Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

,மலை போல் நம்பியிருந்த அரசு ஊழியர்களின் ஓட்டுக்களை லத்தி சார்ஜ் மூலம் இழந்த தி.மு.க.

Featured Replies

அரசு ஊழியர்களின் இதயத்தில், ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்டிவைத்திருந்த 'நண்பேன்டா’ இமேஜ், ஒரு லத்தி சார்ஜ் காரணமாக சுக்குநூறாக உடைந்துவிட்டது!

கடந்த 23-ம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தி, குறளகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அரசு தரப்போ தொடர்ந்து பாராமுகம் காட்டியது. ஆவேசமான ஊழியர்கள், கடந்த 25-ம் தேதி போராட்டக் களத்தில் இருந்து திடீரென புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து குரல் எழுப்ப முயற்சிக்க... அவர்களை ஓட ஓட விரட்டி நையப்புடைத்தது காவல் துறை. இந்தக் களேபரத்தால், புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் வாலாஜா ரோடு போர்க் களமாகக் காட்சி அளித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக்கிடந்த ஊழியர்களை, சங்க நிர்வாகிகள் அவசர அவசரமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தெரிய... கொந்தளித்தவர்கள் ஆங்காங்கே ஆர்ப்​பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் சிவந்த முகத்துடன் நம்மிடம் பேசினார். ''2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வர் கருணா​நிதி, கோட்டையில் கொடியேற்றியபோது வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, 'தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்’ என்பதுதான். அப்போதைய உள்துறைச் செயலாளர் மாலதி (இப்போது தலைமைச் செயலாளர்) தலைமையில் இதுபற்றி ஊதிய நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. 'மத்திய அரசு பதவிப் பிரகாரம் மட்டும் பார்க்காதீர்கள், மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் கூடுதலாக உள்ளன’ என அப்போதே அவரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, சங்கத்தின் சார்பிலும் ஒருவரை கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், நாங்கள் சொன்னதை அரசு கண்டுகொள்ளவில்லை.

ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டபோது குறைந்தது 30 சதவிகிதமாவது உயர்வு ஏற்படும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப்போடும் விதமாக, 18 சதவிகிதம் முதல் 27 சதவிகிதம் வரையே உயர்வு ஏற்பட்டது. அதைவிடக் கொடுமையான விஷயம், நாங்கள் குறிப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை. அலவன்ஸ் போன்ற மற்ற பிற சலுகைகளிலும் ஏக முரண்பாடு. எடுத்துக்காட்டாக, மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் 2,000 என்றால், எங்களுக்கு 200-தான் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தத் தொகையில் வாடகை வீடு கிடைக்குமா என்ன?

அடுத்து ஊழியர்கள் பற்றாக்குறை... அரசின் நலத் திட்டங்களான, இலவச வண்ணத் தொலைக்காட்சி, ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்கச் சொல்கிறார்கள் உயர் அதிகாரிகள். ஆனால், குரூப் 4 பதவி மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை இதுவரை நிரப்பவே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் ஆட்கள் ஓய்வு பெறுகிறார்கள். உடனடியாக அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாகக் கேட்கிறோம். அதற்கும் அரசிடம் இருந்து பதிலே இல்லை. இந்த பாதிப்புகள் குறித்து முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல, 17 முறை கோரிக்கை மனு கொடுத்தோம். ஒரு பதிலும் வரவில்லை. இதனால், 'நியாயமான முறையில் கோரிக்கைவைத்துப் பார்த்தோம். நம்மைக் கண்டுகொள்ளவில்லை. இனி போராட்டம்தான் சரி!’ என பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 21-ல் போராட்ட ஆயத்த மாநாடு ஒன்றை நடத்தி, எங்களது கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைச் சொல்லி, சரிசெய்யக் கோரினோம். அப்​போதும் யாரும் எங்களைச் சீண்டவில்லை. மற்ற சங்கங்களைப்போல முதல்வருக்கு ஜால்ரா போடவோ, பாராட்டு விழா நடத்தி காரியத்தைச் சாதித்துக்கொள்ளவோ எங்க​ளுக்குத் தெரியாது.

நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சங்கத்தை நடத்த விரும்பினோம். எனவே பிப்ரவரி 10-ம் தேதி, 'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும்’ என்று கோரி, அடையாள வேலை நிறுத்தம் செய்தோம். அதற்கும் பதில் இல்லை என்றதும், எங்கள் சங்க மாநிலத் தலைவி தமிழ்ச்செல்வி உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் 20 பேர் கடந்த பிப்ரவரி 23 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை குறளகம் அருகில் தொடங்கினோம். இரண்டாவது நாளே தமிழ்ச்செல்வி மற்றும் சிலரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. முதல்வர் எங்களை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தோம். சாலைப் பணியாளர்களுக்கும் சேர்த்தே நாங்கள் பாடுபடுவதால், அடுத்த நாளே அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எங்களுக்கு ஆதரவாக இன்னொரு பக்கம் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை, எங்கள் நிர்வாகிகள் அனைவரும் புதிய தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திக்கலாம் என புறப்​பட்டுச் சென்றோம். இந்த விஷயம் கேள்விப்பட்டு சாலைப் பணியாளர்களும் எங்களோடு வந்தனர். போலீ​ஸாரோ ஆங்காங்கே தடுப்பு ஏற்படுத்தி அவர்களை நுழைய​விடாமல் தடுத்தனர். 'முதல்வரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளைச் சொல்ல வேண்டும்’ என்று காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்தபோது, இணை ஆணையர் சாரங்கன் திடீரென அந்த இடத்துக்கு வந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது யாரோ ஒரு காவலர் வைத்திருந்த லத்தி, சாரங்கனின் முதுகில் குத்திவிட்டது. 'போராட்டக்காரர்கள்தான் தன்னைக் குத்திவிட்டார்கள்’ என்று நினைத்து ஆவேசமாகி... 'லத்தி சார்ஜ்’னு சொன்னார். அவ்வளவுதான் போலீஸ்காரர்கள் மிருகத்தனமாக எங்களை லத்தியால் அடிக்கத் தொடங்கினார்கள்.

'அடிக்காதீங்க... அடிக்காதீங்க’ன்னு என்று நாங்க கொடுத்த கூக்குரல் போலீஸ் காதில் விழவே இல்லை. ஏற்கெனவே, பசி மயக்கத்தில் இருந்த பலர் ரத்தம் சொட்டச் சொட்டப் பரிதாபமாக மயங்கி விழுந்தார்கள். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அம்சராஜ், வட சென்னை மாவட்டத் தலைவர் பட்டாபி உட்பட 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம். அன்று சாயங்காலமே முதல்வரை வந்து பார்க்கச் சொல்லிக் கூப்பிட்டாங்க... கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு முதல்​வரிடம் போனோம். 'நீங்கதான் காலையில் என்னைப் பார்க்க வந்தவங்களா?’ன்னு கேட்டார். தலை அசைத்​தோம். 'இதுதான் பார்க்க வர்ற முறையா?’ன்னு கேட்டார். 'இல்லை ஐயா... பல முறை உங்களைப் பார்த்து எங்க பிரச்னையை சொல்ல முயற்சி பண்ணி​னோம். முடியலை..’ன்னு சொன்னோம். 'நான் எங்க போகப்போறேன். இங்கதானே இருக்கேன்’னு சொன்னார். காலையில் நடந்த லத்திசார்ஜ் பற்றி எதுவும் தெரியாதவர் போலத்தான் கேட்டார். 'ஐயா, நீங்க ஆட்சிக்கு வந்தப்ப எங்களுக்கு நம்பிக்கை இருந்தது’னு நான் சொல்ல, 'நான் என்ன ஜெயலலிதாவா?’னு வார்த்தைகளில் விளையாடினார். கடைசி வரை எங்களை முழுமையாகப் பேசவே விடவில்லை. 'கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’னு சொல்லி அனுப்பிவிட்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் லட்சக்​கணக்கான அரசு ஊழியர்களின் சார்பில் நான் கேட்க விரும்புவது இதைத்தான்... 17 முறை எங்களின் கோரிக்கைகளை உங்கள் அலுவலகத்தில் மனுவாகக் கொடுத்தோமே, அது உங்கள் கவனத்துக்கு வரவே இல்லையா? சுதந்திர தினத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தீர்களே அது வெறும் கண்துடைப்பு நாடகமா? அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போராட்டம் நடந்தபோது, 'அழைத்துப் பேச வேண்டும்... அன்பால் சாதிக்க வேண்டும்...’ என்று அறிக்கை மழை பொழிந்தீர்களே, அது உங்களுக்குப் பொருந்தாதா? இந்த தாக்குதலுக்குக் காரணம் யார்?

முதல்வரிடம் சொல்ல நினைத்ததை ஜூ.வி. வழியாகச் சொல்கிறேன் நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது லட்சக்​கணக்கான அரசு ஊழியர்களின் இதயத்தில் உங்கள் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லையா? இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலம்தான் பதில் சொல்லும்!'' என்று அனலாகக் கொட்டித் தீர்த்தார்!

கண்ணை மூடிக் கொண்டு தி.மு.க-வுக்கு வாக்களிப்​பார்கள் என்று நம்பப்படும் அரசு ஊழியர்களிடமே இவ்வளவு கோபமா?

Thanks to junior vikatan.com.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.