Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம்

Featured Replies

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற தகவல் தான் தற்போது ஆசிய கண்டத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கும் முன், முந்தைய அதிபர் புஷ்ஷை காட்டிலும் இந்திய, அமெரிக்க உறவிலும், இந்திய, அமெரிக்க அணு ஒப்பந்த விஷயத்திலும் அதிக ஆதரவுடன் இருப்பார் என்று பெரும்பாலான இந்தியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்தியாவை காட்டிலும், சீனாவுடனான உறவை பலப்படுத்துவதிலேயே ஒபாமா அதிக ஆர்வம் காட்டி வந்தார். இது, அவரை மிகவும் எதிர்பார்த்த இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகளில், ஒபாமாவின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்று ஐயப்பட்டனர்.ஹிலாரியின் விஜயத்தால் திருப்பு முனை: அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்கள் இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தின. ஒபாமாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரும், அவரது அமைச்சரவை சகாவுமான ஹிலாரி கிளின்டன் கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய விஜயத்தை மேற்கொண்டார். அணுசக்தி, இந்தியா-அமெரிக்க நல்லுறவு, வர்த்தக உறவு, உயர் கல்வி, ஆயுத விற்பனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஹிலாரியின் இந்திய விஜயத்தின் போது தீர்க்கப்படாத, முடிவு எட்டப்படாத அணுசக்தி ஒப்பந்தம், சுற்றுச்சூழல் குறித்த இந்தியாவின் நிலை உள்ளிட்ட பிரச்னைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க விஜயம் மேற்கொண்டார்.

மாற்றத்தை ஏற்படுத்திய விருந்து: கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்று, அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். பிரதமரின் அந்த அமெரிக்க விஜயத்தின் போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமான விருந்து ஒன்றை ஒபாமா அளித்தார். இந்த விருந்து சர்வதேச அளவில் பேசப்பட்டது. இதன்பின், இந்திய, அமெரிக்க உறவில் ஒரு புதிய பரிமாணம் உருவானது. தனது அமெரிக்க விஜயத்தின் நிறைவில், ஒபாமா இந்தியா வர வேண்டும் என்று மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். ஒபாமாவும் அந்த அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டார்.இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த பல உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களை இந்தியாவும், அமெரிக்காவும் செய்துள்ளன. மேலும், அணுசக்தி பாதுகாப்பு, திறன், பருவநிலை மாறுபாடு ஆகியவை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரண்டு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. இதன் காரணமாக, அணுசக்தி பாதுகாப்பு, திறன், உலக பருவநிலை மாறுபாடு, மரபுசாரா எரிசக்தி, பசுமை குடில் விளைவு ஆகியவை குறித்து கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல் இரண்டு நாடுகளும் கூட்டாக செயல்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், விவசாயம், உணவு பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க விவசாய உற்பத்தி, அதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தியாவிலும் செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் விவசாய துறையில் ஆய்வு மற்றும் மேம்பாடுகளை செய்யவும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பின், பயங்கரவாதத்தை தடுப்பதில் இரண்டு நாடுகளும் அதிக இணக்கமும், ஒத்துழைப்பும் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

காத்திருக்கும் ஒப்பந்தங்கள்: இந்தியா தற்போது உள்கட்டமைப்புக்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரயில்வே, மின்சாரம், சாலை, துறைமுகம், விமான நிலையங்கள், தகவல் தொடர்பு மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றின் உள்கட்டமைப்புக்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 45 லட்சம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அதற்கான நிதி ஆதாரங்கள் இல்லை. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக இந்தியாவில் செய்யப்பட வேண்டும்.இன்றைய நிலையில், இந்திய உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உள்கட்டுமான தனியார் தொழில் நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. இதுவரை அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் இந்த விஷயத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்க செயலர் கிமோதி கெய்த்னரின் கடந்த ஆண்டு வருகைக்கு பின், அமெரிக்க நிறுவனங்களும் விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளன. இதற்கு தேவையான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக, உயர்க்கல்விக்கான ஒப்பந்தம். வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்வி நிறுவனங்களை துவங்குவதற்கான சில ஒழுங்கு முறைகள் குறித்த மசோதா சமீபத்தில் அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இந்திய பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மாணவ, மாணவியருக்கான பட்டங்களை வழங்க முடியாது. இந்தியா உயர் அறிவுத்திறன் கொண்ட ஏராளமான மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகிறது.அமெரிக்காவில் சர்வதேச தரத்திலான சிறந்த பல்கலைக் கழகங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், இரு நாடுகளும் உயர்க்கல்வித் துறையில் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டால், அது, இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனை அளிக்கும். மேலும், தற்போது அமெரிக்காவில் உள்ள 20 ஆயிரம் இந்திய பட்டதாரி மாணவர்கள் இந்தியாவில் துவங்க உள்ள அமெரிக்க பல்கலைக் கழகங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை உண்டாகும்.

மூன்றாவதாக, இந்தியா- அமெரிக்கா இடையிலான நிதித்துறை மேம்பாடு ஒப்பந்தம். இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள நிதி சட்டங்கள் சில, அமெரிக்க நிதி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க தடையாக இருக்கின்றன. அவற்றை தளர்த்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நிதித்துறை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் கூட, இந்திய பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்படவில்லை. இதற்கு இந்தியாவின் பொருளாதார கொள்கையும், நிதித்துறை மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளுமே காரணமாகும். இரு நாடுகளுக்கும் இடையே இவ்விஷயத்தில் ஒப்பந்தம் ஏற்படும் போது, அமெரிக்கா பல்வேறு பொருளாதார விஷயங்களை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

ஒபாமா வருகையினால் ஏற்படப் போகும் சாதக, பாதகங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களை கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது மருத்துவம், விண்வெளி ஆய்வு, கல்வி, பயங்கரவாத தடுப்பு, ஆப்கானிஸ்தான், சீனா போன்ற விஷயங்கள் முக்கிய இடத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தத்தினால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. அமெரிக்காவில் 6 முதல் 7 லட்சம் பேர் ஆண்டிற்கு வேலைவாய்ப்பை இழந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, வெளிநாடுகளுக்கு கொடுக்கப்படும் "அவுட்சோர்சிங்' பணிகள் நிறுத்தப்படும்' என்று கூறினார்.

இதனால் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தங்களின் வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுமோ என்று பயந்தன. ஆனால், ஒபாமா அரசு அப்படி ஒரு எந்த மோசமான முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இந்திய நிறுவனங்களுக்கு தரும் வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படவில்லை. எனவே, ஒபாமா இந்தியாவிற்கு வரும் போது, "அவுட்சோர்சிங்' பணிகள் தொடர்வது குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை இருக்காது. இருப்பினும், இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்று பணி செய்வதற்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் ஒபாமா முட்டுக்கட்டை போடலாம். இந்தியாவில் மருத்துவ துறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இங்கு மருத்துவம் சார்ந்த ஆய்வுகள் பெருமளவு நடந்து வருகின்றன. இதை பயன்படுத்திக் கொள்ள ஒபாமா விரும்புவார்.சந்திரனுக்கு இந்தியா சந்திரயான் அனுப்பிய போது, அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டவில்லை. சந்திரனில் நீர் உள்ளது என்று சந்திரயான் கண்டுபிடித்த பின் தான், விண்வெளி ஆய்வில் இந்தியா பெற்றுள்ள முன்னேற்றம் அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தியது. இதைதொடர்ந்து, விண்வெளியில் நடக்க உள்ள முக்கிய ஆய்வுகளில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ள அமெரிக்கா ஆர்வம் காட்டும். சில விண்வெளி திட்டங்களில் இந்தியாவையும் இணைத்துக் கொள்ள அமெரிக்கா முன்வரும். அது குறித்த பேச்சுவார்த்தை ஒபாமாவின் வருகையின் போது நடக்கலாம்.மொத்தத்தில், அதிபர் ஒபாமாவின் வருகை, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் ஆறாவது அதிபர்!

அமெரிக்க அதிபர்கள் இதுவரை ஐந்து பேர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். கடந்த 1959ம் ஆண்டு ஐசனோவர்; 1969ம் ஆண்டு நிக்சன்; 1978ல் ஜிம்மி கார்டர்; 2001ல் கிளிண்டன்; 2006ல் ஜார்ஜ் புஷ் ஆகியோர் இந்திய விஜயத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்தியா வரும் ஆறாவது அதிபராக ஒபாமா இடம் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு "செக்' :

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மும்பை கொடூரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காததால் இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவு சீர்குலைந்துள்ளது. இந்நிலையில், இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்படுத்த முயன்றாலும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடித்து, நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்திய-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று மன்மோகன்சிங்குடன் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின், அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது போல், தங்கள் நாட்டுடனும் ஒரு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்து நிற்கிறது. ஆனால், அமெரிக்கா அதற்கு உடன்படவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவினால் இரண்டு நாடுகளுக்குமே அது நன்மையை தரும் என்று ஒபாமா கருதுகிறார். இதற்கு, மும்பை தாக்குதல் குறித்த பிரச்னை முட்டுக்கட்டையாக உள்ளது. இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா "செக்' வைத்துள்ளது, அந்த இருநாடுகளின் உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முடிந்தது அமெரிக்க - சீன "ஹனிமூன்' :

துவக்கத்தில் மிகவும் பலமாக இருந்த அமெரிக்க-சீன உறவு தற்போது மெல்ல மெல்ல பலவீனப்பட்டு வருகிறது. இன்டர்நெட் தணிக்கை, தைவானுக்கு ஆயுத விற்பனை உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தமத தலைவர் தலாய் லாமாவின் அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. "அமெரிக்கா வரும் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திக்கக் கூடாது,' என்று சீனா எச்சரித்தது. ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை. திட்டமிட்டபடி தலாய் லாமாவை சந்தித்தார் ஒபாமா. தாங்கள் கூறியும் இந்த சந்திப்பு நடந்ததால், அமெரிக்கா மீது சீனா கடும் எரிச்சலில் உள்ளது. கோபன்ஹேகன் மாநாட்டில் சுற்றுச்சூழல் குறித்து சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா விமர்சனம் செய்தது இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியது. மனித உரிமை, வர்த்தக பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் சீனாவை ஹிலாரி கிளின்டன், தனது கடுமையான கருத்துக்களால் விமர்சித்தது பிரச்னையை மேலும் அதிகமாக்கியது. இதனால், கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கிய அமெரிக்க-சீன உறவின் "ஹனிமூன்' முடிந்துவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112498

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.