Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் மயப்படுத்தப்படும் விடுதலைப்புலிகள் விவகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் மயப்படுத்தப்படும் விடுதலைப்புலிகள் விவகாரம்

-கலைஞன்-

விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை புலிகள் தொடர்பாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகளால் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய இராணுவ, கடற்படைத்தளபதிகளின் கருத்துக்கள் கடற்புலி முக்கியஸ்தர்களின் கைதுகள், அவர்கள் வெளியிட்டு வரும் பரபரப்புத் தகவல்கள் அது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் சூடான சுவாரஸ்யமான அறிக்கைகள் ஊடகங்களின் ஊகங்களென கடந்தவாரம் தமிழகமே பரபரப்பாகக் காணப்பட்டது.

கடற்புலி முக்கியஸ்தர்களின் கைது காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற புலி எதிர்ப்பு கட்சிகளை திருப்திப்படுத்தியுள்ள அதேவேளை இராணுவத் தளபதியின் கருத்து தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற புலி ஆதரவு கட்சிகளை திருப்திப்படவும் ஆறுதலடையவும் வைத்துள்ளதுடன் இவர்களுக்கு எதிரான பிரசாரத்தையும் வலுவிழக்கச் செய்துள்ளது.

கடந்தவாரம் சென்னை விமான நிலையத்திற்கருகில் கடற்புலிகள் சிலர் தங்கியிருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து அங்கு சென்ற பொலிஸார் ஜெயக்குமார், ஜேம்ஸ், ரவிக்குமார் ஆகிய மூன்று பேரை கைதுசெய்தனர். இவர்களில் ஜெயக்குமார் கடற்புலி முக்கியஸ்தரெனவும் ஜேம்ஸ் சிறந்த படகோட்டியெனவும் ரவிக்குமார் நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

இச்செய்தி தமிழக ஊடகங்களில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. ஒளிபரப்பப்பட்டன. தமிழகம் புலிகளின் குகையாகிவிட்டதெனவும், புலிகள் ஆயுதங்கள் கடத்தும் கேந்திர இடமாக தமிழகம் மாறி வருவதாகவும் அறிக்கையிட்ட ஊடகங்கள், புலிகளுக்கான ஆயுதக் கடத்தலுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டன.

இதனையடுத்து, ஊடகங்களில் கடற்புலிகள் தொடர்பாகவும் அவர்களின் ஆயுதக்கடத்தல்கள் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. சில ஊடகங்கள் கட்சி சார்புக் கொள்கையை கடைப்பிடித்து இவ்விவகாரத்தில் சில கட்சிகளை மாட்டிவிடக் கூடியவாறான செய்திகளையும் பிரசுரித்தன. சில அரசியல்வாதிகளை பெயர் குறிப்பிட்டும் குற்றஞ்சாட்டின.

கைது செய்யப்பட்ட கடற்புலிகள் தொடர்பாகவும் ஆயுதக் கடத்தல்கள் குறித்தும் ஊடகங்கள் தங்களது வியாபார, கட்சி நோக்கத்துக்காக தான்தோன்றித்தனமாக பிரசுரித்த ஒளிபரப்பிய செய்திகளால் பொலிஸாரே குழப்பமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமக்கு தெரியாத விசாரணைகளில் வெளிவராத பல விடயங்களை ஊடகங்கள் பிரசுரிப்பதைப் பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்;

விடுதலைப்புலிகள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் எம்மை ஆச்சரியமடைய வைக்கின்றன. அதேவேளை, குழப்பமடையவும் செய்கின்றன. இவ்வாறான செய்திகள் மூலம் நாம் மேற்கொண்டுவரும் புலன்விசாரணைகள் கூட பாதிப்படைகின்றன.

நாம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளியா சுற்றவாளியா என இனங்காண்பதற்கு முன்னர் ஊடகங்கள் கண்ணைமூடிக்கொண்டு அந்நபரை பயங்கர குற்றவாளிபோல் காண்பித்துவிடுகின்றன. எமது விசாரணையில் அவர் குற்றமற்றவராக காணப்பட்டு விடுதலை செய்யப்படும்போது ஒரு பயங்கர குற்றவாளியை நாம் விடுதலை செய்துவிட்டதாக பொதுமக்கள் எம்மீது குறைகூறுகின்றனர்.

தற்போது எம்மால் கைது செய்யப்பட்டுள்ள கடற்புலிகள் விடயத்திலும் ஊடகங்கள் பரபரப்பாக செயற்படுகின்றன. ஊடகங்களில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்திகளை பார்க்குமிடத்து அவை அதிக மிகைப்படுத்தல்களை கொண்டதாகவும் வியாபார நோக்குடையதாகவுமே காணப்படுகின்றன. இது எமது விசாரணைகளுக்கு இடையூறாகவேயுள்ளதெனத் தெரிவித்தார்.

தமிழக ஊடகங்களின் போக்கே இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில, சிங்கள ஊடகங்களிலும் காணப்படுகின்றன. அவை விடுதலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் வலையமைப்பு தமிழகத்தில் தகர்க்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை காலமும் தமிழகத்திலிருந்தே புலிகளுக்கு ஆயுதங்கள் வந்திருப்பதாகவும் செய்திகளை பெரியளவில் வெளியிடுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள கடற்புலிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்களுடன் தமிழகத்தின் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளதென்பது விசாரணைகளை மேற்கொண்டுவரும் கியூ பிரிவு பொலிஸாருக்கும் கைதானவர்களுக்குமே தெரிந்தவிடயம்.

உண்மையில் கடற்புலிகள் தான் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் தமது இரகசியங்களை வெளியிடுவார்களென்பது சந்தேகத்திற்குரியது. விடுதலைப்புலிகளிடமிருந்து இரகசியங்களை பெறுவதென்பது கல்லில் நாருரிப்பதற்கு சமமான விடயமென்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். அவ்வாறான நிலையில் கடற்புலிகளின் பரபரப்பு வாக்குமூலமென ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் எவ்வளவுக்கு உண்மையானவை என்பது கேள்விக்குறியே.

கடற்புலிகளின் விவகாரத்தால் தமிழகமே சூடாகிப் போயிருக்க விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகிவிட்டது. தமிழகத்திற்கு புலிகளால் எந்தவிதமான அச்சுறுத்தல்களுமில்லையென அதிர்ச்சிக் குண்டொன்றை தூக்கிப்போட்டு அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார் இந்திய இராணுவத்தின் தென்பிராந்திய தளபதி லெப்.ஜெனரல் நோபுள் தம்புராஜ்.

புலிகளின் நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படும் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்பிராந்தியத்திற்கே பொறுப்பான இராணுவ தளபதி விடுதலைப் புலிகள் தொடர்பாக இவ்வாறு கூறியுள்ள கருத்து பல விமர்சனங்களையும் விசனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழகத்தின் அரசியலாவிட்டதென இராணுவத்தளபதி கூறிய கருத்து நூற்றுக்கு நூறுவீதம் உண்மையானதென பலருக்கு தெரிந்திருந்தாலும் சிலர் அதனை ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப்படத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் அரசியல்வாதிகள் சிலர் தமது மேலிடம் மூலம் இந்த இராணுவத்தளபதி மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தளபதி கூறியதுபோல் விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகித்தான் விட்டது. விடுதலைப்புலிகளின் பெயரைக் கூறியே அரசியல் செய்ய வேண்டிய நிலையை தமிழகத்தின் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இலங்கையில் நடக்கும் விடுதலைப்புலிகளின் ஈழவிடுதலைப் போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்திவிட்டது.

இதேவேளை, இந்தியக் கடற்படையின் தமிழ்நாட்டுப் பிரிவின் தளபதி ஹல்டெரென் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் இலங்கையரசுக்கு சார்பானதாகவுள்ளதாக கண்டனக் குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்தன. தமதுநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை அவர் நியாயப்படுத்தி கருத்துக்களை கூறியிருந்தார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதில் உள்நோக்கம் எதுவுமேயில்லை. கடல் எல்லைகளை இரவு நேரங்களில் தமிழக மீனவர்கள் தாண்டும் போது அவர்களை விடுதலைப்புலிகளென நினைத்தே இலங்கை கடற்படையினர் சுடுகின்றனர். இலங்கை கடற்படை ஒரு தடவை கூட இந்திய எல்லைக்குள் நுழைந்து எமது மீனவர்களை சுட்டதில்லை. எனவே, இதில் உள்நோக்கம் எதுவுமில்லையென்பதே கடற்படைத் தளபதியின் வாதம்.

கடற்படைத் தளபதியின் இக் கருத்து தமிழக மக்களையும் மீனவ சமூகங்களையும் கொதிப்படைய வைத்துள்ளது. தினமும் இலங்கை கடற்படையால் தமது மீனவர்கள் சுடப்பட்டு சடலங்களாகவும் குற்றுயிராகவும் கரையொதுங்குவதைக் கண்டு மீனவர் சமூகங்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கையில் தமிழக மீனவர்கள் சுடப்படுவதை தமிழ்நாடு கடற்படைத்தளபதி நியாயப்படுத்தியிருப்பது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு முன்னெடுக்கும் பிரசாரங்களின் பின்னணியில் இந்தியாவின் உளவுப்பிரிவான `றோ' செயற்பட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடே தமிழகம் புலிகளின் குகையாகி விட்டதென காண்பிப்பதற்கு நடத்தப்படும் புலிக் கைதுகளும் ஆயுதக் கடத்தல் முறியடிப்பு கதைகளுமாகும்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் புலிகளுக்கு ஆதரவான சூழ்நிலையால் கலக்கமடைந்திருக்கும் `றோ' அதனை தடுப்பதற்குரிய அத்தனை சூழ்ச்சிகளையும் தற்போது காங்கிரஸ் கட்சியினர் மூலம் முன்னெடுத்து வருகின்றது. காங்கிரஸும் தமது கட்சியின் செயற்பாடுகளுக்கு இதன் மூலம் ஒரு தளத்தை உருவாக்கிட முடியுமென நம்புகின்றனர்.

அண்மையில் திடீரென ஊடகவியலாளர்கள் முன் தோன்றிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு பிரபாகரனே காரணமெனக் கூறியதற்கும் அதன் பின்னர் தமிழக அரசு தொடர்பாக கடுமையாக விமர்சித்ததற்கும் பின்னணியில் `றோ' வின் செயற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்றே புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வீதிமறியல்கள், கொடும்பாவி எரிப்புகள் , சுவரொட்டி , பதாகைகள் அகற்றல் போன்ற நடவடிக்கைகளை `றோ' வே தூண்டிவிட்டது. அத்துடன் புலிகள் தொடர்பாக தினமும் ஏதாவது செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதற்கும் `றோ' ஏற்பாடுகளை செய்துள்ளது.

இவ்வாறான நெருக்கடிகளை தி.மு.க. கூட்டணி அரசுக்கு கொடுப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை தமிழகத்தில் அடியோடு இல்லாமல் செய்து விடலாமென்பதே றோவின் திட்டம். தமிழகத்தில் புலிகளின் ஆதிக்கம் என்றதான மாயை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழக அரசை மத்திய அரசின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே றோ விரும்புகிறது.

இதேவேளை, தமிழகத்தில் கடற்புலிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நீண்ட அறிக்கையொன்றை விடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவியுமான ஜெயலலிதா புலிகளுக்கும் தமிழக அரசுக்குமிடையிலான உறவு குறித்து கடுமையாக சாடியிருந்ததுடன் புலிகள் தொடர்பான தனது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு தனது சிறுகவிதை ஒன்றின் மூலம் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆரை விட நான் புலிகளுக்கு அதிகமாக எதனையும் செய்யவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஈழம் ஒன்றே தீர்வென `இந்து' வுக்கு கூறிய அம்மையார் இன்று பொய்மூட்டைகளுடன் உலாவித் திரிகிறார் என தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தென்பிராந்திய இராணுவத்தளபதி கூறியது போல் விடுதலைப் புலிகள் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென்பதே உண்மை.

-தினக்குரல்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.