிற்று. அங்க இருந்த ரெண்டு பேருக்கு வெடி படல்ல.

கதவ உடைச்சி சுட்டதில எங்கட அவருக்கு வயித்தில வெடிபட்டிற்று. மற்ற அக்காவுக்கு ஜன்னலுக்கால சுட்டதில நெத்தியில வெடி பட்டிற்று.

அங்கா ஒரு வீட்டுக்குள்ள ஏழு பேர சுட்டிருக்கானுவ. அதில ரெண்டு புள்ளத்தாச்சிகள் (கர்ப்பிணித்தாய்மார்) செத்தது. அதில ஒரு புள்ளைக்கு 16 ஆம் திகதி புள்ள பொறக்கிற நாள். 11ஆம் திகதி சுட்டிற்றானுவ.

ஒருத்தரையும் வெளியில வைச்சு சுடல்ல. எல்லாரையும் வீட்டுக்க வைச்சித்தான் சுட்டானுவ.

ஐஞ்சு மணி இருக்கும் தொடங்கி இரவு எட்டு மணி வரைக்கும் வெடி மயமாத்தான் கிடந்த அதுக்குள்ள. ஒருத்தரும் வெளிய வந்துக்க ஏலாது. பொறவு விடிஞ்சுதான் தெரியும், எங்க வீட்ட மட்டுமில்ல எல்லார்ட வீட்டயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கெண்டு. அங்க ஒரு புள்ளையையும் (சிறுமி) கற்பழிச்சிக் கொன்றிருந்தானுவ.

முதல் பொடிய கொண்டு போக வேணாம் எண்டு வெள்ளக்காரங்க சொன்னவங்க. பிறகு மூதூருக்கு பொடிய கொண்டுபோய் அங்க வைச்சி தந்தவங்க. புதன் கிழமதான் பொடி தாட்டம் (சடலம் புதைப்பது).

அதில 26 பேருக்கு வெடிபட்டு செத்தவங்க. 24 பேருக்கு காயம். இங்கத்தய ஆக்கள் மட்டுமில்லா கிளிவெட்டி, 58, மேங்காமம் ஆக்களுக்கும் எங்கட ஊருக்குள்ள வந்த இடத்தில செத்தாங்க. சின்னப்புள்ளயள், புள்ளத்தாச்சிப் பொம்பிளகள் என்று எல்லாரையும் சுட்டுக்கொன்றானுவ.

முதல்ல மூதூர்ல வழக்கு நடந்தது. பொறவு ரிங்கோவுக்கு (திருக்கோணமலை) போட்டவங்க. ரிங்கோவுலயும் பத்தொன்பது தரம் வழக்கு நடந்தது. ஒரு முடிவும் இல்ல. பொறவு அன்ராதபுரத்துக்கு போட்டு, அங்க போன்னாங்க. அங்கயும் எங்களுக்கு எதுவுமான முடிவும் வரல. இதுவரைக்கும் எந்த முடிவுமில்ல. நாங்களும் ஒவ்வொரு வருசமும் அந்த நினைவுநாளத்தான் செய்துவாறம். செய்யக்குல்ல எல்லாரும் வருவாங்க. வாறவங்களிட்ட இதுக்கு ஒரு தீர்வெடுத்துத் தரச்சொல்லித்தான் கேட்கம். அதுக்காகத்தான் எவ்வளவு கஸ்ரத்திலயும் நினைவு நாள செய்துவாறம்.

படுகொலை சம்பவத்தின்போது படுகாயமடைந்து தப்பித்தவர்களின் ஒருவரான அரசரட்ணம் நாகராசா (74) தவமணி வசிக்கும் அதே கிராமத்தின் முனையில் வசிக்கிறார். பார்வையற்றிருக்கும் அவரிடமும் வலி மிகுந்த அனுபவங்கள் உண்டு.

ஆயிரத்தி தொளாயிரத்தி தொன்னூற்றி ஆறாம் ஆண்டு, ரெண்டாம் மாசம் பதினொராம் திகதி. அன்றைக்கு நாங்க ஒரு பதினாலு பேர் வெள்ளாம வெட்ட கூலிக்குப் போயிந்தம். முன்று மணியப் போல எங்கட வேலை முடியப்போகுது. குளிப்பமெண்டு கரப்புறப்படக்குள்ள வெடிச்சத்தம் கேட்குது. நேரத்தோட போறவாற ஆடிக்காரர் கொக்குக்குங் குருவிக்கும் சுடுறது. அப்பிடித்தான் நான் நினைச்சிருந்தன். ஆனா அன்றைக்கு வெடிச்சம்கூடக் கேட்குது. நான் எங்கட வீட்டுக்கு ஓடியந்திற்றன். மற்றாக்களும் தங்கட வீடுகளுக்கு ஓடித்தாங்க. வீட்ட வந்தாலும், ஊரைச் சுத்தி வெடிச்சத்தம் கேட்குது. அந்த நேரம் எங்கட வீட்டயும் ஆக்கள் ஓடிவாறாங்க.

படாரென்று எனக்கு கன்னத்துக்கு மேல மழைத்துளி பட்டமாதிரி இருந்தது. அதோட என்ர கண் வெட்டைக்குவந்திற்று (வெளியே வந்துவிட்டது). என்ர மகன் பிடிச்சிற்றான். ஆனால் எனக்கு அறிவுகெடல்ல. என்னைக் கடந்து போயிற்றானுவ. எல்லா வீட்டலயும் வெடி. சவமும், காயப்பட்டாக்களும் கிடக்கு. வந்து பார்க்கிறதுக்கு ஒரு மனுசங்கிடையாது. வரையுமேலாது. விடயுமில்ல அவங்க.

காயப்பட்டவுடன என்னையத் தூக்கிக்கொண்டு ஓடக்குள்ள என்ர பெஞ்சாதிக்கும் வயித்தில வெடிபட்டிற்று. மகனுக்கும் காலில வெடி. இருவத்தாறு தையல். அந்த நேரம் எட்டுவயது அவனுக்கு.

பொறவு அடுத்தநாள் ஒரு ஏழு மணியிருக்கும். பஸ்ஸில ஆசுபத்திரிக்கு ஏத்திப்போனானுவ. திருக்கோணமலையில இந்தக் கண்ணுக்கு பக்கத்தில் விறைப்பூசி அடிவங்க. அந்த விறைப்பு இன்னும் மாறல்ல. பொறவு கண்டி ஆசுபத்திரியில பதிமூனு நாள் கிடந்தன். பொறவு திருகோணமலை ஆசுபத்திரியில ஏழு நாள் கிடந்தன். என்ர கண் பிழையாபேயிற்று என்றது எனக்கே விளங்கீற்று. மற்ற கண்ணும் சரியா தெரியல்ல. இப்பிடியே ஒரு மூணு வருசம் பேயிற்று.

இதுக்கிடையில  இங்க காயப்பட்ட ஆக்களையெல்லாம் கோட்சுக்கு (நீதிமன்றம்) கொண்டுபோய் ஆமிக்காரங்கள காட்டச்சொன்னாங்வங்க. அதில எட்டுப்பேரை என்னமோ காட்டினாங்களாக்கும். அவங்களுக்கு வழங்கு நடந்துகொண்டிருக்கு. எனக்கு வழக்கென்றால் எப்பிடி என்று கூட தெரியல்ல. எனக்கு சம்மன் வரயில்ல. கண்டியில் வாய்முறைப்பாடு எடுத்த பொலிஸ்காரன் சரியா எடுக்கல்ல. சேரிட்ட கேட்டிற்று வந்து எடுக்கிறன் என்று சொன்னவன், போனவன் போனவன்தான். பொறவு வரவேயில்ல. மலையிலயும் (திருக்கோணமலை) எடுக்கல்ல.

வழக்கு மூதூர்ல இருந்து திருக்கோணமலைக்குப் போய், பொறவு அனுராதபுரம் போயும் எங்களுக்கு சார்பா தீர்ப்பு கிடைக்கல்ல. தள்ளுபடி செய்திற்றாங்க.

சனங்களுக்கு இதுக்கு அலைஞ்சு சீ (சலித்துப்போயிற்று) என்று பேயிற்கு. இதுக்கு ஒரு ஞாயத்தை (நீதி) யார் தாறது?

பார்வையை இழந்து அல்லற்படும் நாகராசாவின் கேள்விக்கு இலங்கை அரசிடம்கூட பதில் இல்லை.

குறிப்பு – இப்படுகொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்திலும், திருகோணமலை நீதிமன்றத்திலும் இடம்பெற்றன. போர்ச்சூழல் காரணமாக சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிவித்து, வழக்கானது 2013ஆம் ஆண்டில் அனுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2016ஆம் ஆண்டு  ஜீலை மாதம் 27ஆம் திகதி பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்குப் போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டிருந்த இராணுவததினர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

https://nenarrative.com/அநீத்கு-பிரபலமான-நாடு/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் படத்தோடு நடராசா தவமணி (69)

எவ்வளவு இளமையான வயதில் கணவனை பறி கொடுத்துள்ளார் என்று

அம்மாவையும் கணவனின் படத்தையும் பார்க்கும் போது புரிகிறது.

ரொம்ப கஸ்டமாகவும் உள்ளது.

சிங்கள தேசத்தில் தமிழருக்கு எப்போது தான் நீதி நிஞாயம் கிடைத்துள்ளது.

ஆழ்ந்த நினைவஞ்வலிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.