Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிமக்கள் பேரவைக்கு ஒரு மனந்திறந்த மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிமக்கள் பேரவைக்கு ஒரு மனந்திறந்த மடல்

வன்னிமக்கள் பேரவை என்ற பெயரில் அறிக்கை விட்ட கட்டுரையாளருக்கு,

வணக்கம்!

தங்களின் அறிக்கை நிரம்பவே சுட்டது. வன்னிமக்களின் அவலங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வன்னிமக்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சரியான முறையில் உதவவில்லையென்ற குற்றச்சாட்டையும் சொன்னீர்கள். மனதார ஏற்றுக்கொள்கிறோம். அந்தக் குற்றவுணர்வு எமக்கு நிறையவே உண்டு. அதுவொன்றும் வேண்டுமென்றே தட்டிக் கழித்ததில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.

வன்னிமக்கள் செய்த தியாகங்களும், போராட்டத் தலைமையையும் இயக்கத்தையும் பாதுகாக்கவென அவர்கள் கொடுத்த விலையும் மிகமிக அதிகம். இன்றும் அதற்கான விலையை அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். இவையனைத்துக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம்.

ஆனால் இந்தத் தியாகங்கள், பாடுகள், வேதனைகள் எல்லாவற்றையும் அரசியலாக்கி குறிப்பிட்ட சிலருக்கு வாக்குக் கேட்பதற்காக ‘வன்னி மக்கள் பேரவை’ பயன்படுத்திக் கொண்டது தான் எமக்கு சினத்தைத் தருகிறது. வன்னிமக்களுக்கும் அவ்வாறே உணர்விருக்கும் என நம்புகிறோம்.

மக்களைக் கவனிக்காத அரசியல்வாதிகள் எல்லோரையும் பொதுவாகச் சாடி உங்கள் அறிக்கை அமைந்திருந்தால், வன்னிமக்களைக் கவனிக்காமல் தேர்தலுக்குப் பணமிறைக்கும் எல்லோரையும் நீங்கள் சாடியிருந்தால், வன்னி மக்களைப் பயன்படுத்தி அரசியல் செய்வோரை அம்பலப்படுத்தி உங்கள் அறிக்கை வெளிவந்திருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும். ஆனால் அப்பட்டமான ஒருபக்கச் சார்புடன், குறிப்பிட்ட சிலரின் மேலுள்ள காழ்ப்புணர்வுடன் அயோக்கியத்தனமான வாதங்களுடன் வெளிவந்திருக்கிறது உங்கள் அறிக்கை. எனவேதான் இது வன்னிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்ட விளம்பர அறிக்கையாக எம்மால் பார்க்கப்படுகிறது. அப்படி நினைப்பதற்குப் போதிய காரணங்கள் உங்கள் அறிக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன.

முதலில், தாயகத்தில் நிலவிய தேர்தல் பரப்புரை நிலைமையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஊடக தர்மம் என்பது அறவே மறுக்கப்பட்டு அராஜகச் சூழல்தான் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. இதுவொன்றும் சிங்களப் பேரினவாத அரசாலோ அல்லது ஒட்டுக்குழுக்களாலோ ஏற்பட்டதன்று. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் (த.தே.கூ) அதை ஆதரிக்கும் சக்திகளாலும் ஏற்பட்டது. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(த.தே.ம.மு) குறித்த செய்திகள் எல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது மட்டுமன்றி, மக்களிடத்தில் அதைக் குறித்த தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியான பரப்புரை பத்திரிகைகளில் நடத்தப்பட்டு வந்தது. உதயன், தினக்குரல் என்பன என்ன நிலைப்பாடு எடுத்துள்ளன, அவை எப்படிச் செயற்படுகின்றன என்கிற விடயங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு ‘வன்னிமக்கள் பேரவை’ என்று அறிக்கை விட்ட உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.

இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? பத்திரிகைக் குழுமத்தின் முதலாளியை போட்டியிட வைத்ததன் மூலம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்களைக் கூட்டமைப்புத் தலைமை அடித்துக் கொண்டது. மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் என்று சிலரை மட்டும் குறிப்பிட்டுத் தாக்கும் நீங்கள், கொழும்பிலே ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் எண்ணத்தோடிருந்த திரு சரவணபவனை யாழ்ப்பாணத்தில் வேட்பாளராக்கியது குறித்து என்ன கருதுகிறீர்கள்? இதன் பின்னாலுள்ள அயோக்கியத்தனமான அரசியல் குறித்து கூட்டமைப்பை விமர்சித்ததுண்டா?

இப்படியாக ஒருவழிப் பரப்புரை மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஊடகங்களில் நடத்தப்பட்டு வந்தது. வலம்புரியானது த.தே.ம.மு. இன் செய்திகளைப் பிரசுரித்தாலும் மக்கள் மத்தியில் அப்பத்திரிகை அதிக செல்வாக்கைக் கொண்டதில்லை. மாறாக உதயனும் தினக்குரலும் திட்டமிட்டே மிகப்பெரிய ஊடகப்போரை த.தே.ம.மு. மேல் தொடுத்துக் கொண்டிருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: செல்வராசா கஜேந்திரன் பல ஆயிரங்கள் செலவழித்து உதயனில் தனது கருத்தை ஒரு விளம்பரமாகப் போட்டிருந்தார். ஆம் உதயனில் த.தே.ம.மு. இன் கருத்து ஏதாவது வரவேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கில் செலவழித்து விளம்பரமாகத்தான் போடவேண்டும். அதற்குள்ளும் ஏராளமான வெட்டுக்கொத்துகள் நடந்துதான் விளம்பரமே வெளிவரும். அந்த விளம்பரத்துக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் அளித்த பதில் உதயனில் செய்தியாக வெளிவந்தது. அதுவும் பெரிய கொட்டை எழுத்தில் முக்கியமான செய்தியாக சுரேசின் அந்தப் பதில் வந்திருந்தது. விளம்பரமொன்றுக்கான பதிலை முதன்மையான செய்தியாக வெளியிட்டதே நியாயமற்றது. சுரேசின் பதிலுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் திரும்பவும் கஜேந்திரன் பல ஆயிரங்களைச் செலவழித்து ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும். இப்படித்தான் ஓர் ஊடக அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மிகப்பயங்கரமான ஊடக அராஜகத்தை த.தே.கூ. உதயனின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது. உதயன் எந்த நிலைவரை போயிருக்கிறதென்றால், தேசியத் தலைவர் பிழை, விடுதலைப் புலிகள் இயக்கம் பிழை, ஏக பிரதிநிதித்துவம் என்று புலிகளை விட்டது பிழை, புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துள்ள த.தே.கூ. இனித்தான் மக்களுக்காகப் போராடப்போகிறது என்ற பொருள்பட பிறவிடங்களில் எழுதப்படும் கட்டுரைகளை அள்ளிப்போட்டும் மொழிபெயர்த்துப் போட்டும் தனது பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது உதயன் பத்திரிகை. ‘இயக்கப்பாணி அரசியல்’ நடத்தும் குழுவாகவும், ஆயுதக் குழுவாகவும் த.தே.ம.முன்னணியைப் பகிரங்கமாகச் சித்தரிக்கிறது உதயன். உண்மையில் ‘இயக்கப்பாணி’ என்று உதயன் எதைச்சொல்கிறதோ அது த.தே.கூட்டமைப்புக்கும் உதயன் பத்திரிகைக்குமே பொருந்தும்.

இந்நிலையில்தான் புலம்பெயர் அமைப்புக்கள் தமது விளம்பரங்களை வெளியிடத் தீர்மானித்தன. அதுவும் கடைசிநாட்களில்தான் – நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று கடைசி நாளில்தான்- அதிக விளம்பரங்கள் வெளிவந்தன. புலம்பெயர் அமைப்புக்கள் தமது பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைக் கொடுக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது த.தே.கூட்டமைப்பும் அதற்குரிய ஊடகப்பிதாமகனும் தான். தாயகத்திலும் புலத்திலும் இந்த ‘அமைப்புக்களின் அறிக்கைப் போரை’த் தொடங்கிவைத்தவர்கள் நீங்கள் ஆதரவளிக்கும் இந்தக் கூட்டம்தான். உதயனிலே ‘பிரித்தானியா மக்கள்’ என்று குறிப்பிட்டு த.தே.கூ. ஐ ஆதரித்து விளம்பரம் வெளிவந்திருந்தது. அப்போதெல்லாம் புலம்பெயர் அமைப்புக்கள் எவையும் விளம்பரம் கொடுத்திருக்கவில்லை. பெயர், ஊர் இல்லாமல் இப்படி விளம்பரம் போட்டு ஏதோ புலம்பெயர் மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள் என்ற மாயையை யாழ்ப்பாணத்தில் உருவாக்கவென திட்டமிட்டு இப்படியொரு நாடகம் த.தே.கூ. ஆல் நடத்தப்பட்டது. அத்தோடு கனடாவிலே உள்ள தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை செய்தியாக்கி அதன் மூலமும் புலம்பெயர் மக்கள் அனைவரும் தம்மோடுதான் நிற்கிறார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது. அப்போதெல்லாம், ‘உங்கள் கருத்தை எங்கள் மேல் திணிக்காதீர்கள்’ என்று எழுத உங்களுக்கு மனம்வரவில்லை. இந்நிலையில்தான், உண்மை நிலையை விளக்கவேண்டிய கடப்பாடு புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏற்பட்டன. ஆக, இப்படியாக விளம்பரங்கள் கொடுக்க வேண்டிய நிலைக்கு புலம்பெயர் அமைப்புக்களைத் தள்ளியதே வன்னிமக்கள் பேரவை ஆதரவளிக்கும் த.தே.கூட்டமைப்பும் அதன் ஊடகங்களும்தான்.

புலத்திலேயும் இதே நிலையைத்தான் த.தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவு வலைத்தளமும் ஏற்படுத்தின. முதன்முதலில் தாயகத் தேர்தல் தொடர்பான ஆதரவு அறிக்கை வெளிவந்தது யாரிடமிருந்து என்பதை நீங்கள் அறிவீர்களா? அது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவு அறிக்கையாக இருக்கவில்லை. மாறாக த.தே.கூ. ஐ ஆதரித்து இதுவரை இல்லாத ‘வடக்கு கிழக்கு பழைய பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஓர் அறிக்கை அந்த வலைத்தளத்தில் வெளிவந்தது. அதுதான் தொடக்கம். தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் அறிக்கை இதில் சேர்த்தியில்லை, ஏனென்றால் அது ஏற்கனவே இருக்கும் ஓர் அமைப்பு. இல்லாத அமைப்பின் பெயரில் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது குறித்தே இவ்விடத்தில் சொல்லப்படுகிறது. அதன்மூலமும் புலத்துமக்கள் த.தே.கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள் என்ற மாயையை உருவாக்க முனைந்தார்கள். அதன்பின்னர்தான், உண்மையான மக்கள் கட்டமைப்புக்கள் – ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கட்டமைப்புக்கள் தமது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஆக, புலத்திலும் இந்த ஆதரவு அறிக்கைப் போரைத் தொடக்கி வைத்தது த.தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவு வலைத்தளமும்தான்.

நிலைமை இப்படியிருக்க, அநியாயம் செய்த தரப்பை ஆதரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் உங்கள் அறிக்கை, புலத்திலிருந்து த.தே.ம.முன்னணிக்கு ஆதரவளித்தவர்களை மட்டும் சாடி அமைந்துள்ளதானது அப்பட்டமான பக்கசார்பாகும். இதேவேளை, புலத்திலிருந்து த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவளித்த அமைப்புக்களை(?) ஒருவரிதானும் செல்லமாகக் கிள்ளக்கூட உங்கள் அறிக்கை இடம்கொடுக்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் சொன்னால் அது கருத்துத் திணிப்பில்லை, த.தே.ம.முன்னணிக்கு ஆதரவளிப்பவர்கள் சொன்னால்தான் அது திணப்பா? ஒருவேளை ஓர் அமைப்பைத் தவிர மற்றவையெல்லாம் போலி அமைப்புக்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிட்டதோ என்னவோ?

புலம்பெயர் அமைப்புக்கள் தேர்தலுக்காகப் பணம் சேர்த்து அனுப்பியது குறித்துக் கவலைப்பட்டிருந்தீர்கள். நியாயமான கவலைதான். ஆனால் அதையும் ஒருபக்கத்தை மட்டுமே தாக்கப் பயன்படுத்திக் கொண்டீர்கள். தாயகத்தில் இருந்த சமநிலையற்ற தன்மையை ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டோம். அதைவிட த.தே.ம.மு சார்பில் போட்டியிட்டவர்களில் கஜேந்திரகுமாரைத் தவிர வேறு எவரும் அரசியற் பாரம்பரியமுள்ளவர்கள் அல்லர். அத்தோடு பணக்காரர்களுமல்லர். அவர்களுக்கான தேர்தல் பரப்புரைகளுக்கு நாம்தான் உதவவேண்டும். ஆனால் த.தே.கூ. காரரின் பொருளாதார பலத்தைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களில் சிலர் உண்மையில் வசதிபடைத்தவர்களில்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் கூட்டமைப்பானது மிகப்பெரும் பொருளாதார பலத்தோடுதான் நிற்கிறது. கூட்டமைப்பிலே தனியொருவர் செலவழித்த ஒட்டுமொத்தப் பணத்தைக்கூட த.தே.ம.முன்னணியின் முழுச் செலவுமே எட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.

யாழ்ப்பாணத்திலேயே நிற்கும் நீங்கள், அங்கே கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் செலவழித்த வழிமுறைகள், தொகைகள் பற்றி அறியாமலா இருக்கிறீர்கள்? அதேவேளை த.தே.ம.மு. செலவழித்த வழிமுறைகள், தொகைகள் குறித்த கணக்கும் ஓரளவு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

திருமலையிலே இறுதி இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவிலிருந்து அச்சிட்டு எடுத்துவரப்பட்டிருந்த ஓர் இலட்சம் வண்ணச் சுவரொட்டிகள் நகர்ப்பகுதியெங்கும் ஒட்டப்பட்டன. சம்பந்தரின் முகம் மட்டுமே மிகப்பெரிதாகக் கொண்ட அச்சுவரொட்டி மட்டுமே நகர்ப்புறத்தில் எங்கு பார்க்கிலும் காட்சியளித்தது. இதைப்போல் எவ்வளவு விபரங்கள் உங்களுக்குச் சொல்லப்பட வேண்டும்? ஏன் இன்று த.தே.கூட்டமைப்புக்குள்ளேயே நிற்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகளுடன் உங்களுக்கிருக்கும் தொடர்பு மூலம் கேட்டுப்பாருங்கள். உள்ளேயே எவ்வளவு பணம் விளையாடுகிறது என்று அவர்களே சொல்வார்கள். இப்படியாக பணம் வாரியிறைக்கப்படும் நிலை கூட்டமைப்பிலே இருக்க, அதைக் குறித்து எந்தக் கதையும் கதைக்காமல் உண்மையிலேயே மிகமிகக் குறைவான பணம் செலவழித்த த.தே.ம.மு. ஐச் சாடுகிறீர்கள். திருமலையில் இறுதிநாளில் சம்பந்தர் செலவழித்த தொகையை ஏன் அங்கே இடம்பெயர்ந்திருந்த மக்களுக்குக் கொடுத்திருக்கக் கூடாது என்று நீங்கள் கேட்கவில்லை? த.தே.ம.மு. வேட்பாளர்கள் மட்டும் தான் உதவவேண்டுமா என்ன? இவ்வளவுக்கும் நடைமுறையில் சம்பந்தர்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

முதன்முதலில் புலத்திலே தேர்தலுக்கு நிதி சேகரித்தது த.தே.கூட்டமைப்புக்குத்தான். கனடாவிலே தங்கவேலு ஐயா தலைமையில்தான் இது நடந்தது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கனடிய டொலர்கள் முதற் கூட்டத்திலேயே அங்கிருந்தவர்களால் வாக்களிக்கப்பட்டது. தலைக்கு நூறு டொலர்கள் என அறவிடப்பட்டு பெரிய இராப்போசன விருந்து நடத்தப்பட்டு த.தே.கூட்டமைப்புக்கென நிதி திரட்டப்பட்டது. இலங்கைப்பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பது இலட்சங்கள். உறுதியளிக்கப்பட்ட தொகை கிடைத்ததா, அல்லது அதைவிடவும் அதிகம் கிடைத்ததா என்ற விளக்கமான தரவுகள் இல்லை. ஆனால், இந்தப் பணத்தைக் குறித்து ‘வன்னிமக்கள் பேரவை’யென்ற பெயரில் அறிக்கையெழுதியவர் ஏன் கேள்வி எழுப்பவில்லை. அந்தப் பணத்தின் அரைவாசியளவுதான் த.தே.ம.முன்னணிக்கு ஒட்டுமொத்தமாகவே புலத்திலிருந்து போயிருக்கிறது. கனடாவில் சேர்க்கப்பட்ட தொகையைக் கொண்டே தாயகத்தில் எவ்வளவோ செய்திருக்கலாமென்ற விவாதத்தை வன்னிமக்கள்பேரவை அறிக்கையாளருக்கு ஞாபகப்படுத்த விளைகிறோம். கனடாக் காசில் குழந்தைகளுக்குப் பால்மா வாங்கமுடியாதா என்ன? இதைவிட வேறு சக்திகள் எவ்வளவு கொடுத்தன என்பதை த.தே.கூ. இற்குள் இருக்கும் சிலரிடமே அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

பத்மினி வாக்குக் கேட்பதைக் கேள்விக்குள்ளாக்கும் நீங்கள் ஒட்டுமொத்தமாக எல்லா நாடாளுமன்ற உறுப்பினரையும் கேள்வி கேட்டிருந்தால் அதில் நியாயமிருக்கும். இப்போது த.தே.கூட்டமைப்பில் இருக்கும் யார்யார் வன்னிமக்களுக்கு என்னென்ன செய்தார்கள் என்பதை நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் கேட்டு அறிகிறோம். அதைவிடுத்து ஒருசிலரை மட்டும், அவர்கள் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள் என்ற காரணத்துக்காக திட்டுவது அயோக்கியத்தனம். யாழ்ப்பாணத்தில் பெண் வேட்பாளர் ஒருவருக்குக் கூட இடமொதுக்க முடியாத – விரும்பாத – ‘சமூகத் தெளிவுள்ள’ த.தே.கூட்டமைப்பில் எவ்வளவு தூரம் வியாபார – இன்னபிற சிக்கல்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது கடினமா என்ன?

‘கூட்டமைப்பைச் சேர்ந்த மூவரைத் தோற்கடிப்பதற்கு நீங்கள் மூவர் மட்டுமே போட்டியிட்டிருக்கலாமே’ என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இதிலேயே உங்கள் குட்டு வெளிப்படையாக உடைந்துபோகிறது. இந்த விளக்கத்தோடு தானா அந்த அறிக்கையை எழுதியவர் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க முடிவெடுத்தார்? முதலில் ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியோ சுயேட்சைக் குழுவோ குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களோடுதான் களமிறங்க வேண்டும் (மாவட்டத்துக்கான ஆசனங்கள்+3) என்ற விதியொன்று இருக்கிறது. பிறகெப்படி மூன்றுபேர் மட்டும் த.தே.ம.முன்னணி சார்பிலே போட்டியிட முடியும்? இந்த ஒருவிடயத்திலேயே உங்களில் முட்டாள்தனமான த.தே.கூ. ஆதரவு நிலைப்பாடும், த.தே.ம.முன்னணி மேலான வன்மமும் வெளிப்பட்டு நிற்கிறது. கஜேந்திரகுமார் திருமலையில் போட்டியிட்டிருந்தால், ‘வடக்கான் கிழக்கை ஆள நினைக்கிறான், கிழக்குப் பிரதிநிதித்துவம் இல்லை’ என்று நீங்கள்தான் கூச்சல் போடப் போகிறீர்கள். மகிந்தவின் ஆசிபெற்ற கெளரிமுகுந்தன் என்று கூட்டமைப்பின் கோசத்தையே மீளவும் கக்கிக் கொண்டிருக்கு நீங்கள் நன்றாகவே வெளிப்பட்டுப் போனீர்கள். கடந்த அரசதலைவர் தேர்தலில் த.தே.கூ. எடுத்த முடிவுக்கிணங்க சரத் பொன்சேகாவின் பரப்புரைக் கூட்ட மேடையிலே அவரின் கையைப் பிடித்து உயர்த்தி ஆதரவு தெரிவித்தவர்தான் கெளரிமுகுந்தன். அக்காட்சிகள் இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியான சக்தியில் மீளமீள ஒளிபரப்பட்டது. அந்தக் கூட்டம் முடிந்து வீடுவரும் வழியிலேயே கெளரிமுகுந்தனுக்கிருந்த ஆறு பொலிசாரின் பாதுகாப்பும் மகிந்தவால் விலக்கப்பட்டது. இன்றுவரை ஒரு பொலீஸ் பாதுகாப்புக்கூட இன்றித்தான் கெளரிமுகுந்தன் இருக்கிறார். ஆனால் மகிந்தவே நேரில் சொல்லி வேறொருவருக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. மகிந்தவின் ஆசிபெற்ற வேட்பாளர் யார் என்று இப்போது சொல்லுங்கள்.

இப்படியானவற்றாலே தான், இந்த அறிக்கை வன்னிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்டதன்று; மாறாக, இந்தத் தேர்தலில் வாய்ப்புக் கேட்டு மறுக்கப்பட்டாலும் பரவாயில்லை, மாகாணசபைத் தேர்தலிலாவது எப்படியும் ஏதாவது ஒருவழியில் அரசியலில் குதித்துவிடலாமென்று கனவுகண்டுகொண்டிருக்கும் ஒருவர் எழுதி வெளியிட்ட அறிக்கையாகவே எம்மால் பார்க்கத் தோன்றுகிறது. இறுதிநாளில் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் என்று வெளியிட்ட அறிக்கையும் இப்படிப்பட்டதொன்று என்பதே எமது கருத்து. ஒருகட்சியில் போட்டியிட விண்ணப்பித்தபோதே பொதுஅமைப்புக்களின் சார்பில் அறிக்கைவிடும் தார்மீக அந்தஸ்தை இழக்கிறோம் என்ற புரிந்துணர்வின்றி, அதே கட்சிக்கு பொதுஅமைப்பொன்றின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கை விட்டது என்ன நியாயமென்று நாம் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில், வன்னிமக்களின் பாடுகள், தியாகங்கள், தற்போது அவர்களிருக்கும் நிலைமை போன்ற நியாயமான, உணர்வுபூர்வமான பல விடயங்களைச் சொல்லித் தொடங்கப்பட்ட அறிக்கை அவையெல்லாவற்றையும் கேவலப்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான வாக்குத் தேடும் அயோக்கியத்தனத்தைச் செய்துள்ளது. பேசாமல் த.தே.கூட்டமைப்புக்கான வன்னிக்கிளை என்றே இந்த அறிக்கையை விட்டிருக்கலாம். தனியே, பொதுவாக நின்று இந்தப் பிரச்சினைகளைப் பேசியிருந்தால் நிச்சயமாக தலைவணங்கி ஏற்றுக்கொண்டிருப்போம். புலத்து மக்களின் அசைவற்ற தன்மையை எவ்விடத்திலும் நாம் நியாயப்படுத்தவில்லை.

கருத்துத் திணிப்பைச் செய்யும் அதிகாரம் எவருக்குமில்லை. அதுபோலவே புலத்து மக்கள் தமது கருத்தைச் சொல்லும் வாய்பைத் தடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை. உண்மையில் புலத்தில் இருபக்கக் கருத்தும் போய்ச்சேர வசதியுண்டு. ஆகக்கூடிய வாசகர்களைக் கொண்ட தமிழ்வின் தளம் த.தே.கூ. ஆதரவு நிலையே எடுத்துள்ளது. ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத்தில் ஊறிப்போன மக்களுக்கென இருக்கும் ஒரே தொலைக்காட்சியும் த.தே.கூ. இற்கான ஆதரவு நிலையையே எடுத்து நிகழ்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் தாயகத்தில் அவ்வாறான சூழ்நிலையில்லாமல் ஒருபக்கக் கருத்துத்திணிப்பைச் செய்துகொண்டிருக்கும் த.தே.கூ., உதயன் & தினக்குரல் ஊடகங்கள் குறித்துத்தான் ‘எங்கள் மேல் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள்’ என்ற குரல் எழுப்பப்பட வேண்டும். முடிந்தால், வன்னிமக்கள் பேரவை, யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊடக அராஜகத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கட்டும்.

முடிவாக, இக்கட்டுரையை எழுதுபவர் நடுநிலையாளரல்லர். த.தே.ம.முன்னணியை ஆதரிப்பவர். ‘வன்னி மக்கள் பேரவை’ என்ற பெயரில் அறிக்கை வெளிவந்த உடனேயே பதிலெழுதாமல் தாயகத்தில் தேர்தல் நிறைவுறும் நேரத்தில் இதை எழுதுவதற்குக் காரணமுண்டு. இறுதிநேரத்தில் மாறிமாறி நடந்த அறிக்கை, அறிக்கை மறுப்புக் குளறுபடிகளுக்குள் சிக்க விரும்பவில்லை.

இப்பதில் புனை பெயரிலேயே எழுதப்படுகிறது.

-புலத்தான்.

தொடர்பு: pulamfromvanni@gmail.com

இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேச கூடாது

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2, 2010

தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம் என்ற தொனியில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் மக்களிற்கு போதிக்கின்றன.

இதற்கு மூலதனமாக கடந்த கால போரின் போதான இழப்புக்களை கூறி, இனி தமிழினம் இப்படியான அழிவினை எதிர்கொள்ள முடியாது, தாங்காது என பயமுறுத்தப்படுகின்றார்கள். அல்லது ஒருபடி மேலே சென்று இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிடுங்கினார்கள் என்றும் கேட்கப்படுகின்றது. இப்படியான கறாரான வசனங்கள் ஊடகங்களுக்கு வராமல் பார்த்து கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். ஊர்களில் சின்ன சின்ன கூட்டங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் என்னென்ன சொல்கின்றார்கள் என்பதனை ஊடகக்ங்களில் பார்த்தால் ஒட்டு மொத்த சனமும் என்ன செய்யும் என்று தெரியாது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் ஒரு மாவீரரின் சகோதரர் கூடவே முள்ளிவாய்க்காலில் தனது குடும்பத்தை பறி கொடுத்தவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்ணர் நீங்கள் எதை வேணும் எண்டாலும் செய்யுங்கோ , கதையுங்கோ ஆனால் ஏன் மீண்டும் மீண்டும் இயக்கத்தை இழுக்கின்றீர்கள். உங்களுக்கு இயக்கத்தை பிடிக்காவிடில் சங்கரி போல போயிருக்கலாம் அல்லவா ஆனால் இப்போது அவர்கள் இல்லாதபோது கதைக்க கூடாது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பிரமுகரும் சொன்ன பதில் தம்பி அவையட காலம் எல்லாம் போயிட்டுது இனி நாங்கள் சொல்வதனைதான் கேட்கவேண்டும் எங்களுக்கு தெரியும் என்ன செய்யவேணும் என்று. நாங்கள் புலிகளிட்ட போக இல்ல அவையள்தான் எங்களை வந்து கேட்டவ ஏனெண்டால் அவையளுக்கு யாழ்ப்பாணத்தில அப்போது ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு தேர்தல் களங்களில் சூடு பிடிக்க யார் யார் பக்கத்தில் இல்லையோ அவர்களை போட்டுக்கொடுத்து வாக்கு கேட்பது அதிகரித்துள்ளது.இதை விட சிங்களவனின் நேரடியான அரசியல் கருத்துக்கள் பரவாயில்லை போல இருக்கு என்று கூறும் அளவிற்கு தமிழ் வேட்பாளர்களின் கருத்துக்கள் உள்ளூரில் பரப்பபடுகின்றன.

இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவெனில்

கடந்த கால இழப்புக்களை மக்களுக்கு எடுத்து சொல்லி அவை எல்லாம் வீண் என்றும், இனிமேல் அவ்வாறு வரக்கூடாது என்றும் மக்களை பயமுறுத்தி, எச்சரித்து வாக்கு கேட்பது எந்தளவிற்கு நியாயம் உண்டு.

சிங்களவனும் முள்ளி வாய்க்காலை வைத்து வெருட்டித்தான் அரசியல் செய்கின்றான். தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் அரச ஆதரவு கட்சிகளும் அதனைத்தான் செய்கின்றனவா? சிங்களவன் நேரடியாக உண்மையாக மிரட்டுகின்றான். தமிழ் தலைவர்கள் நாசூக்காக மிரட்டி வாக்கு வாங்க பார்க்கின்றார்கள் இவைதான் வித்தியாசம். ஊடகங்களிற்கு ஒரு பேச்சு உள்ளூரில் ஒரு பேச்சு. சரி அப்படித்தான் இழப்புக்களை மூலதனமாக வைத்து அரசியல் பேசி மக்களின் வாக்குகளை கவர்ந்து சென்றாலும் அதன் பின்னர் ?

இன்னும் இன்னும் இருப்பதனையும் கொடுப்பதற்கும் விட்டு கொடுப்பதற்கும் வழி கோலுவனவாகவே இணக்க அரசியல் அமையும். உருக்கு போல் உறுதியாக இருந்தாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை என்று விமர்சனம் செய்பவர்கள் இணக்க அரசியல் மூலம் எதையாவது சாதிக்க முடியுமா எனவும் சாத்தியப்பாடாக கூறவேண்டும். அனால் நிலவரம் அவ்வாறு இல்லை

வரதராஜ பெருமாளின் வரவு,பிள்ளையானிற்கான இந்திய அழைப்பு, வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ் இனரின் பிரசன்னம் கூடவே இந்தியாவின் யாழ் குடா நாட்டிற்கான அலுவலகம் என ஓர் மிகப்பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி எந்த கால கட்டத்திலும் மீழ முடியாத அடிமைகளாக மக்களை திசை திருப்பவும்; எந்த காலத்திலும் ஒன்று படுத்த முடியாமல் வடக்கையும் கிழக்கையும் உருவாக்குவதே இந்திய , இலங்கை அரசின் கூட்டு சதி. இதற்கான நகர்த்தல்கள் நடைபெறுகின்றன என சாதாரண ஓர் பாடசாலை ஆசிரியர்களுக்கே புரிகின்றது எனில் அரசியல் வாதிகளுக்கு ஏன் புரியவில்லை?

இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் பற்றிய சந்தேகங்களை ஏன் கூட்டமைப்பு இந்தியாவை கேட்கமுடியாது? கேட்டால்தூக்கி எறிந்து விடுவார்களா?ஏன் கேட்காவிட்டாலும் கூட தூக்கி எறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியா வடக்கு கிழக்கை சிங்களத்துடன் எதிர்த்து இணைப்பதனை விட சிங்களத்திற்கும் இணங்கி போய் அதே நேரம் தமிழர்கள் பிரதேசத்தில் சிங்களத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பினை காலங்காலமாக வைத்திருக்க வேண்டும் அது தமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் இதுவே இந்தியாவின் திட்டம். தமிழர்களுக்கு தீர்வு வேணும் அல்லது அமைதியாக வாழ வேண்டும் என்று இந்தியா நினைப்பதில்லை. மாறாக பலம் அற்ற, சொத்தையான சிங்கள எதிர்ப்பு அரசியல் சூழல் இருக்கவேண்டும் அதனை வைத்து தாம் குளிர்காய வேண்டும் என்பதே இந்திய நிகழச்சி நிரல்.

ஆகவே கிழக்கில் பிள்ளையான் வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ் குடா நாட்டில் முடிந்தால் கூட்டமைப்பு இல்லையேல் இன்னோரு அமைப்பு இவ்வாறுதான் இந்திய திட்டம் நகரப்போகின்றது.

ஆகவே இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேசி , இராஜதந்திர விளையாட்டுக்களை கூறி ஏமாற்றுவதனை விட நேர்மையாக உறுதியாக எமது மாவீரர்கள், பொதுமக்களின் இலட்சியங்களை கூறி எதற்கும் துணிந்து நிற்பதே மேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.