Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகர்க்கப்பட்ட திலீபன் நினைவுத்தூண்! அழியும் ஈழத் தமிழர்கள் அடையாளங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகர்க்கப்பட்ட திலீபன் நினைவுத்தூண்! அழியும் ஈழத் தமிழர்கள் அடையாளங்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரால் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவேண்டும்...

புனர்வாழ்வு என்ற பெயரில் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைவதை உடனே நிறுத்த வேண்டும்...

இந்திய அமைதிப் படையின் மேற்-பார்வையில் ஈழத்தின் கிராமங்கள், பள்ளிக் கூடங்கள் முழுதும் ஆக்கிரமித்துள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும்...

& இப்படிப்பட்ட 5 கோரிக்கைகளோடு 15.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உண்ணாவிரதம் அமர்ந்தார் இளைஞர் திலீபன்.

காலை உணவுக்கும் முற்பகல் தேனீருக்கும் இடையிலான ‘ஏர்கூலர் உண்ணாவிரதம்’ அல்ல அது. ‘எனக்கு சுய நினைவு தப்பினாலும் குளுக்கோஸ், தண்ணீர் தந்துவிடாதீர்கள். என் தாய் நாட்டுக்காக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் நான் உயிர்விடவேண்டும்...’ என கூட இருந்தவர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் திலீபன். அதன்படியே... ஈழத்துக்காக சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் உலர்ந்த உதடுகளுடனும், உலராத நம்பிக்கையோடும் உண்ணாவிரத்தையும், தன் உயிரையும் பன்னிரெண்டாவது நாளான 26.09.1987 அன்று முடித்துக்கொண்டார் திலீபன்.

அப்பேற்பட்ட தியாகி திலீபனுக்கு தமிழர்கள் எழுப்பிய நினைவுத் தூணை இடித்து நிரவி விட்டு... அவர் எதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த சிங்களக் குடியேற்றத்தை, மிக விரைவாக செய்துகொண்டிருக்கிறது சிங்கள அரசு. இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு என புலிகள் கட்டியாண்ட ஈழதேசமெங்கும் சிங்கள வாடை வீசிக் கொண்டிருக்கிறது.

‘‘யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் இடத்திலிருந்து சில மீட்டர்கள் அருகே இருந்ததுதான் திலீபன் நினைவுத் தூண் தகர்ப்பட்டதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று’’ என்கிறார்கள் யாழில் இருக்கும் பத்திரிகையாள நண்பர்கள். திலீபன் நினைவுத் தூண் தகர்ப்பு பற்றியும் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும் அவர்களிடம் பேசினோம்.

‘‘திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதம் அன்று இந்திய அரசுக்கு பலத்த நெருக்கடியை உருவாக்கியது. பயங்கரவாதத்தை அடக்க வந்தோம் எனச் சொல்லி வந்து பல அட்டூழியங்கள் செய்த இந்திய அமைதிப்படையை எதிர்த்து காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்தார் திலீபன். அப்போது யாழ்ப்பாணம் வந்த அப்போதைய இலங்கைக்கான இந்திய உதவி தூதர் நிருபம்சென், ‘உண்ணாவிரதம் இருப்பதால் எல்லாம் இந்தியாவை நிர்பந்திக்க முடியாது...’ என புலிப் பிரதிநிதிகளிடம் கடுமையுடன் கூறிவிட்டுச் சென்றார். இந்திய தூதரக அதிகாரிகள் திலீபன் உண்ணாவிரத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் வேண்டுமென்றே அவரை சாக வைத்தனர்.

திலீபன் உண்ணாவிரத மேடையில் உயிர்விட்ட-போது சிங்கள அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்-களுக்கு நிகராக இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல்கள் எழுந்தன. இதையெல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது...’’ என்றவர்கள் தொடர்ந்தனர்.

‘‘இந்த நிலையில்தான், புலிகளை அழிக்க உதவியதற்கு பரிசாக, இதுவரை கொழும்பில் மட்டுமே இருந்து வந்த இந்திய தூதரகத்தின் துணை தூதரகத்தை யாழ்ப்பாணத்திலும் நிறுவிக் கொள்ள, சமீபத்தில் கொழும்பு வந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் விருப்பம் தெரிவித்தார். இதை ராஜபக்ஷேவும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து இந்திய தூதரகத்துடன் இதுபற்றிய ஆலோசனைகள் நடத்திய நிருபமா, யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதகரம் அமைய இடத்தைத் தேர்வு செய்யும்படி உத்தரவிட்டிருந்தார். வரும் மே மாதம் இந்திய துணை தூதகரம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்தபோதுதான்... இந்திய அதிகாரிகளின் கண்ணை உறுத்தியிருக்கிறது காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் நினைவுத் தூண், இந்திய தூதகரம் அமையும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளாக மிக அருகிலேயே இருக்கிறது.

இந்தியாவின் விருப்பத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் சிங்களர்களுக்கு இதற்கு மேல் சொல்ல வேண்டுமா? இரவோடு இரவாக அந்த தியாகியின் நினைவிடத்தை ஆப்கன் தாலிபன் பாணியில் உடைத்து, சிதைத்துவிட்டனர்’’ என முடித்தபோது அவர்களின் குரலும் உடைந்திருந்தது.

நம்மிடம் பேசிய மேலும் சில யாழ் நண்பர்கள்... ‘‘போரில் புலிகளை சிங்கள ராணுவம் வெற்றி கொள்ளும் முன்பாகவே யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால்... அப்போது புலிகளின் ஆதிக்கமும் இருந்தது. இரவு ரோந்துவருவார்கள். மதுக்கடைகள், விபசாரத்தை தடுத்து நிறுத்திவந்தனர் புலிகள். ஆனால்... ராணுவ வெற்றிக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து வந்த மூன்று லாரிகளில் இரண்டு லாரிகள் முழுதும் மது பாட்டில்கள்தான். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது மறைந்து மது அருந்தக் கூடத் தயங்கினார்கள். ஆனால் இப்போது பள்ளிப் பொடியர்கள் கூட கையில் டின் பீருடன் கடைகளின் வாசலில் நிற்கிறார்கள்.

இப்படி யாழில் வக்ரத்தை நுட்பமாக நுழைத்துக்-கொண்டிருக்கிறது சிங்களம். மேலும், ஏ&9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதால் ஏராளமான சிங்களர்கள் தமிழர் பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். அரசாங்கமே கொழும்பிலிருந்து சிங்கள குண்டர்களை தலைக்கு 20 ஆயிரம் இலங்கை ரூபா கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்புகிறது. அவர்கள்தான் சிங்களப் படையினரோடு சேர்ந்து தமிழர்களின் உணர்வுச் சின்னங்களான திலீபன் நினைவுத் தூண், மாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் போன்றவற்றை உடைத்து எறிகின்றனர். கொடிகாமம், உடுப்பட்டி, கோப்பாய், வேலணை சாட்டி போன்ற இடங்களில் புல்டோசர்களைக் கொண்டு புலிகளின் நினைவிடங்கள் தகர்க்கப்படுகின்றன.

இந்த உச்சபட்ச வெறியின் வெளிப்பாடாக புலிகள் மாவீரர்கள் நினைவிடங்களை இடித்து உள்ளே உள்ள புலிகளின் எலும்புக் கூடுகளை கூட ஒடித்து குப்பையில் போடுகிறார்கள்.

ராஜபக்ஷே பேரினவாத சைக்கோவாக மாறிவிட்டார். புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்ததாக அவர் மண்ணை முத்த-மிட்டாலும்... ஈழ மண்ணின் புல்,பூண்டு, கல், மண் கூட ராஜபக்ஷேவை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தமிழ் மக்களையும், தமிழர் அடையாளத்தையும் ஈழ மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்றனர் சிங்களக் காடையர்கள். என்றோ மண்ணுக்காக தங்களை விதைத்துக் கொண்ட புலிகளின் எலும்புகள் கூட சிங்களர்களுக்கு சிம்ம சொப்பமான இருக்கிறது’’ என ஆவேசப்படுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு ஈழத் தமிழனுக்-குள்ளும் ஓர் எரிமலை வெடித்துக் கொண்டிருந்-தாலும்.... ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பைக் காண்பிக்க முடியாமல் அதட்டி மிரட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை நடந்தும் சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இருக்கிறார்களே தவிர, சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து வலிய போராட்டக் குரல் எழுப்பவில்லை. இதுதான் இப்போது ஈழத்தின் ஆழமான சோகம்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1065&rid=59

முத்தமிழ் வேந்தன்

சென்னை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.