Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சூடான் கற்றுத்தரும் பாடங்கள்

Featured Replies

உலகில் அவ்வப்போது புதிய நாடுகள் தோற்றம் பெற்ற வண்ணமே உள்ளன. புதிய நாடுகள் அனைத்துலக அங்கீகாரம் பெறுவதென்பது உலக வல்லரசுகளின் நலன் சார்ந்த விவகாரமாகவே உள்ளது.

அடக்குமுறைக்குள்ளான மக்கள் இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதன் மூலம் தனிநாட்டினை அமைக்கலாம் என்ற உரிமை கூட வல்லரசுகளின் நலன்சார் மூலோபாயத்துடன் ஒரே கோட்டில் சந்திக்கும்போது தான் அவை அங்கீகாரம் பெறுவது சாத்தியமாகின்றது.

இது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் வரலாறாகும். தென் சூடான் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பும் இதையே உணர்த்துகின்றது.

1945 இல் ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்படும்போது 51 நாடுகளே அதில் உறுப்புரிமை வகித்தன. இன்று உலகில் 201 நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாகும். 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிழக்குத் தீமோர், மொன்ரனேக்றோ மற்றும் கொசோவோ என மூன்று நாடுகள் உருவாகியுள்ளன. 2011இல் தென் சூடானும் புதிய நாடாக உருவாகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நெடிய இன ஒடுக்குமுறைக்கு முகம் கொடுத்து - ஆயுத வழிமுறை மூலமான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து - அதன் தொடர்ச்சியாக அனைத்துலக சமூகத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பிற்கு அமையவே சுதந்திரத் தனிநாட்டுக்குரிய மக்கள் வாக்கெடுப்பு (independence referendum) எனும் நிலையை தென் சூடான் அடைந்துள்ளது.

ஜனவரி 9ஆம் நாளிலிருந்து 15ஆம் நாள் வரையான ஒரு வார காலத்திற்கு வாக்களிப்பு நடாத்தப்பட்டது. விடுதலைக்கான நீண்ட நெடிய காத்திருப்புக்குப் பின், சுதந்திரத் தனி நாட்டுக்கான வாக்களிப்பில் தென் சூடான் மக்கள் உளப்பூரிப்புடன் பங்கேற்றனர் என தென் சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் சூடான் 8 மில்லியன் மக்கட் தொகையைக் கொண்டுள்ளது. 4 மில்லியன் மக்கள் பிரிந்து செல்லும் தனிநாட்டுத் தீர்வு தொடர்பான தேர்தலில் வாக்களிப்பதற்காக தம்மைப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த 4 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தேர்தலில் பங்கேற்று வாக்களிக்கும் நிலையில்தான் இவ்வாக்கெடுப்பு சட்டரீதியில் செல்லுபடியாகும் என்ற நிபந்தனை உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் 3ஆம் நாள் வாக்களிப்பிலேயே பதிவு செய்தவர்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து விட்டதான தகவல்கள் வெளியாகியிருந்தன.

98,8 விழுக்காட்டினர் (3 793 572 வாக்காளர்கள்) தனி நாட்டுத் தீர்வுக்கும், 1,2 விழுக்காட்டினர் (44 830 வாக்காளர்கள்) ஒன்றுபட்ட சூடானுக்காகவும் வாக்களித்துள்ளனர். இந்த முதல்கட்ட அறிவிப்பு ஜனவரி 30ஆம் நாள் வெளிவந்துள்ளது. தென் சூடான் இடைக்கால அரசாங்கத்தின் இணையத் தளத்தில் (www.goss-online.org) தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெப்ரவரி 14ஆம் நாளில் அதிகார பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பெரும்பான்மை மக்கள் சுதந்திரத் தனிநாட்டுக்காக வாக்களிப்பர் என்பது ஏலவே தென் சூடான் மக்களால் தீர்மானிக்கப்பட்டதும் - அனைத்துலக மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றதுமான முடிவாகும்.

சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் விடுதலை அமைப்பிற்கும் (SPLM) இடையில் 2005ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் விளைவாக தென் சூடானுக்குரிய இடைக்கால தன்னாட்சி அரசாங்கம் (6 ஆண்டு கால வரையறை கொண்ட) ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த சில மாதங்களில் SPLM தலைவர் ஜோன் கராங் உலங்குவானூர்தி விபத்தில் இறந்த பின்னர் கூட அந்த அமைப்பில் நேர்த்தியான தலைமைத்துவ தொடர்ச்சி காணப்பட்டது. ஜோன் கராங்கின் மரணத்தை அடுத்து சல்வா கீர் தலைமைப் பொறுப்பேற்றார். இடைக்கால தன்னாட்சி அரசாங்கத்தின் அரச தலைவராக ஜோன் கராங் வகித்த பொறுப்பினையும் அவரது மரணத்தின் பின் சல்வா கீர் ஏற்றுக் கொண்டார்.

1956ஆம் ஆண்டு பிரித்தானிய எகிப்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து, வடக்கின் அரேபிய மேலாதிக்க அரசினால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தென் சூடான் மக்கள், 1983ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை 21 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து 2004இல் இருந்து சமாதான முன்னெடுப்புகள், இடைக்கால தன்னாட்சி அரசாங்கம், தனிநாட்டுத் தீர்வு என்ற படிநிலைகளில் ஊடாக விடுதலை என்ற இலக்கினை அடைந்துள்ளனர். சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜுலை 9ஆம் நாள் தனிநாட்டுப் பிரகடனம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2005 இல் உருவாக்கப்பட்ட தென் சூடானுக்குரிய ஆறு ஆண்டுகால இடைக்கால தன்னாட்சி அரசாங்கத்தின் ஊடாக SPLM இன் முன்னாள் போராளிகள் ஓரளவு அரசாங்க ஆட்சிமுறை பட்டறிவைப் பெற்றிருப்பர் என்பது எதிர்காலத் தனிநாட்டிற்கு பயனுடையதாக நோக்கலாம்.

தனி நாட்டுக்குரிய தேசிய கீதம் - தேசியக் கொடி என்பன ஏலவே உருவாக்கப்பட்டுவிட்டன. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் போட்டி நடாத்தப்பட்டு தேசிய கீதம் தெரிவுசெய்யப்பட்டது. அதேவேளை தென் சூடான் விடுதலை அமைப்பின் கொடி புதிய தனிநாட்டின் தேசியக் கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நாட்டிற்குரிய பெயர் இன்னமும் முடிவாகவில்லை. தெற்கு, தென் சூடான், புதிய சூடான் மற்றும் குஸ் (South, Southern Sudan, New Sudan, Cush) ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர நாட்டுக்குரிய வாக்கெடுப்பு நடாத்தப்படும் கட்டம்வரை நகர்ந்துள்ளபோதும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அமைய இன்னமும் தீர்க்கப்படாத சர்ச்சைக்குரிய பிணக்குகள் உள்ளன. வடக்கிற்கும் தெற்குக்கும் இடையிலான எல்லை வகுத்தலில் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

தென் சூடான் அதிக எண்ணெய் வளம் நிறைந்த பிரதேசமாகும். சூடானின் மொத்த எண்ணெய் வளத்தில் 80 விழுக்காடு தென் சூடானில் உள்ளது. எண்ணெய் வளப் பங்கீடு தொடர்பான சிக்கலுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அத்தோடு Abey பிரதேசத்தின் எதிர்கால நிலை (Future status of Abyei) பற்றிய பிணக்கிற்கும் தீர்வு காணப்பட வேண்டும். இது வடக்கிற்கும் தெற்கிற்குமான எல்லைப் பிரதேசமாகும். இங்கே அதிகளவு எண்ணெய் வளம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தினை வடக்குடன் இணைப்பதா, தெற்குடன் இணைப்பதா என்பது தொடர்பாக இப்பிரதேச மக்கள் மத்தியில் தனியான கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. கருத்து வாக்கெடுப்பிற்குரிய காலம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

Abeyi தென் சூடானுடன் இணைக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என சூடான் அரச தலைவர் அல்-பஸீர் அண்மையில் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனவே Abeyi பிரதேசத்தின் எதிர்காலம் தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும், மீண்டும் போருக்கு வழிகோலும் அபாயம் கொண்டதாகவும் நோக்கப்படுகின்றது.

வட சூடானில் வாழும் தென் சூடான் மக்களின் எதிர்கால குடியுரிமை போன்ற விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். நீண்ட காலமாக வடக்கில் வாழ்ந்த மற்றும் அங்கு பிறந்து வளர்ந்த பல்லாயிரக் கணக்கான தென் சூடான் பின்னணியைக் கொண்ட மக்கள் தென் சூடான் சுதந்திரத்திற்குப் பின்னர், தம்மீதான அடக்குமுறை தீவிரப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தினால் தாயகம் (தெற்கு) நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கும், அயல் மற்றும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த தென் சூடான் மக்கள் தாயகம் திரும்பும் சூழலில் அவர்களை மீள் குடியமர்த்துவதில் பாரிய சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் சுதந்திர தென் சூடான் முகம் கொடுக்க நேரிடும்.

தென் சூடானில் 90 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். அதே தொகையினர் கல்வி அறிவற்ற நிலையில் உள்ளனர். பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர்களின் மொத்த தொகையில் மூன்றில் ஒரு பங்கினரே பாடசாலை செல்லும் நிலை உள்ளது. அதிலும் மிகக் குறைந்த தொகையினரே அடிப்படைக் கல்வியைப் பூர்த்தி செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

சூடான் தனித்து இயங்கும் நிலையை எட்டுவதற்கு, நாட்டின் உருவாக்கத்திலும் கட்டுமானத்திலும் பாரிய சவால்கள் நிறைந்த பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்குரிய துறைசார் நிபுணத்துவமும் ஆளணி வளங்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.

சாதாரண தெருக்களிலிருந்து நெடுஞ்சாலைகள், பொதுச்சேவைகளுக்குரிய கட்டடங்கள் பாடசாலைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் கட்டியமைக்கப்பட வேண்டியுள்ளது. எனவே நாட்டைக் கட்டியெழுப்புதல், சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வைக் கட்டியெழுப்புதல் என்ற தளங்களில் தென் சூடான் பாரிய சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது.

எண்ணெய் வளத்திலிருந்து பெறக்கூடிய வருமானம் மற்றும் அனைத்துலக நாடுகளிலிருந்து பெறப்படும் உதவியுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிக எண்ணெய் வளம் தென் சூடானில் காணப்படுகின்றபோதும், எண்ணெய் ஏற்றுமதிக்கு வடக்கில் பெருமளவு தங்கியிருக்க வேண்டிய நிலை தெற்கிற்கு ஏற்படலாம். ஏனெனில் தென் சூடான் கடற்தொடர்புகள், கரையோர பிரதேசம் (துறைமுகம்) அற்ற புவியியல் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. எனவே வட சூடான் ஆள்புலத்திற்கு ஊடாகவே எண்ணெய் குழாய்கள் மூலம் சூடான் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ளப்படவேண்டும். எனவே இது விடயத்தில் தென் சூடான் வட சூடானில் தங்கியுள்ளது.

சூடான் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் தலையீட்டுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று எண்ணெய் வள ஏற்றுமதிக்கான ஏக உரிமையினை சூடான் அரசு சீனாவிற்கு வழங்கியிருந்தமையாகும். ஆபிரிக்காவில் அகலக்கால் பதித்துவரும் சீனாவிற்கு மேலும் வாய்ப்பாக அமைந்து விடும் என்பது ஒன்று.

மற்றையது எல்லை கடந்த இஸ்லாமிய பயங்கரவதத்திற்கான தளமாக சூடான் உள்ளமை. குறிப்பாகச் சொல்வதானால், சூடான் அரசின் ஆதரவுடன் ஒசாமா பின் லாடன் சூடானில் தளம் அமைத்துச் செயற்பட்டமையைக் கூறலாம்.

இவ்விரு பின்னணிகளிலுமே அமெரிக்காவின் சூடான் எதிர்ப்பு நிலைக்கும், தென் சூடான் போராட்ட ஆதரவு நிலைக்குமான நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூடான் அரசாங்கம் அமெரிக்காவின் பயங்கரவாத அரசுகளின் பட்டியலில் உள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளாக சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளது. சூடானின் மேற்குப் பிராந்தியமான டார்பரில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்காக சூடான் அரச தலைவர் ஒமர் ஹஸன் அல்-பஸீர் மீது அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனபோதும், சூடானில் மேலும் ஒரு போர் வெடிக்காதிருக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா அதீத அக்கறை கொண்டுள்ளதாகவே ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. தென் சூடான் சுதந்தித்திற்கான வாக்கெடுப்பின் முடிவிற்கு சூடான் அரசு மதிப்பளித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்கான கடுமையான அழுத்தத்தினை அமெரிக்கா சூடானுக்கு கொடுத்து வந்துள்ளது.

குழறுபடிகளை ஏற்படுத்தாது தென் சூடான் சுதந்திரப் பிரகடனத்தை சூடான் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சூடானுக்கெதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதோடு, இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிப்பதாகவும், பயங்கரவாத அரசுகளின் பட்டியலில் இருந்தும் நீக்குவதாகவும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு அமைய சூடான் அரசு நடந்துகொள்ளாத பட்சத்தில் அதற்கெதிரான நடவடிக்கைகள் இறுக்கமடையுமெனவும் அமெரிக்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டிலிருந்து சூடான் அரச படைகளும் துணை இராணுவக் குழுக்களும் டார்பர் பிரதேசத்தில் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் 1994ஆம் ஆண்டு றுவண்டாவில் நடந்தேறிய இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதில் காட்டிய அக்கறையிலும் பார்க்க தென் சூடானில் மீண்டும் போர் வெடிப்பதைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கையுடன் கூடிய மூலோபாயத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அக்கறைக்கான மூலங்களில் ஒன்று பொருளாதார நலன் என்பது வெள்ளிடை மலை. சூடானில், குறிப்பாக தென் சூடானில் கணிசமான முதலீட்டுத் திட்டங்களை வைத்துள்ளது. எண்ணெய், விவசாய அபிவிருத்தி மற்றும் நீரலை மூலமான சக்தி உருவாக்கம், மினரல் வோட்டர் (நைல் நதி) போன்றவற்றில்; முதலீட்டினை மேற்கொள்ளும் திட்டங்களை அமெரிக்கா கைவசம் வைத்துள்ளது. தென் சூடான் தனி நாடாக கட்டியெழுப்பப்படுவதற்கும், அதன் அபிவிருத்திக்கும் அமெரிக்காவினதும் அயல் நாடான கென்யாவினதும் முதலீடுகளில் பெரிதும் தங்கியிருக்கப் போகின்றது.

இது இவ்வாறிருக்க, இனி தென் சூடான் தனிநாடாகப் பிரிந்த பின்னர் சீனாவின் வகிபாகம் என்னவாக இருக்கப்போகின்றது என்பது கேள்வியாகும். சூடானிலிருந்து தற்போது பெறும் எண்ணெய் அளவினை மேலும் அதிகரிக்கும் விருப்பினை சீனா கொண்டுள்ளது. அதனால் தென் சூடானுடனும் நல்லுறவைப் பேணும் விருப்பினை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் அடிப்படையில் தென் சூடானிலிருந்து இந்துமா கடலுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் வகையில் குழாய்களை அமைத்துக் கொடுப்பதற்கு சீனா தயாராகவுள்ளதான சமிக்ஞையினை சீனத்தரப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது வடக்கில் தங்கியிருக்க வேண்டிய தேவையை இல்லாமற் செய்து, ஒரு சுதந்திர செயற்தளத்தினை தென் சூடானுக்கு ஏற்படுத்தும். ஆனால் இது ஆபிரிக்காவில் சீனாவின் ஆதிக்கம், செல்வாக்கினை மேலும் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இதற்கான அமெரிக்காவின் பதில் அல்லது எதிர்வினை எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்துத்தான் இது விவகாரம் தொடர்பாக தென் சூடானின் முடிவு அமையுமெனலாம்.

அரசியல் பொருளாதார புறநிலைகள் இவ்வாறிருக்கின்ற போதும், 1956 வரை பிரித்தானிய எகிப்திய ஆதிக்கத்திற்கும் பின்னர் சூடானின் இராணுவ ஒடுக்குமுறைக்குள்ளும் போர் அவலங்களுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கு இன்றைய சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்பது நூற்றாண்டுகள் சுமந்த கனவு பலிக்கின்ற வரலாற்று நிகழ்வாகவே நிச்சயம் உணரப்படும்.

தென் சூடான் அடைந்துள்ள சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்பு எனும் இன்றைய நிலை, இத்தனை ஆண்டு கால கடும் உழைப்பின் முடிவு அல்ல, மாறாக இது புதிய தொடக்கம் என தென் சூடான் இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவரான சல்வா கீர் அவர்களின் கூற்று பொருள் புதைந்ததாகவே உள்ளது.

அதேவேளை வட சூடானில் அரசியல் திடத்தன்மை உருவாக்கப்படுவதோடு, பொருளாதார அபிவிருத்தியும் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே தென் சூடான் தனிநாடாக நிலைத்து நீடிக்க முடியும் என்பது யதார்த்தப் புறநிலை ஆகும். வட சூடானில் மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடி ஏற்படின் அது மீண்டும் தென் சூடானுடன் போர் மூழும் நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயம் உண்டென்று ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

தென் சூடான் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கு வலுவான அனைத்துலக ஆதரவு என்ற பின்புலம் ஒருபுறம் இருந்தாலும், சமாதான முயற்சிகள் தடம்புரளாது, காத்திரமான தீர்வு நோக்கி நகர்ந்துள்ளமைக்கு தென் சூடான் விடுதலை அமைப்பு (SPLM) சமாதான முயற்சியினைத் தமது நலன்களுக்கு ஏதுவான முறையில், அரசியல் இராஜதந்திர அணுகுமுறையைக் கையாண்டதும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

http://ponguthamil.com/thedal/thedalcontent.asp?sectionid=8&contentid={3C88E0B4-9965-44FB-BF49-600D3DB9F2DF}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.