Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத் தீர்வு முயற்சியால் மரண ஓலங்களுக்கு முடிவோ நாட்டுக்கு விடிவோ கிடைக்காது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தீர்வு முயற்சியால் மரண ஓலங்களுக்கு முடிவோ நாட்டுக்கு விடிவோ கிடைக்காது

[12 - December - 2007]

* சிறுபான்மையினரை `போடுதடிகள்' என்று பெரும்பான்மையினர் நினைக்க இடமளிப்பது சாபக்கேடு

வ.திருநாவுக்கரசு

முத்தையா முரளிதரன் 709 ஆவது விக்கட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்து நாட்டுக்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்துள்ளார். அதன் பொருட்டு அவர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து வெகுவாக கௌரவிக்கப்பட்டார். அடுத்தது குமார் சங்கக்கார "டெஸ்ட்" போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைப் பெற்று தற்போது உலகளாவிய ரீதியில் முதலாவது இடத்தினைப் பிடித்துள்ளார். அவர் படைத்துள்ள இந்த சாதனையும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டுத்துறையினூடாக இலங்கை உலக வரை படத்தில் பொறிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 1996 இல் இலங்கை அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கிண்ணத்தினைத் தட்டிக் கொண்டபோது, அரசியல் தலைவர்களை விட, விளையாட்டு வீரர்களே நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்களாயுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

வடக்கிலும் தெற்கிலும் மரண ஓலங்கள்

நாட்டில் மனித உயிர்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. போர் முனைகளில் இடம்பெறும் இழப்புகள் ஒருபுறமிருக்க மறுபுறத்தில் விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் குண்டு வெடிப்புகள் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். வடக்கிலும் தெற்கிலும் மரண ஓலங்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதய சுத்தியாகவும் துணிச்சலாகவும் முழு மூச்சாகச் செயற்படுவதை விடுத்து இராணுவத் தீர்வில் குறியாயிருந்து அரசாங்கம் செயற்படும் வரை மரண ஓலங்களுக்கு முடிவோ, நாட்டுக்கு விடிவோ வரப்போவதில்லை என்பது நிதர்சனம். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அது விரைவில் ஒழித்துக்கட்டப்பட்டு விடும் என முரசு கொட்டுபவர்கள், வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றதாகவோ நாட்டின் எதிர்காலம் பற்றி கிஞ்சித்தும் நிதானமாகச் சிந்திப்பதாகவோ தெரியவில்லை. முதலில் தினம் தினம் நாட்டில் இடம்பெற்றுவரும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, களமுனையில் இடம்பெறும் கொலைகளை கிரிக்கட் ஓட்டங்கள் போன்று யாரும் கணக்கிட்டுக் கொண்டிருக்க முடியாது. யுத்தத்திற்கு பணத்தை இறைத்த வண்ணமிருப்பதன் காரணமாக வாழ்க்கைச் செலவு மக்கள் தலையின் மேல் தொங்கும் கத்தி போலாகிவிட்டது.

இராணுவத் தீர்வில் முனைப்பு- ஹரிஹரன்

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், யுத்த நிறுத்தம் தொடர்பாகப் பேச முடியாது. இவ்வாறு வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம "ஏசியன் ஏஜ்" எனும் ஊடகத்துக்களித்த செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தீர்வின் மீதான முனைப்பையே இது எடுத்துக் காட்டுகிறது. இளைப்பாறிய தெற்காசிய இராணுவப் புலனாய்வு நிபுணரும் 1987- 90 காலப் பகுதியில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் (IPKF) புலனாய்வுப் பிரிவின் தலைவராய்ச் செயலாற்றியவருமாகிய கேணல் ஆர்.ஹரிஹரன் சென்ற மாதம் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்ததைப் பார்ப்போம்.

"தனது அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உறுதி பூண்டு நிற்கும் அதேவேளை, இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வினைப் பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கும் அதேயளவு அர்ப்பணித்து நிற்கிறோம் என ஜனாதிபதி ராஜபக்ஷ அடிக்கடி கூறிவந்துள்ளதில் பயனெதுவும் இல்லை என்பதை களநிலைச் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. சமாதான முயற்சி விடயமானது பெரிதும் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. யுத்த பேரிகைகள் தான் முன்னணியில் காணப்படுகின்றன. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்ட நாள் முதல் சிங்கள வாக்கு வங்கிகளை தனதாக்கி சிங்கள மக்களின் தனிப்பெருந் தலைவராய்த் திகழ்வது தான் அவரின் மட்டற்ற விருப்பமாயிருந்தது. வேறு எதனையும் விட இதற்கே அவர் முன்னுரிமை கொடுத்தார்".

ஹரிஹரன் தொடர்ந்து கூறுகிறார். "சர்வதேச சமூகத்தினரின் அபிப்பிராயத்திற்குத் தீனி போடும் முகமாக உலக பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என வரும்போது அதன் முன்னணியில் தான் இலங்கையும் திகழ்கிறது என ஜனாதிபதி ராஜபக்ஷ சமாளித்து விட முற்பட்டுள்ளார். இந்த யுத்தம் வெல்லக்கூடியதென யுத்த விரும்பிகள் நினைக்கின்றனர். ஆனால், நாடு யுத்தம் காரணமாக எல்லா விதத்திலும் மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தீர்வற்ற கிளர்ச்சித்தடுப்பு நடவடிக்கைகள் எப்போதும் பொருளாதார வளர்ச்சியை சிதைப்பவையாகும். தற்காலிக இராணுவ வெற்றிகள் தெளிவான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை அல்ல. இலங்கை இதற்கு விதிவிலக்கானதல்ல.

ஏலவே, வாழ்க்கைச் செலவு கூரையைப் பிய்த்துச் செல்கிறது. வேலைவாய்ப்புக்கும் வருமானம் தருவதற்கும் பிரதானமாக விளங்கும் சுற்றுலாத்துறையானது வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவிடயம் தொடர்பாக உலக வங்கியின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி சமாதானத்தை விடுத்து யுத்தத்திலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகிறார் போல் தெரிகிறது" என்கிறார் ஹரிஹரன்.

வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பு;

நாளை மறுதினம் 2008 வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வெற்றி நிச்சயமென அரசாங்கத்தரப்பினரும் அரசாங்கத்தை தோற்கடிப்போமென எதிரணியினரும் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரவு - செலவுத்திட்டமானது எதுவித பிரயோசனமும் அற்றது. இதனை வாரக்கணக்கில் விவாதிப்பது அர்த்தமற்றதும் வெறுமனே காலம் கடத்தும் கைங்கரியம் எனவும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு (Cope) தலைவர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் அக்குவேறு ஆணி வேறாக கருத்து வெளியிட்டிருந்தார். அது ஒருபுறமிருக்க எதிர்வரும் வாக்கெடுப்பினைப் பொறுத்தவரை குறிப்பாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் (மு.கா.) இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் (இ.தொ.கா.) எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றன என்பது பிரதானமானதாகும். மு.கா.வைப் பொறுத்தவரை தாம் விரக்தியின் விளிம்பில் இருப்பதாக அதன் பொதுச் செயலாளரும் பிரதி அமைச்சருமான ஹசன் அலி மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார். கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் கூட முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அத்துமீறிய குடியேற்றங்கள் நிறுவப்படுவதாகவும் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் ஹசன் அலி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான பல விடயங்களை அவர் சென்ற வார இறுதி ஆங்கில இதழொன்றுக்கு (சண்டே லீடர்) வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை தம்மை அழைத்துப் பேசவோ, வாக்குறுதி எதையும் வழங்குவதற்குக் கூடவோ அரசாங்கம் முன்வரவில்லை எனவும் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த நிலையில் வரவு - செலவுத்திட்டத்தை எதிர்ப்பதை விட வேறு வழியில்லை எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினர் போடுதடிகள் என பேரினவாதிகள் எண்ண இடமளிப்பது மிக சாபக்கேடானதாகும். ஏனென்றால், கிழக்கை சிங்களமயமாக்குவதற்கு ஏலவே மேற்கொண்டு வந்த முயற்சிகளைத் துரிதப்படுத்துவதும் கைங்கரியத்தில் ஜாதிக ஹெல உறுமய ( JHU) முழு மூச்சாகச் செயற்பட்டு வருகிறது. இதனை போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்கவும் தெரிவித்திருந்தார்.

`இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளும் தீர்வுக்கான தேடலும்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் வினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆற்றிய தனதுரையிலேயே ரூபசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். குண்டுகள் வீசியும் விடுதலைப் புலிகள் தலைவர்களைக் கொலைசெய்வதாலும் பிரச்சினையைத் தீர்த்து விட முடியாதெனவும் வீண் பண விரயமே ஒழிய இனப் பிரச்சினைக்கு யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது எனவும் ரூபசிங்க சூளுரைத்துள்ளார். அத்தோடு முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டுமென அறிவுறுத்தவும் ரூபசிங்க தவறவில்லை.

ஆக, வரவு-செலவுத்திட்டத்தையும் மு.கா. தரப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்தமான கவலைகளையும் விரக்திநிலைமைகளையும் மீண்டுமொரு முறை நோக்குமிடத்து சூடுகண்ட பூனை அடுப்பண்டை போகாது என்பதுதான் மனதில் படவேண்டும்.

அடுத்து இ.தொ.கா. வைப் பொறுத்தவரை அரச தரப்பினருக்கும் இ.தொ.கா.வுக்கும் இடையிலான உறவுகள் எவ்வகையிலானவை என்பதை பெரிதும் விளக்க வேண்டியதில்லை. வரவு-செலவுத் திட்டத்தின் மீதான எதிர்வரும் வாக்களிப்பு விடயத்தை பொறுத்தவரை இ.தொ.கா. தரப்பினர் தமது முன்னைய முடிவை மீள்பரிசீலனை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், மலையகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வகைதொகையின்றி தக்க காரணமெதுவுமின்றி கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கமே தமது மக்களை அடாத்தாக கைது செய்துவிட்டு அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு காரணங்கள் கற்பிப்பதற்கு முற்பட்டு நிற்கின்றதென என இ.தொ.கா. வினர் எண்னினால் அவர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது சரியா, தவறா எனத் தீர்மானிப்பதும் அவர்கள் கையிலேயே உள்ளது.

இதனிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி விடயமாக அரசியலமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவருவதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றின் மீது மேலோட்டமாக பார்வை செலுத்தியுள்ள வட்டாரங்கள் அவற்றை வரவேற்றுள்ளன. அவற்றின் மீது கலந்துரையாடல் நடத்தி சாதகமான அணுகுமுறையினைக் கடைப்பிடித்தால் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு வழிபிறக்குமெனவும் எண்ணப்படலாம். ஐ.தே.க. வின் வரலாறும் அதன் சமகால போக்குகளும் தெரியாதவை அல்ல. இதுபற்றி பின்பு விரிவாக பார்ப்போம்.

http://www.thinakkural.com/news/2007/12/12...s_page42111.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.