Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

|| மரணம் பெருகிய இறுதிக் களங்கள் || குளோபல் தமிழ் செய்திகளுக்காக தமிழ்மாறன் பகுதி 01

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 ஆகஸ்ட் 2011

Maranam_CI.jpg

ஈழத்து நிலம் படையெடுப்பாளர்களால் கொல்லப்பட்டு இறந்துபோன நிலத்தைப் போல இருப்பதற்கு இந்த இறுதி நிலங்கள் அதிகமதிகம் வதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சனங்கள் வதைக்கப்படுகிற பொழுது அந்த நிலமும் வதைகளுக்கு உள்ளாகிறது. ஈழத்து நிலம் படையெடுப்புக்களால் அழிந்து கொல்லப்பட்டிருக்கிறது. நிலமெங்கும் அழிக்கப்பட்ட பொருட்களும் யுத்த ஆயுதங்கள் அழித்த நிலத்தின் அலங்கோலமான காட்சியும் சனங்கள் கொல்லப்பட்ட மரணக் கதைகளையும் இன்னும் துயரோடிய இறுதி நாட்களின் பயங்கரங்களையும் புதுக்குடியிருப்பு நிலம் தனக்குள் வைத்திருக்கிறது. தவித்தோடிச் சாவடைந்தவர்களின் குரல்கள் இன்னும் கேட்கிற இந்த நிலத்தின் காட்சி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த பெரும் படுகொலையின் சாட்சியாகவும் ஈழத்துச் சனங்கள் எதிர்கொண்ட பேரழிவுகளின் சாட்சியாகவும் ஆவோசத்தோடு துயரக் காலத்தை உட்புதைத்திருக்கிறது.

நாம் ஒரு மாபொரும் யுத்தத்தை எதிர்கொண்டோம். நாம் மாபெரும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். நாம் மாபெரும் இடப்பெயர்வுக்கு உட்படுத்தப்பட்டோம். ஈழத்துச் சனங்கள் உலகில் எந்த மக்களும் எதிர்கொண்டிராத பேரவலத்தை சுமந்து சென்ற வழியிடங்களாகவும் பெயர்ந்து வந்து தங்கி ஓடியலைந்த இடங்களாகவும் இந்தக் கிராமத்தின் கதைகளில் துயரம் படிந்துள்ளது. சனங்கள் துளியளவு மனிதாபிமானமுமின்றி மாபெரும் வன்மத்தோடும் மாபெரும் அழிப்புத் திட்டத்தோடும் இந்தக் கிராமங்களில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நான் பார்த்தவர்கள் எல்லோரிடமும் காணி நிலத்திற்குள் நிகழ்ந்த மரணக்கதைகள்தான் இருக்கின்றன என்றால் நமது சனங்கள் எத்தனை ஆயிரம் பேர் இங்கு கொல்லப்பட்டார்கள் என்ற கசக்கிற உண்மையான அறியப்படாத செய்தி எல்லா அறிக்கைகளைமீறியும் மனத்தைக் குமுற வைக்கிறது.

எல்லாவற்றையும் சனங்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். வாழ்க்கையின் அத்தனை பாகங்களிலும் கலந்து பயன்படுத்தப்படுகிற பொருட்கள் கைவிடப்பட்டுப்போக உக்கி ஊருக்குலைந்து குப்பைகளாய் அழிவின் எச்சங்களாய் புதுக்குடியிருப்புக் கிராமங்கள் எங்கும் கிடக்கின்றன. அவர்கள் இழந்து சென்றது இந்தப் பொருட்களை மட்டுமல்ல. எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். வாழ் நிலத்தை இழந்து கையில் கிடைத்தவற்றை எடுத்து ஓடி வந்து கடைசியில் கையில் இருந்தவற்றையும் இழந்து ஓட விரட்டப்பட்டிருககிறார்கள். உயிரை இழந்து உயிர் போன உடலை இழந்து கையை இழந்து உடலின் பாகங்களை இழந்து உறவுகளை இழந்து மூர்க்கத்தனமான யுத்தத்தால் தஞ்சமடைந்த நிலக்குழிகளையும் இழந்து ஓடிச் சென்றிருக்கிறார்கள். ஈழத்துச் சனங்களின் வாழ்க்கையை யுத்தம் சிதைத்தழித்ததை இந்த நிலப்பகுதிகள் விரிக்கின்றன.

எருக்கலையாய் உயிர் விடும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தை நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்த்தேன். அது எருக்கலை மேடாக அல்லது ஏதோ ஒரு படைமுகாம் அமைக்கப்பட்ட புதை மேடாக இருக்குமோ என்று நினைத்தேன். எல்லா துயிலும் இல்லங்களையும் போலவே விசுவமடு துயிலும் இல்லத்தின் கல்லறைகள் தகர்த்தழிக்கப்பட்டிருக்கின்றன. எருக்கலை மரங்கள் அடர்ந்து நிலத்தை கிழித்து வளர்ந்த கல்லறைகளைப் போல பூத்திருக்கின்றன. அந்தக் கல்லறைகளின் அருகில் இருந்து அதன் கனவுகளை படித்த காலம் இன்று எருக்கலையை சுற்றி அடர்ந்த உன்னிப் பற்றைகளுக்குள் எறிந்து கிடக்கிறது. யுத்தம் தொடங்கிய காலத்தில் ஒருமுறை முல்லைத்தீவு நகரத்திற்குச் சென்று விட்டு பசியோடு திரும்பிய பொழுது துயிலும் இல்லத்தை காவல் காத்த முதிய தந்தை ஒருவர் உணவு தந்து பசியாற்றிய நினைவு வந்தது.

1997இல் கிளிநொச்சியை இராணுத்தினர் ஆக்கிரமித்திருந்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர்கள் பலரும் விசுவமடு துயிலும் இல்லத்தில்தான் விதைக்கப்பட்டிருந்தார்கள். அப்பொழுது விசுவமடுவுக்கு இல்லத்திற்குச் செல்ல முடியாது வன்னியை இராணுவத்தினர் பிளந்திருந்தனர். அதனால் கல்லறைகளின் கதைகளை கேட்பதைப் போலவும் அவற்றின் கனவுகளை வாசிப்பதைப் போலவும் நாம் சென்று வரும் ஒரு கோயிலைப் போல உயிர்நிலமாய் நம்பிக்கை தந்திருந்தது. இந்தப் பதிவை மரண நிலம் என்று எழுதியிருந்தாலும் இன்றும் உயிர் நிலமாக சிதைகளிலிருந்து எருக்கலை வளர்ந்து அடர்ந்திருக்கிறது. கொல்லப்பட்ட நமது நிலத்தின் உயிரோடு இன்னும் கனவின் செழிப்பை தரும் இந்த விதை நிலத்தோடு இம்முறை மரண நிலம் நோக்கிய பயணம் தொடங்கியது. சில நாட்களின் முன்பு பேரூந்தில் சென்ற பொழுது எனக்குப் பக்கத்தில் இருந்த தாய்மார்களது கண்களோடு பலரது கண்கள் விசுவமடு விதை நிலத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு வந்தன.

மூங்கிலாறில் பாய்ந்த பெருந்துயரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தை கடந்து ‘சீற்’ எனப்படும் கூரைத்தகடுகளை தூரத் துரமாக குத்தி நட்டிருந்தார்கள். எதையோ மறைப்பதற்காகவே அவை நட்டிருக்கிறது என்று பார்ப்பவர்கள் நினைத்தாலும் வெட்ட வெளியில் அவற்றை ஏன் நட்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழும். அவை சரணடைந்த மக்களை சோதனையிடும் சோதனை நிலையங்களாக பெருக்கப்பட்டுள்ளன. ஒரு பக்க மறைப்புக்களாக அமைக்கப்பட்ட நிறுத்தப்பட்ட கூரைத்தகடுகளின் முன்பாக சனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதித்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவலத்தை சுமந்த மக்களிடம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் எதத்தான் மீட்டிருக்க முடியும்? மூங்கிலாற்றின் மேற்புறமாக இருக்கிற அந்தப் பெரும் வெளியில் ஒரு முறை பத்தாயிரம் மக்கள் சரணடைந்திருக்கிறார்கள். பரந்து வந்த மக்களை மிருகங்களை தடுத்து சோதனையிடுவதைப் போல பயன்படுத்தப்பட்ட அந்த கூரைத்தகட்டுத் தடுப்புக்கள் இப்பொழுது சரிந்தும் விழுந்தும் கிடக்கின்றன.

மூங்கிலாற்றில் சாம்பலும் இரத்தமும் கலந்து ஓடியிருக்கிறது. பரந்தன் முல்லை வீதியில் பசுமையான வயல்கள் நிறைந்த அந்த வெளிப்பகுதியில் இடையில் மூங்கிலாறு இருக்கிறது. அழகும் இதமும் தருகின்ற அந்த வெளிக்கு இத்தகைய அவலம் நிகழ்ந்து போனது. தண்ணீரும் சதும்பும் கொண்ட அந்த வெளியில் மக்கள் குடியிருக்க முடியாது. ஆனால் இடம்பெயர்ந்து வந்த மக்கள் அந்த வெளியை நிறைத்து தஞ்சமடைந்திருக்கிறார்கள். 2009 மாசி மாதத்தின் நடுப்பகுதியில் இரவுப் பொழுதொன்றில் அந்தப் பகுதியை நோக்கி இராணுவத்தினர் எறிகணைத்தாக்குதலை நடத்திய பொழுது இடம்பெயர்ந்து வந்து தற்காலிக கூடாரங்களில் தங்கித் தூங்கிக் கொண்டிருந்த மக்களில் 31பேர் எரிந்து வெந்து இறந்து போய்க் கிடந்தார்கள்.

செல் விழுந்து எரிந்த இடத்தில் சிவப்பாக சிலைகளைப் போல சனங்களின் வேகிய உடல்கள் பளபளத்துக் கிடந்தன. செல் மழையில் எங்கு செல்கள் விழுகின்றன என்ன நடக்கின்றன என்று தெரியாத இரவைக் கடந்து மறுநாள் சனங்கள் பார்த்த பொழுதே அவர்கள் எரிந்து கருகிக் கிடந்தது தெரிந்தது. எரிந்து கருகிய சனங்களின் புகைப்படங்கள் இணையங்ளில் வெளிவந்திருந்தன. அந்தப் புகைப்படங்களின் முகங்கள் அழிந்து சனங்களாகியிருந்தார்கள். அந்தப் படத்தில் தென்பட்டவர்களைப் பார்த்தால் நமது உறவாய் நமது நண்பராய் தெரிந்தன. அடையாளம அழிந்த அந்த முகங்களைப் பார்த்த பலரும் நமது தாய் தந்தை சகோதர்களைப் போல இருக்கின்றன என்று அழுதிருந்தார்கள். என்னிடமும் அதே அச்சமும் வலியும் பரவியது. நெருப்பு தின்று மீதியாய் விட்டிருந்த அந்தச் சாம்பல்ச் சனங்களின் உறைந்த சிலைகளை ஒரு பொழுதும் மறந்துவிட முடியாது.

தொடரும்...

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.