Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு

Featured Replies

"கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு"

இலங்கை அரசியலில் கடந்தவாரம் தோன்றிய பரப்பரப்பு அடங்குவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் செல்லப் போகிறது.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், நவம்பர் மாத இறுதியில் இதுபோன்றதொரு பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம். புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரை தான் அந்தப் பரபரப்புக்கான காரணமாக இருப்பதுண்டு.

புலிகள் இயக்கம் ஒரு தவிர்க்கப்பட முடியாத சக்தியாக விளங்கிய காலத்தில்இ பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை அவதானித்து, அதுபற்றி ஆராய்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்கள் கூட உன்னிப்பாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதனால் ஏற்படும் வழக்கமான பரபரப்பும் அடங்கி விட்டது. ஆனாலும் கடந்தவாரம் இலங்கையில் அதுபோன்ற பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

இலங்கையின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றமை, அவரது பிறந்த நாளில் கின்னஸ் உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்டுப் படைக்கப்பட்ட மிகப்பெரிய பாற்சோறு, நுரைச்சோலையில் திறந்து வைக்கப்பட்ட சீன உதவியுடன் அமைக்கப்பட்ட அனல்மின் நிலையம், அம்பாந்தோட்டையில் சீனா கட்டிக் கொடுத்த மாகம்புர துறைமுகத்தின் திறப்புவிழா என்பன போன்ற அடுக்கடுக்கான நிகழ்வுகள் தான் இந்தப் பரபரப்புக்குக் காரணம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கடந்தவாரம் தொற்றிக் கொண்ட பரபரப்பு இந்த மாதம் முழுவதும் நீடிக்கப் போகிறது. சீனா, இந்தியாஇ பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய தலைவர்கள் இலங்கைக்கு வருவது தான் இந்தப் பரபரப்பு நீடிக்கப் போவதற்கான காரணம்.

மஹிந்த ராஜபக்ஸவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சீனத் தலைவர் தனது சிறப்புப் பிரதிநிதியாக பிரதிப் பிரதமரை அனுப்பி வைத்திருந்தார். அவர் அம்பாந்தோட்டைத் துறைமுகத் திறப்புவிழாவிலும் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அவர் கொழும்பில் இருந்த போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் கைச்சாத்திடப்பட்டது. அதன்மூலம் சீனாவின் சுமார் 840 மில்லியன் ரூபா நன்கொடையும் இலங்கைக்கு கிடைத்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க அண்டை நாடான இந்தியாவில் இருந்து வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் பிரனீத் கௌர் மட்டுமே வந்திருந்தார். இவர் அவ்வளவு முக்கியமான ஒருவர் அல்ல. அவரது பெயரை இந்தியாவில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஆனால் சீனத் தலைவர் அனுப்பிய சிறப்புத் தூதுவர்முக்கியமான ஒருவர். அவர் நான்கு நாட்கள் இலங்கை அரசின் சிறப்பு விருந்தினராக கொழும்பில் தங்கியிருந்தது ஒருவகையில் இந்தியாவை எரிச்சலடையச் செய்திருக்கலாம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தும்வகையில் அமைந்திருப்பது கண்கூடு. தெற்காசியாவின் சட்டாம்பிள்ளையாக இந்தியா தன்னைக் கருதிக் கொண்டிருக்கின்ற நிலையில்- சீனாவின் ஆதிக்கம் அதற்குப் பெரும் தடையாக இருந்து வருகிறது.

இந்தியாவைச் சுற்றி சீனா விரித்து வரும் வலை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கக் கூடியது. மேற்கே பாகிஸ்தான், தெற்கே இலங்கை, கிழக்கே மியான்மர் என்று சீனா மும்முனைகளிலும் இந்தியாவை சுற்றி வளைத்துள்ளது. வடக்கே சீனாவுடனான எல்லையிருப்பதால் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி இருந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானும் மியான்மரும் சீனாவின் சொற்படி நடக்கின்ற நிலையில் இருக்கின்றன. அடுத்து இலங்கை தான். இலங்கை அரசு சீனா சொல்கிறபடி நடக்கின்ற நிலையில் தான் இருக்கிறது. ஆனால் அதேசமயம் இந்தியாவை முற்றுமுழுதாகப் பகைத்துக் கொள்ள முடியாத நிலையிலும் இருக்கிறது.

பாகிஸ்தான், மியான்மரைப் போன்று, சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுடன் முட்டி மோதும் அளவுக்கு இலங்கையால் செல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவைப் பகைத்துக் கொள்வது தனது நலனுக்கு ஆபத்து என்பதை இலங்கை நன்றாகவே உணர்ந்துள்ளது.

1980களின் தொடக்கத்தில் இந்தியாவுடன் நட்புறவைப் பேணத் தவறியதால் தான் தமிழ்ப் போராளி இயக்கங்கள் அங்கிருந்து வேர் விடத் தொடங்கின. இனிமேல் அதுபோன்ற நிலை உருவாவதை ஒரு போதும் இலங்கை அரசு விரும்பாது. எனவே இந்தியாவையும் சீனாவையும் நெகிழ்வுப் போக்கில் சமாளித்துக் கொள்வது தான் இலங்கைக்கு மிகவும்முக்கியமான விவகாரமாக உள்ளது.

இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இரண்டாவது பதவிக்காலத்தில் முக்கியமானதொரு சவாலாகவும் இருக்கப் போகிறது.

இரண்டு தோணியில் கால் வைப்பவன் கவிழ்ந்து போவான் என்று கூறப்படுவதுண்டு. அதுபோன்ற நிலையில் கூட இலங்கை இல்லை. இலங்கை அரசுக்குப் பல தோணிகளில் பயணம் செய்ய ஆசை.

சீனா, இந்தியா ஆகியவற்றை விட பாகிஸ்தானுடனும் அதற்கு நட்புறவு கொள்ளும் ஆசை உள்ளது. இது இன்னொரு சிக்கல்.

அடுத்துவரும் தினங்களில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியும்அடுத்தடுத்து இலங்கைக்கு வரப் போகின்றனர்.

அதாவது எதிரும் புதிருமாக உள்ள நாடுகளின் அரசியல் தலைவர்களின் வருகையால் தோன்றியுள்ள இந்தப் பரபரப்பு தான் இந்த மாதம் முழுவதும் நீடிக்கப் போகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியாவின் நிலையை உறுதி செய்வதற்காகத் தான் இங்கு வருகிறார் என்பது வெளிப்படை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்திய வகுத்த திட்டங்களைச் செயற்படுத்துவதே எஸ்.எம்.கிருஷ்ணாவின் வருகையின் அடிப்படை நோக்கம்.

இதற்காக சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவும் பணத்தை வாரி இறைக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் அது சீனாவின் அளவுக்கு வராது என்பதே உண்மை.

இந்தநிலையில் பாகிஸ்தானும் இந்தக் களத்தில் குதிக்கப் போகிறது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இலங்கையுடனான வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்கும் வகையில் பேச்சுக்களை நடத்தப் போகிறார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது பற்றியும் அவர் பேசப் போகிறார்.

புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா அளித்த பங்களிப்பு மடுப்படுத்தப்பட்ட அளவிலானது; இரகசியமானது. ஆனால் பாகிஸ்தானும் சீனாவும் அளித்த உதவிகள் அளவில்லாதவை; வெளிப்படையானவை. வன்னியில் போர் இறுக்கமடைந்திருந்த ஒரு கட்டத்தில் அரசபடைகளுக்குப் பாரிய ஆயுத தளப்பாடப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது அவசர அவசரமாக பாகிஸ்தான் அரசின் உதவி நாடப்பட்டது. இரண்டரை இலட்சம் மோட்டார் குண்டுகளும், ஒன்றரை இலட்சம் கிரனேட்களும் அவசர அடிப்படையின் பாகிஸ்தான் அரசு தனது களஞ்சியங்களில் இருந்து அனுப்பி வைத்தது. 12 நாட்களுக்கு ஒரு கப்பல் வீதம் பாகிஸ்தானில் இருந்து ஆயுத தளபாடங்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தன.

இந்தக் கடன்களை அடைக்க இலங்கை அரசுக்குப் பல ஆண்டுகள் செல்லும். சீனாவும் அதுபோலவே உதவியது. புலிகளுக்கு எதிரான போரில் உதவிய இந்த நாடுகளை இலங்கையால் ஒருபோதும் உதாசீனம் செய்ய முடியாது. பாகிஸ்தான் ஏற்கனவே இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்ள விருப்பம் வெளியிட்டது.

ஆனால் இலங்கை அரசாங்கம் அப்போது இந்தியாவுடன் அதுபோன்ற உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கே விரும்பியது. இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளும் எண்ணம் இலங்கை அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அந்த எண்ணம் இப்போது வந்துள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தானுடன் இலங்கை அரசு பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்வதை இந்தியா நிச்சயம் விரும்பாது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் பரம்பரை எதிரி நாடு. அதுபோலவே சீனாவையும் ஆபத்தான நாடாகவே இந்தியா பார்க்கிறது.

இந்த சிக்கல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றிப் பேசப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை இலங்கை அரசுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காக இலங்கை அரசு படாதபாடுபடுகிறது. இதற்காகவே இரு நாடுகளுக்கும் இடையில் ஓடித் திரிவதே முக்கிய அரசியல்புள்ளிகளின் வேலையாகி விட்டது. இந்தநிலையில் பாகிஸ்தானுடனும் அதுபோன்ற உறவுநிலையை ஏற்படுத்துவது இராஜதந்திரச் சிக்கல்களை ஏற்படுத்தும்.

அதேவேளை பாகிஸ்தானின் உறவை இலங்கை உதறிவிட முடியாது. எனென்றால் அது ஏற்கனவு அவசரத்துக்கு ஓடிவந்து உதவிய நாடு. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு பாகிஸ்தானின் கரத்தைப் பற்றுவது தான் பிரச்சினை. இப்படி இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் நெருடிக்கடிக்குள் சிக்கியிருக்கும் நிலை தான் இப்போது நீடிக்கின்ற பரப்பரப்புக்குக் காரணம். இது வெளிப்படையாகத் தெரியாது போனாலும்இஇராஜதந்திர மட்டங்களில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அரசு இப்போது ஒரு மும்முனை நகர்வின் மையப் புள்ளியாகியுள்ளது.

இது மஹிந்த ராஜபக்ஸ அரசசாங்கத்துக்கு முக்கியமானதொரு சவால். அவர் தனது பதவியேற்பு உரையில் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளை உதறிவிட முடியாது. அதேவேளை, அபிவிருத்திக்காக புதிய நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதே தமது வெளிவிவகாரக் கொள்கை என்று கூறியுள்ளார்.

அபிவிருத்திஇ தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி புதிய வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை உருவாக்க முனைகிறது அரசாங்கம். இதன் அர்த்தம் மேற்குலகின் ஆதரவையும் அரசாங்கம் தேடப் போகிறது.

ஆனால் இலங்கை அரசு அப்படி எதிர்பார்த்தாலும் கூட- சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் என்ற வழக்கமான வட்டத்துக்கு வெளியே செல்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது.

- கே.சஞ்சயன்

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-31-14-50-37/11594-2010-11-21-21-47-48.html

  • தொடங்கியவர்

"எனவே இந்தியாவையும் சீனாவையும் நெகிழ்வுப் போக்கில் சமாளித்துக் கொள்வது தான் இலங்கைக்கு மிகவும்முக்கியமான விவகாரமாக உள்ளது.

இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இரண்டாவது பதவிக்காலத்தில் முக்கியமானதொரு சவாலாகவும் இருக்கப் போகிறது."

மகிந்தவின் சீன உறவு தொடரும். இந்தியாவுக்கு தான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என காட்டவேண்டிய தேவை உள்ளது. மறுபக்கத்தில் தமிழர் தொடர்ந்தும் அழிவதை இந்தியா உள்ளூர விரும்புகின்றது. சீனா தனது இலக்கில், அதாவது ஆசியாவில் தானே "அரசன்" என்பதில் வெற்றி காணும்.

ஆனால் இந்தியாவைவிட அமெரிக்காவே தற்பொழுது அதிகம் கவலை கொண்டுள்ளது. ஆசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் பின்னர் உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் சீனா கொண்டுவந்து விடும் என்பதே அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.