Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • முன்னாள் கிரிக்கெட் வீரர்

  • 50 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா?

மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரியம் ஒன்றுமல்ல.

அவர்களின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டுனித் வெல்லாலகே, தஷுன் ஹேமந்தா போன்ற ஸ்பின்னர்கள் ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் சமீராவும் சிறப்பாக பந்துவீசிவருகிறார். முன்னணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றிரண்டு பௌலர்கள் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி விடுகிறார்கள்.

அதனால், என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். அதிலும் குறிப்பாக பிராகசமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பதும் நிசங்காவின் ஆட்டம் இந்தப் போட்டிகளில் எப்படி இருக்கிறதோ அதன்படியே அவர்களின் வாய்ப்பு இருக்கும்.

இந்த 27 வயது வலது கை பேட்டர் என்னை நன்கு கவர்ந்துவிட்டார். அவரது ஆட்டத்தை ஒவ்வொரு முறையும் நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அவர் சீராகக் கொடுத்து அசத்திக்கொண்டே இருக்கிறார்.

வெற்றிடத்தை நிரப்பும் நிசங்கா

1990-களின் பிற்பகுதிக்குப் பிறகு இலங்கை அணி பல தரமான பேட்டர்களை உருவாக்கியது. அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மார்வன் அட்டபட்டு, குமார் சங்கக்காரா, மஹேலா ஜெயவர்தனா, திலகரத்னே தில்ஷன், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல் என பல தரமான பேட்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மட்டாக இருக்கட்டும் அதில் சிறப்பாக செயல்படக்கூடிய பல பேட்டர்கள் வந்தனர். 1996 உலகக் கோப்பை ஃபைனலில் டி சில்வா அடித்துத் தொடங்கிவைத்தார்.... அதன்பிறகு அவர்கள் ஓயவேயில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர்களால் அப்படி தரமான பேட்டர்களை உருவாக்க முடியவில்லை. நிறைய திறமையான வீரர்களைப் பார்த்தோம். ஆனால், அவர்களால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை.

இப்போது பதும் நிசங்கா அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். அவர் அனைத்து ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். எளிதாக ரன் சேர்க்கிறார். வழக்கமான பாணியில் தான் பேட்டிங் செய்கிறார். நல்ல ஸ்டைல் இருக்கிறது. அற்புதமான டெக்னிக் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அடுத்த சில ஆண்டுகளில் அவர் மிகப் பெரிய பேட்டராக வரப்போகிறார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தப்போகிறார். அதற்கு ஏற்ற சுபாவம் அவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. நல்ல 'கிளாஸான' வீரராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பொறுப்புணர்வோடு ஆடுகிறார். அணிக்காக ஆட்டத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு முழுமையான வீரராக அவர் இருக்கிறார். இப்பொழுதே அவர் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு ஜாம்பவானாகவே மாறியிருப்பார் என்பது என் கருத்து.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

விழிப்புணர்வு நிறைந்த ஆட்டம்

கடந்த சில ஆண்டுகளாக ஒரு விஷயத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டில் சோபிக்கவேண்டும் என்பதால், அதற்கேற்ப வீரர்கள் தங்கள் ஆட்ட முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், நிசங்காவிடம் அவ்வளவு மாற்றங்கள் இல்லை. வழக்கமான, சரியான கிரிக்கெட் ஷாட்கள் ஆடுகிறார். கிரீஸில் அதிகம் அவர் நகர்வதில்லை. இடைவெளிகளை சரியாகப் பிடித்து அதைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். இந்த முறையில் விளையாடியே டி20 கிரிக்கெட்டில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடுகிறார்.

இந்த ஃபார்மட்டில் நீங்கள் சுழன்று சுழன்று ஆடவேண்டிய அவசியம் இல்லை என்பதை இது சொல்கிறது. பவர்பிளேவில் ஃபீல்டர்கள் 30 யார்ட் வட்டத்துக்குள் நிற்கும்போது சரியான ஷாட்களை, சரியான இடைவெளியைப் பார்த்து அடிக்கும்போது நிச்சயம் ரன் சேர்க்க முடியும். ஆனால், டி20 என்று வரும்போது இதையெல்லாம் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால், களத்தில் இருக்கும்போது பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஆனால், அந்த மனநிலையை அடக்கி ஒரு நிலைத்தன்மையை தன் ஆட்டத்தில் நிசங்கா காட்டுகிறார்.

ஒருசில வீரர்கள் பவர்பிளேவில் அதிரடி காட்டுவார்கள். ஆனால், அவர்களால் மிடில் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஆனால், நிசங்கா அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிறார். பவர்பிளேவில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடுபவர், மிடில் ஓவர்களில் நீட்டித்து நிற்கிறார். அதிகம் ஓடுகிறார். அப்படியும் 130 - 140 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிடுகிறார். அதனால், விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ரன்ரேட்டையும் அவர் சீராக வைத்திருக்க உதவுகிறார்.

கிரீஸில் அவருடைய கால் உறுதியாக இருக்கிறது. தலை உறுதியாக இருக்கிறது. நல்ல 'பேலன்ஸ்' இருக்கிறது. அதேபோல், ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, எதிரணி பௌலர்கள் யார் என்பதை அறிந்து அதற்கேற்றதுபோல் தன் அணுகுமுறை அவர் தேர்வு செய்கிறார். மிகச் சிறந்த பேட்டர்கள் அதைத்தான் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் எப்போதுமே ஒரு படி முன்னே இருப்பார்கள். பதும் நிசங்கா தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அதைக் காட்டியிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொறுப்பை உணர்ந்து ஆடும் திறன்

அவருக்குத் தன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. 'நான் தான் இன்னிங்ஸை ஓப்பன் செய்கிறேன். நல்ல தொடக்கமும் கொடுக்கவேண்டும், வேகமாகவும் ஆடவேண்டும், அதேசமயம் நிலைத்தும் நிற்கவேண்டும்' என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அது மிகவும் கடினமான விஷயம். ஆனால், தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே அவர் அதை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் (டி20 ஃபார்மட்) இந்தியாவுக்கு எதிராக நிசங்கா ஒரு சதம் அடித்தார். அந்தப் போட்டி கூட டை ஆகி, சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெறும். அந்த ஆட்டம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது.

துபையில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து இந்தியா 202 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியின் வர்ணனையில் இருந்த நான், அந்த ஆடுகளத்தில் அந்த ஸ்கோரையெல்லாம் சேஸ் செய்யவே முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால், நிசங்கா வந்து ஆடிய விதம் பிரம்மிப்பாக இருந்தது. தொடக்க வீரராக இறங்கிய அவர், கடைசி வரை போராடி இலங்கையை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, இலங்கையும் 202 ரன்கள் தான் எடுத்தது. ஒருவேளை நிசங்கா ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவர் இலங்கையை வெற்றி பெறவே வைத்திருக்கலாம்.

அது ஏதோ ஒருநாளோடு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக பல சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் நிசங்கா. அதை தற்போது இந்த உலகக் கோப்பையிலும் அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சற்று கடினமானவை. பந்து பேட்டுக்கு நன்கு வரும். பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். பவுண்டரி எல்லையும் சற்று சிறியது தான். பவர்பிளேவில் அடித்து நொறுக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படியில்லை. ஆடுகளங்கள் சற்று ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். பந்து நின்று வரும். அங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருக்கும். பிரேமதேசா போன்ற மைதானமெல்லாம் மிகவும் பெரியது. அங்கு ஸ்கோர் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், நிசங்கா அதை செய்திருக்கிறார்.

அவர் ஃபிட்னஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால் ஓடியும் அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார். நான் முன்பே ஆட்ட விழிப்புணர்வு பற்றி சொல்லியிருந்தேன்... மைதானம் பெரிதாக இருந்தால் அதற்கேற்ப ஆடுகிறார். சிறிதான மைதானம் என்றால் எதிரணி பௌலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். தன் அணியின் மிகமுக்கிய பேட்டராக விளங்குகிறார்.

நிசங்காவுக்கு உறுதுணையாக இருக்கப்போவது யார்?

என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கு நிசங்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் என சவால் கொடுக்கக்கூடிய அணிகளோடு இலங்கை விளையாடப்போகிறது. அவர் கொடுக்கக்கூடிய தொடக்கம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியம்.

அதேசமயம் அவர் ஒருவரையே பெரும்பாலும் சார்ந்திருப்பது அவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அதனால் அவருக்கு உறுதுணையாக மற்ற வீரர்களும் பங்களிக்கவேண்டும். பவன் ரத்நாயகே இந்த உலகக் கோப்பையில் நன்றாக ஆடுகிறார். அச்சமில்லாமல் அதிரடியைக் காட்டுகிறார். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்தும் அந்த பங்களிப்பு வரவேண்டும்.

குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் அந்த உறுதுணையான ஆட்டத்தைக் கொடுக்கவேண்டும். எல்லோரும் 20-30 ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக அவர்கள் மாற்றத் தொடங்கவேண்டும். அப்படிச் செய்யும்போது அது நிசங்காவின் நெருக்கடியைக் குறைத்து, இன்னும் சிறப்பான செயல்பாட்டை அவரிடத்திருந்து கொண்டுவரும். அது அணிக்கும் பேருதவியாக மாறும்.

இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கை வீரர்கள் பெரிதாக யோசிக்காமல் அச்சமற்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இலங்கை அரையிறுதியைப் பற்றி கனவு காணலாம்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crrx741l8lyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.