Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என்ன? - பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என்ன? - பழ. நெடுமாறன்

ஆக 27, 2010

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மநாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன.

அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்தி களின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது.

2003 ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் சகலப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக இவரை தமிழீழம் வந்து தன்னை சந்திக்குமாறு பிரபாகரன் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் இவர் பிரபாகரன் ஆணையை ஏற்று அங்கு செல்லவில்லை.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உளவுத்துறைகள் தன்னைப் பிடிப்பதற்கு வலை விரித்துள்ளதாகவும் இந்தச் சூழ்நிலையில் தான் அங்கு செல்லமுடியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது நம்பத் தகுந்தது அல்ல. அவர் சார்பில் ஐயா என்பவரை வன்னிக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தனக்கு எதிராக தலைவரிடம் பல்வேறு புகார்களைத் தெரிவித்ததாகவும். இதே நேர்காணலில் கே.பி. சொல்லியுள்ளார்.

அதுமட்டுமல்ல, கடற்புலித் தளபதியான சூசை, அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளரான காஸ்ட்ரோ, நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி ஆகியோர் தனக்கு எதிராக சதிசெய்ததாகவும் தலைவரிடம் தன்னைப் பற்றி பல்வேறு புகார்களைக் கூறியதாகவும் கே.பி. கூறியுள்ளார். இதன் காரணமாகவே தான் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் நேர்மையானவராக இருந்தால் தலைவர் வரச்சொன்னபோது உடனடியாகச் சென்றிருக்க வேண்டும். எத்தனையோ பேர் போர்க் காலத்தில்கூட வன்னிக்குச் சென்று தலைவரை இரகசியமாகச் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். பல்வேறு நாடுகளிலும் உளவுத்துறை அதிகாரிகளையும் குடியேற்ற அதிகாரிகளையும் ஏமாற்றிவிட்டு சென்றுவந்த கே.பி., தனது தலைவரைச் சந்திக்க விரும்பியிருந்தால் நிச்சயமாகச் சென்றிருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு அவர் செய்யத் துணியவில்லை. காரணம் அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவே தன்னைத் தலைவர் அழைத்ததாகக் கருதிப் போகாமல் பதுங்கிக்கொண்டார்.

இவர் நேர் மையானவராக இருந்திருந்தால் தலைவரைச் சந்தித்து தான் நிரபராதி என்பதை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யத் துணியாதவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்கு கடைசிக் கட்டத்தில் தான் பெருமுயற்சி செய்ததாகவும் மற்ற தளபதிகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் தான் எல்லாமே அழிவில் முடிந்தது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இயக்கத்தின் நிதியைக் கையாடல் செய்த வரும், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏந்திவந்த கப்பல்கள் குறித்த தகவலை இந்திய-இலங்கை அரசுகளுக்குத் தெரிவித்து அதன் காரணமாக அந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்படுவதற்கும் காரணமான கே.பி. அவற்றையெல்லாம் மூடி மறைக்க எதைஎதையோ சொல்லி உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கும், குழப்புவதற்கும் முயற்சி செய்கிறார்.

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தில் அமைப்பாளர் பதவியை இவர் பெற்றார். ஆனால் இவர் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. சர்வதேச செயலகத்தின் தலைவரான காஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இவர் இயங்கிவந்தார்.

எனவே பல்வேறு நாடுகளின் அரசுகளுடன் தான் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ததாக இவர் கூறுவதெல்லாம் நம்பத்தகுந்தவை அல்ல. நேர்காணலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பல செய்திகளைக் கூறியிருக்கிறார்.

முதலில் சர்வதேச நாடுகளிடம் பேசி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு தான் ஏற்பாடு செய்ததாகக் கூறியிருக்கிறார். அதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்றும் கூறுகிறார்.

1. புலிகள் தங்கள் வசம் உள்ள கனரக ஆயுதங்கள் உட்பட சகல ஆயுதங்களையும் குறிப்பிட்ட இடங்களில் கீழே வைக்கவேண்டும்.

2. ஐ.நா. பிரதிநிதிகளிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும்

3. அதற்குப் பிறகு போர் நிறுத்தம் செய்யப்படும்.

4. மக்கள் பாதுகாப்புப் பகுதிகளுக்கு அகற்றப்படுவார்கள்.

5. நோர்வேயின் முன்னிலையில் சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

6. சுமார் 25 முதல் 50 வரையுள்ள உயர் தலைவர்களும் அவர்களின் குடும்பத் தினர்களும் வெளிநாடு ஒன்றுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

7. நடுத்தர தலைவர்களும், அவர்களின் கீழுள்ள புலிகளும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப் பட்டுச் சிறுதண்டனைகள் வழங்கப்படும்.

8. கீழ்நிலையிலுள்ள புலிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்கள் விடு தலை செய்யப்படுவார்கள்.

கே.பி. தயாரித்த இந்தத் திட்டத்திற்கு நோர்வே உட்பட ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவை அங்கீகாரம் அளித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இத்திட்டத்தை குறித்து தொலை நகலி மூலம் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவரிடமிருந்து மூன்றே வார்த்தைகளில் அதாவது ‘இதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என பதில் வந்ததாகவும் கே.பி. கூறியிருக்கிறார். நேர்காணலின் இறுதியில் வேறு ஒரு கதையை அவர் கூறியிருக்கிறார்.

அதாவது போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு அரசியல் பிரிவின் பொறுப்பாளர் நடேசன் மூலம் தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோர் உதவியதாகவும் அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திடம் இது குறித்துப் பேசி அவரை ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் கூறியிருக்கிறார். ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைவதற்கு புலிகள் தயாராக இருக்க வேண்டும்.

தமிழீழத்திற்குப் பதில் அரசியல் தீர்வு ஒன்றினை சிங்கள அரசு அளிக்கவேண்டும் என்ற இரு அம்சங்களை உள்ள டக்கிய அறிக்கை ஒன்றினை ப.சிதம்பரமே தயாரித்து அதை விடுதலைப் புலிகள் வெளியிட்டால் இந்திய அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்யும்படி சிங்கள அரசை வலியுறுத்தும் என ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும், அதை நடேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் மகேந்திரனிடம் தெரிவித்ததாகவும் அவர் உடனடியாக அதை வைகோ அவர்களுக்கு கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளுடன் கூடிய போர் நிறுத்தத்தை ஏற்கக்கூடாது என வைகோ வலியுறுத்தியதாகவும் அதன் காரணமாகவும் போர் நிறுத்தம் வராமல் போனதாகவும் கே.பி.யின் கதை நீள்கிறது. சகோதரர் வைகோ அவர்களோ அல்லது நானோ எந்தக் கட்டத்திலும் இதைச் செய்யுங்கள் அல்லது செய்யாதீர்கள் என புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதே இல்லை.

அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற் கேற்ப, போர்க்கள நிலைமைகளுக்கு ஏற்ப மட்டுமே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அவற்றை பிரபாகரனும் அவருக்குத் துணையாக இருக்கக்கூடிய மூத்த தளபதிகள் மட்டுமே எடுக்கமுடியுமே தவிர, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு நாங்கள் ஆலோசனை வழங்குவதாகச் சொல்வது நகைப்புக்கு இடமானதாகும். பிரபாகரன் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவுக்கு ஆத ரவு திரட்டும் வேலையை மட்டுமே நாங்கள் செய்தோம். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வோம்.

இந்தக் கதையில் முதலாவது பொய் கருவதற்கான முயற்சிகள் நடைபெற்றதாக திரும்பத் திரும்ப ஒரு பொய் பரப்பப்படுவதற்குக் காரணம் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு கருணாநிதி அடியோடு தவறிவிட்டார் என்ற உண்மையை புரிந்துகொண்ட உலகத் தமிழர்கள் அவர் மீது கொண்டுள்ள கோபத்தை மறைப்பதற்காக இந்தக் கதை பரப்பப்படுகிறது.

மேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிவடைந்த பிறகு சில நாட்களில் கே.பி. என்னுடன் தொலைபேசியில் பேசியது உண்மை. அப்போது அவர் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டதாகவும் எனவே உலக மெங்கும் அவருக்கு ஒருவார காலத்திற்கு துக்கம் கொண்டாடி மரியாதை செலுத்த வேண்டும் என கூறினார்.

உடனடியாக நான் அவரிடம் இவ்வாறு அறிவிப்பதற்கு உங்களுக்கு ஏது அதிகாரம்? நீங்கள் எங்கேயோ தொலைதூரத்திற்கு அப்பால் ஏதோ ஒரு நாட்டில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்பவர். இலங்கையில் களத்தில் நடந்த உண்மைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? பிரபாகரனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அவருடன் களத்தில் நின்ற மூத்த தளபதிகள் அதை அறிவித்திருப்பார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைமை அரசியல் குழு உண்டு. அந்த குழுவாவது இதை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்தவிதத்திலும் தலைமைக் குழுவில் இல்லாத நீங்கள் இவ்வாறு அறிவிப்பது எத்தகைய ஆதாரத்தின் அடிப்படையில்? - என்பதைக் கூறுங்கள்.

இயக்கத்தின் தலைமை சில இரகசிய காரணங்களுக்காக இவ்வாறு கூறும்படி உங்களுக்கு ஆணையிட்டிருக்கிறதா? - என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நான் எழுப்பியபோது அவர் “அய்யா நீங்களே என்னை நம்பவில்லையென்றால் நான் என்ன செய்வது?” என்று புலம்பினார். நான் நம்பும்படி எதையும் நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட அதிகமான செய்திகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.

எனவே பிரபாகரனைப் பற்றித் தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் என எச்சரித்தேன். அதற்குப் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் உலகெங்கும் துக்கம் கடைப்பிடிக்கும்படியும் கே.பி. அறிக்கை வெளியிட்டார். உடனடியாக எனக்குக்கிடைத்த மிக நம்பகமான செய்திகளின் அடிப்படையில் ‘பிரபாகரன் உயிரோடும் பத்திரமாகவும் இருப்பதாக’ நான் மறுப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

உலகின் எந்த நாட்டிலும் கே.பி. அறிக்கையினை நம்பி இரங்கல் கூட்டங்களோ நிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை என்பதிலிருந்து உலகத் தமிழர்கள் நடுவில் இவர்மீது இருக்கக்கூடிய நம் பகத்தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய உளவுத்துறை, சிங்கள உளவுத்துறை ஆகியவற்றின் பிடியில் கே.பி. இருக்கிறார். உலகெங்குமுள்ள தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எழுச்சி உருவாகிவிடக் கூடாது, அதைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கே.பி. போன்றவர்களைப் பயன்படுத்தி பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்கள் ஒருபோதும் நிற்காது.புலி மீண்டும் உறுமத் தொடங்கும் போது இந்த நரிகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடிஒளிந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்தநாள் வெகுதூரத்தில் இல்லை.

நன்றி: ஈழமுரசு (27.08.2010)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.