இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,Anadolu via Getty Images
படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.
கட்டுரை தகவல்
அமீர் அசிமி
பிபிசி பாரசீக சேவை
18 மார்ச் 2026
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது.
லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார்.
தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அவர் அமர்ந்திருந்தார்.
அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது.
பட மூலாதாரம்,Getty Images
பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார்.
அவரது மரணம், ஒரு சில வாரங்களுக்குள் பல மூத்த இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு விரிவான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த முறைமை, போர்க்காலத்தில் இரானிய அரசுத் தலைமை அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியைக் காட்டுகிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், லரிஜானி பெரும்பாலும் இரான் நாட்டிற்குள் ஒரு யதார்த்தவாதியாக விவரிக்கப்பட்டார்.
அவர் சித்தாந்த விசுவாசத்தை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையுடன் இணைத்தார்.
பேச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட கணக்கிடப்பட்ட உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தார்.
மேற்கத்திய சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர் மிகுந்த சந்தேகத்துடனேயே இருந்தார், ஆனால் சீனாவுடனான இரானிய அரசின் நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு தூதராகச் செயல்படுவது உட்பட, முக்கிய ராஜ்ஜீய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
பட மூலாதாரம்,Anadolu via Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் சுற்றில் கொல்லப்பட்ட இரானிய முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடன் லரிஜானி (இடமிருந்து நான்காவது) இருக்கும் படம்.
மூன்று முக்கிய பொறுப்பு
அவரது மரணம் குறித்த செய்தி வந்த நேரத்தில், லரிஜானி மூன்று முக்கிய நெருக்கடிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார்.
போர்தான் அதில் முதலாவது நெருக்கடி. இரான் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இரண்டாவது, உள்நாட்டு அமைதியின்மை ஆகும். இது பொருளாதார பிரச்னைகளுடன் தொடங்கியது. ஆனால் விரைவில் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த போராட்டங்களாக மாறியது. இவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்ற ஒடுக்குமுறையைச் சந்தித்தன.
மூன்றாவது, இரானிய அரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் முடங்கிப்போயுள்ள அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆகும். இவை இரண்டுமே ராணுவத் தாக்குதல்களால் ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டிருந்தன.
அவர் கொல்லப்பட்டது இந்த விவகாரங்களைத் தீர்க்கப்படாமல் விட்டுள்ளதுடன், மிகவும் பலவீனமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இன்னும் அறியப்படாத ஓர் அடுத்த தலைமைக்கு இவற்றை மாற்றுகிறது.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைப்பதன் மூலம் இரான் ஓரளவு மீண்டு வரும் தன்மையைக் காட்டினாலும், அது தொடர்ச்சியான வான் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
எந்தவொரு புதிய மூத்த பிரமுகரும் உடனடியாக இலக்கு வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்.
பட மூலாதாரம்,Getty Images
எதை நோக்கி செல்லும்?
இது அதிகாரத்தை ராணுவத்தை நோக்கி மேலும் நகர்த்தக்கூடும்.
அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்கள், மூத்த தலைமைச் செயலிழந்தால் நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான அதிகாரம் ஆயுதப்படைப் பிரிவுகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன.
நடைமுறையில், இது முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் குறிக்கலாம், ஆனால் குறைந்த மத்திய ஒருங்கிணைப்புடன் இருக்கும்.
அடுத்த தலைமைகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதில் தலைமை சிரமப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரானிய அரசு பொது அறிவிப்புகளைத் தாமதப்படுத்தியுள்ளதுடன், புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பெரும்பாலும் வெளி உலக கண்ணில் படாமல் வைத்துள்ளது.
இது பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது உள் நிச்சயமற்ற தன்மையாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குறுகிய காலத்தில், இதன் விளைவு மிகவும் நிலையற்ற ஒரு சூழ்நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போரில் கடினமான ராணுவ நிலைப்பாடு மற்றும் உள்நாட்டில் கடுமையான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம்
இருப்பினும், காலப்போக்கில், மூத்த தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வரும் ஓர் அமைப்பு, குறிப்பாக 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், திறம்படச் செயல்படுவது கடினமாக இருக்கும்.
லரிஜானியின் மரணம் ஒரு தனி தலைவரின் இழப்பு மட்டுமல்ல. இது போரின் போக்கு மற்றும் இரானிய அரசின் நிலைத்தன்மை ஆகிய இரண்டையுமே பாதிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவ நெருக்கடியை தீவிரப்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cvg8gv84yklo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.