Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தனி ஈழம்தான் ஒரே வழி!’ - புரூஸ் ஃபெயின்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஹிந்து ராம், துக்ளக் சோ, தங்கபாலு, தினமலர்… கோஷ்டிகளை நினைத்து நாம் இப்படி எழுதவில்லை. இவர்களை முன்னுதாராணம் காட்டிப் பேசும் சில அரைகுறைகளுக்காகவே இதைச் சொல்கிறோம்.

இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசை விட இவர்கள்தான் மிக உறுதியோடு உள்ளனர்.

தமிழினத்தை பலி கொடுத்து சிங்களவனின் இறையாண்மையைக் காக்க, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர் பணத்தில் சுகஜீவனம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலுக்குத்தான் என்னவொரு அக்கறை!

ஆனால் உண்மை நிலையை நேரில் பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் இலங்கையைப் போன்ற ஒரு கொடிய தேசத்தை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ராஜபக்சேவின் கொடுங்கோலாட்சிக்கு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த உண்மை, ராஜபக்சேவால் ‘ஸ்ரீலங்கா ரத்னா’வாகப் பார்க்கப்படும் ராம்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.

அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் புரூஸ் பெயின். இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப் படுகொலையை உலகுக்கு இவர் எடுத்துக் கூறி வருகிறார். இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழவே முடியாது. தனிநாடு ஒன்றே இதற்குத் தீர்வு என்று கூறியுள்ளார் ஃபெயின்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த இவரது பேட்டியை வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.

அந்தப் பேட்டி:

“இலங்கையில் தமிழின அழிப்பு அதாவது இனப்படுகொலை நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்” என்று பலரின் புருவங்களை உயரச் செய்தார். அவரைச் சந்தித்தோம்.

இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?

“தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு ஏசுநாதர் எப்படியோ அப்படி சிங்களவர்களுக்கு தர்மபாலா. அதற்குப் பின் வந்த புத்தத் துறவிகளும் தமிழினத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், மூவாயிரம் பேரின் கதி என்ன ஆனதென்றே தெரியவில்லை? ஆயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் ஊனம் அடைந்திருக்கிறார்கள். ராணுவத்துடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த புலிகளின் எண்ணிக்கையை இதில் சேர்க்கவில்லை..”

அதற்காக கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோர் மீது மட்டும் வழக்குத் தொடர்வது ஏன்?

“இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இன அழிப்புக்கெதிரான அமெரிக்கக் குற்றவியல் சட்டப் பிரிவு, 1091-ன்படி இவர்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் அவர்கள், அமெரிக்கச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை கூட கிடைக்கலாம். இலங்கை ராணுவம் மேற்கொண்ட இனஅழிப்புக்கு ராணுவத்தில் உயர் பதவியில் உள்ள இவர்கள் இருவருமே முக்கியப் பொறுப்பு. இலங்கையின் தமிழின அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தொகுத்திருக்கிறேன் (அதைக் காண்பிக்கிறார்). நாடு திரும்பியதும் இலங்கைக்கு ராணுவத்துக்கு எதிரான இந்த வழக்கைப் பதிவு செய்வேன்.”

இலங்கையில் தமிழின அழிப்பு எந்தெந்த வழிகளில் நடக்கின்றன?

“தீவிரவாத அழிப்பு என்கிற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளே கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் தடை செய்த பால் பவுடரை வழங்கி, தமிழர்களைக் கொன்று வருகிறது, இலங்கை அரசு. தமிழர் பகுதிகளில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. உயிர்போகும் நிலையிலும், மாட்டு வண்டிப் பயணம்தான். அப்படியென்றால், தமிழர்கள் மீண்டும் கற்கால வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா? என்று சந்தேகம் வருகிறது. அங்கு அரங்கேறும் இன அழிப்பு வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை விரட்டி விட்டார்கள்.இதுவரையில் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதே இல்லை. தமிழக முகாம்களில் உள்ள அகதிகளிடம் பேசினால் இன்னும் பல இனஅழிப்பு அவலங்கள் அம்பலமாகும்.”

இலங்கையில் நடப்பது தமிழன அழிப்பு என்கிற உங்கள் வாதம், உலகநாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமா?

“இனஅழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அமெரிக்க குடிமகன்கள் கோத்தபாய ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும்தான். இவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தால் சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தச் செய்தியின் மீதுபடும். அதன்மூலம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்”.

நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளி என்பதால் இந்தக் கேள்வி. இலங்கையில் மனித உரிமையை மீறுபவர்கள், தமிழீழ புலிகளா? இலங்கை அரசா?

“தமிழன அழிப்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அதே நேரத்தில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய மனித உரிமை மீறல்; கிரிமினல் குற்றம்”.

அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு இப் பிரச்னையை கொண்டு செல்வீர்களா? அவரிடம் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்வீர்களா?

“எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்காது. இன்றைய சூழ்நிலையில் புலிகள் பற்றி பேசுவது, பிரச்னையை திசை திருப்பிவிடும். கவனிப்பதற்கு காஸா, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தா என்று பிரச்னைகள் இருக்கும்போது இலங்கைப் பிரச்னை என்பது வெள்ளை மாளிகைக்கு இரண்டாம் தரம்.”

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கைப் பிரச்னையில் தலையிடுமா?

“(சிரிக்கிறார்) தன்னை அழைப்பவர்களுக்கு மட்டுமே ஐ.நா. உதவி செய்யும். உகாண்டாவில் இனப் படுகொலைகள் நடந்தபோது ஐ.நா என்ன செய்தது? ஐ.நா.வில் அங்கம் வகிப்பதால் எந்த நாடும் தேவதையாகிவிடாத…”

ஈழப் பிரசனைக்கு தனி நாடு தீர்வாகுமா?

“இந்த நேரத்தில் தனிநாடு பற்றி பேசுவது சரியாகாது. இதற்கு முன்பு தமிழர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தகளை இலங்கை அரசு குப்பையில் போட்டு விட்டது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் தமிழின அழிப்புக்குத் துணை போகிறது. இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனியுரிமையும் பாதுகாப்பும் தேவைதான்”.

இலங்கையில் அரங்கேறும் தமிழின அழிப்பை இந்தியா கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

“இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா ஈடுபாடு காட்டுவதில்லை என்பது உண்மை. ‘தமிழீழம் உருவானால் காஷ்மீர், அஸ்ஸாம், தமிழ்நாட்டு மக்கள் தனிநாடு கேட்பார்கள்’ என்று இந்தியா காரணம் சொல்லலாம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தது சரியா? ‘தமிழீழம் உருவானால் தனித் தமிழ்நாடு கேட்பார்கள்’ என்று காரணம் சொல்வது, வெறும் கண்துடைப்பு. அதே நேரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையை ஆதரிக்கிறது.”

இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். இலங்கைக்கு எதிராக இந்தத் தகவலையும் அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்வீர்களா?

“இலங்கை அரசு என்றைக்கும் சட்டத்தை மதிக்காது. எதிரே வருபவர், தமிழனைப் போல் யாராவது தெரிந்தாலே அவனை கொன்றொழித்து விட வேண்டும்; அவ்வளவுதான்! இனஅழிப்புக்கு எதிரான வழக்கில் இந்திய மீனவர் பிரச்னையைச் சேர்க்கப் போவதில்லை.”

இலங்கை அரசின் தமிழன அழிப்புக்கு இறுதித் தீர்வுதான் என்ன?

“சிங்களவரான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களவர்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் மூலம் அந்நாட்டு அரசுக்கு எதிராக சிங்களவர்களின் ஆதரவையும் திரட்டவேண்டும்.

ஒன்றாக இருந்த சிங்கப்பூர், மலேசியா தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இன்றைக்கு சிறப்பாகவே இருக்கின்றன. இலங்கையில் எந்த இடம் யாருக்கு என்கிற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறுவழியில்லை. எனக்கு அறுபது வயதாகிறது; 41 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இருபத்தி நான்கு மணிநேரமும் மனித உரிமைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்துப் போராடி வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், சிங்களவர்கள் உடன் தமிழர்களைச் சேர்ந்து வாழச் சொல்வது, மீண்டும் கருப்பினத்தவரை வெள்ளையருக்கு அடிமையாக இருக்கச் செய்வதற்குச் சமம்!, என்றார் புரூஸ் ஃபெயின்”.

நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.