Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் புலத்துத் தமிழருக்கும் இடம் கொடுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் புலத்துத் தமிழருக்கும் இடம் கொடுங்கள்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஆரவாரங்கள் தொடங்குகின்றன. நாடாளுமன்றமும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி கலைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 19 - 26 வரையான திகதிக்குள் வேட்பாளர் நியமனம் கோரப்படும் எனவும் ஏப்ரல் மாதம் 8ம் ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நாடாளுமன்றத் தேர்தல், ஈழத் தமிழர் தேசத்தினைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தேர்தலாக அமையும். இத் தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் வெற்றி பெறுவோரே ஈழத் தமிழர் தேசத்தின் தாயக அரசியல் தலைமையாகக் கருதப்படுவர்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சியின் சார்பில் வீடு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 633,654 வாக்குகளைப் பெற்று 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8 ஆசனங்களும், வன்னியில் 5 ஆசனங்களும், மட்டக்களப்பில் 4 ஆசனங்களும், திருகோணமலையில் 2 ஆசனங்களும், அம்பாறையில் 1 ஆசனமும் தேசியப்பட்டியல் ஊடாக 2 ஆசனங்களுமாக 22 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றிருந்தது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 348, 164 வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணத்தில் 6 ஆசனங்களும், வன்னியில் 3 ஆசனங்களும், மட்டக்களப்பில் 3 ஆசனங்களும், திருகோணமலை, அம்பாறையில தலா 1 ஆசனமும் தேசியப்பட்டியல் ஊடாக 1 ஆசனமுமாக 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

2004 ஆண்டுப் பொதுத் தேர்தல் விடுதலைப்;புலிகளின் ஆட்சிமைக் காலத்திலும் யுத்த நிறுத்தக் காலத்திலும் நடைபெற்றமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதிலும் கூட்டமைப்பை வழிநடத்துவதிலும் விடுதலைப்புலிகள் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தனர். 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் நேரடியான பாத்திரம் பெரிதும் இருக்கவில்லை.

2001, 2004 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் போது விடுதலைப்புலிகள் அமைப்பே ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக இருந்த காரணத்தால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் இருக்கவில்லை. இத்தடவை தேர்தலில் வெற்றி பெறுவதன் ஊடாக ஈழத் தமிழ் தேசத்தின் தாயக அரசியல் தலைமையாக மிளிரும் வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.

தாயகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தனது பலங்களோடும் பலவீனங்களோடும் ஈழத் தமிழர் தேசியத்தின் குரலாக தற்போது இருந்து வருகிறது. இக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் உள்ளன என்பது ஊரறிந்த இரகசியம். இந் நிலையில் 2010 ஆண்டுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வியூகம் எவ்வாறு அமையப் போகிறது?

கட்சிக்குள் ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நடத்தி, ஒருமைப்பாட்டை வென்றெடுத்து, ஓரணியில் தேர்தலைச் சந்திக்கப் போகிறதா? அல்லது பிளவுபட்ட அணிகளாகத் தேர்தலைச் சந்திக்கப் போகின்றனரா என்பது ஈழத் தமிழர் தேசத்தின் பெரிதும் அக்கறைக்குரிய விடயம். இவர்கள் பிளவுபட்ட அணிகளாகத் தேர்தலைச் சந்தித்தால் அது ஈழத் தமிழர் தேசத்தினை பலவீனப்படுத்தவே வழிவகுக்கும்.

இக் கட்டுரை தேர்தல் வியூகம் வகுக்கும் தமிழ்த் தேசியக்; கூட்டமைப்புக்கும் அதன் தலைமைக்கும் ஒரு பரிந்துரையை முன் வைக்கிறது. இப் பரிந்துரைக்கான காரணங்களையும் முன்மொழிகிறது.

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து, குறைந்தது வடக்குக்கும் கிழக்குக்கும் தலா 1 வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்து - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதன் மூலம் புலம் பெயர் தமிழருக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குங்கள் என்பதே இப் பரிந்துரையாகும்.

இப் பரிந்துரைக்குப் பின்வரும் காரணங்களை இக்கட்டுரை முன்மொழிகிறது.

1. ஈழத் தமிழர் தேசம் தாயகத்தில் வாழும் மக்களையும் புலம்பெயர்ந்து வாழும் மக்களையும் உள்ளடங்கியதாகவே உள்ளது. ஈழத் தமிழர் தேசத்தின் அரசியலும் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிக்குள் சுருங்கிவிடவில்லை. இது தேசங்களின் எல்லைகள் கடந்த அரசியலாக (Transnational politics) மாற்றம் கண்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் மக்களும் தமது தாயத்தில் நடைபெறும் அரசியலில் பங்காளர்களாக இருந்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பாரிய பங்களிப்பு செய்து வந்துள்ளனர். தாயகத்தில் வாழும் மக்கள் யுத்தகாலத்தில் தமது வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கும் புலம் பெயர்ந்த மக்கள் பெருந்துணையாய் இருந்து வந்துள்ளனர்.

இந் நிலையில் புலம்பெயர்து வாழும் மக்களுக்கான பிதிநிதித்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்குவது ஈழத் தமிழர் தேசத்தினை இறுகப்பிணைத்து பலப்படுத்த உதவும்.

2. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பங்குபற்றுதல் முக்கியமானது. இம் மக்களுக்கு தம்மால் இயன்றளவு உதவிட புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இதற்குத் தாயகத்திலிருந்து பொருத்தமான திட்டமும் பொறிமுறையும் மிகவும் நம்பகத் தன்மமையுள்ள முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஒரு முக்கியமான வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

வெறுமனே அரச திட்டங்களிலும் அரச பணத்திலும் மட்டுமே தங்கியிராது மக்களில் தங்கியிருந்து மக்களுக்குப் பணியாற்றும் பண்பு வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். புலம் பெயர் மக்கள் மத்தியிலிருந்து நியமிக்ப்பட்டு தாயகத்தில் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இவ் வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து முன்னெடுக்கக் கூடுதல் பொருத்தப்பாடுடையவர்களாக இருப்பர்.

3. 2009 மே மாத நடுப்பகுதிக்குப் பின்னர் தோற்றம் பெற்றுள்ள புதிய சூழலில் தாயக அரசியல் போக்குகளும் புலம் பெயர் தமிழரின் அரசியல் போக்குகளும் இரு வேறுபட்ட எதிர்த் திசையில் பயணிக்கும் நிலை உருவாகி வளர்ச்சியடைந்து வருகிறது. இது ஈழத் தமிழர் தேசத்திற்கு நன்மையானது அல்ல.

தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கிடையிலான அரசியல் வேலைத் திட்டங்களுக்குள் ஓர் இணைவு வேண்டும். தாயகத்தில் யதார்த்தத்தில் இருந்து தொடங்கி அங்குள்ள அரசியல் வெளியினுள் நுழைந்து அரசியல் உரிமைகளைப் பெறும் அரசியல் முயற்சிகள் தொடர வேண்டும்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் தனிநாட்டுக் கோரிக்கையினை மட்டுமே தடை செய்கிறது. இது தவிர்ந்த அனைத்தையுமே தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் கோரிக்கையாக வைக்க முடியும். இது உள்ளக சுயநிர்ணய உரிமை நிலைப்பாடு எனவும் கொள்ளப்படலாம்.

புலத்தில் தாயகம் தேசியம், பிரிந்து போகும் உரிமை உள்ளடங்கலான சுயநிர்ணம் என்ற அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் செயல்பாடுகள் அமையலாம். இதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் புலம் பெயர்ந்த தமிழர் இறங்கியுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் திட்ட முன்மொழிவும் அரசியல் வேலைத் திட்டங்களுடன் மட்டும் சுருங்கி விடாமல் சமூக, பொருளாதார, கல்வி, பண்பாட்டுத் தளங்களிலான வேலைத்திட்டங்களிலும் அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் ஒரு வகையான புரிந்துணர்வை எதிர்காலத்தில் வளர்த்துக் கொள்ளல் களமும் புலமும் கைகோர்க்க வாய்ப்பளிக்கும்.

தாயகத்தில் பிரியாத இலங்கைக்குள் தீர்வு தேடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியினைப் புலத்துத் தமிழர்களும் தலைவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலத்தில் தமிழர் வெளிப்படுத்தும் தமிழீழ விடுதலைக்கான மக்கள் தாகத்தைத் தாயகத் தமிழர்களும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மதிக்க வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. உதவக்கூடியவை.

புலத்தில் இருக்கும் செயற்பாடுகளால் ஏற்படும் சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தாயகத்தமிழரின் அரசியல் வெளியை (political space) அதிகரிக்கத் துணைபுரியும்.

பிரியாத இலங்கைக்குள் தீர்வு தேடும் தாயகத் தமிழ்த் தலைவர்களின் முயற்சியில் ஏற்படும் தோல்வி, பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கையை பலப்படுத்தும்.

இவ்வாறு தாயகத்தையும் புலத்தையும் அரசியல் ரீதியாகவும் சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் இணைப்பதற்கு புலத்துத் தமிழர் தாயகத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது உதவி புரியும்.

4. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பொருளாதார, சமூக, மனிதவள மூலதனங்களையும் தொழில்நுட்ப வாய்ப்புக்களையும் தம்மகத்தே கொண்டுள்ளனர். இதனால் புலம் பெயர்ந்து வாழும் மக்களை தமது நாடுகளுடன் நெருக்கமாக இணைத்துக் கொள்வதற்கு பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிளை மேற்கொண்டு வருகின்றன.

தமது நாடுகளின் நாடாளுமன்றங்களில் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவது முதல் பொருளாதார வரிச்சலுகைகள் வரை என இம் முயற்சிகள் தொடர்கின்றன.

புலம் பெயர் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவதற்கு உதாரணமாக கெயிட்டியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக ஒரு தனித்தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளமையினையும் இத்தாலிய நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களினால் தெரிவுசெய்யப்படுவதனையும் குறிப்படலாம்.

இத்தகைய ஏற்பாடுகள் ஊடாக புலம் பெயர்ந்த மக்களை, தமது தேசத்தின் நெருங்கிய ஓர் அங்கமாக்கி தமது நாடுகளின் மேம்பாட்டைத் துரிதப்படுத்த இந் நாடுகள் முயல்கின்றன.

புலத்துத் தமிழரும் தாயகப்பற்றுடன் தாயகப்பகுதியின் மேம்பாட்டில் அக்கறையுடன்தான் உள்ளனர். இவர்களுடைய தாயகப்பற்று தமிழர் தாயகத்துக்கானது. சிறிலங்காவுக்கானது அல்ல. இதனால் தமிழ்த் தேசியப்பற்றுள்ள புலத்துத் தமிழரால் நேரடியாக சிறிலங்கா அரசுக்கூடாக தமது தாயகப்பகுதிகளுக்கு பங்களிப்பது சங்கடமான காரியம். இதற்கு இவர்கள் பின்னிற்பர்.

புலத்துத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் அரச வலைப்பின்னல்களுக்கு வெளியே, திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் தரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த மக்களின் தாயக மேம்பாட்டிற்கான பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

5. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் பல, இரட்டைக் குடியுரிமையினை அங்கீகரிக்கின்றன. இவ்வாறு இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களிலிருந்தோ அல்லது இலங்கைக் கடவுச்சீட்டுக் கொண்டவர்களிலிருந்தோ வேட்பாளர்களைத் தெரிந்தெடுக்கலாம்.

வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்குரிய சட்டத்தகமையும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். தாயகத்தில் வாழும் மக்களுக்கு புலத்திலிருந்து தம்மூடாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை இவர்கள் தமது மேலதிகத் தேர்தல் வாக்குறுதிகளாக, தாயக மக்கள் மத்தியில் முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடலாம். தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்குவது இன்னுமொரு வாய்ப்புமூலமாக இருக்கும்.

இப் பிரதிநிதித்துவம் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கானதாக இருந்தாலும் அதன் பயன் கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் போட்டியிடுகிறது. புலத்துத் தமிழருக்கும் இதில் பங்கு வழங்கப்படுதல் ஈழத் தமிழர் தேசத்திற்கு கூடுதல் நன்மையினையே தரும். வேட்பாளர் மனுத் தாக்கல் பெப்ரவரி 19 – 26 க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இது தொடர்பான விரைந்த நடவடிக்கை அவசியம்.

மேலே முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற்கெடுத்து விவாதிக்குமாறு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தலைவர்களையும் மக்களையும் இக் கட்டுரை அழைக்கிறது. இத்தகைய விவாதங்கள் பொங்கு தமிழில் பதிவு செய்யப்படல் அரசியல் கருத்தாடல்களைச் செழுமைப்படுத்த உதவும்.

அரசு மாதவன்

குறிப்பு: இக் கட்டுரையாளருக்குத் தேர்தலில் நிற்கும் நோக்கம் எதுவும் கிடையாது.

http://www.ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={5514A89C-EDB8-4A28-B080-8CFAFED23728}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.