Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள்

Featured Replies

நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள்

[சனிக்கிழமை, 21 யூன் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தருமாறு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்களாகிய நாம், தற்போது எமது மருத்துவமனையில் நிகழும் நெருக்கடி நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையிலான இந்த அவசர வேண்டுகோளினைச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் முன்வைக்கிறோம்.

பின்னணி

வன்னிப் பெருநிலப்பரப்பின் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைகள் அடங்கலான மருத்துவத் தேவைகளைக் களத்தில் நின்று கையாண்டு வரும் தரப்பினர் என்ற வகையில் இந்த அவசர வேண்டுகோளிளை விடுப்பதற்கு எமக்குப் பூரண தகுதியிருப்பதாகவே நாம் கருதுகிறோம்.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையான கிளிநொச்சி மாவட்டத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் உச்சகட்ட மருத்துவ சேவைகளை வழங்கி வரும் ஒரு நிலையமாகும்.

இந்த மருத்துவமனையில் கடமை புரிய வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கை 60. ஆனால் தற்போது பணிபுரியும் 14 மருத்துவர்களே 60 மருத்துவர்களினால் செய்யப்பட வேண்டிய பணிச்சுமையினைப் பங்கிட்டுச் சுமக்கிறார்கள்.

மேலும் எந்தவொரு சிறப்பு மருத்துவ நிபுணர்களும் எமது மருத்துவமனையில் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் மட்டுமல்லாது தாதியர்கள், குடும்ப நலப் பணியாளர்கள், சிற்றூழியர்கள் என எல்லாத்தரப்பிலும் ஊழியர்கள் பற்றாக்குறையே காணப்படுகிறது. இதனால் எமது நோயாளரின் உயிரைக் காப்பதற்காக மருத்துவர்களின் கடமைக்கு மேலதிகமாக ஏனைய தர பணியாளர்களின் பணிகளையும் சில சந்தர்ப்பங்களில் செய்து வருகிறோம்.

நாளந்தம் 24 மணிநேரமும் நாம் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற நிலமையே இங்கு காணப்படுகிறது.

குறைந்தளவு மருத்துவர்களுடன்

மருத்துவ விடுதிப் பராமரிப்பு,

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு,

அவசர சிகிச்சைப் பிரிவு,

சத்திர சிகிச்சைக் கூடங்கள்,

மகப்பேற்றுச் சத்திரசிகிச்சை

உள்ளிட்ட அவசர சத்திர சிகிச்சைகள், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகள் என எல்லா வகையான மருத்துவ உதவிகளும் தாமதமின்றி விடுவிக்கப்படாத பகுதியாகப் பிரகடனப்படடுத்தப்பட்டுள்ள இப்பகுதியில் வாழும் அப்பாவி - ஏழை - இலங்கைக் குடிமக்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் எமது மருத்துவர்கள் நோய்த்தடுப்பு மற்றும் நிருவாக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து திடீரென மாறிய களச்சூழ்நிலையானது எமது நாளாந்த நடவடிக்கைகளில் பாரிய அடியாக இறங்கியது.

எமது பணியிடம் தற்போது படைய நடவடிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் இருக்கின்றது. இங்கே அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது நாளாந்தம் வான் தாக்குதல்கள் உள்ளிட்ட இன்ன பிற போர் நடவடிக்கைளைப் படையினர் மேற்கொள்ள, விடுதலைப் புலிகள் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சேவைத் தரம்

எனினும் இவை அனைத்தின் மத்தியிலும் எமது மருத்துவ சேவையின் தரத்தினை நாம் தேசிய மட்டத்திற்கு ஒப்பானதாகப் பேணி வருகிறோம்.

உதாரணமாக, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் (காலாண்டில்) 864 பிரசவங்கள் எமது மருத்துவமனயில் இடம்பெற்றன.

இவற்றில் 99 சத்திர சிகிச்சைப் பிரசவங்களாகும். மூன்றே மூன்று சிசு மரணங்கள் மட்டுமே இக்காலப்பகுதில் நடந்துள்ளன. எந்தவொரு தாயாரும் பேற்றுக் காலத்தில் மரணமடையவில்லை.

இந்தச் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதற்கு உழைத்த அணியில் இரண்டு மருத்துவ அதிகாரிகள், மூன்று தாதிய பணியாளர்கள் மற்றும் 4 குடும்ப நலப் பணியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.

பேற்றின் முன்னான விடுதி, பிரசவ அறை, பேற்றின் பின்னரான விடுதி மற்றும் சிறப்பு குழந்தைகள் கவனிப்புப் பிரிவு என்பவற்றைக் கவனித்து வரும் மொத்த ஆளணியே இவ்வளவுதான்.

இவ்வாறாகவே ஏனைய விடுதிகளும், கிளினிக்குகளும் மிகக் குறைந்த ஆளணி வசதியுடன் இயங்கி வருகின்றன எனின், இந்தப் பொதுச்சேவை பணியாளர்களின் வேலைப்பளுவினை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

சலுகைகள் அல்ல தடைகள்

இந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்கள், போர்ப் பிரதேசத்தில் கடமையாற்றும் நாம் சிறப்பு கொடுப்பனவுகளைப் பெறுவதாக அல்லது ஏதாவது சில சலுகைகளைப் பெறுவதாக எண்ணக்கூடும்.

இந்த இடத்தில் நாம் உண்மையைச் சொல்லியாக வேண்டும்.

அன்பிற்குரியவர்களே!

எமது சேவைக்காக நாம் ஒரு சதம் கூட மேலதிகமாக எவரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆம். இந்த நாட்டின் ஏனைய பாகங்களில் கடமை புரியும் எமது சக மருத்துவர்கள் பெறும் அதே ஊதியத் தொகையே எமக்கும் வழங்கப்படுகிறது. எந்த ஆபத்துக் கொடுப்பனவுகளும் (risk allowance) எமக்கு வழங்கப்படுவதில்லை. முழுமையான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவை நாம் பெற்றுக்கொள்வதும் இல்லை.

ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் நீங்கள் எவருமே சந்தித்திராத கீழ் காணப்படும் இறுக்கமான நிலைமகளை நாம் சந்தித்து வருகிறோம்

1. எமது நகர்வுகள் மருத்துவமனை எல்லைக்குள்ளே முடக்கப்பட்டுள்ளன. உணவுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ வெளியே செல்லமுடியாத அச்ச நிலை நிலவுகிறது

2. எமது பயணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் எமது குடும்பத்தினருடன் நாம் இணையும் வாய்ப்புக்கள், மேற்படிப்புக்கான கற்றலுக்குக் கொழும்பு செல்வதற்கான சந்தர்ப்பங்கள் அனைத்துமே போக்குவரத்து நெருக்கடிகளால் சாத்தியமற்றதாக மாறிப்போயுள்ளன.

3. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையானது நாட்டின் எப்பகுதியிலும் இல்லாதளவிற்கு இங்கே உயர்வாகக் காணப்படுகிறது.

4. எரிபொருள் விலை உயர்வு காரணமாக (ஒரு லீற்றர் பெற்றோல் 750 ரூபாய்கள்) மருத்துவமனைக்கு வெளியே குடும்பங்களுடன் வசித்த மருத்துவர்கள் மருத்துவமனை விடுதிகளுக்குத் தமது குடும்பத்தினருடன் வந்து வசிக்கவேண்டிய நிலை.

5. சுகாதாரத் தொண்டர்கள் மற்றும் நோயாளர் காவுவண்டிகளை இலக்கு வைத்து வெடிக்கும் கிளேமோர்கள் எமது உயிருக்கு உலைவைக்கும் ஆபத்து.

அப்படியானால் ஏன் இன்னமும் நாம் இங்கே பணிபுரிகிறோம்?

எமது மக்களுக்காகவே நாம் இன்னமும் இங்கிருக்கிறோம். இந்த மக்களின் வரிப்பணத்திலேதான் நாம் எமது இலவசக் கல்வியைப் பெற்றோம்.

எனவே அந்த மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில் அவர்களுக்குச் சேவை செய்யவேண்டியது எமது கடமை என நாம் கருதுகிறோம்.

இதற்குச் சில அடிப்படைத் தேவைகள் எமக்குக் கிடைக்க வேண்டும். அதாவது மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் மருந்துகள் இதற்கு அத்தியாவசியமானவை.

நீர் மற்றும் மின்சார விநியோகச் சீர்குலைவு

கடந்த இரண்டு வாரங்களாக நாம் மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

முன்னர் எமக்கு மருந்து வகைகள் தான் பற்றாக்குறையாகக் காணப்பட்டன. தற்போது நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் - பாதுகாப்பு அமைச்சின் திடீர் எரிபோருள் விநியோகக் குறைப்பினால்- மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பனவும் சீர்குலைந்துள்ளன.

இவை எல்லாம் சேர்ந்து எம்மால் வழங்கப்பட்டு வந்த சேவையின் தரத்தினை நேரடியாகப் பாதித்துள்ளன.

தற்போதைய இந்த மின்சார மற்றும் நீர் விநியோகச் சீர்குலைவானது எமது நோக்கத்தில் இடியாக இறங்கி எம்மை எமது கடமைகளைச் செய்யவிடாது தடுப்பதாகவே நாம் கருதுகிறோம்.

பிரசவ அறைகளையும், சத்திர சிகிச்சைக் கூடங்களையும் மின்சாரமும், நீரும் இன்றி நாம் பராமரிப்பது எப்படி? அப்பாவி நோயாளிகள் மலசலகூடம் உட்பட்ட தமது அடிப்படைத் தேவைகளை நீரின்றி நிறைவேற்றுவது எவ்வாறு? அவசர சிகிச்சைப் பிரிவிலும், அதிதீவிர கண்காணிப்புப் பிரிவிலும் உள்ள மானிகள் மற்றும் செயற்கைச் சுவாசக் கருவிகளை மின்சாரம் இன்றி இயக்குவது எங்ஙனம்?

எமது கோரிக்கை

எமது படுக்கையறையில் காற்றைப் பதனிடும் கருவிகளை (A/C) இயக்குவதற்காக மின்சாரம் தருமாறு நாம் கோரவில்லை. உண்மையில் எமது மருத்துவர் தங்கும் விடுதிகளில் ஒரு காற்றைப் பதனிடும் கருவிகூட இல்லை.

எமது நோயாளர்களுக்காகவே நாம் இவற்றையெல்லாம் வேண்டி நிற்கிறோம்.

அன்பிற்குரியவர்களே!

எமது மருத்துவமனையில் எழுந்துள்ள இந்த மின் மற்றும் நீர் விநியோக நெருக்கடி நிலையைத் தீர்த்து வைக்குமாறு உங்களை நாம் மிகவும் பணிவுடன் வேண்டுகிறோம்.

அன்பிற்குரிய கௌரவ அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா அவர்களே!

இந்த நெருக்கடியைத் தீர்த்து வைப்பது தங்களுக்குச் சிரமம் எனில் களநிலமை சீராகும் வரைக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்குத் தற்காலிகப் பணிமாற்றம் பெற எம்மை அனுமதிப்பது குறித்துத் தயைகூர்ந்து கருத்தில் எடுப்பீர்களா?

நாம் முன்னே விபரித்தவாறு, இப்பிரதேசத்தில் உள்ள ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்களுக்குச் சேவை செய்வவே இங்குள்ளோம். எமது எதிர்காலத்தையும், வசதி வாய்புக்களையும் புறந்தள்ளி இந்த ஒரே நோக்கத்திற்காவே நாம் இங்கு இருக்கிறோம்.

ஆதலின், எம்மால் மருத்துவ நிலையியல் சட்டங்களுக்கு அமைவாகத் தரமான சேவையை நோயாளிகளுக்கு வழங்கமுடியாது எனில், நாம் இங்கு இருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

எவருமே எமது இந்த மனிதாபிமான வேண்டுகோளினைக் கருத்தில் எடுக்காது போனால், வேறு வழியின்றி எமது பதவிகளைத் துறந்து இந்தப் பிரதேசத்தினை விட்டு வெளியேறுவது குறித்து நாம் சிந்திக்க நேரிடும்.

தங்களின் பதிலுக்காகக் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் வாழும் 460,000 லட்சம் மக்களின் அனைத்து மருத்துவ சேவைகளையும் கிளிநொச்சி மருத்துவமனையே பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.