Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி தமிழர்களை விதைத்த பூமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தமிழர்களை விதைத்த பூமி

Posted by: on May 22, 2011

வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தேற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு. தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது.

இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது. அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது. தமிழன் குருதி உறைந்த அந்த மண்ணில் எத்தனை தமிழர்களின் உயிர்கள் உறைந்து போயின. வன்னியெங்கும் இப்போது தமிழர்களின் உடலங்கள் விதைக்கப்பட்ட பூமியாக மாறியிருக்கின்றது. எங்களின் குருதி தோய்ந்த அந்த மண்ணில் இன்று சப்பாத்து கால்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகையில் நெஞ்சு இன்னும் வெடிக்கிறது.

மன்னாரில் தொடங்கிய தமிழர்களின் ஓட்டம் கிளிநொச்சியையும் தாண்டித் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கிளிநொச்சியுடன் முடிந்ததடா தமிழன் கதை என்று, பரந்தன்தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரை நடந்தன தமிழரின் கால்கள்.

இந்த அழிவிற்குத்தான் இவ்வளவுதூரம் நடநது வந்தோமா? என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் கிளிநொச்சியினை விட்டு நடக்க வெளிக்கிட்டோம். 2009 மே 17 முள்ளிவாய்க்கால் வரை நடந்துகொண்டே இருந்தோம். இந்த நெடும் பயணத்தில் எத்தனை எத்தனை அழிவுகளை நாம் சந்தித்தோம்.!

கிளிநொச்சியில் இருந்து எனது குடும்பமும் இடப்பெயர்வினை தொடங்கியது. கிளிநொச்சி நகரின் ஒரு பகுதியில் ஓலைக் குடிசையில் வசித்துவந்தது என் குடும்பம். நாளாந்தம் கூலி வேலையினை செய்து எனது குடும்பத்தினை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நான். போர் தொடங்கியதன் பின்னர் கூலிவேலை கிடைப்பதுகூட மிகக் கடினமாக மாறியிருந்தது. குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் ஆபத்தான கூலிவேலைகளை நான் செய்யமுற்பட்டேன். அதாவது அன்று அக்கராயன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி பகுதிகளுக்குள் தங்கியுள்ள மக்கள் சூனியபிரதேசமாக காணப்படும் அவர்களின் வாழ்இடங்களுக்கு உழவு இயந்திரங்கள், லான்ட்மாஸ்ரர் பேன்றவற்றில் சென்று அவர்களின் வீட்டுகூரை யன்னல்கள், ஓடுகள், சீற் போன்றவற்றை கழட்டி ஏற்றுவதற்காக நானும் செல்கின்றேன். நாள் ஒன்றிற்கு 150 ரூபா அல்லது 200 ரூபாதான் தருவார்கள். இவ்வாறு இருக்கும்போதுதான் எனது குடும்பம் கிளிநொச்சியினை விட்டு இடம்பெயரவேண்டிவந்தது. கிளிநொச்சியும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலின் நகரமாக மாறுகின்றது. ஒரு மாட்டுவண்டிலில் ஏற்றும் பொருட்களை மிதிவண்டியில் முன்னும் பின்னுமாக கட்டிக்கொண்டு நானும் எனது குடும்பமும் தருமபுரம் பகுதி நோக்கி நகர்கின்றோம். அங்கு இருப்பதற்கு இடம்இல்லை இரவிரவாக எறிகணைகள் வீழ்ந்துவெடிக்கும்சத்தம் காதைப்பிளக்கின்றன.

இந்நிலையில் எனது குடும்பத்திற்காக நான்கு தடி ஒரு யு.என்.எச்.சி.ஆர் வழங்கிய தறப்பாள் ஒன்றினையும் எடுத்து சென்றிருந்தேன். ஒரு வீதியின் ஓரத்தில் தடியினை நட்டு தறப்பாளினை இழுத்துக்கட்டினேன். எங்களிடம் கிடந்த அரிசியினை அன்று காலை அம்மா கஞ்சி காச்ச அதுதான் அன்றைய உணவானது. ஓரிரு வாரங்கள் நகர்ந்தன. அடுத்தகட்ட உணவிற்கு கையில் பணம் இல்லை. அப்போது தருமபுரம் - பரந்தன் வீதியால் கன்டர், உழவு இயந்திரங்கள் சென்று வந்தன. கிளிநொச்சி மக்களின் வீடுகளை கழட்டுவதற்காக அந்த வீட்டு உரிமையாளர்கள் கூலிக்கு ஆட்களை கேட்கின்றார்கள் என்று அறிந்தேன். அந்த வேலையினை செய்வதற்காக சென்றேன். அப்போதுதான் நான் கிளிநொச்சியினை பார்க்கமுடிந்ததது. எப்படி இருந்தகிளிநொச்சி இப்படியாகி கிடக்கின்றதே என்று வியப்பில் விழுந்தேன். கிளிநொச்சிநகரில் வாழ்ந்த ஒரு முதலாளியின் வீடு அது. அந்த வீட்டின் சீற் மற்றும் வீட்டுப் பொருட்களை ஏற்றுவதற்காத்தான் நான்வந்தேன். அவரின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் பத்திரமாக கழற்றி ஏற்றிவிட்டு கிளிநொச்சியின் நகர்பகுதி ஏ.9 வீதிக்கு ஊர்தி ஏறுகின்றது. அப்போது அது சிங்கள மகாவித்தியாலம் அமைந்த பகுதி. அதில் நின்று பாக்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தின் காட்சிப் படங்கள்தான் என் நினைவிற்கு வந்தன. நகரின் றொட்டிக்கோ விளையாட்டு திடல்வரை மயானம் போல் காட்சி அளிக்கின்றது. மக்கள் நடமாட்டங்கள் இல்லை. எறிகணைத் தாக்குதலில் மரங்கள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. வீதியின் ஓரங்களில் உள்ள வீடுகள் கட்டடங்கள் அனைத்தும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களால் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு விழுந்துகிடந்த தென்னைமரம் ஒன்றில் நான்கு தேங்காயினை எனதுவீட்டு தேவைக்காக பிடிங்கிகொண்டு ஊர்தியில் ஏறினேன். இதுதான் நான்கண்ட இறுதி கிளிநொச்சி நகரம். நகரமாக இருந்தது இப்போது நரகமாக மாறியிருந்தது.

பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியின் கரை ஓரங்கள் எங்கும் மக்களின் குடில்களும், தறப்பாள் கொட்டில்களும் நிறைந்து கிடந்தன. தண்ணிக்காகவும் உணவுக்காகவும் காத்திருக்கும் மக்களை வீதிகளில் பாக்ககூடியதாக இருந்தது. வீதிகள் மரங்களின் கீழ் எல்லாம் மக்கள் வெள்ளம். மக்கள் செல்லும் இடங்களில் முதல் செய்வது பதுங்ககழி வெட்டுவதுதான். அதன்பின்னர் அதற்கு மேல் கொட்டில்போட்டு அதற்குள் இருப்பதுதான். இவ்வாறுதான் எனது குடும்பத்தினை நான் மண் அணைசெய்து குண்டு விழுந்தாலும் சிதறுதுண்டங்கள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க முயற்சிக்கின்றேன். ஆனால் மண்வெட்டி இல்லை. மண்ணை பக்கத்தில் இருந்து வெட்டிப்போட முடியாது. அருகில் எல்லாம் குடும்பங்கள் குடியேறிவிட்டன. இவ்வாறு மக்களின் செறிவு அதிகரிக்க தொடங்குகின்றது. ஆங்காங்கே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. தொலைதூர எறிகணைகள் கூவி வரும்போது மக்கள் அலறி அடித்து ஓடிப்பதுங்கும் காட்சிகள் என்கண்முன்னே நிழலாடுகின்றது. அதனைவிட கொடுமை மிகை ஒலி விமானங்கள் தாழப்பறந்து வீசும் குண்டுகள். அதன் சிதறுதுண்டங்கள் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை பாதிப்பினை உண்டுபண்ணும்.

தருமபுரம் பகுதி எதிரியின் எறிகணைத் தாக்குதலின் முழுமையான பகுதியாக மாறுகின்றது. நாங்கள் விசுவமடு நோக்கி நகரலாம் என்று எண்ணி வெளிக்கிட்டோம். ஒருநாள் இரவு நகரவெளிக்கிட்டால் எங்கு செல்வது? வீதியால் விலத்தமுடியாத மக்கள் நெரிசல். அந்தவேளையில் எனக்கு நினைவிற்கு வந்தது யாழ்ப்பாண இடம்பெயர்வை முன்னிட்டு புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய அந்த பொன்னான பாடல் வரிதான். ‘பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்...’ என்ற வரி என்னை நினைக்க வைத்தது. சிறியவர்கள், பெரியவர்கள், வயது முதிந்தவர்கள் எல்லாம் தங்களால் இயன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டும், எடுத்துக்கொண்டும் எங்குபோவது என்று தெரியாமல் இப்போதும் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

செல் விழும் சத்தம் தொலைவில் கேட்பதாக இருந்தால் அந்த இடத்தில் தங்குவதாக எனது நிலை இருந்தது. இவ்வாறு நகர்ந்து வந்த மக்கள் விசுவமடு தொட்டியடிப் பகுதியின் விளையாட்டு திடலில் மக்கள் குடியேறுகின்றார்கள். அவர்களுடன் நானும் எனது குடும்பமும் அன்று இரவு தறப்பாளினை விரித்துவிட்டு படுத்து உறங்கினோம்.

அவசரத்திற்கு செல்வதற்கு அருகில் பற்றைகாடுகள் உள்ள இடமும் தண்ணீர் வசதிகள் கொண்ட இடத்தினையும்தான் பார்த்து பார்த்து மக்கள் தங்கிக்கொள்கின்றார்கள். இந்த நிலையில் மழையும் பெய்ய தொடங்குகின்றது. இழுத்துகட்டின தறப்பாள் கொட்டிலுக்குள் வெள்ளம் வருகின்றது. மண்ணைவெட்டி அணையாக கட்டி அதற்குள்தான் எனது குடும்பம் உறங்கிக்கொண்டிருக்கிறது. எங்களிடம் ஒருதொகை நெல் கிடந்தபடியால் அதனைக்குற்றி அரிசியாக்கி கஞ்சியும் சோறுமாக செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். சாவுகளும் மலிந்துகொண்டிருந்தன.

ஒவ்வொரு வீடும் இழப்புக்களை சந்தித்துக்கொண்டே இருந்தது. கொட்டும் மழையில் மக்கள் ஒருபுறம், விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போராளிகள் மறுபுறம் என்று இழப்புக்கள் அதிகரித்துக்கொண்டு இருந்ததேதவிரகுறையவில்லை.

மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச செயலகங்கள் அனைத்தும் இடம்பெயர்ந்து இடந்தெரியாத இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நிவாரணம் கொடுப்பதாக ஒர் இடத்தில் வானொலி ஊடாக அறிவித்தால் அந்த இடம் தேடிப்பிடிக்கப்போகும் போது எறிகணை வீழ்ந்து அதில் மடிந்த மக்கள்தான் இருப்பார்கள். இவ்வாறுதான் அன்றும் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கையில், படையினரின் நகர்வும் வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்கள் நெரிசலாகிக்கொண்டிருந்தார்கள். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. தற்போது விசுவமடுவினை விட்டும் வெளியேறவேண்டிய நிலை. அடுத்து எங்கு செல்வது என்று தெரியாதது. ஆனாலும் நடந்துகொண்டே இருக்கின்றோம். அங்கங்கே வீதிகளி

லும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. நீண்டதூர எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களில் வீழ்கின்றன. குறிப்பாக அன்று அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வாழ்கின்றார்கள். காடுகள், புற்தரைகள், சுடலைகள், வீதி ஓரங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் மக்கள் தறப்பாள் கொட்டில்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் அரசவானொலியில் வெள்ளைக்கொடிகட்டி இருங்கள் என்று அறிவித்ததாக சொன்னார்கள். அதனையடுத்து தறப்பாள் கொட்டில்களின் மேல் வெள்ளைக்கொடிகளைக் கட்டி பாத்தோம். ஆனால், அதன் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன.

மழை பெய்துகொண்டிருக்கின்றது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கின்றது. எங்காவது சென்று இருந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நகர்கின்றோம், நகர்கின்றோம் நகர்ந்துகொண்டே இருந்தோம். தேராவில் குளம் நிரம்பிவிட்டது. அதனால் அதன் குளக்கட்டால் செல்லமுடியாது. மாற்றுவழி பாதை அமைத்து அதன் ஊடாகத்தான் மக்களும், ஊர்திகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு நகர்ந்து சென்றால் மறுபக்கத்தால், அதாவது ஒட்டிசுட்டானில் இருந்து முன்னேறும் படையினர் எறிகணை தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். தேவிபுரப் பகுதியில் இருப்பதாக இருந்தால் அங்கும் இடம்இல்லை. தேவிபுரம் ஊடாக இரணைப்பபாலை பகுதி நோக்கி நகர்ந்து அங்கு ஒரு தென்னந்தோப்பில் எனது குடும்பம் இடம்பிடித்துக்கொண்டது. ஆனாலும், இடங்கள் சுருங்கசுருங்க வாழ்வதற்கு இடமில்லை. மலம்கழிக்க இடம்இல்லை. குடிக்க நீர் இல்லை. ஒழுங்கான குளிப்பில்லை. இரவில் இருக்கும் இடத்திற்கு அருகில் கிடங்குகிண்டிதான் மலம் கழித்துவிட்டு புதைப்பது. இதுஒருபுறம் மறுபுறம் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. அதற்காக அலைந்துதிரிவது என்றால் அதனைவிட துன்பம் வேறெதுவும் இல்லை. கடைகளில் ஒரு கிலோ அரிசியின் விலை 300ரூபாவிற்கு மேல் வந்துவிட்டது.

ஒரு கிலோ சீனி 500 ரூபாவைக் கடந்துவிட்டிருந்தது. குழந்தைகளுக்கான பால்மா இல்லை. என்செய்வதென்று தெரியாத நிலையில் பெற்றோர்கள். பணம் இருப்பவர்கள் பணத்தினை கொடுத்து வாங்குகின்றார்கள். மற்றவர்களின் நிலை? வன்னியினை பொறுத்த மட்டில் மூன்று இலட்சம் மக்களில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள்தான் இவ்வாறான நிலையினை ஈடுசெய்யக் கூடியவகையில் இருப்பார்கள்.விவசாயத்தினையே நம்பி வாழ்ந்த மக்களிடம் நெல்லினை தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது அதுவும் இல்லாத நிலையில்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது வாழ்வு. கப்பலில் சாமான் வருகிறதாம் என்று அரசாங்க அதிபர்கள்கதைக்கின்றார்கள். இரண்டாம் மாதம் அளவில் மாத்தளன் பகுதியில் சாமான்களுடன் அதுவும் குறைந்த அளவு உணவு பொருட்களுடன் கப்பல் வந்தது. ஆனால், யானைப் பசிக்கு அது சோளப்பொரிதான் வந்தது. உணவுப்பொருட்கள் கொண்டுவந்த கப்பல் காயமடைந்த மக்களை ஏற்றிக்கொண்டு சென்றதுதான் ஒரு ஆறுதல்.

இப்போது இரணைப்பாலையில் இருந்தது எனது குடும்பம். அங்கும் இடம் இல்லாதநிலையில் சுழன்று சுழன்று ஜந்திற்கு மேற்பட்ட இடத்தில் இருந்தேன். இன்று ஓர் இடத்தில் இருந்தால் அதற்கு பக்கத்தில் கிபீர் விமானங்கள் தொடராக தாக்குகின்றன என்று மாற்று இடத்தில் இருந்தால் அங்கு தொடராக எறிகணைகள் வந்து வீழ்கின்றன. இவ்வாறான நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் வீதியின் வாய்க்கால் பகுதி பள்ளமாக காணப்படுகின்றது. செல்வீழ்ந்து வெடித்தால் சிதறு துண்டம் பறக்காதுதான். ஆனால், தலைக்குமேல் விழுந்தால் அது காலம் என்று என் உறவுகள் சொல்லிக்கொண்டு அந்த வாய்க்காலில் தறப்பாளினை இழுத்துக்கட்டியபடி அதற்குள் இரவு பொழுதினை கழித்தோம்.

மக்கள் எல்லாம் பொக்கணை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். பொக்கணைப்பகுதியில் இருந்துவரும் மக்களைக் கேட்டேன் அங்கு இடம் இருக்கிறதா என்று. ஒருவர் சென்னார் “இவ்வளவு நாளும் இடம்பார்த்தா வந்தனாங்கள். போறபோற இடங்களிலை இருக்கத்தான் வேண்டும். போ, நீ அங்க போ! இங்க இருக்காத. செல் வந்தோண்டு இருக்கு” என்று அவசர அவசரமாக சொல்லிவிட்டு அவர் தனது குடும்பத்தினை அழைத்துகொண்டு செல்லப்போனார். அவர் சென்று ஜந்து நிமிடம் கழியவில்லை இரணைப்பாலை சந்திக்கு அருகில் தொடராக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. என்னுடன் இவ்வாறு கதைத்துவிட்டு சென்றவர் செல்லில் காயம் அடைந்துவிட்டார்.

யாரையும் யாரும் காப்பாற்ற முடியாத ஒரு நிலை. காயம் அடைந்தாலும் அவனை வந்து தூக்குபவன் அடுத்த எறிகணையில் இறந்துவிடுவான். இதுதான் அன்று மக்களின் கண்முன் நடக்கும் நிகழ்வு. இதனைவிட காயம் அடைந்தவர்களுக்கு மருந்து இல்லை. மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரப்பிவழிகின்றது.

இவ்வாறான நிலையில் மக்கள் எல்லாம் அந்த குடாப்பகுதியான பழைய மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், ஒற்றைப்பனையடி, சாளம்பன், கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்காள் ஆகிய பகுதிகளை நோக்கி செறிவாக நகர்ந்துவிட்டார்கள். 05.04.2009 அன்று புதுக்குடியிருப்பகுதி முழுவதும் படையினர் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.

மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் குடாவிற்குள் அடைக்கப்பட்டுவிட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது. நான் எனது குடும்பத்துடன் கடற்கரை அண்டிய இடத்தினை தெரிவு செய்தேன். அங்கெல்லாம் எறிகணை வீழ்ந்துவெடிக்காது என்று நினைப்பு எனக்கு. ஆனால் அதற்குமாறாக கடலில் இருந்து கப்பல்கள் பீரங்கித் தாக்குதல்களை தொடுத்தன. அதிலும் கிளஸ்ரர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நான் கண்ணூடாக அப்போதுதான் கண்டேன்.

இதற்குள்தான் ஒரு கிலோ அரிசியின் விலை ஆயிரம் ரூபாயினை தாண்டிவிட்டது. ஒரு கிலோ சீனியின் விலை 1500 ரூபாவினை தாண்டிக்கொண்டிருக்கின்றது. சமைப்பதற்கு உரிய உணவுபொருட்கள் இல்லை. ஒரு தேங்காயைக் காணமுடியாது. என்னசெய்வது என்று தெரியாத நிலையில் மக்கள் அங்காலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சில கடைகளின் உரி¬மாயளர்கள் அந்தக் கொட்டில்களில் வைத்துக்கொண்டு மிகமிக உயர்ந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்துவருகின்றார்கள். கடலில் தொழில்செய்ய முடியாது. ஆனால் வலையினை வீசி மீன் பிடிக்கின்றார்கள். எதிரியின் குண்டுகள் கடலிலும் வீழ்ந்துவெடிக்கின்றன. அதற்கும் அஞ்சாமல் ஒருநேரமாவது சாப்பிடவேண்டும் தங்களின் பிள்ளைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நந்திக்கடல் பகுதியிலும் பெருங்கடல் பகுதியிலும் மீன்பிடிக்கின்றார்கள். அதனை விற்பனை செய்கின்றார்கள். அதனைவைத்து உணவுத் தேவையினை பூர்திசெய்கின்றார்கள். வெற்றலை சாப்பிடுபவர்கள் ஆலம்விழுதினை சாப்பிடுகின்றார்கள், தேனிர் குடிப்பவர்கள் சுடுதண்ணீர் குடிக்கின்றார்கள். மில்லில் இருந்து வெளிவரும் உமியினைபுடைத்து அதன் குறுநலை எடுத்து கஞ்சிகாச்சி குடிக்கின்றார்கள். ஏன் அங்குபற்றைகளில் காணப்படும் அடம்பன்கொடியின் கிழங்கினை அவித்து சாப்பிட்டுகூட மக்கள் இறக்கின்றார்கள்.

இவற்றிக்கு மத்தியில் எறிகணைத் தாக்குதல்கள், நாள் ஒன்றிற்கு இருபதிற்கு மேற்பட்டதடவை மிகை ஒலிவிமானங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதனைவிட கடலில் இருந்து நடக்கும் தாக்குதல்கள் என முழுமையான கொலை வலயத்திற்குள் மக்கள் இருந்தார்கள். எறிகணைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கைவசம்எஞ்சியிருந்த சாறிகள், சாறங்களை எல்லாம் சிறுசிறு பைபோல் தைத்துவிட்டு அதற்குள் மண்ணைபோட்டு சுற்றிவர அடுக்கிவிட்டுத்தான் படுத்துறங்கவேண்டியது. விடிவதற்கு முன்பாக அனைவரும் எழுந்து விழுந்துகொண்டிருக்கும் எறிகணைகளுக்கு மத்தியில் கடற்கரைசென்று மலம்கழித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் அதற்குவழியில்லை. இதனால், ஆண், பெண் அடையாளம் தெரியாத அந்த அதிகாலைப்பொழுதில் எல்லோரும் கடற்கரையை முற்றுகையிட்டார்கள்.

எனது கொட்டிலுக்கு முன்னால் ஜம்பது மீற்றர் தூரத்தில் நின்ற நாவல்மரத்தின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை பாத்துக்கொண்டிருந்தேன். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத அந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்தில் திடீரென எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அந்தச் சிறுவர்கள் பதுங்குகுழிகளுக்குள் செல்வதற்கு முன் கண்முன்னாலேயே வீழ்ந்து மடிந்தார்கள். கண்முன்னாலேயேமூன்று சிறுமிகள் துடிதுடித்து மடிந்ததை இன்னும் கண்கள் மறக்கவில்லை. இறந்தவர்களைப் புதைப்பதற்கு கூட இடமில்லாது மக்கள் செறிந்திருந்தார்கள். தங்கள் தறப்பாளுக்கு அருகிலேயே அவர்களைப் புதைத்துவிட்டு அதற்கு அருகிலேரயே அவர்களும் படுத்திருந்தார்கள்.

சில இடங்களில் மக்கள் இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டிருந்தார்கள். எஞ்சியிருந்த மக்கள் சிலரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் போவோமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான், 20.04.2009 அன்று புதுமாத்தளன் பகுதியில் ஊடறுத்து வந்தேறியபடையினர் ஒரு இலட்சம் வரையான மக்களை சிறைப்பிடிக்கின்றார்கள். இதன்போது பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

இவ்வாறு இருக்க மக்கள் பண்டமாற்று செய்யும் காலகட்டமாக அந்தகாலகட்டம் மாற்றமடைந்திருந்தது. ஒரு பொயின் இரத்தம் கொடுத்துவிட்டு ஒரு பால்மா பை வாங்கியதும், ஒரு கிலோ அரிசி கொடுத்துவிட்டு அரைக் கிலோ மீன் வாங்கியதும், ஒருகிலோ செத்தல்மிளகாய் கொடுத்து, ஒருகிலோ சீனி வாங்கியது, ஒரு மூட்டை சீனி கொடுத்து ஒரு உழவு இயந்திரம் மற்றும் உந்துருளி வாங்கியவர்களும் ஒருபவுண் நகைகொடுத்துவிட்டு நெல், மற்றும் பணம் வாங்கியவர்களுமாக அன்று பண்டமாற்று முறைக்கு மக்கள் மாற்றமடைந்திருந்தார்கள். இடையிடை மக்களுக்கு கஞ்சிகொடுக்கும் கொட்டில்களில் மக்கள் எறிகணைகள் விழுமோ என்ற அச்சத்துடன் குவிந்திருந்தார்கள். கரையாம் முள்ளிவாய்கால்பகுதியில் நான் எனது குடும்பத்துடன் கஞ்சி எடுத்துவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன். அப்போது அந்தக் கொட்டிலின் அருகில் எறிகணை வீழ்ந்து வெடிக்கின்றது. அதில் இருபதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் கஞ்சிக்காக காத்துநின்றவர்கள். உயிரிழக்கும் மக்களை புதைப்பதற்குக்கூட வழியில்லாமல் போனது நிலைமை.

03.05.2009 அன்று வலைஞர்மடம் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்தமுல்லைத்தீவுமருத்துவமனை மீதும் தொடர் தாக்குதலை நடத்தி அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்கள் உயிரிழக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில் உயிரழ்ந்தவர்கள் போக எஞ்சியவர்கள் இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்பிற்குள் செல்லவேண்டிய நிலை. முள்ளிவாய்க்கால் பக்கமான இரட்டைவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் ஊடாக நகரமுற்படுகின்றார்கள். நந்திக்கடல் பகுதியில் ஏரியால் கடந்து சென்று வற்றாப்பளை பகுதியிலும் கரை ஏறுகின்றார்கள். போகும் வழியெங்கும் மனித உடலங்கள். வழியில் கிடந்த உடலங்கள் எண்ணில் அடங்காதவை. நாங்கள் வட்டுவாகல் பாலத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம் அந்த பகுதியால் வந்த படையினரின் டாங்கிகள் பல அடுக்கடுக்காக நகர்ந்துகொண்டிருக்கின்றன. அந்தடாங்கிகள் பார்ப்பதற்கு புதிதாக இருந்தன. சீனாவின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அந்த உயிரப்போகும் நேரத்திலும் காணமுடிந்தது. கண்முன்னே செத்துக்கிடக்கும் உடலங்கள் மீது அந்த டாங்கிகள் ஏறி செல்கையில் மனம் விம்மிவெடிக்கின்றது. இவற்றை எல்லாம் தாண்டித்தான் எங்கள் உயிர்கள் படையினரின் கட்டுக்குள் செல்கின்றது.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாங்கள் படையினரின் சப்பாத்துக் கால்களால் உதைவாங்கிக்கொண்டு நகர்கின்றோம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதுபோல அவர்கள் எங்களின் பசிக்கு உணவுகளை வீசி எறிந்தார்கள். அதிலும் `போலி’ போலி என்று சிங்களத்தால் சொல்லும் வார்த்தைகள் எங்களை நிலைகுலையவ¬த்தன. இவற்றை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நகர்ந்துகொண்டிருந்தன வலுவிழந்த எங்களின் கால்கள்.

இத்தனை அவலங்களைக் கடந்துவந்தபின்பும் மீண்டும் மக்களை சோதனைகளுக்கு உள்ளாக்கியது சிங்களத்தின் வதைமுகாம் வாழ்க்கை. உயிர்தப்பிய பலரின் உயிர்கள் இங்குவைத்தும் பிடுங்கப்பட்டன. மகாம்களுக்குள் இருந்தும் காணாமல் போகத் தொடங்கினார்கள் தமிழர்கள். இளைஞர்களும், யுவதிகளும் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார்கள். இவ்வாறு வதைமுகாம் வாழ்கை பற்றி இதற்கு மேலும் சொல்லத்தேவையில்லை. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மித்தகதைதான் அதுவென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த வாழ்வு வாழ்வதற்காகவா அன்று உயிர் தப்பினோம் என்று இன்று தங்களுக்குள் வெந்துகொண்டிருக்கின்றார்கள் அந்த மக்கள்.

நன்றி - ஈழமுரசு_82

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.