Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

February 6, 2026

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!  (மூன்றாவது கண்:VI)

— அழகு குணசீலன் —

இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது.  சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார்.  அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை  கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது.

அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. 

இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை  அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும்,  தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 

1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன்,  பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா  1957 யூலை 26  இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில்  சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே  என்பதையும் அடக்கி வாசிக்கிறது.

அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி  கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்திருக்கிறார்.  “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம்.

 எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’  போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன்  இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும்.

“சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”.

“இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”.   

சுமந்திரன்   பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான  நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை.  ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். 

சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது?  

அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா?

 இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம்,  சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால்   வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து  இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது.

 இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான்  டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா?  கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது.  அதையும்  புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள்.  பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு  தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே  அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. 

தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட   கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை  அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன.

எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ”  …   அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும்,  மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு  வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை  பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும்  சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 

1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற  முக்கிய விடயங்கள்.  இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும்.

2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற  இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும்  அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும்.

3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல்.

4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?),  ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால்  வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள்.

5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன்  தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக,  மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 

6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும்.

7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.  இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக  இனவாதமாகவும் நோக்க கூடாது.

8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல்  சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…?

ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம்  சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். 

இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும்  இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில்  எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை.

https://arangamnews.com/?p=12657

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.