Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலையில் சிக்கிய படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் சிக்கிய படையினர்

[27 - April - 2008]

விதுரன்

வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது.

வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்திற்கும் மேல் தேவைப்பட்டது. இது, வன்னியில் இடம்பெறும் படை நடவடிக்கையில் படையினர் எந்தளவுக்கு தடுமாறுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக வவுனியாவிலிருந்து தொடங்கிய படை நடவடிக்கை அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவிக்கிறது. அதேநேரம், வவுனியாவிலிருந்து சென்று கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதற்கிடையில் விடுதலைப் புலிகள் யாழ்.குடா நாட்டை முற்றுகைக்குள் கொண்டு வந்து விடுவரென்ற அச்சமும் படையினர் மத்தியிலிருக்கிறது. இதனால் தென்மராட்சியின் கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து முன்நகர்வதன் மூலம் விரைவில் கிளிநொச்சி சென்றுவிடலாமென்ற எண்ணம் படையினரிடமுள்ளது.

இதனால்தான் வடபோர் முனையில் படையினர் மீண்டும் மீண்டும் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு ஆனையிறவு வரையாவது சென்றுவிட முயல்கின்றனர். எனினும், வடபோர் முனை என்றுமே தாக்குதல் சமருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமென்பதை படைத்தரப்பு இன்னமும் புரிந்துகொள்ளாதது பெரும் ஆச்சரியமாயிருப்பதுடன் புலிகளின் பலம் குறித்து அவர்கள் தொடர்ந்தும் தவறான கணிப்பீட்டை கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

2000 ஆம் ஆண்டில் ஆனையிறவைக் கைப்பற்றிய புலிகள் முகமாலை, கிளாலி வரை முன்நகர்ந்திருந்தனர். யாழ் நகர நுழைவாயிலுக்கும் சென்றிருந்தனர். எனினும், யாழ் நகரிலிருந்து புலிகள் பின்வாங்கவே, வடபோர் முனையின் எல்லை கிளாலி- முகமாலை- நாகர்கோவிலாக அமைந்தது. ஆனையிறவை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் இந்தக் களமுனையிலிருந்து படையினர் ஆனையிறவை நோக்கி மிகப்பெரும் படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர். `தீச்சுவாலை' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை நடவடிக்கை, தொடங்கிச் சில மணிநேரத்திலேயே முடிவுக்கு வந்தது.

பல நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட ஆயிரம் படையினர் வரை படுகாயமடைந்தனர். இதில் அங்கவீனமான படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தப் படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வி அப்போதைய சந்திரிகா குமாரதுங்கவின் அரசை அதிரவைத்தது. தாங்கள் முகமாலையில் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்ததாக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருந்தார். இந்தத் தோல்வியே பின்னர் ஐ.தே.க. அரசை புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாட்டை கைச்சாத்திடும் நிலைக்கு இட்டுச் சென்றதெனக் கூடக் கூறலாம். அந்தளவிற்கு இந்தக் களமுனையில் `தீச்சுவாலை' படை நடவடிக்கை பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன் பின் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே களமுனையில் பாரிய படை நகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனையிறவை நோக்கிய நகர்வாக அது இருக்குமெனக் கூறப்பட்டது. படையினர் தங்கள் சகல வளங்களையும் ஒன்று திரட்டி டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதம் கிளாலி மற்றும் முகமாலைப்பகுதியிலிருந்து முன்நகர்வை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் படையினர் பாரிய படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர் என்ற செய்தி வெளியுலகிற்கு தெரியவரமுன்னர் இந்தப் படை நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டது.

சுமார் மூன்று மணி நேரத்தில் 190 படையினர் கொல்லப்பட 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆறு டாங்கிகள் அழிக்கப்பட்டன. அரசுக்கு இது பேரிடியாக அமைந்தது. இந்தத் தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இந்தப் பிரதேசம் மீது படையினரின் கவனம் திரும்பியது. இதனூடாக புலிகளின் பகுதி நோக்கி எப்படியாவது பாரிய முன்நகர்வை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்திய அதேநேரம் இந்தப் பிரதேசத்தில் புலிகளின் முன்னேற்ற முயற்சியையும் தடுத்துநிறுத்த வேண்டுமென்றதொரு நிலையையும் ஏற்படுத்தியது.

இதனால் 2007 ஆம் ஆண்டு முற்பகுதியில் இதே கள முனையில் படையினர் மீண்டுமொரு முறை பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டபோது அதனையும் புலிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். ஏற்கனவே இரு முறை இந்தக் களமுனையில் பெற்ற அனுபவத்தின் மூலம் இங்கு பாரிய படை நகர்வு மேற்கொள்ளப்பட்டதால் இழப்புகள் சற்று குறைந்தது. எனினும், இந்தப் படைநகர்வும் பெரும் தோல்வியில் முடிவடையவே, இங்கு புதிய தந்திரத்தை பயன்படுத்தி பாரிய படைநகர்வை மேற்கொள்ள படைத்தரப்பு ஆலோசித்தது. இதற்காக குடாநாட்டினுள் டாங்கிகள், கவச வாகனங்களை தருவித்து கவசப் படையணியை வெகுவேகமாக உருவாக்கினர்.

அடுத்து வரும் படைநகர்வுகளில் டாங்கிகள், கவச வாகனங்களை முன்னிறுத்தி, கிளாலி முதல் முகமாலை வரையான சுமார் ஏழு கிலோ மீற்றர் அகலம் கொண்ட குறுகலான பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கைக்கேற்ப திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. டாங்கிகளும் கவச வாகனங்களும் முன்னே செல்ல ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுகளையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் மழைபோல் பொழிந்தவாறு புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைவதுதான் படையினரின் திட்டம். புலிகளின் முதலிரு முன்னரங்க பாதுகாப்பு நிலைகளையும் (Forward Defence Line) கைப்பற்றி அவர்களின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பின்னர் வெகுவேகமாக முன்னேறிவிட முடியுமென்பது படையினரின் திட்டம்.

முதலிரு முன்னரங்க பாதுகாப்பு நிலைகளையும் தான் புலிகள் பொறிகளாக வைத்து முறியடிப்புச் சமருக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாக படையினர் கருதினர். இதற்கேற்ப வடபோர் முனையில் புதியதொரு களமுனையை திறக்கப்போவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கூறியிருந்தார். யாழ். குடாநாட்டுக்கு இம்மாத முற்பகுதியில், தமிழ் ஊடகவியலாளரைத் தவிர்த்து சிங்கள மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அழைத்து விரைவில் வடபோர் முனையில் புதிய களமொன்று திறக்கப்படுமெனக் கூறியிருந்தார்.

எனினும், எந்தவொரு மரபு வழி படையணியும் தான் எங்கு புதிய களமுனையை திறக்கப் போகின்றதெனக் கூறி எதிரியை உஷார்படுத்திவிட்டு பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளாதென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக வடபோர் முனையில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் புதியதொரு சமர்க்களத்தை திறக்க படைத்தரப்பு முடிவு செய்தது. இதற்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிக்கு டாங்கிகளும் கவசவாகனங்களும் நகர்த்தப்பட்டு 23 ஆம் திகதி புதன்கிழமை பாரிய படை நகர்வை மேற்கொள்ளவும் திகதி குறிப்பிடப்பட்டது.

படையினரின் இந்த ஏற்பட்டை புலிகளின் புலனாய்வாளர்கள் அறிந்து விடவே முதல்நாள் 22 ஆம் திகதி முகமாலை மற்றும் கிளாலி பகுதியில் படையினரின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகள் மீதும் ஆயுதக் களஞ்சியங்கள் மீதும் புலிகள் மிகக் கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலை திடீரென நடத்தினர். இந்தத் தாக்குதலில் முகமாலைப் பகுதியில் படையினரின் டாங்கியொன்று அழிக்கப்பட்டது. அதைவிட படையினரின் இரு ஆட்லறி ஏவுதளங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. கிளாலி சந்திக்கு அருகிலுள்ள ஆட்லறி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பற்றி (6 ஆட்லறிகள்) ஆட்லறிகள் மீதும் புலிகளின் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதன்போது ஆட்லறி ஷெல் களஞ்சியமும் தீப்பற்றி எரிந்துள்ளது. கிளாலி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்லறிகளில் குறைந்தது 3 ஆட்லறிகள் சேதமடைந்திருக்கலாமென விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவித்தன. இவ்வேளையில் முகமாலைக்கு பின்னால் எழுதுமட்டுவாளிலுள்ள ஆட்லறி ஏவுதளம் மீதும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததாகவும் இங்கும் ஆட்லறிகள் சேதமடைந்திருக்கலாமெனவும் அந்தச் செய்திகள் தெரிவித்ததுடன் ஷெல் களஞ்சியத்திற்கும் சேதமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவசர அவசரமாக பலாலிக்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் மறுநாள் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆராய்ந்து விட்டு கொழும்பு திரும்பினார்.

இதற்கமைய மறுநாள் அதிகாலை 2 மணியளவில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் பாரிய படைநகர்வு ஆரம்பமானது. கெமுனு படையணியையும் விஜயபா காலாட் படையணியையும் கொண்ட 53 ஆவது படையணியும் 53-3 ஆவது படையணியும் `ஏ9' வீதிக்கு தெற்காக (முகமாலைக்கும் கிளாலிக்குமிடையில்) புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர, 55 ஆவது படையணி `ஏ9'வீதிக்கு வடக்காக (கிளாலிக்கும் நாகர்கோவிலுக்குமிடையில்) புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்ந்தன. 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டார தனது படையணியையும் 55 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரட்ன தனது படையணியையும் வழிநடத்தினர்.

`ஏ9' வீதியின் இருபுறங்களாலும் இவ்விரு படையணிகளும் நகர்ந்து புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலைகளை நோக்கிச் சென்றபோது அவர்களது முன்நகர்வுக்கு ஆதரவாக ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுகளும் புலிகளின் நிலைகளை நோக்கி மழை போல் பொழிந்தன. படையினரின் முன்னரங்க நிலைகளுக்கு பின்னாலிருந்து டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களிலிருந்தும் பீரங்கிகள் முழங்க முன்நகரும் படையணிகளுக்கு முன்னால் குண்டு மழை பொழிய அந்தப் பாதுகாப்பில் புலிகளின் பகுதியை நோக்கி படையணிகள் நுழைந்தன.

புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை உடைத்தபின் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் இணைந்து புலிகளின் 2 ஆவது முன்னரங்க நிலைகளை உடைத்துக் கொண்டு முன்னேறுவதும் அதனைத் தொடர்ந்து கவசப் படையணி புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்து பின் வேகமாக முன்னேறிச் செல்வதும் தான் படையினரின் திட்டமாகும்.

இதற்கேற்ப கிளாலிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே நகர்ந்த 55 ஆவது படையணி புலிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில் அவர்களது முதலாவது முன்னரங்க நிலையைத் தாண்டிச் சென்றது. எனினும் முகமாலைக்கும் கிளாலிக்குமிடையே புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்ந்த 53 ஆவது படையணி மீது விடுதலைப் புலிகள் மிகவும் உக்கிரமான தாக்குதலை தொடுக்கவே அவர்களால் முன்நகர முடியாது போனதுடன் முன்நகர்ந்து வந்த படையணியொன்றை மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்பளித்த புலிகள் அவர்களைப் பொறிக்குள் சிக்க வைப்பதற்காக தங்கள் நிலைகளிலிருந்து சிறிது பின்நகரவே 53 ஆவது படையணியின், கெமுனு படையணியின் ஒரு பிரிவும் விஜயபா காலாட் படையணியின் ஒரு பிரிவும் மேலும் முன்நகர்ந்து வர புலிகள் திடீரென அவர்களைப் பிரிக்கும் விதத்தில் அவர்களுக்குப் பின்புறமாக கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மழைபோல் பொழிய அவர்கள் புலிகளின் பொறிக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதற்கிடையில், விடியும் வேளைக்கு முன்பாக புலிகளின் முதலாவது முன்னரங்க நிலையை தாண்டிய 55 ஆவது படையணி, ஏற்கனவே திட்டமிட்டவாறு புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைக்கப்பால் 53 ஆவது படையணியுடன் இணைந்து முன்னேறுவதற்காக 53 ஆவது படையணிக்காக காத்திருந்தது. எனினும் விடிந்து விட்ட போதும் 53 ஆவது படையணி திட்டமிட்டவாறு அவ்விடத்திற்கு வராததால் மேலும் முன்னேறுவதா அல்லது 53 ஆவது படையணியையும் இணைத்துக் கொண்டு முன்னேறுவதா எனத் தடுமாறியது. அதேநேரம், 53 ஆவது படையணி இல்லாது மேலும் முன்னேறுவதென்பது தங்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுமென உணர்ந்த போது புலிகள் 55 ஆவது படையணி மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.

இந்தநேரத்தில், முகமாலைக்கும் கிளாலிக்குமிடையே முன்னேறிய போது புலிகளின் பொறிக்குள் சிக்கிய கெமுனு படையணியும் விஜயபா காலாட் படையணியும் பலத்த இழப்புக்களைச் சந்தித்தன. புலிகளால் முற்றுகையிடப்பட்ட அவர்கள் புலிகளின் கடும் தாக்குதலுக்கிலக்காகினர். காலை 8 மணி முதல் 10 மணி வரை இவர்கள் மீது புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கவே 53 ஆவது படையணியால் மேலும் முன்னேற முடியவில்லை. புலிகளின் பொறிக்குள் சிக்கிய படையணிகள் அந்த முற்றுகையை முறியடிக்க மிகக் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது.

`ஏ 9' வீதியை மையமாக வைத்து அதன் இரு புறங்களாலும் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் முன்னேறிய போது இரு படையணிகளையும் இணைய விடாது அவர்களுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி படை நடவடிக்கையை தோல்வியுறச் செய்ய வேண்டுமென்பதே புலிகளின் திட்டமாகும். அதற்கேற்பவே 55 ஆவது படையணிக்கு முதலில் கடும் எதிர்ப்பு காட்டாது அவர்களைத் தங்கள் முதல் முன்னரங்க நிலைகளுக்குள் வரவிட்ட புலிகள் 53 ஆவது படையணியை மையமாக வைத்து அவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையாகத் தாக்கி அவர்களை முன்னேற விடாது தடுத்து இரு படையணிகளும் தங்கள் முதலாவது முன்னரங்க நிலைகளுக்கப்பால் ஒன்றிணைவதைப் புலிகள் தடுத்து நிறுத்தினர்.

புலிகளின் இந்தத் தந்திரோபாயத் தாக்குதலால் 53 ஆவது படையணி புலிகளது முதலாவது முன்னரங்க காவல் நிலைகளுக்கு முன்னால் கடுமையான பதிலடிக்குள்ளாகி பலத்த இழப்புகளைச் சந்திக்க, `ஏ9' வீதியின் மற்றப் பக்கத்தால் முன்னேறி வந்த 55 ஆவது படையணியை தங்களது முதலாவது முன்னரங்க நிலைக்கும் 2 ஆவது முன்னரங்க நிலைக்குமிடையில் வைத்து மிகக் கடுமையாகத் தாக்கி அவர்களுக்கும் புலிகள் பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நாகர்கோவிலுக்கும் முகமாலைக்குமிடையே முன்னேறி வந்த 55 ஆவது படையணி புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி அதற்குள் நிலையெடுத்த போது, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த முன்னரங்க நிலையை நோக்கி புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழியவே 55 ஆவது படையணியினர் நிலைகுலைந்து போயினர். தங்களது முதலாவது முன்னரங்க நிலையுள்ள தூரத்தை துல்லியமாகக் கணித்திருந்த புலிகள் அதற்குள் நிலை கொண்டிருந்த படையினர் மீது ஷெல்களையும் மோட்டார்களையும் மழைபோல் பொழிந்து படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தினர்

ஒருபுறம் `ஏ 9' வீதிக்கு தெற்கே 53 ஆவது படையணியை முன்னேற விடாது தடுத்து நிறுத்தி பொறிக்குள் சிக்கவைத்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் மறுபுறம் `ஏ9' வீதிக்கு வடக்கே 55 ஆவது படையணியை முன்னேறவிட்டு அவர்களை தங்கள் எல்லைக்குள் வர அனுமதித்து தாக்கி அவர்களுக்கும் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த முறியடிப்புச் சமருக்கு புலிகள் சுமார் எண்பது ஆட்லறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி சுமார் ஏழு கிலோ மீற்றர் அகலத்தில் இருக்கும் கிளாலிக்கும் முகமாலைக்குமிடையே முன்னேறிய படையினரை தாக்கி பலத்த சேதம் விளைவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

`ஏ9' வீதியின் இரு புறத்திலும் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் சந்தித்த கடும் இழப்பையடுத்து இராணுவ தலைமைப்பீடத்தின் அவசர உத்தரவின் பேரில் முன் நகர்வு முயற்சி நிறுத்தப்பட்டு படையணிகள் பழைய இடங்களுக்கு திருப்பி அழைக்கப்பட்டன.

ஒட்டகத்தின் கழுத்து போன்ற அகலம் குறைந்த மேற்படி பகுதியில் `ஏ9' வீதியை மையமாக வைத்து தங்கள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களை பிரதானமாகப் பயன்படுத்தி தங்கள் தரப்புக்கு மிகவும் குறைந்த சேதத்துடன் (25 போராளிகள் பலி) படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி ( சுமார் 200 படையினர் பலி 500 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயம்) வடபோர்முனையில் தங்கள் பலத்தை புலிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

வடபோர் முனையில் `தீச்சுவாலை' உட்பட நான்காவது முறைபடையினர் பலத்த இழப்புடன் படைநடவடிக்கையில் தோல்வியடைந்துள்ளனர். இந்தத் தோல்வியால் 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டார உடனடியாக அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இப்பதவிக்கு 55 ஆவது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் கமல் குணரட்ன நியமிக்கப்படுவதுடன் 55 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாக மாவிலாறு மற்றும் வாகரை படை நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய பிரிகேடியர் பிரசன்ன சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சமரை விடுதலைப் புலிகளே ஆரம்பித்ததாக படைத் தரப்பு கூறிவருகிறது. புதன் கிழமை இந்தச் சமர் ஆரம்பமான செய்திவெளிவந்த நேரம் முதல், வடக்கே படையினரே புலிகளின் பகுதிநோக்கி பாரிய படைநகர்வை மேற்கொண்டுள்ளதாக படைத் தரப்பு கூறிவந்தது. எனினும் இந்தப் படைநகர்வு பெரும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து புலிகளே இங்கு தாக்குதலை ஆரம்பித்ததாகவும் படையினர் அதனை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும் கூறியதன் மூலம் படையினர் தங்கள் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

வடக்கே தற்போது வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் முகமாலை பகுதியில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு களமுனையும் ஒவ்வொரு விதமானது. வவுனியா, மணலாறு களமுனைகள் அடர்ந்த காடுகளைத் கொண்டதால் அங்கு படைநகர்வு மிகமிக மந்தமாகவேயுள்ளது. புலிகளுக்கு அது வாய்ப்பாக உள்ளது. படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். இதேநேரம் மன்னார் களமுனை திறந்த வெளிகளைக் கொண்டிருப்பதால் படைபலமும் ஆயுத வளமும் அதிகமுள்ள படைத்தரப்புக்கு சற்று சாதகமாயுள்ளது. அதேநேரம் யாழ். குடா களமுனை எவ்வாறுள்ளதென்பதற்கு முகமாலைச் சமர் நல்ல உதாரணம்.

இவ்வாறு வடபகுதி போர்க்கள நிலைமைகளிருக்கையில் அங்கு படைநடவடிக்கையை தொடர்ந்து நடந்தி மேலும் மேலும் பாரிய உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தவே அரசு முயல்கிறதே தவிர இனியாவது இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அரசு முனையாதா என்ற கேள்வியே அனைவர் மத்தியிலும் எழுகிறது.

http://www.thinakkural.com/news/2008/4/27/...u_nilavaram.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.