Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் நலன்களை பிரபாகரன் ஒருபோதும் எதிர்க்கவில்லை : கலாநிதி இமம்மானுவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நலன்களை பிரபாகரன் ஒருபோதும் எதிர்க்கவில்லை : கலாநிதி இமம்மானுவேல்

ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை.

அண்மையில் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார் தலைமையிலான நால்வர் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்திருந்தனர். அது மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் காலாநிதி இம்மானுவேல் அவர்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அவர் எமது ஈழம் ஈ நியூஸ் இற்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பாகம் வருமாறு:

கேள்வி: அண்மையில் அமெரிக்கா சென்ற உங்களின் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைவெளிவிவகாரச் செயலாளருடன் மேற்கொண்ட பேச்சு தொடர்பாக சுருக்கமாக கூறமுடியுமா?

பதில்: எங்களின் இனப்பிரச்சனையை பொறுத்தவரையில், இறுதிக்காலத்தில் அமெரிக்காவின் பங்கு மிக மிக அதிகமாக இருந்தது. ஜோர்ச் புஷ் அவர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக, அதாவது பயங்காரவாதத்திற்கு எதிரான போர் காரணமாக சிறீலங்கா அரசு நன்றாக பலனடைந்துள்ளது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என தெரிவித்த சிறீலங்கா அரசு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும் பெற்றதுடன், அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடை செய்து, எமது விடுதலைப்போரை அழிவடையச் செய்துள்ளன.

எனவே அமெரிக்கா வகித்த பங்கு எமக்கு எதிரான முதன்மையான பங்கு ஆகையால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்திற்கு மகிந்தா ராஜபக்சா மட்டுமல்லாது, இந்தியா உட்பட உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் பொறுப்பானவர்கள். எனினும் இந்த எதிரிகளுடனும் பேசவேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதே யதார்த்தமானது.

இவ்வாறான எதிரிகளுடனும் பேசித்தான் எமது தீர்வையும் நாம் தேடவேண்டும். எனவே தான் பல விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக நாம் அமெரிக்கா சென்றிருந்தோம்.

கேள்வி: இந்த பேச்சுக்களின் போது ஏதாவது முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயக்கூடியதாக இருந்ததா?

பதில்: அண்மைக்காலத்திலே பிளேக் அவர்கள் மிக அழுத்தமாக சில விடயங்களை தெரிவித்துவருகின்றார். சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என தெரிவித்துவருகின்றார். அது எமக்கு மிகவும் சாதனமானது அதனை நாம் வலியுறுத்தினோம்.

அவருக்கு சிறீலங்கா தொடர்பில் நீண்டகால அனுபவம் உள்ளதுடன், சிங்கள அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளார். மேலும் அவர் சிறீலங்காவுக்கான தூதுவராக இருந்தபோது ராஜபக்சா குடும்பத்துடனும், ஏனையவர்களுடனும் நெருங்கி பழகியவர். எனவே சிறீலங்கா அரசுக்கு அவரை நன்கு தெரியும். அதனை நாம் வரவேற்று. அவருடன்; பல விடயங்கள் தொடர்பாக பேசுவதற்கான தயார் நிலையில் தான் சென்றோம்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் கூறுகின்றனர் அவதாவது நாடு பிரிவதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதே அதுவாகும். ஆனால் அதற்கு எதிராக எமது பக்கத்தின் நியாயங்களை நாம் எடுத்துக்கூறினோம். பிரிவினை என்பது நாம் தேடிக்கொண்ட விடயமல்ல, இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நடவடிக்கை காரணமாக எம்மீது திணிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு தான் நாம் அந்த தீர்மானத்தை எடுத்தோம். எனவே அதனை தீர்வு மேசையில் நாம் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அதனை நாம் புறம்தள்ளமுடியாது.

கொசோவோ மற்றும் சூடான் பிரச்சனைகளில்; அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வின் பிரிவினையும் ஒரு பகுதியாகஇருந்ததுபோல எமக்கும் இருக்கவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தினோம். அவர் எப்போதும் அமெரிக்காவின் கருத்தை தெரிவித்துக்கொண்டிருப்பார். அது அதிசயமல்ல. ஆனால் எம்மிடம் இறுதி இலக்கை நோக்கி தெளிவிருத்தல் வேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் முன்னர் ஒரு விடயத்தை தெரிவித்திருந்தார். அதாவது “எமது தீர்வு இதுதான், ஆனால் நீங்கள் ஏதாவது தீர்வை முன்வைக்க விரும்பினால் அதனை முன்வைக்கலாம் நாம் பரிசீலிப்போம்” என தெரிவித்திருந்தார். ஆனால் சிறீலங்கா அரசு அதனை செய்யவில்லை. அதனையும் நாம் பிளேக்கிடம் தெரிவித்தோம்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு தமிழர் பகுதிகளில் நடைபெறும் எதிர்நிகழ்வுகள், அதாவது சிங்கள குடியேற்றங்கள், பௌத்த ஆலயங்களை அமைத்தல், தொடர்ந்தும் மக்கள் காணாமல்போவது மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்படாதது போன்றவற்றை நாம் தெளிவாக எடுத்துக் கூறினோம்.

ஏனெனில் அவை அதிகமாக ஊடகங்களில் வெளிவராத சம்பவங்கள். போர் நிறைவடைந்த பின்னர் எல்லாம் நிறைவடைந்துவிட்டது என்ற தோற்றப்பாடு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதனையும் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் கத்திரமான செய்தி ஒன்றுடன் கொழும்பு செல்லவுள்ளதாகவும், நீங்கள் மேற்கொண்ட சந்திப்பின் பின்னரே இந்த பயணம் அமையவுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் சிறீலங்கா அரசு அந்த பயணத்தை தடுத்துவிட்டது. இது தொடர்பில் என்ன கருத்தை கூறவிரும்புகின்றீர்கள்.

பதில்: நாம் அவருடன் மேற்கொண்ட சந்திப்பின்போது தான் அவர் கொழும்பு செல்லவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகவே அவர் எமது சந்திப்பையும் விரும்பியிருந்தார் என்றும் கூறலாம். ஏனெனில் அவர் கொழும்பு செல்லும் முன்னர் அதிக தகவல்களை பெறுவதற்காகவே எமது சந்திப்பையும் அவர் விரும்பியிருக்கலாம்.

எனவே தான் அவருக்கு தேவையான முள்ளிவாய்கால் சம்பவத்தின் பின்னர் தொடரும் தகவல்களை நாம் வழங்கினோம்.

ஆனால் கொழும்பு அரசு அவரின் பயணத்தை விரும்பாததற்கான காரணம் தெளிவானது ஏனெனில் அண்மைக்காலங்களில் றெபேட் ஓ பிளேக் தெரிவித்துவரும் கருத்துக்கள் சிறீலங்கா அரசுக்கு எதிராக அழுத்தமாக இருக்கின்றன.

இருந்தபோதும், இராஜதந்திரி என்றமுறையில் எல்லா தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய தன்மைகள் அவரிடம் உள்ளது. அவர் எம்முடனும் பேசலாம், சிறீலங்கா சென்று அவர்களுடன் சேர்ந்து புதிய வழிகளை அவர்களுக்கும் சாதகமாகக் காட்டலாம் எனவே இவ்வாறானவர்களுடன் பேசும்போது நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். ஏனெனில் இவர்கள் எல்லோரும் எமக்கு எதிராக செயற்பட்டவர்கள். இருந்தபோதும், எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருடன் பேசியுள்ளோம்.

கேள்வி: சிறீலங்கவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துவரும் அமெரிக்க அரசிடம் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் என்ன கருத்து உள்ளது?

பதில்: வழமைபோல அவர்களின் இரட்டை வேடத்தை தெளிவாக அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் தற்போது நடைபெறும் லிபியா சம்பவத்தை பார்க்கும்போது அவர்கள் பல்வேறு நாடுகளின் அரசியல் பிரச்சனைகளை பல்வேறு விதமான தீர்ப்பதற்கு முற்பட்டுவருகின்றனர்.

எந்த நிலமையிலும் அவர்கள் தமது சொந்த நலனையே முதலிடத்தில் கருதுவார். அது தான் அவர்களுக்கு முதன்மையானது. அவர்களுக்கு தேவையான எண்ணை வளங்களோ அல்லது வேறு வளங்களோ எம்மிடம் இல்லை. இருந்தபோதும் இலங்கையை ஒரு நண்பனாக வைத்திருப்பது அவர்களின் பூகோள அரசியலின் முகியத்துவத்திற்கு தேவையாக உள்ளது.

திருமலையில வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவை வைத்திருக்கின்றனர், திருமலை துறைமுகம் அவர்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு பூகோள முக்கியத்துவம் கருதி இலங்கையை தமது நண்பனாக வைத்திருப்பது அவர்களுக்கு தேவையாக உள்ளது. மேலும் இந்தியாவையும் தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாகவும் நேர்த்தியாக கையாள விரும்புகின்றனர்.

இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக இலங்கைத் தீவு பிளவுபடுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். இலங்கை பிரிந்தால் தமது தேவைகளுக்கு என்ன நடைபெறும் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர்” வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் முன்னர் ஒரு முறை நான் தனிமையில் பேசியபோது அவர் அமெரிக்காவின் நிலை குறித்து பேசும்போது அமெரிக்காவின் நலன்களை நாம் எதிர்க்கவில்லையே ஆனால் அவர்கள் ஏன் எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நாடுகளும், வல்லரசுகளும் உலக நாடுகளின் கூட்டமைப்பு பற்றி தங்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை 50 அல்லது 60 வருடத்திற்கு முன்னர் எடுத்துவிட்டு அந்த நிலைப்பாட்டையே பாதுகாக்க விரும்புகின்றனர். சிறீலங்கா என்ற சிறிய தீவை ஒரு அரசின் கீழ் வைத்திருப்பதே, பிரித்தானியாவின் காலணித்துவ முறையாக அப்போது இருந்தது. அவ்வாறு கையாள்வதே தமக்கு சுலபமானது என இந்த நாடுகள் அனைத்தும் கருதுகின்றன.

அது மட்டுமல்லாது, கொழும்பு மட்டுமே உலகை இணைக்கும் மையப்புள்ளியாக உள்ளது. ஒரே ஒரு அனைத்துலக விமானநிலையம் இருப்பதும், ஒரே ஒரு சர்வதேச துறைமுகம் இருப்பதும் எமக்கு பாதகமாக அமைந்துள்ளது. இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த நகரமோ அல்லது விமானநிலையமோ அல்லது திருமலை, காங்கேசன்துறை போன்ற துறைமுகங்கள் அனைத்துலக தரத்தை கொண்டிருக்குமாக இருந்தால் இலங்கையின் சரித்திரம் மாற்றமடைந்திருக்கும்.

எல்லாம் கொழும்பை மையப்படுத்தி உள்ளதால், இந்த நாடுகளுக்கு இலங்கையை கையாளுவது சுலபமாக உள்ளது. இது எமக்கு எதிராக பிரித்தானியா செய்த பெரிய தவறு. அவர்கள் கொழும்பை மையப்படுத்தி எல்லா அதிகாரங்களையும் வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு எப்படித்தான் அவர்கள் வலுவாக இருந்தாலும், நாங்கள் தமிழர்கள் தெளிவாகவும் பலமாகவும் இருப்பது முக்கியம். நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சியையும், புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களையும் பலப்படுத்தி ஒரே திசையில் முன்னேறவேண்டும்.

உலகத்தமிழர் பேரவையை பொறுத்தவரையில் எல்லா சர்வதேச நாடுகளுடனும், அமைப்புக்களுடனும் அவர்களின் எல்லா முக்கியத்துவத்தையும் பின்னனியையும் புரிந்து பேசவேண்டிய தேவை எமக்கு உள்ளது. எனெனில் எந்த நாடுகளுடனும், எந்த அமைப்புக்களுடனும் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம் தடை எதுவுமில்லை.

இந்த நிலையில் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கான பயணங்கள் முக்கியமாக இருக்கின்றன. யாதார்த்தம் என்னவெனில் தமிழர்களை நேசிக்கும் நாடுகளோ, மக்களோ உலகில் இல்லை என்பதாகும். நாம் தான் எம்மை பாதுகாக்க வேண்டும், எமது இனத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

இன்று இந்தியாவில் கூட தமிழகத்திலோ அல்லது டெல்லியிலோ மாத்திரம் நாம் நாம் நூறு விகிதம் தங்கியிருக்க முடியாது. ஈழத்தமிழர்கள் தமது இலட்சியத்திலும், ஒற்றுமையிலும் பலமாக இருந்தால் தான் எமது விடுதலையை வென்றெடுக்க முடியும். இவைகளுக்கு எதிராக எம்மவர்களுக்குள் செயற்படும் சகல தீயசக்திகளும் குறையவேண்டும் என்பதே எமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

நாளை முற்றுப்பெறும்.

http://www.tamilkathir.com/news/4668/58//d,full_article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.