Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Questen.png?resize=750%2C375&ssl=1

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.”போராளிகள் நலன்புரி அமைப்பினால்” ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், “சமகால அரசியலில் போராளிகளின் வகிபாகம்” என்ற தலைப்பின் கீழ் பலரும் உரையாற்றினார்கள்.

போராளிகள் நலன்புரி அமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2009க்குப்பின் புனர்வாழ்வு பெற்ற,தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட,அல்லது கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்.

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுப்பதற்காக வெவ்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள்.  இந்த பெரும்பாலான கட்டமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் போராளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.அதேசமயம் அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை முன்னாள் போராளிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,என்.ஜி.ஓக்கள்,ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த முன்னாள் போராளிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு.

இது தொடர்பாக கடந்த கிழமைக்கு முதல் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.அந்தக் கூட்டம் தமிழகத்தின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம்.நல்லகண்ணுவை தமிழக முதல்வர் “வாழ்நாள் போராளி “என்று  அழைத்திருந்தார்.ஆனால் “தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை  நாங்கள் முன்னாள் போராளிகள் என்று அழைக்கிறோம்” என்று ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் போராளிகள் என்று அழைத்தால் அதன் பொருள் அவர்கள் இப்பொழுது போராளிகள் இல்லை என்பதாகும்.ஆனால் போராளி என்பது ஒரு பதவி அல்ல.அதில் முன்னாள்,இந்நாள் என்று அழைக்கலாமா? ஒரு போராளி கட்டாயம் இயக்கங்களில் இருக்க வேண்டும் என்று இல்லை.ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டும்தான் ஒருவர் போராளி என்று அழைக்கப்பட வேண்டும் என்று இல்லை.சமூகத்தின் வெவ்வேறு விவகாரங்களை முன்வைத்துப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.சமூக விடுதலைபி போராளிகள், பெண்விடுதலைப் போராளிகள்…. என்று சமூகத்தின் சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள்தான். இதுதொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாக  இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

நல்லகண்ணுவின் கூட்டத்தில் ஐங்கரநேசன் ஆற்றிய உரையை அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த உரைக்குக் கீழ் வந்த ஒரு பின்னூட்டத்தில், முன்னாள் ஈ. பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்  பதில்வினை ஆற்றியிருந்தார். அதில் அவர் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதும் அரசியல் செய்கிறார்கள்.அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தங்களுடைய கட்சிகள்,அமைப்புகளின் பெயர்களால்தான் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்தக் கேள்வி நியாயமானது.அந்த முகநூல் பதிவில் அதற்குரிய பதில் வந்திருக்கவில்லை.கடந்த 16 ஆண்டுகளாக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் ?

2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் பெருமைகளுக்கு “கொப்பிரைட்” எடுப்பதாகத்தான் காணப்படுகிறது.ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் வீரத்தையும் போற்றி அதன்மூலம் நமது வாக்கு வங்கியைத் திரட்டுவதைத்தான் பெரும்பாலான எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமது தேர்தல் உத்தியாகக் கொண்டிருக்கின்றன.இதில் நினைவு நாட்களுக்கு யார் அதிகம் உரித்துடையவர்கள் என்ற விடயத்தில் அவ்வப்போது மோதல்களும் ஏற்படுவதுண்டு.இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தின் மெய்யான வாரிசுகளாக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் கட்சிகள்,அல்லது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளைத் தமது தேர்தல்மைய அரசியலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்,அல்லது முன்னாள் இயக்கத்தவர்களை தமது உட்கட்சி முரண்பாடுகளுக்கு வசதியாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் போன்ற யாருமே, எந்தப் போராட்டத்தை தமது வாக்குமைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்களோ, அந்தப் போராட்டத்திற்கு உண்மையாக இல்லை. அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியங்களுக்கு விசுவாசமாக இல்லை என்ற ஓர் அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு

தமிழ்த் தேசியக் கோஷங்கள் பெரும்பாலும் திருடர்கள் எடுத்தணியும் முகமூடிகளாக அப்பொழுதோ மாறிவிட்டன.பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மேலெழுந்து விட்டார்கள். யாரெல்லாம் இறந்த காலத்தில் தமது இனத்துக்காக தியாகம் செய்யப் புறப்பட்டார்களோ,அவர்களெல்லாம் இப்பொழுது கைதிகளாகஅரைக் கைதிகளாக,கைவிடப்பட்டவர்களாக,தடுப்பிலிருந்து வந்தவர்களாக, மதிக்கப்படாதவர்களாக,சந்தேகிக்கப்படுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் இலங்கைத் தீவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினராக(most vulnerable) காணப்படுவது தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள்தான்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்பொழுதும் அவர்களுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஒன்றிணைவைக்கூட “மீளுருவாக்கம்” என்ற பெயரில் ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றக்கூடிய சட்டச் சூழல் இப்பொழுதும் உண்டு.எனவே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு பிரிவினராக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் எந்த அமைப்பை,எந்தக் கருநிலை அரசைக் கட்டியெழுப்பினார்களோ, அதன் பெருமைகளைக் கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.அல்லது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு வீசி விடுகிறார்கள். அல்லது அவர்களைச் சந்தேகிக்கிறார்கள்.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,தங்களுடைய இறந்த காலத்தை கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளின் மத்தியில்,தாங்கள்தான் அதன் உண்மையான வாரிசுகள்,அல்லது தாங்கள்தான் அந்த போராட்டத்தின் உண்மையான தொடர்ச்சிகள் என்று காட்டவேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாக பெரும்பாலான முன்னால் இயக்கத்தவர்கள் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால் கடந்த 16ஆண்டுகளிலும் அவர்கள் தாங்களாக கட்சியை உருவாக்கியும் அல்லது ஏனைய கட்சிகளோடு இணைந்தும்  தேர்தல் கேட்டிருக்கிறார்கள்.எனினும்,தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.தமது இறந்தகாலத்தைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்க அவர்களால் முடியவில்லை. தேர்தல் மைய அரசியலுக்குத் தேவையான  தொழில் திறன்களை,தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தேர்தல் மேடைகளில் வெற்றி பெற அவர்களால் இன்றுவரை முடியவில்லை.

ஆனால் இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமான ஒரு தோற்றப்பாடு அல்ல. உலகப் பொதுவானது.இலட்சியவாதிகளும் உண்மையான தியாகிகளும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் ஒன்றில் இறங்குவதில்லை; அல்லது இறங்கினாலும் மிகக்குறைந்த அளவே வெற்றிகளைப் பெறுகிறார்கள்.

உதாரணம்,இங்கே முன்னர் குறிப்பிட்ட நல்லகண்ணு.நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு உள்ளூர் உதாரணத்தையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்த அமைப்புகள் ஒன்றுதிரண்டு குடைச் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்டன.ஆனால் அந்த கூட்டமைப்பு கட்டுக்காசையும் இழக்கும் அளவுக்கு கேவலமாக சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் அந்தக் கிளர்ச்சிகளின் ஓரத்தில் நின்று அந்தக் கிளர்ச்சியின் கனிகளை தேர்தல் மொழியில் “ஹைஜாக்” பண்ணிய ஜேவிபி இப்பொழுது நாட்டின் ஆளுங்கட்சியாக வந்துவிட்டது.

ஜேவிபியை இதயமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின்  எழுச்சியில் இருந்து முன்னாள் இயக்கத்தவர்கள் கற்றுக்கொள்ளலாம்.தேசிய மக்கள் சக்தியின் இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயுதப் போராட்ட அமைப்பாகிய ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளிலும் தோற்கடிக்கப்பட்டது.இரண்டு தடவைகள்  தடை செய்யப்பட்டது.இரண்டு தடவைகள் அதன் தோழர்கள் மிகக்குரூரமான விதங்களில் கொன்று எரிக்கப்பட்டார்கள்,அல்லது புதைக்கப்பட்டார்கள்,அல்லது ஆறுகளில் வீசப்பட்டார்கள்.மொத்தம் 85 ஆயிரத்துக்கும் குறையாத தோழர்கள் அவ்வாறு கொன்றொழிக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது.

ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அந்த இயக்கமானது,தன் சொந்தச் சாம்பல் மேட்டில் இருந்து,தன் தோழர்களின் புதை மேட்டில் இருந்து மீண்டு எழுந்தது. தன்னைத் தேசிய மக்கள் சக்தியாக, தேர்தல் கவர்ச்சி மிக்க ஒரு புதிய கட்டமைப்பாக வளர்த்துக் கொண்டது. அதன் பின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் கனிகளை தேர்தல் மேடைகளில் வெற்றிகரமாக ஹைஜாக் பண்ணியது.போராட்டங்களில் பிரதானமாக பின்னணியில் நின்ற அமைப்புக்களால் தமது போராட்டத்தின் வெற்றிகளை தேர்தல் மொழியில் வெற்றிகரமாக மொழிபெயர்க்க முடியவில்லை.ஆனால் தேசிய மக்கள் சக்தி அதைச் செய்தது. இப்பொழுது ஆளும் கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது.

ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு எப்படி ஆளுங்கட்சியாக வர முடியும் என்பதற்கு அது ஓர் உதாரணம்.இனப்பிரச்சினை தொடர்பான என்.பி.பியின் நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் ஒர் ஆயுதப் போராட்ட அமைப்பு,ஏப்படி தேர்தல் மேடைகளில் வெற்றிபெற முடிந்தது என்ற விடயத்தில் அங்கு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு.

இங்கு ஒரு முக்கியமான கள நிலவர வேறுபாட்டை ஒப்பீடு செய்ய வேண்டும். 1980களின் இறுதியில்  நசுக்கப்பட்ட பின்னர்,ஜேவிபியின் அரசியலை கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கிருந்த பெரும்பாலான மேட்டுக்குடி மைய அரசியல் கட்சிகள் முயற்சிக்கவில்லை.முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஜேவிபியின் அரசியல் பாரம்பரியம் வேறு.அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் வேறு.அதனால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கே வேறு எந்தக் கட்சியும் இருக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டத்தின் நன்மைகளை,உன்னதங்களை கொப்பிரைட் எடுக்க முற்படும் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் மத்தியில், முன்னாள் இயக்கத்தவர்கள் தங்கள்தான் உண்மையான வாரிசுகள் என்று நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டது.ஆனால் அவ்வாறு தங்களை போராளிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதனால் அவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை கடந்த16 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும்.

எனவே தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவர்கள் ஜனநாயக வழியில் வேறு எதையோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதனை கடந்த 16 ஆண்டுகளும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளன.ஆயுதப் போராட்ட ஒழுக்கம் வேறு.தேர்தல்  அரசியல் ஒழுக்கம் வேறு.இரு வேறு அரசியல் களங்கள். இரண்டுக்குமான வெற்றி வியூகங்களும் உத்திகளும் தந்திரங்களும் வேறு வேறானவை.எனவே தேர்தல்மைய அரசியலுக்குரிய ஒழுக்கத்தை,அதற்குரிய தந்திரங்களை,தொழில் சார் திறன்களை  வளர்த்துக்கொள்ள வேண்டிய கால நிர்பந்தம் முன்னாள் இயக்கத்தவர்களுக்கு உண்டு.

இப்போதிருக்கும் தமிழ்த் தேசிய மிதவாத அரசியலில் பொய்யர்களும் நஞ்சர்களும் நவஞ்சகர்களும் திருடர்களுந்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று கருதுபவர்கள் நேர்மையான,கண்ணியமான,தமது வாக்காளர்களுக்கு உண்மையான,புதிய மாற்றத்தைக் காட்டவல்ல ஒரு ஜனநாயக அரசியல் வழியைப் பலப்படுத்த வேண்டும்.ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை எப்படி வென்றெடுப்பது என்று சிந்திக்க  வேண்டும்.

இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் முன்னாள் போராட்ட இயக்கங்கள்  எப்படி ஜனநாயக நீரோட்டத்துக்குள் தங்களை அடுத்த கட்டத்துக்கு தகவமைத்துக் கொண்டன என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இலட்சியவாதிகளும் நேர்மையானவர்களும் நல்லகண்ணுகளும் தேர்தல்மைய அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் ஆழமாக ஆராய வேண்டும்.

நேர்மையானவர்கள்,கண்ணியமானவர்கள்,உண்மையானவர்கள்,வாக்காளர்களுக்கு விசுவாசமானவர்கள்,தமது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பவர்கள்…தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்த எண்ணிக்கையில் ஈடுபடுவார்களாக இருந்தால்,தமிழ்த்தேசிய அரசியலிலும் புதிய மாற்றங்களைக் காட்டமுடியும். இப்பொழுது அதுதான் பொருத்தமான போராளித்துவம்.

https://athavannews.com/2026/1470350

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.