Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க கொள்கைகளை பின்பற்றும் தி.மு.க.

Featured Replies

தமிழகத்தில் இப்போது நடந்து வருவது எந்தக் கட்சியின் ஆட்சி? தற்போதைய முதல்வர் யார் என்று எட்டாப்பு சமூக அறிவியல் தேர்வில் கேட்டால் பாவம் குழந்தைகள் தி.மு.க. என்றும் மு.கருணாநிதி என்றும் எழுதுவார்கள். கருணாநிதி, ஜெயலலிதா போலவும் தி.மு.க, அ.தி.மு.க.வைப் போலவும் ஆட்சி செய்வதால் அவர்களின் பதில் தவறு என்ற தர்க்கம் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

அதைப் புரிந்துக்கொள்ள வேண்டிய வயதிலிருக்கும் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கே அது புரிந்ததாகத் தெரியவில்லை என்ற நிலையில் சின்னஞ் சிறிய பள்ளிக் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனில்லை. உத்தப்புரம் தலித் உரிமைப் பிரச்சினைக்காக மதுரையில் சி.பி.எம். நடத்திய ஆர்ப்பாட்டத்தை தமிழக போலீஸ் பின்னியெடுத்தபோது கருணாநிதி அதை டி.வி.யில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவாக இருந்தால் நிச்சயம் அவ்வாறு செய்திருப்பார்.

தமிழக அரசியலில் நீண்ட காலமாகவே நோஞ்சானாக இருக்கும் சி.பி.எம். உத்தப்புரம் என்ற சிறிய கிராமத்தில் கூட அரசியல்ரீதியாக வெற்றி பெறக்கூடாது என்ற வைராக்கியத்தில் தமிழக போலீசுக்கு அவர் கொடுத்த கடும் உத்தரவா அல்லது அதிக ஓட்டுகளைத் தரும் உத்தப்புரம் மேல்சாதி மக்களைத் திருப்திபடுத்தவா என்று தெரியவில்லை. ஆனால் மேல்மட்டத்திலிருந்து உறுதியான ஆணை வராமல் போலீஸ் இவ்வளவு கடுமையான பலப்பிரயோகம் செய்திருக்க வாய்ப்பில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரை ஊழலை அம்பலப்படுத்தி ஜெயலலிதாவின் கோபத்தை எதிர்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், இந்த முறை மாறன் குடும்பத்திற்கும் கருணாநிதி அரசுக்குமான ஊழல் உறவை அம்பலப்படுத்தியதால் ஆட்சியின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். ஊழல்களை அம்பலப்படுத்தியவரை அதே ஊழல் புகாரின்பேரில் சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள்.

சிவகாமி, கிறிஸ்துதாஸ் காந்தி உள்ளிட்ட ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மேல்சாதிப் பார்வையுடன் பொறுப்பு கொடுக்காமல் அவமானப்படுத்தி வந்த சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் கருணாநிதி ஜெயலலிதா அளவுக்கு முட்டாள் அல்ல. தலித்தான உமாசங்கரை நீக்கியிருப்பது அரசியல்ரீதியாக தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பது அவருக்குத் தெரியும்.

அதனால் ஒரு தலித்தை சஸ்பெண்ட் செய்த சில நாட்களிலேயே இன்னொரு பிரதான தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி (கிறிஸ்துதாஸ் காந்தி) உள்ளிட்டோரை தலைமைச் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். அவர்களோடு புகைப்படம் எடுத்து, பத்திரிகைகளில் வரச் செய்து ஒரு ஆவணத்தையும் உருவாக்குகிறார். நேர்மையானவராக அறியப்படும் உமாசங்கர் என்ற தலித் அதிகாரியை நீக்கியதை வைத்து தலித் ஓட்டுக்களை தி.மு.க.வுக்கு எதிராகத் திருப்ப எதிர்காலத்தில் யாராவது முனைந்தால், இருக்கவே இருக்கிறது ஆயுதம்:

ஒரு தலித்தை தலைமைச் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்திய நானா தலித் விரோதி? கொத்துக் கொத்தாக தலித்துக்கள் தாமிரபரணியில் கொல்லப்பட காரணமாக இருந்த அரசாங்கத்தையும் உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு முழுமையான நீதி பெற்றுத் தராத அரசாங்கத்தையும் நடத்தி வரும் ஒருவருக்குத் தன்னைக் காத்துக்கொள்ள இப்படி பல கேடயங்கள் தேவைப்படுகின்றன. தலித் வீட்டில் பெண் எடுத்தவன் என்று கருணாநிதி அவ்வப்போது சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இப்போது காமராஜருக்கு மாதம் 50 கேஸ் சிலிண்டரை விரயம் செய்து அணையாவிளக்கு ஏற்றி வைத்து நாடார் ஓட்டுகளுக்கு கொக்கி போடுகிறார். காமராஜர் தனது சமாதிக்கு கேஸ் சிலிண்டர் கேட்டிருப்பாரா, விறகடிப்பு புகையில் சமையல் ஆயாக்கள் செத்துக்கொண்டிருக்கும் சத்துணவுக் கூடங்களுக்கு கேஸ் சிலிண்டர் கேட்டிருப்பாரா என்பது ஒருபுறமிருக்கட்டும்.

தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில் திடீரென திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைத்திருப்பதற்குப் பின்னாலுள்ள கதை இன்னொரு அரசியலைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு காங்கிரஸ்காரர்களும் நாடார்களும் அதிகம் கொண்ட ராதாபுரத்தில் தி.மு.கவுக்கு சேவகம் செய்து பிழைக்க நினைத்துவிட்ட ஒரு முன்னாள் காங்கிரஸ்காரர் உபயத்தில் கருணாநிதியின் பெற்றோருக்கு சிலையும் அவர்கள் பெயரில் பேருந்து நிலையமும் அமையவிருந்தது. அதற்கு எதிரான போராட்டம் மக்கள் ஆதரவை வெல்வது போல் தெரிந்தாலும் எது தடுத்ததோ தெரியவில்லை, கருணாநிதி தனது பெற்றோர் பெயரையும் அதற்கு வைக்காமல் காமராஜர் பெயரையும் வைக்காமல் விட்டுவிட்டார்.

அதன் பிறகு ஆரவாரமின்றி சிலை மட்டும் திறக்கப்பட்டுவிட்டது. காமராஜர் சிலை இன்னும் நிறுவப்படவில்லை என்பதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கருணாநிதி தனது பெற்றோர் சிலையை நீக்கிவிட்டு காமராஜர் சிலையை நிறுவ வேண்டும் என ஜெயலலிதா நெருக்கடி கொடுக்கிறார். கருணாநிதியைப் போல தனது எதிராளிகளுக்கு எதிராக வரலாற்றிலிருந்து உண்மைகளையும் பொய்களையும் களமிறக்கும் வாய்ப்பும் சாதுர்யமும் ஜெயலலிதாவிற்குக் கிடையாது. இல்லாவிட்டால் ஒரு காலத்தில் காமராஜரைக் கருணாநிதி மிக மோசமாக திட்டியதை எல்லாம் எடுத்து இப்போது மேற்கோள் காட்டியிருப்பார்.

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய கருணாநிதியின் ஆட்சிக்குமான ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. ‘நக்கீரன்’ கோபாலைக் கைது செய்தது போல இப்போது ‘சவுக்கு’ என்ற இணையத்தளம் மூலம் அதிகார உள்வட்டத்தில் இருந்துகொண்டு தவறு செய்யும் அதிகாரிகள் பலரை அம்பலப்படுத்திய சங்கர் என்ற முன்னாள் உளவுத்துறை ஊழியரைக் கைது செய்திருக்கிறார்கள் (www.savukku.net சென்று முழுமையாகப் படித்தால்தான் இதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்).

கோபால் போலவே ஷங்கர் மீதும் பொய் வழக்குப் போடப்பட்டிருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். அவர் மீது மிகக் கடுமையான துப்பாக்கி வழக்கு, இவர் மீது இப்போதைக்கு assault உள்ளிட்ட ஜாமீனில் வர தடை ஏற்படுத்தும் பல குற்றச்சாட்டுகள்; இனிமேல் பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். கருணாநிதியைச் சுற்றி இருக்கும் அந்த சக்திமிக்க அதிகாரிகள் தங்களைக் காத்துக்கொள்ளும் பதற்றத்தில் வெறும் சில ஆயிரம் பேர் அறிந்திருந்த சவுக்கு இணையத்தளத்தின் இயக்கத்தை ஊரறியச் செய்துவிட்டார்கள்.

எவ்வாறு கோபால் கைது இறுதியில் ஜெயலலிதாவுக்கு அவமானங்களைப் பெற்றுத் தந்ததோ அவ்வாறு சவுக்கு மீதான நடவடிக்கையும் தி.மு.க. அரசுக்கு எதிராகவே செல்லும். அ.தி.மு.க ஆட்சியில் தங்களுக்கு எதிராக எழுதிய பத்திரிகை ஊழியர்களை மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டு மண்டை சிதறச் சாகடித்தார்கள். தி.மு.க ஆட்சி அந்த அளவுக்கு கொடுமையாக கீழே இறங்கவில்லை என்றாலும் அவர்கள் செல்லும் பாதை ஜெயலலிதாவினுடையது என்பதை கவனிக்காமல் விட இயலவில்லை.

இடைத் தேர்தல்களில் வெற்றியை வாங்குவதிலும் வன்முறையைத் தேர்தல்களில் களமிறக்குவதிலும் எதிர்க்கட்சிக்காரர்களை அதிகாரத்தைக் கொண்டு மிரட்டுவதிலும் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சிகளை தற்போதைய தி.மு.க. ஆட்சியில் முந்திவிட்டார்கள் என்பதால் அவற்றை ஒற்றுமை என்ற பட்டியலில் காட்ட முடியாது. ஜெயலலிதா சட்டத்தை மதிக்காதவர், நீதித் துறையால் குட்டுப்பட்டவர், காட்டாட்சி நடத்துபவர், ஊழல் செய்பவர், சர்வாதிகாரி, பழிவாங்கும் வெறி கொண்டவர் என்றெல்லாம் சொல்லித்தான் கருணாநிதி குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தின் ஓட்டுக்களைப் பெற்று வருகிறார்.

ஆனால் தற்போதைய ஆட்சியில் மேற்கூறிய எல்லாவற்றையும் அதைவிட குறைந்த அளவிலாவது தி.மு.க அரசு செய்திருக்கிறது. ஏற்கனவே சென்னையின் நடுத்தர வர்க்க வாக்காளர்களின் ஆதரவை தி.மு.க இழந்து வரும் நிலையில் தி.மு.க ஆட்சி செய்யும் விதத்திற்கும் அ.தி.மு.க ஆட்சி செய்யும் விதத்திற்குமான இடைவெளி குறைந்து வருவது தி.மு.க. தனக்கு எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச தனித்துவத்தையும் இழந்து வருவதைக் காட்டுகிறது.

ஆனால் இன்னமும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமான வித்தியாசங்கள் பல உள்ளன. சமூக நீதிக்கு கடந்த காலங்களில் பெருமுக்கியத்துவம் கொடுத்தவர் கருணாநிதி. ஜெயலலிதாவைப் போல கருணாநிதி ஒருபோதும் தேர்தலில் தோற்றதும் ஓடி ஒளிபவர் அல்ல. ஜெயலலிதா பதவியில் இருந்தால்தான் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி அதிகாரத்தில் இல்லாத போதுதான் தீவிர உத்வேகத்துடன் காணப்படுவார். இந்த நான்கரை வருடங்கள் ஜெயலலிதாவைப் போலவே ஆட்சி செய்ததில் அவர் தனது ஆதாரமான நற்பண்புகளை இழந்துவிடக்கூடாது.

தமிழ் நாட்டுத் தமிழரும் சாதிவெறியற்ற, திராவிட - பார்பனிய வெறியற்ற தமிழர்கள் மட்டும் அடங்கிய ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினால் - தமிழகம் நல்ல எதிர்காலத்தை கொண்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.