Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்

Featured Replies

மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொது நலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக

இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன.

இலங்கையில் தமிழருக்கு கேட்ட உடனேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதும், அதில் சிக்கனமாக செலவு செய்து மிகுதியை வீட்டுக்கு அனுப்புவதுமான விஷயம் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

பெரும்பாலும் கொழும்பு நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் பணக்கார விவசாயிகளின் பிள்ளைகள் போன்றவர்களே ஆரம்பத்தில் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள். இதனால் இப்போதும் சில ஐரோப்பிய நாடுகளில், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஒன்றில் பிரதேசவாரியாக, அல்லது சாதிரீதியாக, அல்லது உறவுக்காரர்களாக, இவ்வாறு ஏதாவதொரு ஒற்றுமையைக் கொண்டிருக்க காணப்படுவர். குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால், அவர் பின்னர் இன்னொரு குடும்ப உறுப்பினரை அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்போதும் சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் வெளிநாடு வந்துவிட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதை கேட்கலாம்.

புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாகிற்று. ஒரு மேற்குலக நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி. இருப்பினும் ஒரு சிறு பிரிவினர், இந்தியா சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி என்று நாடு விட்டு நாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைவு என்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம். அதனால் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.

வெளிநாடு செல்வதென்றால், ஆங்கிலம் சரளமாகத் தெரிய வேண்டும் என்று அப்போதும் பலர் நினைத்தார்கள். ஆனால் இந்தியா முதல் போர்ச்சுக்கல் வரை அரைவாசி உலகை சுற்றி வந்த பலருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரிந்திருந்தது. அதிகம் படித்திருக்கவுமில்லை. ஆனால் வரைபடம் பார்த்து செல்லுமளவு பொது அறிவு இருந்தது. வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொண்டார்கள். அவ்வாறு அன்று துணிச்சலாக பயணம் செய்த சிலர் பின்னர் பிறரை தம்முடன் கூட்டிச் சென்றனர். அந்த வாய்க்காரர்கள், பிற அப்பாவித் தமிழர்களை பணத்திற்காகவேயன்றி, தர்மத்திற்காக அழைத்துச் செல்லவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சிறந்த ரயில் போக்குவரத்து உள்ளது. தேசங்களுக்கிடையே ஓடும் 'இன்டர் சிட்டி' ரயில்களில் உறங்களிருக்கைப் பெட்டிகள் இருக்கும். இரவில் படுக்கையாக மாற்றப்படும் இருக்கைகளுக்கு கீழே ஒளிந்து கொள்வார்கள். அந்தப் பெட்டியில் இருக்கும் பயணிகள் பார்க்காத வரை, அல்லது காட்டிக்கொடுக்கா விட்டால் எல்லைகளில் தப்பி விடலாம். இன்னொரு வழி ரயில் பெட்டிகளில் இருக்கும் மல சல கூடம். கூரையில் இருக்கும் சிறிய கதவை கழற்றி விட்டு ஒரு ஆள் ஒளிந்து கொள்ளலாம். எல்லைகளில் சோதனைக்காக ரயில் நிற்கும் போது, மலசல கூடத்தில் யாரையும் இருக்க விடுவதில்லை. எங்காவது பிடி பட்டால் அந்த நாட்டிலேயே அகதித் தஞ்சம் கேட்டு விட வேண்டும்.

மேற்கு-கிழக்கு ஜெர்மனிகளின் பிரிவினையும் அகதிகளுக்கு உதவி செய்தது. முதலாளித்துவ ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும், சோஷலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசும் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு ஜெர்மன் தூதுவராலயம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கிக் கொண்டிருந்தது. கிழக்கு பெர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே, சில டாக்சிக் காரர்கள் தயாராக நிற்பார்கள். குறிப்பிட்ட தொகையை பேரம் பேசினால், மேற்கு பெர்லினுக்குள் கொண்டு போய் விடுவார்கள். இரண்டு பெர்லினுக்கும் இடையில் நிலக்கீழ் சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சுரங்க ரயில் பாதையும் மேற்கு பெர்லினுக்குள் நுழையும் வழியாக இருந்தது.

அந்தக் காலத்தில், தமது நாட்டிற்குள் அகதிகள் வந்து குவிவதை கிழக்கு ஜெர்மன் அரசு நன்றாகவே அறிந்திருந்தது. ஆனால் வருபவர்கள் யாரும் தனது நாட்டினுள் தங்க மாட்டார்கள் என்பதையும், அனைவரும் மேற்கு ஜெர்மனிக்குள் நுழையவே விரும்புவர் என்பது தெரிந்த விடயம் தான். ஆகவே தனது எதிரியான மேற்கு ஜெர்மனிக்கு தலையிடி கொடுப்பதற்காக அகதிகளை அனுமதித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஜெர்மன் அரசோ, கம்யூனிசத்தில் வெறுப்புற்ற கிழக்கு ஜெர்மன் அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து எல்லைக்காவலை தளர்த்தி இருந்தது. இந்த சலுகையை மூன்றாம் உலக அகதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்திருக்கவில்லை. இன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களில் பலர், அன்று பெர்லின் வழியாக வந்து சேர்ந்தவர்கள் தான். அதனால் ஜெர்மனிக்கு "பழசு" என்ற அடைமொழியும் உண்டு.

மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த அகதிகள் அனேகமாக தத்தமது மாஜி காலனியாதிக்க எஜமானர்களை நோக்கியே செல்வது வழக்கம். உதாரணமாக பிரான்ஸில் அல்ஜீரிய அகதிகள், போர்ச்சுகல்லில் அங்கோலா அகதிகள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக காலனியாதிக்க நாடுகளே தமது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, அங்கிருந்து எவராவது தனது நாட்டில் வந்து குடியேறினால் பிரஜாவுரிமை கொடுப்பார்கள். இந்தக் கவர்ச்சிக்கு மயங்கி பெருமளவு மக்கள் சென்று குடியேறும் வேளை, அந்த சட்டத்தை இரத்து செய்வார்கள். அதற்குப் பிறகு அகதியாக செல்வது தான், புதிய குடியேறிகளுக்கு முன்னால் இருக்கும் தெரிவு. இரண்டாவது காரணம் காலனிய மொழி. மூன்றாவதாக பல உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு காலனியாதிக்க நாடுகளின் தலையீடு காரணமாக உள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள், முன்னாள் காலனிய எஜமானான பிரிட்டனுக்கு சென்ற போது, அகதி தஞ்சம் கொடுக்கா விட்டாலும், நாட்டினுள் இருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இது காலப்போக்கில் உழைப்பை சுரண்ட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது. இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் மூன்றே மூன்று ஈழத் தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன். எழுபதுகளில் யாழ் நகரில் இடம்பெற்ற, மேயர் துரையப்பாவின் கொலை தான் தமிழீழ போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை. கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் நபர்கள் சிலரின் படங்களை போஸ்டராக அடித்து காவல்துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது. அதில் காண்டீபனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்து தான், காண்டீபனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள், இலங்கையில் அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவதையும், சித்திரவதை செய்யப்படுவதையும் எடுத்துக் காட்டியே தஞ்சம் கோருவது வழக்கம். சிலர் அரசியல் படுகொலையான துரையப்பா கொலையில் தேடப்படுவதாக சொன்னார்கள். பலருக்கு என்ன சொல்வதென்றே தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஒன்றில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருப்பர், அல்லது அரச அடக்குமுறைக்கு முகம் கொடுக்காதவர்களாக இருந்திருப்பர். இனப்பிரச்சினை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத அவர்களின் ஒரே எண்ணம், மேற்குலக நாடொன்றில் அகதி என்று சொன்னால் மட்டும் போதும் என்பதாக இருந்தது.

அப்போதெல்லாம் இலங்கையில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் இங்கிலாந்து தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் குழப்பகரமான தஞ்சக் கோரிக்கைகள் காரணமாக, பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவ்வாறு திரும்பி வந்தவர்களை கொழும்பு விமானநிலைய காவல்துறை கைது செய்து, சித்திரவதை செய்ததாக செய்திகள் வெளியாகின. இருந்தாலும் அப்போது கூட மேற்குல நாடுகள் இலங்கை அகதிகள் தொடர்பாக கரிசனை கொள்ளவில்லை. 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

(தொடரும்)

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=70:2009-12-01-12-59-11&catid=38:2009-11-28-06-28-58&Itemid=104

கலையரசன் என்பவரால் இந்தக்கட்டுரை எழுதப்பட்டு இருக்கிது. உமது தளத்தில வெட்டி ஒட்டுறீர் யாழிலையும் இணைக்கிறீர் சரி, கடைசி எழுதியவரின் பெயரையாவது குறிப்பிடலாமே தராக்கி: http://kalaiy.blogspot.com/2009/12/blog-post.html

தொடரும் என போடப்பட்டு இருக்கிது.கட்டுரையை முழுமையாக வாசித்தபின்னர்தான் கருத்துகூறமுடியும். இந்தக்கட்டுரை எழுதிய வலைப்பதிவரின் விபரம் இவ்வாறு இருக்கின்றது.

praha2.jpg

கலையரசன்

Location: Netherlands

வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.

கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.

DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.

http://www.blogger.com/profile/06730919756445445520

இவர் தொடராக எழுதுகின்ற இன்னுமோர் கட்டுரை:

ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்

1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.

கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.

வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.

83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி "காணாமல்போனார்கள்." சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.

இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.

போராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.

ராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.

1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.

முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.

பல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா? அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா?" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.

கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.

பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.

(...to be continued)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.