Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரும்பிப் பாருடி!

Featured Replies

romance.jpg

தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வருபவர்களாம். வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதி பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்திருந்ததை தமிழய்யா கவனித்திருக்க வேண்டும். சட்டென்று Gear மாற்றி, ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக சுழற்றி மெதுமெதுவாக சுவாரஸ்யத்தை ஏற்றத் தொடங்கினார். தமிழய்யா எப்போதுமே இப்படித்தான், எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்து தருவது போல.. பொண்ணு, சினிமா என்று அவ்வப்போது சூடேத்தி பாடம் நடத்துவார்.

“எலேய் கிருட்டிணகுமார். உன்னை ஒரு பொண்ணுக்கு புடிச்சிருந்தா, அவளுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு எப்படிய்யா கண்டுபுடிப்பே?”

பாதித்தூக்கத்தில் இருந்த நான் என் பெயர் உச்சரிக்கப்பட்டதுமே திடுதிப்பென்று கையை காலை உதறி சப்தமெழுப்பியவாறு எழுந்தேன். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில் திடுக்கிட்டு முழித்ததில் அவன் வாய் சடாரென்று மூடிக்கொள்ள, ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஈ அந்த நேரம் பார்த்து அவன் வாயில் மாட்டிக் கொள்ள, இன்னொரு ஈயோ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலைதெறிக்க ஓடியது. ஈ வாய்க்குள் மாட்டிக் கொண்டதால் ஒரு மாதிரியாக இருமினான். கண்களில் நீர் முட்டியது. வாய்க்குள் ஏதோ மாட்டிக் கொண்டது அவனுக்கு தெரிந்திருந்தாலும், எது மாட்டியது என்று தெரியாமல் விழித்தான்.

“ம்ம்... அய்யா... அது வந்து” வெட்கத்தோடு நின்றபடியே காலால் கோலம் போட்டேன்.

“ஆம்புளைப் புள்ளே தானே? என்னல்லே வெட்கம்?”

“வந்து.. வந்து.. என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு'ன்னு சொல்லுவா...”

“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?” கேட்டுவிட்டு வினோதமாக சிரித்தார். தமிழய்யா நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கும். வகுப்பறை மெதுவாக சோம்பல் முறிக்கத் தொடங்கியது. 'பொண்ணு, புடிச்சிருக்கு' வார்த்தைகளை கேட்டதுமே அவனவன் கண்ணில் எச்சில் தொட்டு, தூக்கத்தை விரட்டி ரெஃப்ரெஷ் ஆனான்கள்.

“தெரியலை அய்யா.. எப்படி கண்டுபுடிக்கிறது?” தமிழய்யாவுக்கு நான் செல்லமான சீடன் என்பதால் அவரிடம் அதிக உரிமையை இயல்பாகவே எடுத்துக் கொள்வேன்.

“மூதி.. நாஞ்சொல்றதை கேளு.. ஒரு தெருவோட இந்த முனையிலேருந்து நீ நடந்துப் போறே.. இன்னொரு முனையிலேருந்து ஒரு வயசுப்பொண்ணு நடந்து வர்றா.. அந்தப் பொண்ணை உனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் க்ராஸ் பண்ணுறீங்க.. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ நிமிர்ந்து அவளை பாத்திடுவே. அவ பொண்ணு இல்லையா? அவளுக்கு புடிச்சிருந்தாலும் உன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டா.. உனக்கு தெரியாமலேயே உன்னை ஓரக்கண்ணாலே எப்படியோ பார்த்துடுவா.. தெருவோட அந்த முனைக்கு அவளை திரும்பி, திரும்பி பார்த்துக்கிட்டே நீ நடந்து போயிடுவே. இந்த முனைக்கு வந்தவளுக்கு உன்னை புடிச்சிருந்தா கட்டாயம் ஒரு தடவை திரும்பிப் பார்ப்பா.. மனசுக்கு பிடிச்சவனை மட்டும் தான் ஒரு பொண்ணு திரும்பிப் பார்ப்பா.. ஆம்பளைப் பயலுக தான் வெறிநாய்ங்க மாதிரி வத்தலோ, தொத்தலோ.. பொண்ணுன்னு இருந்தா எல்லாத்தையும் பார்ப்பான்.. இதைப் பத்தி தான் இலக்கியத்துலே சொல்லியிருக்கான்....”

தமிழய்யா பாடத்தை தொடர, ஜிவ்வென்று என் மனம் இறக்கை கட்டி விண்வெளியில் ராக்கெட் மாதிரி பறக்கத் தொடங்கியது.

வகுப்பு முடிந்து டியூஷனுக்கு செல்ல வேண்டும். செந்திலும் என்னோடு தான் டியூஷன் படித்தான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் எதுவும் பேசவில்லை.

“மச்சான். தமிழய்யா என்ன சொன்னாருன்னு கேட்டியா?” அவனுக்கு இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதாவது தெரியுமா என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன்.

“மசுர சொன்னாரு. அந்த ஆளு போடுற ப்ளேடு வர வர தாங்க முடியலை” ஒரு ஈயை முழுங்கிய சோகம் அனலாக அவன் வாயில் இருந்து வெளிவந்தது.

“நான் ட்ரை பண்ணி பார்க்கப் போறேண்டா”

கொஞ்சம் ஆவலோடு “யார் கிட்டே?”

“வேற யாரு. குமுதா கிட்டே தான்! என்னாம்மா சிரிக்கிறா. சுத்தமா ஃப்ளாட் ஆயிட்டேண்டா!”. அப்போது குமுதா மீது கடலளவு காதல்வசப்பட்டிருந்தேன். மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி அதற்கு கீழும், இரு பக்க வாட்டிலும் சிறிய அளவில் வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். சிகப்பு என்று சொல்லமுடியாத மாநிறம். அவளுடன் படித்த மற்ற பெண்கள் பாவாடைத் தாவணியில் வரும்போது, கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் அவள் மட்டும் பாவாடைச் சட்டை தான் போட்டிருப்பாள். அது ஏன் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை. சில காலம் கழித்தே அதற்கு காரணம் தெரிந்தது.

“மச்சி. சொல்றேனேன்னு தப்பா நெனைச்சிக்காதே. அது திம்சு கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே. வேலைக்கு ஆவுமாடா!” என் பர்சனாலிட்டியை நினைத்து எனக்கே கோபம் வந்தது. இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் என் முகம் அழகாகவே எனக்கு தெரிந்து வருகிறது. லைட்டாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லைன்னு ஆயிடுமா என்ன? அர்னால்டுக்கு கூடத்தான் டொக்கு இருக்கு.

“இல்லை மாமா. எனக்கு நம்பிக்கையிருக்கு. ட்யூஷன்லே கூட ஒருமுறை என்னைப் பார்த்து சிரிச்சிருக்கா!”

“சரி மச்சான். உன் நம்பிக்கைய நான் கெடுப்பானேன். அவளும் ட்யூஷனுக்கு சைக்கிள் எடுக்க வருவா இல்லே. அப்போ உன்னை திரும்பிப் பார்க்குறாளான்னு டெஸ்ட் பண்ணிப்போம். அதுக்கப்புறமா என்ன செய்யணுமோ அதை செஞ்சிப்போம்” நல்லவேளையாக ஒவ்வொரு ஹீரோவுக்கும் சின்னிஜெயந்த், விவேக் மாதிரி இதுபோல ஒரு நண்பன் அமைந்துவிடுகிறான்.

சிறிது நேரம் காத்திருந்தோம். லேடிஸ் செக்‌ஷன் கேர்ள்ஸை, பாய்ஸ் செக்‌ஷன் விட்டபிறகு ஒரு பத்துநிமிட இடைவெளி கழித்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்புவார்கள். புஷ்பவல்லி மேடம் இந்த விஷயத்தில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். புஷ்பவல்லி மேடத்தின் இந்த கண்டிஷன்களால் வெறுப்பானவர்கள் சில நேரங்களில் வெறுத்துப் போய் அந்த மேடத்தையே சைட் அடிப்பதும் உண்டு.

டென்ஷனில் பத்துவிரல்களில் இருந்த நகத்தையெல்லாம் கடித்தேன். கட்டைவிரலில் லேசாக இரத்தம் எட்டிப் பார்த்தது. கடிக்க நகம் இல்லாமல் வெறுப்பாக இருந்தது. கால் நகத்தை தூக்கி வைத்து கடிக்கலாமா என்று நான் எண்ணியிருந்த வேளையில் நிறைய பச்சைத் தாவணிகள் சைக்கிள் ஸ்டேண்ட் நோக்கி வந்தார்கள். என்னோட ஆளைத் தவிர எல்லா மொக்கை பிகர்களும் வந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு போனார்கள்.

தூரத்தில் என்னோட ஆளு ஸ்டைலாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள். புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு.. கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. புருவம் ட்ரிம் செய்யப்பட்டிருந்தது. இமைகளுக்கு இருபுறமும் லேசாக மையை இழுத்து விட்டிருந்தாள். நேராக வந்து சைக்கிளை எடுத்தவள் இரண்டு பேர் அவளுக்காக நின்று கொண்டிருந்ததை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தமிழய்யா சொன்னது நினைவுக்கு வந்தது

“அவளுக்கு புடிச்சிருந்தாலும் உன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டா.. உனக்கு தெரியாமலேயே உன்னை ஓரக்கண்ணாலே எப்படியோ பார்த்துடுவா.. ”

சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், அப்படியே சீட்டில் உட்கார்ந்து ஃபெடலை மிதிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம், கொஞ்சமாக என்னை விட்டு விலகிச் சென்றவள் திரும்பிப் பார்ப்பாளா என்று ஏக்கத்தோடு அவளையே இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில அடிகளில் திருப்பம் வந்து விடும். திரும்பி விட்டால் தீர்ந்தது.. செந்தில் வேறு கிண்டல் செய்வான். வெறுப்பில் சட்டென்று என் சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.

திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக குமுதா சட்டென்று ஒரே ஒரு நொடி என்னை திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒர் நொடியில் அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தது போல எனக்குப் பட்டது. ”ஆஹா.. இதற்காகத்தானே காத்திருந்தாய் திருக்குமரா” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, “மச்சான்.. பார்த்துட்டாடா... சக்ஸஸ்!! சக்ஸஸ்!!” என்று கத்தினேன்.

“போடாங்.. பெல் அடிச்சா பொண்ணு என்னா, கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம் தாண்டா திரும்பிப் பார்க்கும்” மேலே இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நான் திடீரென்று இறக்கைகள் மறைந்து போனதை போல தடாலென்று கீழே விழுந்தேன்.

அதன்பின் பல சந்தர்ப்பங்களில்.. டியூஷனில், ஐயப்பன் கோயிலில், கிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க சென்ற நேரத்தில் என்று பல இடங்களில் அவளை பார்த்து, அவள் என்னை திரும்பிப் பார்க்கிறாளா என்று ஏங்கி, ஏங்கி ஏமாற்றம் அடைந்தேன். ஒருவேளை ஸ்கூல் யூனிபார்மில் என் பர்சனாலிட்டி கம்மியாக இருப்பதால் தான் அவள் என்னைப் பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

செந்தில் உட்பட யாருக்கும் சொல்லாமல் ஒரு விடுமுறை நாளில் அவளை அவள் வீட்டருகே பார்த்து, என்னை திரும்பிப் பார்க்க செய்ய வேண்டுமென்று திட்டமிட்டேன். நான் முகூர்த்தம் குறித்து வைத்திருந்த ஒரு ஞாயிறும் வந்தது. டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அன்று காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகிவிட்டேன். ட்யூஷனுக்கு கிளம்புவதாக சொல்லி, சும்மா ஃபிலிமுக்காக ஒரு ரஃப் நோட்டை கையில் எடுத்துக் கொண்டு, என் பி.எஸ்.ஏ. சைக்கிளை கிளப்பினேன்.

அவளை பல மாதங்களாக பின் தொடர்ந்ததில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல. விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில் அவள் தெருமுனையில் இருந்த கைப்பம்பில் தண்ணீர் இறைத்துப் போக வருவாள். எனவே ஒன்பதே முக்காலுக்கெல்லாம் அந்த கைப்பம்புக்கு இருபத்தி ஐந்து அடி தூரத்தில் நான் ஆஜர். வேண்டுமென்றே சைக்கிள் செயினை கழட்டிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக் கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தெரியாது. வெட்டியாக சைக்கிளோடு நின்று கொண்டிருந்தால் போவோர், வருவோர் தவறாக நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இமேஜ் ரொம்ப முக்கியம்!!

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ குமுதா குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண ஆடையில் பார்த்தபோது, இன்னமும் கூட கொஞ்சம் கவர்ச்சியாக, அழகாக தெரிந்தாள். பாவாடை சட்டையில் பார்த்தவளை சுடிதாரில் பார்த்ததுமே என் காதலின் அளவு சென்னை வெயிலை போல எல்லை தாண்டிப் போனது. குமுதாவுடன் அச்சு அசலாக அவள் போலவே, அவளை மினியேச்சர் செய்து வைத்தது போல இன்னொரு பெண்ணும் வந்தாள். அவளுடைய தங்கையாக இருக்கலாம். ம்ம்... மச்சினிச்சியும் சூப்பரா தான் இருக்கா!

அவள் தண்ணி அடித்துக் கொண்டிருக்க, என் மனமோ கூட்ஸ் வண்டி மாதிரி தடதடவென அடித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் செயினை மாட்டி சும்மாவாச்சுக்கும் பெடலை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். குமுதா என்னை கண்டுகொண்டது போல தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்தேன்.

தண்ணீர் பிடித்தவுடன் இருவரும் கிளம்பினார்கள்.

“திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி..“ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டும் கேட்பது போன்ற சன்னமான குரலில் சொல்லிக் கொண்டே இருந்தேன். ம்ஹூம்..

தெருமுனைக்கு அவள் போய்விட்டாள். இதுக்கு மேல சான்ஸே இல்லை என்று நொந்துப்போய் கடைசியாக ஒரு முறை அவளைப் பார்த்தபோது.. அட திரும்பிப் பார்த்தாள்(கள்)! கண்களை கசக்கி, கையை கிள்ளி விட்டு மீண்டும் பார்த்தேன். மெய்தான்!! பார்த்தது மட்டுமல்ல, அக்கா - தங்கை ரெண்டு பேரும் காதலோடு (!) லைட்டாக சிரித்ததுபோலவும் இருந்தது. “சண்டேன்னா ரெண்டு!” என்பது இதுதானோ? கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு ரெட்டிப்பா கொடுக்கும்ணு சொல்வாங்களே? அய்யோ.. அய்யோ.. சொக்கா.. சொக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலையே!! தமிழய்யா வாழ்க!!

“உன்னை புடிச்சிருந்தா கட்டாயம் திரும்பிப் பார்ப்பா.. மனசுக்கு பிடிச்சவனை மட்டும் தான் ஒரு பொண்ணு திரும்பிப் பார்ப்பா..”

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரின் பதிவை இங்கே பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
:blink: லக்கிலுக், உங்கள் மீள் வரவை வரவேற்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

அழகான உரையாடலுடன் அமைந்த கதை அழகு லக்கிலுக்.

உன்னை ஒரு பொண்ணுக்கு புடிச்சிருந்தா, அவளுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு எப்படிய்யா கண்டுபுடிப்பே?”

உன்னை ஒரு ஆணுக்கு புடிச்சிருந்தா, அவனுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு எப்படிய்யா கண்டுபுடிப்பே?”

எப்படி எப்படி??????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.