Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images

22 மார்ச் 2026, 06:04 GMT

புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்குப் புதிய காலக்கெடு விதித்துள்ளார்.

இரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா இரானின் பல மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இது அவர்களின் மிகப்பெரிய நிலையத்திலிருந்து தொடங்கும்," என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அறிவிக்கப்படாத அணுசக்தி தளம் உட்பட தெற்கு இஸ்ரேலில் இரண்டு இரானிய ஏவுகணைகள் தாக்கிய சில மணிநேரத்திற்குப் பிறகு, சனிக்கிழமை (மார்ச் 21) டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. போர் தொடங்கிய பிறகு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

டிரம்ப் இந்த சமீபத்திய பதிவை இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அதிகாலை சுமார் 5 மணியளவில் வெளியிட்டார்.

உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது.

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது.

ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம்

இரான் மீது பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உலகின் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய் விநியோகம் சிக்கலாகியுள்ளது.

இந்த நீர்வழிப் பாதையின் வடக்கே இரானும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. இது அதன் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் அகலமும், அதன் மிகக் குறுகிய புள்ளியில் சுமார் 33 கிலோமீட்டரும் அகலமும் கொண்டது.

இது வளைகுடா நாடுகளை அரபிக் கடலுடன் இணைக்கிறது.

உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG - எல்என்ஜி) இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இதில் இரானின் எண்ணெய் மட்டுமல்லாமல், கத்தார், இராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற வளைகுடா நாடுகளின் எண்ணெயும் அடங்கும்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,மார்ச் 21 அன்று டிமோனா மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் ஏஎஃப்பிடிவி காட்சிகளின் ஸ்கிரீன்ஷாட்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கம்

வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கின்றன. ஆனால் சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, போர் தொடங்கியது முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, குறிவைக்கப்பட்டுள்ளன அல்லது தாக்குதலுக்கு உள்ளானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பிறகு உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை இப்போது ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது.

இரான் பற்றி டிரம்ப் வேறு என்ன சொன்னார்?

கடந்த சில மணிநேரத்தில், டொனால்ட் டிரம்ப் இரான் குறித்து சில புதிய அறிக்கைகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் செய்தியொன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, "அமெரிக்கா இரானை வரைபடத்திலிருந்தே அழித்துவிட்டது," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் போர் சாதனைகளைப் பகுப்பாய்வு செய்யும் அந்த அறிக்கை, "டிரம்ப் இரான் போர் குறித்த உண்மையை மறைக்கிறார்" என்ற தலைப்பில் வெளியானது.

இரானில் தனது இலக்குகளை அடைவதில் "தோல்வி" அடைந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் கூறுகையில், "ஆம், நான் சாதித்துவிட்டேன், அதுவும் திட்டமிட்ட நேரத்திற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே." என்று குறிப்பிட்டுள்ளார்.

"அவர்களின் தலைமை இல்லாமல் போய்விட்டது, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டன, அவர்களிடம் தற்காப்புக்கு எதுவுமே இல்லை, இப்போது அவர்கள் சமரசம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை." என்று அவர் கூறியுள்ளார்.

இரான் பதில்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகிறார்

ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, டிரம்ப் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களைத் தாக்கப்போவதாக இரானிய ராணுவம் மிரட்டியுள்ளது.

முன்னதாக, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்ரி காலிபாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்து ஏற்கெனவே எடுக்கப்பட்ட அடுத்தக்கட்ட உத்திகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது," என்று பதிவிட்டிருந்தார்.

"மிகவும் பாதுகாக்கப்பட்ட டிமோனா பகுதியில் கூட இஸ்ரேலால் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை என்றால், இந்த மோதல் செயல்பாட்டு ரீதியாக ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். இஸ்ரேலின் வான்பரப்பு இப்போது பாதுகாப்பற்றதாக உள்ளது," என்று காலிபாஃப் கூறினார்.

இஸ்ரேலின் 'அணுஆயுத' கிடங்கிற்கு இரான் குறியா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேலின் அராட் நகரில் இரான் தாக்குதலில் ஏற்பட்ட சேதம்

இரானின் சமீபத்திய தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி, குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறங்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, தரையில் பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

மீட்புக் குழுவினரின் தகவல்படி, "அராட் நகரில் 88 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, அருகிலுள்ள டிமோனாவில் 33 பேர் காயமடைந்தனர்."

ஏ.எஃப்.பி.டிவி காட்சிகள், தரையில் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம், சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் பரவலான அழிவைக் காட்டின.

மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு டிமோனாவில் இருப்பதாக நம்பப்படுகிறது; இருப்பினும் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதில்லை.

டிமோனாவில் உள்ள ஒரு கட்டடம் "நேரடி ஏவுகணைத் தாக்குதலுக்கு" உள்ளானதாக இஸ்ரேலிய ராணுவம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதில் ஏவுகணை சிதைவு தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான்.

அராட் நகரில், கடுமையாக சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'ஒவ்வொரு முனையிலும்' பதிலடி கொடுப்பது குறித்துப் பேசினார்.

இந்தத் தாக்குதலை "மிகவும் கடினமான மாலைப் பொழுது" என்று விவரித்த நெதன்யாகு, இரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என உறுதியளித்தார். சில மணிநேரத்திற்குப் பிறகு, தெஹ்ரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.

இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.

நடான்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்தி விபத்து அபாயத்தைத் தவிர்க்க "ராணுவக் கட்டுப்பாட்டை" கடைபிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் கிராஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் இயந்திரங்கள் நடான்ஸ் நிலையத்தில் உள்ளன. இது ஜூன் 2025 போரிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz78jgjln1po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

Mar 22, 2026 - 07:45 AM

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.


ஈரானின் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn14g1m00014356pizfrzrbo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 180 பேர் காயம்

Published By: Digital Desk 3

22 Mar, 2026 | 03:53 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையம் அமைந்துள்ள டிமோனா மற்றும் அராட் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 180 பேர் காயமடைந்துள்ளனர்.

அராட் நகரில் 88 பேர் காயமடைந்ததுடன், அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அதேவேளை, டிமோனாவில் 39 பேர் காயமடைந்துள்ளதுடன், 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த சிதறல் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலுக்கு இது ஒரு கடினமான மாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெப்ரவரி 28 முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில், இதுவரை இஸ்ரேலுக்கு அறிமுகமில்லாத புதிய வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றை இடைமறிக்கத் தவறியதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/241663

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி? அவசர விசாரணை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், அராட், டிமோனா, இரான் ஏவுகணை, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,அராட் நகரில் இரான் ஏவுகணை நேரடியாகத் தாக்கிய இடத்தைப் பார்வையிடும் தீவிர மரபுவழி யூத குடியிருப்பாளர்கள்

கட்டுரை தகவல்

  • செபாஸ்டியன் அஷர்,

  • அராட்,

  • ஜரோஸ்லாவ் லுகிவ்,

    மற்றும்

  • பேட்ரிக் ஜேக்சன்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இஸ்ரேலிய அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரு நகரங்களில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 180 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (மார்ச் 21) மாலை இரு நகரங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அராட் நகரில் 116 பேரும், டிமோனா நகரில் 64 பேரும் காயமடைந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

டிமோனா நகருக்கு வெளியே சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை, டெல் அவிவ் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தெஹ்ரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 92% ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது.

அராட் நகரில், சனிக்கிழமை கேட்ட வெடிப்புச் சத்தங்கள் மிகவும் திகிலூட்டுவதாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஏவுகணைத் தாக்குதலால் பல கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. தரையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த கட்டடத்திற்குள் பொருட்கள் விழுந்து நசுக்கியதில், "தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த பல குழந்தைகளை" தான் பார்த்ததாக அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் நரம் சையத் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

"உடைந்த கண்ணாடிகளால் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், தலையில் காயமடைந்த 10 வயது சிறுமியை நான் தேற்ற முயன்றேன்," என்று அவர் கூறினார்.

"அவளுடைய பெற்றோர் கட்டடத்திற்குள்ளேயே சிக்கி இருந்ததால், அவள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்துவிட்டாள். இடிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவளது பெற்றோர் மீட்கப்படும் வரை நாங்கள் காத்திருந்து, பின்னர் அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்."

தாக்குதலின் வேகத்தில் இரண்டு குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்கள் பெயர்ந்து போயிருந்தன.

நெகேவ் பாலைவனத்தில் உள்ள இந்தத் தீவிர மரபுவழி யூதர்கள் வாழும் நகரில், கருப்பு நிற உடை அணிந்த ஆண்கள் கூட்டமாக நின்று அந்தச் சேதங்களை உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், அராட், டிமோனா, இரான் ஏவுகணை, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,தெற்கு இஸ்ரேலின் அராட் நகரில் இரான் வீசிய ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்புகளைத் தகர்த்தது

டிமோனா நகரிலும் இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு காயமடைந்த பலரில் 10 வயது சிறுவனும் ஒருவன். அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

"டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு நகரங்களிலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கைத் தவறவிட்டன. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்ட இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கின" என்று இஸ்ரேலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

அஹ்மதியல் பென் யெஹுதா, டிமோனாவில் ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து இரண்டு நிமிட நடைப்பயணத் தொலைவில் வசிக்கிறார். தாக்குதல் நடந்தபோது, தான் பாதுகாப்பு அறைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்ததாக அவர் கூறுகிறார்.

"எனது வீடு உட்பட பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன, ஜன்னல்கள் உடைந்து சிதறின." என்றார் அவர்.

ஏவுகணை விழுந்த வீதியைப் பார்வையிடச் சென்ற பென் யெஹுதா, "ஒரு மழலையர் பள்ளி உட்பட அந்தப் பகுதியே உருக்குலைந்து போயுள்ளது" என்றார். பலருடைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக அழிந்துவிட்டதை அவர் நேரில் பார்த்தார்.

"நான் பயங்கரமான அச்சத்தை உணர்ந்தேன். ஒரு ஏவுகணை கான்கிரீட் கட்டடங்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழிவைப் பார்ப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது."

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், அராட், டிமோனா, இரான் ஏவுகணை, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நெதன்யாகு அராட் நகரில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுகிறார்

இரான் இஸ்ரேலுக்குள் தொடர்ந்து இத்தகைய சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பது, இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை நினைவூட்டுகிறது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணைகள் எவ்வாறு ஊடுருவின என்பதைக் கண்டறிய அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள 'ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம்' பொதுவாக "டிமோனா அணு உலை" என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு இருப்பதாக நம்பப்படும் ஒரு இடமாக அது உள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், அராட், டிமோனா, இரான் ஏவுகணை, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,Maxar

படக்குறிப்பு,2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்

அதிகாரப்பூர்வமாக, இந்தத் தளம் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஆறு தசாப்தங்களாக இஸ்ரேல் இங்கு அணு குண்டை உருவாக்கியது என்பது வெளிப்படையான ரகசியமாகும். இருப்பினும், அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களும் இது குறித்து தெளிவற்ற நிலையையே பராமரித்து வருகின்றன.

இதனால், மத்திய கிழக்கில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடாக இஸ்ரேல் உள்ளது. எனவே, இந்த தளம் இலக்கு வைக்கப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இஸ்ரேலால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இரான் அணு குண்டை தயாரிப்பதற்கான எந்தவொரு சாத்தியமான திறனையும் அழிப்பதையே இந்தப் போரின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளன.

நடான்ஸ் மீதான தாக்குதலை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இரானின் அணுசக்தி அமைப்பு வர்ணித்துள்ளது. இருப்பினும், "கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை" என்றும், "சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்றும் அது கூறியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் முதல் நாட்களிலும், கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், அமெரிக்க - இஸ்ரேல் படைகளால் நடான்ஸ் குறிவைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடான்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டபோது, அந்தப் பகுதியில் இத்தகைய தாக்குதல் நடந்ததாகத் தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

கூடுதல் தகவல்கள்: டாம் பென்னட் மற்றும் கேப்ரியலா பொமரோய்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdxx1jnpgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் காலக்கெடு - ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்த அதிர்ச்சி!

Mar 23, 2026 - 12:33 PM

அமெரிக்காவின் காலக்கெடு - ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்த அதிர்ச்சி!

அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. 

திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmn2u7r5e000j356pog6c5n9d

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.