Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தனியரசு . கனவு- விருப்பம் - யதார்த்தம். பறிபோய்விட்ட தமிழர் தாயகம் - இரா.துரைரத்தினம்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தனியரசு . கனவு- விருப்பம் - யதார்த்தம்.

பறிபோய்விட்ட தமிழர் தாயகம் - இரா.துரைரத்தினம்-

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர்கள் ஆண்டபூமி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக்கு கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேசமாக இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணராத நிலையில் தானே எங்களில் பலர் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த அதிபர் தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை வரைபடத்தில் சரத் பொன்சேகா வெற்றிபெற்ற பிரதேசங்களை பச்சை நிறத்திலும், மகிந்த ராசபக்ச வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டு காட்டியிருந்தார்கள்.

பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங்களில் பலர் பெருமைப்பட்டுக்கொண்டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங்களை உள்ளடக்கியதே தமிழீழம் என்றும் பெருமை பேசிக்கொண்டோம்.

அப்போது வெளியான வரைபடத்தில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு காட்டப்பட்டிருந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பெரும் பகுதிகள் இன்று தமிழர்களின் கைகளில் இல்லை என்பது எங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.

மின்னாமல் முழங்காமல் தமிழர் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அந்த இடங்களுக்கு தமிழர்கள் இனிமேல் கால் வைக்கமுடியாதவாறு கட்டமைப்புக்கள் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அந்த தமிழீழத்தை அடைந்தே தீருவோம். தமிழீழம் இல்லை என்றால் ஒரு துளிமண்ணும் வேண்டாம் என நாங்கள் மேற்குலக நாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் போது எங்கள் முற்றங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு வருகிறதே , இந்த யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு செயற்படுங்கள் என்றுதான் நாங்கள் உங்களை மன்றாட்டமாக கேட்டு வருகிறோம்.

இதை சொல்லி வரும் துரைரத்தினம், நிராஜ் டேவிட், ஆகியோர் சம்பந்தரின் அஜன்டாவிற்கு கீழ் செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. சம்பந்தரின் அஜன்டா என்று ஒரு மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை. எங்களின் நோக்கம் ஒன்றுதான். எங்கள் மண் பறிபோவதை தடுக்க வேண்டும். தமிழர் தாயகம் என்று நாங்கள் சொல்லும் இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் எங்களிடம் இல்லை. வேறு நோக்கங்களில் செயற்படவேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.

தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு கைகட்டி சேவகம் செய்பவர்களாக இல்லாமல் தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தக்கூடிய தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த தமிழர்கள் சம்பந்தராகவும் இருக்கலாம். அல்லது எந்த கந்தப்பராகவும் இருக்கலாம்.

தமிழீழம் தான் என்ற உறுதியோடு இருக்கும் போது வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கள் கைகளில் இல்லை என எங்கள் உணர்வுகளை மழுங்கடிக்கப்பார்க்கீர்களே எங்கள் கனவுகளை கலைக்கப்பார்க்கிறீர்களே என்று வெளிநாடுகளில் உள்ள ஒரு சிலர் என்மீது ஏவுகணை வீசுவீர்கள் என்றும் எனக்கு தெரியும். ஆனால் அந்த கனவுகளுடன் மட்டும் என்னைப்போன்ற ஊடகவியலாளர்களால் வாழ முடியாது என்பதால்தான் யதார்த்தங்களையும் இடைக்கிடையே சொல்ல விளைகிறோம்.

முதலில் கிழக்கு மாகாணம் தமிழர்களின் கைகளில் இருக்கிறதா என்பதை பார்ப்போம். கடந்த முறை எழுதிய கட்டுரையில் தமிழர் பிரதேசம் என சொல்லுகின்ற பிரதேசம் தமிழர்களின் கைகளில் இருக்கிறதா? உண்மையில் கிழக்கு மாகாணம் முக்கியமாக தமிழீழத்தின் தலைநகர் என்று சொல்லும் திருகோணமலையில் தமிழர்களின் நிலை என்ன என்பதை இங்கே நான் இணைத்திருக்கும் திருகோணமலைக்கான வரைபடத்தை பாருங்கள்.

இந்த வரைபடத்தை பார்த்த உங்களுக்கு திருகோணமலையில் தமிழர்களின் நிலை என்ன என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

புள்ளிவிபர திணைக்களத்தின் விபரங்களின் படி திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை இனவிகிதாசார ரீதியில் எவ்வாறு மாற்றமடைந்து சென்றிருக்கிறது என்பதையும் இனி பார்ப்போம்.

1932ஆம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கல்லோயா திட்டம் முதல் 1977ல் ஆரம்பிக்கப்பட்ட துரித மகாவலி அபிவிருத்தி திட்டம் வரை கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை இலக்கு வைத்து 24 குடியேற்ற திட்டங்கள் சிறிலங்கா அரசுகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

1950ஆம் ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இணைத்து தமது அரசியல் நகர்வுகளையும் அதன் பின்னர் வடகிழக்கு இணைந்த சுயாட்சி கோரிக்கையையும் தமிழர்கள் முன்வைத்து போராட ஆரம்பித்த போது சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கையும் கிழக்கையும் துண்டாடி கிழக்கை முழுமையாக சிங்கள மயப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை துரிதப்படுத்த ஆரம்பித்தனர்.

சிங்களவர்களின் இந்த நகர்வை உணர்ந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சி 1952ஆம் ஆண்டில் திருகோணமலையில் தனது மாநாட்டை நடத்தியதுடன் அந்த மாநாட்டில் திருகோணமலையை தமிழர்களின் தலைநகராகவும் பிரகடனம் செய்தனர்.

திருகோணமலை தமது தலைநகர் என தமிழர்கள் பெருமையாக பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தில் திருகோணமலையை தமது வசப்படுத்துவதற்காக சிங்கள தேசம் பாரிய செயற்திட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.

கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாவி திட்டங்களை உருவாக்கி திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கிய அதேவேளை சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைகளிலும் மாற்றங்களையும் உருவாக்கினர்.

மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்பதை பின்னர் பார்ப்போம்.

திருகோணமலை மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லையான தென்னமரவாடியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையான வெருகல் ஆறு வரையான நீண்டகரையோர பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம் பொலனறுவை மாவட்டங்கள் உள்ளன.

1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் மட்டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15,663பேராகவும், முஸ்லீம்கள் 3,245பேராகவும் காணப்பட்டனர். இம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 81.76வீதமாகவும், முஸ்லீம்கள் 16.9வீதமாகவும், சிங்களவர்கள் 1.3வீதமாகவும் காணப்பட்டனர்.

1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4வீதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளை முஸ்லீம்களின் சனத்தொகை 37.6வீதமாகவும் சிங்களவர்களின் சனத்தொகை 4.4வீதமாகவும் உயர்வடைந்திருந்தது.

1971ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்கள குடியேற்றம் மற்றும் முஸ்லீம்களின் சனத்தொகை அதிகரிப்பு என்பனவற்றை தெளிவாக காட்டியிருக்கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின் படி திருமலை மாவட்டத்தில் தமிழர்கள் (71749பேர்) 38.1வீதமாகவும் முஸ்லீம்கள் (59,924பேர்) 31.8வீதமாகவும், சிங்களவர்கள் (54,744பேர்) 29.08வீதமாகவும் காணப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 1.3வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30வீதமாகவும், 16வீதமாக இருந்த முஸ்லீம்கள் 46.5வீதமாகவும் உயர்வடைந்திருக்கிறார்கள். 81.76வீதமாக இருந்த தமிழர்கள் 23.5வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இந்த விபரங்களை பார்க்கும் உங்களுக்கு திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழர்கள் இன்று மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

யுத்தம் காரணமாகவும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாகவும், யுத்த அழிவுகளினால் ஏற்பட்ட இறப்புவீத அதிகரிப்பும் தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும்.

உலகில் முஸ்லீம்களின் சனத்தொகை பெருக்கத்தைப்போலவே கிழக்கு மாகாணத்திலும் அவர்களின் சனத்தொகை வீதம் ஏனைய இனங்களை விட அதிகரித்து வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் இப்போது சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டு அவைகளுக்கு சிங்கள பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன.

சனத்தொகையில் மட்டுமல்ல நிலப்பரப்பைக்கூட தமிழர்கள் திருகோணமலையில் இழந்துவிட்டார்கள். 2728 சதுரகிலோ மீற்றரை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 346சதுரகிலோ மீற்றர் பிரதேசத்தில் தான் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருகோணமலை நகர் மற்றும் ஈச்சலம்பற்றை வெருகல் உள்ளடக்கிய இந்த 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள்ளும் தற்போது சிங்களவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.

பூர்வீக தமிழ் பிரதேசங்களான கந்தளாய், கிண்ணியா, குச்சவெளி, தம்பலகாமம் பகுதிகள் இப்பொழுது முற்றுமுழுதான சிங்கள பிரதேசங்களாக மாற்றப்பட்டு விட்டது. அந்த பிரதேசத்தில் உள்ள சுமார் 240 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருக்கிறது.

இதுதான் எமது தமிழீழ தலைநகரின் இன்றைய நிலை.

அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை பார்ப்போம். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், 1961ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனராகல, பதுளை, மாத்தறை மாவட்டங்கனைச்சேர்ந்த சில பிரதேச செயலகப்பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம்(அம்பாறை) உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தும் திட்டத்துடனேயே திகாமடுல்ல மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பக்கமாக உள்ள மன்னம்பிட்டி, உட்பட பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பிரதேசங்களிலும், அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை, மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயி 2 டீயவவiஉயடழய

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் 44வீதமாகவும், சிங்களவர்கள் 29.3 வீதமாகவும், தமிழர் 25.2 வீதமாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 சிங்களவர்கள் 37.5வீதமாக உயர்வடைந்திருக்கின்ற அதேவேளை தமிழர்கள் 18.3வீதமாகவும் முஸ்லீம்கள் 44வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆயி 3 யுஅpயசயi

இப்பொழுது சிங்கள மயமாக்கப்பட்டிருக்கும் பிரதேசங்கள் மீண்டும் தமிழர் கைகளுக்கு வரும் என சிலர் நம்பலாம். உலக நாடுகளில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் மீட்கப்பட்டதாக உங்களில் சிலர் ஆறுதல் சொல்லலாம். ஆனால் அந்த இனங்களுக்கு உலக நாடுகளில் இருந்த ஆதரவின் ஒரு வீதமாவது எமக்கு இருக்கிறதா என்ற யதார்த்தத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது போர் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து அபிவிருத்தி என்ற பெயரில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் புதிய சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அண்மையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தீகவாவி புனித பிரதேச திட்டம் மற்றும் உல்லாசப்பிரயாண அபிவிருத்தி ஆகியவற்றின் கீழ் அம்பாறை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலை பிரதேசத்தில் ( சிறிலங்கா அரசு வைத்த பெயர் தொப்பிகல) மேற்கொள்ளப்பட்டு வரும் அக்ரோ வர்த்தக அபிவிருத்தி திட்டத்தின் கீழும் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். மகாவலி அபிவிருத்தி திட்டம் கெடா ஓயா திட்டம் உட்பட மேற்படி திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் படி கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் சனத்தொகையை 55 வீதமாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டங்களை மகிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச்சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்க மேற்கொண்டு வருகிறார்.

அரச காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இனவிகிதாசாரத்திற்கு ஏற்பவே பங்கிடப்பட வேண்டும் என காணிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா, திட்டங்களின் கீழும், அம்பாறையில் கல்லோயா பனல்ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர்.

இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு வசதியாக திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண நிர்வாக உயரதிகாரிகளாக மாகாண சபை நிர்வாகத்திலும் சரி மாவட்ட செயலகங்களிலும் சரி சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் றியல்அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம கிழக்கு மாகாண நிர்வாக உயர்மட்டத்திற்கு சிங்களவர்களையே நியமித்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிர்வாகசேவையை சேராத இராணுவ அதிகாரிகளாவர். திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக மேஜர்ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவும், மாவட்ட புனர்வாழ்வு இணைப்பாளராக மேஜர்ஜெனரல் அமரடேவாவும், ஆளுநரின் செயலாளராக கப்ரன் ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளுநரே சகல அதிகாரங்களையும் கொண்டவராக காணப்படுகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக முன்னாள் திருகோணமலை அரசாங்க அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் காணி அமைச்சின் செயலாளர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஆசிரியர் மாகாண செயலாளருக்கு ஒரு கடிதத்தை எழுதுவதாக இருந்தால் சிங்களத்தில்தான் எழுத வேண்டும். இந்த அவலங்களுக்கு காரணம் கிழக்கு மாகாண நிர்வாகம் சிங்கள கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளுக்கு சென்றதுடன் சிங்கள அரசின் கைபொம்மையான ஒருவர் மாகாண முதலமைச்சரானதும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மாகாணசபைக்கு பூரண அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட அந்த மாகாணசபை தமிழர்களின் கைகளை விட்டு சென்றதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை கிழக்கு மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அதனால்தான் சொல்லுகிறோம்.

மாகாணநிர்வாகமானால் என்ன நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானால் என்ன தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றிபெறமுடியும். அது எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் பொருந்தும்.

இதை வாசித்த உங்களில் சிலர் கிழக்கு மாகாணம்தானே பறி போயிருக்கிறது வடமாகாணம் எங்கள் கைகளில்தானே இருக்கிறது என பெருமிதம் அடையலாம். ஆனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் இன்று எங்கள் கைகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம் . அது பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.

இரா.துரைரத்தினம்

thurair@hotmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசிய விடுதலைக்காக உழைக்கும் புலம்பெயர்ந்துள்ள ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினால் ஏற்படப்போகும் சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது.

2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்.

3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது.

1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது

இது உண்மைதான். ஆனால் இது பற்றி முன்வைக்கப்படும் ஆய்வுப் பத்திகளில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி மறு தரப்பு நியாயங்களை மறுதலிப்பதும், மறுதலிக்க வைப்பதும், அல்லது ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து உரிய தரப்பை, அதன் தலைமையைக் கண்டிக்க மறுப்பதும் இந்த ஆய்வுகளின் நேர்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்து, இந்தியாவின் வகிபாகத்தை இல்லாதொழிக்க சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் முயற்சிக்கு “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” துணை போவதாகக் குற்றம் சுமத்தும் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியாவின் கைப்பொம்மைகளாக மாறுவது பற்றி எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

நேரடி எதிரியைவிட கூட இருந்து குழி பறிப்பதே மிகப்பெரும் துரோகமாகும். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமன்றி அதன் பின்னரும் இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு இழைத்துவரும் துரோகத்தனங்கள் பற்றி இந்த ஆய்வுகள் அலசவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனப்போராடிய தமிழ் மக்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியா, அதே கொள்கையுடன் தற்பொழுதும் இருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க முற்படுகின்றது என்பது பற்றி இந்த பத்தி ஆய்வுகள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன.

இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து செல்வதால், சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புவதாக வாதம் முன்வைத்தால், சீன ஆதிக்கம் இப்பொழுது தீடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதையும், சீன ஆதிக்கம் மட்டுமன்றி அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை என்ற சதாராண கேள்வி எழுவதை தடுக்க முடியாதே?

தமிழர்கள் பாரிய இனவழிப்பை எதிர்நோக்கியிருந்தபோது, விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்த இந்தியத் தலைமைகள் (ஒரு சில சந்திப்புக்கள் பலமுனைப் பிரயத்தனத்தின் பின்னர் நடைபெற்றது), இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிலாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம், ஏன் அதனைச் செய்யவில்லை? வடக்கு கிழக்கு இணைப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா தமிழர் தாயகத்திற்கு எதனைச் செய்யப்போகின்றது.

இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன்) இணங்கியிருந்தால், அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தம்மை தெரிவு செய்த தமிழ் மக்களிற்கும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கும் அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை என்பது பற்றி எந்தவொரு ஆய்வுப் பத்தியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

முள்ளிவாய்க்கால் இரத்தநெடி மாற முன்னர், இந்தியாவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள சில சட்டவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் பிரதியை கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு.சம்பந்தன் அவர்கள் வழங்காததன் காரணம் என்ன எனவும், அதன் தலைப்பு தமிழர்களின் வேணவாவையும், உள்ளட சரத்துக்களோ அதனை மறுதலிக்கும் மாற்றுப்போக்கையும் கொண்டுள்ள மர்மம் பற்றி நாம் ஏன் கேள்வி எழுப்ப மறந்தோம்.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் அணி, அதனை எப்படிப் பெறப்போகின்றது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், அதே கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக்கூறும் மறு தரரப்பிடமும் அதே கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோதுகூட, அங்குள்ள தமிழ் மக்களை உள்ளடக்கிய முக்கிய மிகப்பெரும் அமைப்புக்களைச் சந்திக்காது, தனக்கு நெருங்கியவர்களுடன் நடத்திவிட்டுச் சென்ற சந்திப்புக்கள் அவர் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு இப்பொழுது விடைபகிர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவை முற்றாக நிராகரிக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் அதற்காக முற்றாக அடிபணிந்து நின்றுவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழ் மக்களின் படைத்துறைப் பலம் இழக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அடிபணிந்து செல்லும் எந்தவொரு நிர்க்கதி நிலையும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை. அப்படி இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு உதவ முன்வந்தால் அது மகிழ்ச்சியே. ஆனால் அதனை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா மீது தடைகளை இட்டு, போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்திவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா இது பற்றிக்கூட வாய் திறக்கவில்லையே.

சிங்களத்தைக் கட்டப்படுத்த தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தியாவின் கைங்கரியத்திற்கு விடுதலைப் புலிகள் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அந்த நிலை மீண்டும் தோன்ற நாம் அனுமதிக்கலாமா? அதனால் எமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்த இந்தியா மறைமுகமாகச் செயற்பட்டது என சிங்கள அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதும், அதற்கு இந்தியத் தரப்பு வெளியிட்ட மறுப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் அனைவரும் செய்தியாகப் படித்திருக்கின்றோம். இந்தியாவின் மறைமுக நடவடிக்கையில் முக்கியமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரத்து களமிறங்கியதைக் குறிப்பிடலாம். அப்பயென்றால் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, த.தே.கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இயங்கியது என்பதை நாம் ஏன் உணரவில்லை.

த.தே.கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மூவரது ஏதேச்சதிகாரப்போக்கை மாற்றியமைக்கும் மறைமுக பன்முக முயற்சிகள் தோல்வி கண்டதே காங்கிரசின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது எனக்கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றியதும் கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பகத்தன்மையைப் பாரிய கேள்விக்கு இட்டுச்சென்றது. காங்கிரசின் வெளியேற்றத்திற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் கண்டனம் வெளியிடும் நாம், கூட்டமைப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக்குரல் கொடுக்கவோ, அல்லது இணைந்து, இணைத்துச் செயற்படுங்கள் என சம்பந்தன் ஐயாவுக்கு அறிவுரை சொல்லவோ முற்படவில்லை.

யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தாயக – தேசிய எல்லை இந்த இரண்டு மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பும் நாம், மறு புறத்தில் அம்பாறையில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தலைமையிலான (வடக்கு கிழக்கு தேர்தல் பொறுப்பு) இடதுசாரி விடுதலை முன்னணி மீதும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உடைக்கப்படுகின்றது என விமர்சனக் கண்டனம் முன்வைப்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றோம்.

திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கவே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தன் தோற்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தேசிய பட்டியல் இடம் கிடைத்தால் (2004இல் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன) அதனை சம்பந்தனே பற்றிக்கொள்வார் என்பது உண்மையே. ஆனால் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்போதே அடிக்கடி வன்னிக்கு அழைத்து ஊசி அடிக்க வேண்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்கள் மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தன்னிச்சைப்படி, அல்லது இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க ஆடுவதைத் தடுக்க இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் வாதமாக முன் வைக்கலாம் அல்லவா?

வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை தொகுதிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடாது தவிர்த்ததற்கு முக்கிய காரணி, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. அதனையே இப்பொழுது பிரதேச வாதமாகக் கிளப்பி நாம் ஆய்வுப் பத்திகளை எழுதுவதால் புண்பட்டுள்ள தென்தமிழீழ மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கும். “பிரதேசவாதம் பேசும் பிள்ளையானையும், கஜேந்திரனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக உருவாக்கி அறிக்கை வெளியிடும் ஊடகங்கள், தாம் மறைமுகமாகப் பிரதேச வாதத்தை தூண்டுகின்றோம் என்பதை ஏன் உணரவில்லை. ஆக கருணா, பிள்ளையானுக்கும், இந்த ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஒருசில இணைய ஊடகங்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக. மறு தரப்பு மீது கண்மூடித்தனமாக மண்வாரித் தூவுவது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்றோம்? எனக்கூறும் இந்த ஊடகங்களின் நிலைப்பாடு பற்றி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் அல்லவா?

திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆழமான பிழவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், அதற்கு நாம் துணைபோக முடியாது என்பதையும் தமிழ் மக்களை வழிநடத்த முற்படும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்களில் ஆய்வுகளை எழுதி நேரத்தை வீணாக்கி மக்களைக் குழப்பும் நாம், தமிழ் மக்களின் பிளவுபட இருந்த தலைமைகளை ஒன்றிணைக்க எம்மால் முடிந்ததை ஏதாவது செய்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். சரி… தவிர்க்க முடியாமல் பிளவு ஏற்பட்டு விட்டது, இது பற்றி எழுதிக் குழப்புவதை விட்டுவிட்டு, இந்தத் தலைமைகளை ஒருங்கிணைக்க இப்போதாவது ஏதாவது செய்தோமா?

த.தே.கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அது பற்றி உரியவர்களிடம் எடுத்துக்கூறி மறைமுக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே சிறந்த ஊடகருக்கு எடுத்துக்காட்டு.

த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் மட்டுமன்றி, வேறு எத்தனையோ முக்கிய மறைமுகப் பணிகளை மாமனிதர் சிவராம் அவர்கள் மேற்கொண்ட போதிலும், அவர் அதனை சதாரண மக்களிற்கு தெரிவித்து, விமர்சனங்களை முன்வைக்க முற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் அரசியல் வார்த்தை ஜாலங்களைப் புரிந்துகொள்ள முடியாத சாதாரண மக்கள் பிரதேசவாதம் என்ற சந்தர்ப்பவாதத்திற்குள் கட்டுப்பட்டு, அவர்களின் விடுதலை உணர்வு சிதறடிக்கப்படும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பிரதிநிதித்துவம் எவ்வளது முக்கியமோ, அதனைவிட மக்களின் மனங்களும், விடுதலை உணர்வும் அதிமுக்கியம். அவற்றில் தளர்ச்சியோ, பாதிப்போ ஏற்பட நாம் துணைபோகக்கூடாது.

2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தைத் தவிர வேறு எந்தவொரு காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை என்பதே உண்மை. 1963ஆம் ஆண்டு திருகோணமலையில் 36 வீதமாக இருந்த தமிழ் மக்கள் 2007ஆம் ஆண்டில் 28.6 வீதமாக வீழ்ச்சியடைந்தனர். இதேபோன்ற நிலை வன்னியிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் காணப்படுகின்றது.

போர் நிறுத்தம் என்ற கயிற்றினால் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், திருகோணமலை நகரத்தில் நிறுவப்பட்ட பெளத்த கோவிலையும், மட்டக்களப்பில் வீதிகளுக்கு சிங்களப் பெயர் இடுவதையும், ஏன் வன்னியில் முளைத்த பெளத்த கோவில்களையும் நாடாளுமன்றில் நான்காவது பெரும் பலத்துடன் இருந்த த.தே.கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.

இதனால் திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது சரியென்பது எனது வாதமல்ல. சம்பந்தன் பதவிக்கு வராதுபோனால் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என முன்வைக்கப்படும் ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே எனது கேள்வி? அப்படியென்றால் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.சம்பந்தன் அவர்கள் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ் மக்களின் விகிதார வீழ்ச்சியும், சிங்களக் குடியேற்றமும், முஸ்லீம் மக்களின் பெருக்கமும் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது நியாயம் அல்லவா?

ஆக மொத்தத்தில் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் தலைமையாக இப்பொழுது செயற்படக் கூடியவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே, சிங்கள தேசத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி பன்னாட்டு சமூகத்திற்காவது எடுத்துக்கூறி, தமிழ் மக்களிற்கான ஆதரவைத் திரட்ட வழி வகுக்குமே தவிர, விமர்சனங்களை முன்வைத்து தலைமைகளைப் பிரிப்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது.

3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தின், அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தின் அபிவிருத்தி, மற்றும் வேலை வாய்ப்பு, உயர்கல்வி போன்றன பாதிக்கப்படப்போவதாக முன்வைக்கப்படும் விமர்சங்களில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒரு பிரதேசத்திற்கான ஆறு கோடிகள் இல்லாமல் போகும் என நாம் கவலைப்படுகின்றோம்.

தமிழர்களின் தன்மானத்திற்காக உயிர் கொடுத்துப் போராடிய எம்மினம், அதிலும் வீரவீச்சுடன் போராடிய பல அரிய போராளிகளைத்தந்த தென் தமிழீழத்திற்கான அபிவிருத்தி தடைப்படும் என நாம் பேச முற்படுவது, அந்தப் போராளிகளின் தியாயங்களை அவமதிப்பது போன்ற செயற்பாடாகும். தமிழர்கள் தற்பொழுதுள்ள நிலையில் சில அணுசரிப்புக்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டு சிங்களத்தின் உதவியைப் பெற வேண்டும் என முன்வைக்கப்படும் வாதம் எவ்வளது தூரம் சரியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதால், அபிவிருத்தி நடவடிக்கைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என எழுந்தமானமாகக் கூறுவதன் ஊடக, மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் போன்றவர்கள் கூட்டமைப்பின் பிளவினால் ஆசனங்களைப் பெறுவதையும் மறைமுகமாக ஆமோதிக்கும் நாம், தென் தமிழீழத்தில் இழக்கப்படும் பிரதிநிதித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் அருகதையை இழந்து நிற்கின்றோம்.

கருணாவும், பிள்ளையானும் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் துணைப்படைக் குழுக்களை இயக்கி, அவர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியபோது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் எமது மண்ணில் மேற்கொள்ள முடியாமல் போனது. குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவோ, தமது தொகுதிக்கு வந்து போகவோ முடியாமல் போனது. அப்போது உரத்துக் குரல் கொடுத்து கண்டனங்களை வெளியிட்டு, அபிவிருத்திப் பணிகளுக்கு ஏதுநிலைகளை ஏற்படுத்தாத நாம், இப்போது என்ன நோக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.